Sunday, April 1, 2012

ராமநவமி--ராமன், ஏகபத்னி விரதன்


இருபது வயதுக்கு மேற்பட்டவர்கள், ராமநவமி விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். அன்று ஒருவேளையாவது பட்டினி இருப்பது நல்லது. பகல் முழுக்க உபவாசம் இருப்பவர்கள், வீட்டில் சுத்தமாக தயார் செய்த நீர்மோர் (காரம் சேர்க்காமல்) பருகலாம். மாலையில், உள்ளூர் கோயில் முன்பு ஊர்மக்கள் ஒன்று கூடி, "ஸ்ரீராம ஜயராம் ஜயஜய ராம்'' என்னும் பதின்மூன்று அக்ஷரங்கள் கொண்ட மந்திரத்தை, ஒருவர் முதலில் சொல்ல, எல்லோரும் அதைப் பின்பற்றிச் சொல்லியபடியே ஊரைச் சுற்றி வர வேண்டும். கோயிலை அடைந்து, அங்கு பத்து நிமிஷம் இதே மந்திரத்தைச் சொல்ல வேண்டும். நீர்மோர், வெள்ளரிக்காய், பானகம் படைத்து ராமபிரான் படத்துக்கோ, சிலைக்கோ பூஜை செய்ய வேண்டும். ஊர்ப் பொதுச் செலவில் ஏழை மக்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். ராமநவமிக்கு மறுநாள் காலை அதே இடத்தில் கூடி, கம்பராமாயணத்தில் ராம பட்டாபிஷேகத்தை வர்ணிக்கும் பகுதியை பாராயணம் செய்ய வேண்டும். இதை "புனர்பூஜை' என்பர். சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் வால்மீகி ராமாயணத்தில் உள்ள ராம பட்டாபிஷேக ஸர்க்கத்தைப் பாராயணம் செய்யலாம்.


ராவணனின் படையில் 14 ஆயிரம் வீரர்கள் இருந்தனர். இவர்கள் எல்@லாரையும் தனி ஒருவனாக நின்று ராமன் வெற்றி பெற்றார். ராமனின் வீரதீரத்தை சுவாமி தேசிகன், "அஸஹாய ஸூர! அநபாய ஸாஹஸ!'' என்று போற்றுகிறார். ஜனஸ்தானம் என்ற இடத்தில் இருந்த கரன், தூஷணன் உள்பட ராட்சஷர் அனைவரையும் ராமன்கொன்றார். அவர்களுடன் "அகம்பனன்' என்ற அசுரன் இருந்தான். "நடுக்கம் என்பதே அறியாதவன்' என்பது இதன் பொருள். ராமன், தன்னைக் கொன்று விடுவானோ என்று, அவன் கூட நடுங்கினான். உயிருக்குப் பயந்து ராவணன் முன் வந்து நின்றான். ""ராமன் அசகாய சூரனாக இருக்கிறான். அவன் விடும் பாணங்கள் காட்டுவெள்ளத்தையும் தடுத்து நிறுத்தும் சக்தி கொண்டதாக உள்ளன. கரன், தூஷணன் மாண்டு விட்டனர். நான் தப்பி வந்தேன்,'' என்று சொல்லி தலை குனிந்தான். ராவணன் உரக்கச் சிரித்தான். ""நீ மட்டும் எப்படி தப்பித்தாய்?,'' என்றான். ராமன், ஏகபத்னி விரதன் என்பதால் அதையே எனக்கு சாதகமாக்கிக் கொண்டேன். ஒரு பெண்ணைப் போல வேடமிட்டேன். ராமன் என்னை ஏறிட்டும் பார்க்கவில்லை. ஏமாந்து போனான்,'' என்றான்.



ராமர் வாலி மீது மறைந்திருந்து அம்பு விடுத்தார். குற்றுயிராகக் கிடந்த வாலி, மறைந்திருந்து அம்பு தொடுத்தது ராமர் என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டான். ""சக்கரவர்த்தி திருமகனான நீ, என் மீது என்ன குற்றம் கண்டு இவ்வாறு செய்தாய்! உன்னிடம் இரக்கம் இல்லாமல் போனது ஏன் என்பது இப்போது தான் புரிகிறது. தாய் போல இருக்கும் சீதையை நீ பிரிந்த காரணத்தால், இப்படி ஒரு துயரத்தைத் தந்து விட்டாயோ! ஏனெனில், அவள் <<<உன்னுடன் இருந்தபோது, அவளுக்கு துன்பம் செய்த காகாசுரனுக்கு கூட வாழ்வு அளித்தாய். ஆனால், ஒரு தவறும் செய்யாத எனக்கு மரணம் கொடுத்தாய்!'' என்று சொல்லி உயிர் விட்டான். நமது கோரிக்கை சீதாபிராட்டியார் மூலம்தான் நிறைவேறும். எனவே, ராமனிடம் நம் கோரிக்கையை வைப்பதாய் இருந்தால், அதை சீதை மூலமாக வைப்பது உடனடி பலன் தரும்.

