Wednesday, April 25, 2012

புதுமனைப் புகுவிழாவில் பசுவை வீட்டிற்குள் அழைத்து வருவதன் காரணம் என்ன?

முப்பத்து முக்கோடி தேவர்களில் இருந்து மூவர்கள், அதாவது சிவன், பிரம்மா, விஷ்ணு, சக்தி என அத்தனை தெய்வங்களும் குடிகொண்டிருக்கும் ஜீவராசி பசு. அதனால்தான் பசுவை குருவின் அம்சம் என்று சொல்வார்கள். பிரகஸ்பதி, குரு மாறுகிறாரே அதனுடைய அம்சம் பசு. பசுவின் கொம்பில் இருந்து, கண் இமையிலிருந்து, வாய் நுனி வரைக்கும் அத்தனையிலும் தேவர்களும், மூவர்களும் வாசம் செய்வதாக ஐதீகம்.

பசுவின் பின் பக்கத்தில் லட்சுமி தேவதை குடியிருக்கிறார். அதனால் பசுவை பின் பக்கத்தில் தொட்டுக் கும்பிடுவார்கள். லட்சுமி கடாட்சம் உண்டாகட்டும் என்பதற்காக. காரணம், பசு தனக்கென்று எதையும் எடுத்துக் கொள்வதில்லை. பசுஞ்சாணம், பசுங்கோமியம் அத்தனையும் அறிவியல்பூர்வமாக பார்க்கும் போது கிருமி நாசினியாக இருக்கிறது. இதுமட்டுமல்லாமல், நல்ல பசும்பால் குழந்தைக்கு தாய்ப்பாலுக்கு சமமாக உள்ளது. குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத அளவிற்கு சிறந்த உணவாகவும் அது அமைகிறது.

அதனால்தான் பசுவை வீட்டிற்குள் அழைத்து வந்தால் முப்பத்து முக்கோடி தேவர்களில் இருந்து, சிவன், பிரம்மா, விஷ்ணுவில் இருந்து அத்தனை பேரும் வாசம் செய்வதாக ஐதீகம். பசுவை அழைத்து வரும் போது அந்த வீட்டில் கோமியமிட்டாலோ, சாணமிட்டாலோ அவர்களுக்கு இன்னமும் அதிர்ஷ்டம் என்றும் நம்பப்படுகிறது.

தரையில் பசுஞ்சாணத்தை தெளித்து மெழுகி கோலம் போட்டு வந்தால், அந்த பசுஞ்சாணம் தெளித்த இடத்தில் ஒரு செழிப்பு தெரியும். அதனால்தான் முக்கியமான நிகழ்ச்சிகளிலெல்லாம் பசுஞ்சாணத்தை தெளித்து, மெழுகி செய்வார்கள். இன்னும் சிலர் பசுஞ்சாணத்தை உருட்டி அதன் மீது விளக்கேற்றுவார்கள். பிள்ளையாரையும் பசுஞ்சாணத்தால் பிடித்து அதன் மீது அருகம்புல் செருகி மந்திரங்களை சொல்லும் போது உடனடியாக நமக்கு எல்லா பலன்களும் கிடைக்கும்.

இதுபோல பசுவினுடைய அத்தனையும் நமக்கு எல்லா வகையிலும், எல்லா விதத்திலும் பயன்படுகிறது. பசுவிற்கு பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து எல்லா தோஷத்தையும் நீக்கக் கூடிய சக்தி உண்டு. இந்த மாதிரியான தெய்வ அமைப்பு பசுவிற்கு மட்டும் அமைந்துள்ளது. தற்பொழுது இவர்கள் ஜெர்சி பசுவை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கெல்லாம் எந்தப் பலனும் இல்லை. நம்ம நாட்டுப் பசு, அதற்கும் முன்பாக பார்த்தால் காராம்பசு.

என்னுடைய தாத்தா காலத்திலெல்லாம் காராம் பசுக்கள் நிறைய இருந்தது. காராம்பசுவினுடைய காம்புகளைப் பார்த்தால் சிறியதாக இருக்கும். ஆனால் கறக்க கறக்க பால் வரும். அந்தப் பால் பணங்கற்கண்டு பால் போன்று இருக்கும். அப்படியே குடிக்கலாம். அதற்கடுத்து, அதற்கு சில தெய்வீக அமைப்பெல்லாம் உண்டு.

அதாவது, புல் பூண்டுகளைக் கூட தேர்ந்தெடுத்துதான் மேயும். நாட்டுப் பசுவிற்கும், காராம்பசுவிற்குமே அதிக வித்தியாசம் உண்டு. நாட்டுப் பசு எல்லா புற்களையுமே மேயும், ஆனால் காராம் பசு சில வகையானப் புற்கள், சில வகையான இலைகள் மட்டும்தான் சாப்பிடும். மிகவும் சென்சிடிவானது. கோபத்துடன் தொட்டால் கூட சாப