பகவான் பெரியவரா, பக்தன் பெரியவனா என்றால் "பக்தனே பெரியவன்' என்கிறார் ராமபிரான். ராமலட்சுமணருக்கு போர்க்களத்தில் இக்கட்டான நிலை ஏற்பட்ட போது, சஞ்சீவிமலையை சுமந்து வந்து உயிரளித்தவர் அனுமான். அதற்கு முன்பும் ஒருமுறை, ராமனுக்கு அவர் உயிரளித்திருக்கிறார். ராவணனின் தம்பி விபீஷணன், ராமனுடன் நட்பு கொள்ள வந்தான். இது ராவணனின் சதியாக இருக்கும், அவன் உங்களை வேவுபார்க்க அனுப்பப்படுவதாக சந்தேகிக்கிறோம் என சுக்ரீவன் உள்ளிட்ட வானரர்கள் கூறினர். ராமனோ, அவனைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். நல்லவனோ, கெட்டவனோ தன்னைச் சரணடைய ஒருவன் வருகிறான் என்றால், அவனை ஏற்பதே இறைவனின் பணி. அந்த தர்மத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலையில் ராமன் இருந்தார். இல்லாவிட்டால், தர்மம் செத்து விடும். தர்மம் செத்தால் ராமனுக்கும் உயிர் இருக்காது. இந்த நிலையில், அனுமன் ராமனின் கருத்தை ஆமோதித்துப் பேசினார். பின், எல்லாரும் ராமனின் கருத்தை ஏற்றனர். ஒருவேளை அனுமனும் மறுத்திருந்தால், ராமனுக்கு மூச்சே நின்றிருக்கும். அனுமனின் ஆதரவான பேச்சு ராமனுக்கு மூச்சைத் தந்தது. காரணம், அவர் வாயுவின் பிள்ளை. மூச்சுக்கு பிரதானம் காற்றுதானே.


காசி விஸ்வநாதர் கோயில் அம்பாளை "விசாலாட்சி' என்பர். அயோத்தியில் வசித்த சீதையையும் "விசாலாக்ஷ்யா' என்று பெயரிட்டு அழைக்கிறார் வால்மீகி. "விசாலமான கண்களை உடையவள்' என்று அதற்குப் பொருள். இந்தப் பெயர் வந்த காரணம் தெரியுமா?
நாளை ராமனுக்கு பட்டாபிஷேகம். முதல்நாள், அயோத்தியிலுள்ள ரங்கநாதரைத் தரிசிக்க ராமனும், சீதையும் செல்கின்றனர். நாராயணனே ரங்கநாதன், நாராயணனே ராமன். அதாவது "அர்ச்சகனும் அவனே, அர்ச்சிக்கப்படுபவனும் அவனே!' என்கிற நிலை. தன்னைத் தானே வணங்கச் செல்கிறான் ராமன். மானிடனாகப் பூமியில் பிறந்து விட்டதால், இப்படி ஒரு நாடகத்தை நிகழ்த்துகிறான். இப்படியொரு அரிய காட்சியைக் காணும் பாக்கியம் யாருக்காவது கிடைக்குமா? அது தனக்கு கிடைத்ததை எண்ணி மகிழ்ந்த சீதை, அவனை இமை கொட்டாமல், விரிந்த கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அதனால், அவளுக்கு இந்தப் பெயர் ஏற்பட்டது.



ராமன், ராம் என்றெல்லாம் பெயர் வைத்தால் பாராட்டலாம். காரணம் "ராமன்' என்ற சொல்லுக்கு எல்லோரையும் ரமிக்கச் செய்கிறவன், ஆனந்தப்பட செய்பவன், இதயத்தில் ரம்மியமாய் வாசம் செய்யக்கூடியவன் என்று பொருள். ராமனின் எதிரி ராவணன். இதற்கு "பிறரை சிரமப் படுத்துபவன், பிறர் மனதை அறுக்கக்கூடியவன்' என்று பொருள். ராமன் பெயரை வைக்கலாம். ராவணன் பெயரை வைக்கலாமா? பெயருக்கேற்றாற் போல், குணமும் மாறி விடும். ஜனகர் தந்த வில்லை ஒடிக்க ராமன் எழுந்தவிதம், ஹோம குண்டத்தில் நெய்யை ஊற்றியதும், அக்னி படீரென கொழுந்து விட்டெரியுமே...அப்படி இருந்தது. ஒரு குரங்கு, இலங்கையை துவம்சம் செய்கிறது என்று கேள்விப்பட்ட ராவணன் ஆவேசமாக எழுந்த விதம், மயானத்தில் சிதை எரியும் போது எழுந்த தீயைப் போல இருந்தது என்கிறது ராமாயணம். இனியேனும், குழந்தைகளுக்கு நல்ல பெயர்களைத் தேர்ந்தெடுங்கள்.


ராமன் சத்தியசீலன். தன் உயிருக்கு தானே குறித்துக் கொண்ட நாளில் வைகுண்டம் புறப்பட்ட நெகிழ்ச்சியூட்டும் நிகழ்வைக் கேளுங்கள். ராவணனால் நாங்கள் சிரமப்படுகிறோம் என தேவர்கள் திருமாலிடம் முறையிட்டனர். ""தேவர்களே! நான் பூமியில் பிறப்பேன். பதினோராயிரம் ஆண்டுகள் வசிப்பேன். அந்த காலகட்டத்தில் ராவணனை அழித்து விடுவேன், கவலையை விடுங்கள்,'' என்றார். அவர் சொன்னபடியே வாழ்ந்தார். 11000ம் ஆண்டின் கடைசி நாள் வந்தது. எமதர்மன் அயோத்தி அரண்மனை வாசலுக்கு வந்து, வாயில் காப்பவனிடம், ""ராமனைப் பார்க்க வேண்டும்,'' என்றான். ராமன் உடனே அனுமதியளித்தார். ""ஐயனே! நான் எமன் வந்திருக்கிறேன், இன்றோடு முடிகிறது, கிளம்பலாமா?'' என்றான். ராமன் நினைத்திருந்தால், எத்தனை வருஷம் வேண்டுமானாலும் தன் ஆயுளை நீட்டித்திருக்கலாம். ஆனால், சத்தியசந்தனான அவர் "பேஷாக' என கிளம்பி விட்டார்.




திருமால், ராமாவதாரம் எடுத்ததன் நோக்கமே, ரிஷிகளுக்கு தரிசனம் அளிக்கத்தான். அதனால் தான் அவர் காட்டுக்கே போகும் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொண்டார். அந்த முனிவர்களிலும் ஒருவர் ராமனை "டென்ஷனாக்கி' விட்டார்.
சாஸ்திர விரோதமாக யார் நடந்தாலும், பேசினாலும் ராமனுக்குப் பிடிக்காது. மனைவியைக் கடத்திய ராவணன் மீது கூட பரிவு கொண்டு, "இன்று போய் நாளை வா' என்றவர், பிதுர் கர்மம் தொடர்பாக தவறாகப் பேசிய ஜாபாலி ரிஷி மீது கோபம் கொண்டார்.
""ராமா! மறைந்த பெற்றோருக்கு இங்கிருந்து பிண்டம் கொடுப்பது அவர்களைப் போய்ச் சேரும் என்கிறாயே! அதெப்படி சாத்தியம்?'' என்றார். அப்படி போனதை பார்த்தவர்கள் யாராவது உண்டா? ஒருவர் மறைந்த பிறகு தந்தையாவது, மகனாவது...'' என்றார்.
இதைக் கேட்டு ராமனுக்கு கண்கள் சிவந்து உதடுகள் துடித்தன. ""மகரிஷியே! என்ன சொல்கிறீர்கள்? சாஸ்திர விரோதமாகப் பேசாதீர்கள். வேதத்தில் இந்த தர்மம் சொல்லப்பட்டிருக்கிறது. நீர் சொல்வதைப் பார்த்தால் வேதமே அல்லவா தவறாகி விடும்! எல்லாவற்றுக்கும் அச்சாரம் வேதம்,'' என்று கடிந்து பேசினார். ஜாபாலி நடுங்கி விட்டார்.
""அப்பா ராமா! அது எனக்கும் தெரியும். ஆனால், உன் வாயால் தெள்ளத்தெளிவாக இந்த வார்த்தைகள் வரட்டுமே என்று தான், உனக்கு கோபமூட்டினேன். என்னை நாத்திகன் என எண்ணிக்கொள்ளாதே,'' என்றார். ராமன் சமாதானம் ஆனார்.

சத்தியத்தையும் தர்மத்தையும் காப்பதற்காக விஷ்ணு எடுத்த அவதாரம் ராமாவதாரம். அவர் நவக்கிரகங்களை அழைத்து, ""நான் பூவுலகில் ராமனாக அவதரிக்கப் போகிறேன். அதனால், நீங்கள் அனைவரும் வீர்யம் மிக்க ஸ்தானங்களில் போய் அமருங்கள்,'' என்று உத்தரவிட்டார். தசரதர் செய்த புத்திரகாமேஷ்டி யாக பலனாக பூமியில் அவதரித்தார்.
ராமர் பிறந்த வேளையில் குரு, சுக்கிரன், சூரியன், சனி, செவ்வாய் ஆகிய ஐந்தும் உச்ச பலத்துடனும், சந்திரன் ஆட்சி பலமும், புதன் சூரியனோடும், ராகுகேது மறைவு ஸ்தானங்களிலும் வீற்றிருந்தனர். இந்த ஜாதகத்தை வழிபடுவது சிறப்பு.
சித்திரைமாதம் புனர்பூச நட்சத்திரத்தன்று பகல் வேளையில் ராமன் பிறந்தார். சித்திரையில் சூரியன் உச்சவீடான மேஷராசியில் சஞ்சரிப்பார். இதனால் தைரியம், ஒழுக்கம், கவுரவம், செல்வாக்கு ராமனுக்கு உண்டானது. பிதுர்காரகராகிய சூரியனின் பலத்தால் தந்தை மீது பாசம் கொண்ட பிள்ளையாக இருந்தார். சூரியனோடு புதனும் கூடி புதஆதித்ய யோகம் ஏற்பட்டது.
இதன்மூலம் கலைகளில் சிறந்தவராக, விவேகம், புத்திசாலித்தனம் நிறைந்தவராக விளங்கினார். நவமி திதியில் பிறந்ததால் தன் கவுரவத்தை நிலைநாட்டுவதில் கவனமாக இருந்தார். துலாம் ராசியில் சனி உச்சமானதால் தீர்க்காயுள் கொண்டவராக இருந்தார். சனியின் பார்வை சூரியனின் மேல் பட்டதால் தந்தையின் மரணத்திற்கு காரணமானார். அதே சனி, புதனையும் பார்த்ததால் காட்டுக்குச் செல்லவேண்டிய நிர்ப்பந்தமும் உண்டானது.
கடகலக்னத்தில் பிறந்ததால் நளினமும், மென்மையான மனமும் உடையவராக இருந்தார். லக்னத்தில் குரு உச்ச பலத்துடனும், சந்திரன் ஆட்சி பலத்துடனும் வீற்றிருந்தனர். இதனால் பார்ப்பவரைக் கவரும் வசீகரம் நிறைந்தவராக திகழ்ந்தார். சனியின் பத்தாம்பார்வை லக்னம் மற்றும் குருசந்திரரைப் பார்த்ததால், தாய் ஸ்தானத்தில் இருந்த கைகேயியே ராமனின் துன்பத்திற்கு வித்திட்டாள். மகரவீட்டில் செவ்வாய் உச்சத்தில் இருந்ததால் உடல், மனம் உறுதி மிக்கவராகவும், பெருந்தன்மை மிக்கவராகவும் இருந்தார். விஸ்வாமித்திரர் செய்த யாகத்தைக் காக்கவும், சுக்ரீவன், விபீஷணன் ஆகிய நல்லவர்களுக்கு உதவியும் செய்தார்.
களத்திரகாரனான சுக்கிரன் குருவீட்டில் உச்சபலம் பெற்றதால், அழகும், நற்குணமும் கொண்ட சீதையை மனைவியாகப் பெறும் பாக்கியம் பெற்றார். களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் இருந்ததால், சுயம்வரத்தில் வில்லொடித்து வெற்றி வீரனாக சீதையை மணந்தார். சனியின் வீடான மகரத்தில் இருந்த செவ்வாயால் மனைவியைப் பிரிந்தார்.
சுக்கிரன் குருவீட்டில் இருந்ததால், ராவணனால் சீதை கவரப்பட்டாலும், அவளுடைய கற்பு காப்பாற்றப்பட்டது. வித்யா ஸ்தானமான நான்கில் சனி இருந்ததால் வாழ்வு முழுவதும் ஞானியாக பற்றில்லாமல் வாழ்ந்தார். ராமநவமி நன்னாளில் ராமர் ஜாதகத்தைப் பக்தியுடன் வழிபடுவோருக்கு கிரகதோஷம் நீங்கி வாழ்வில் அனுகூலம் உண்டாகும்.




No comments:

Post a Comment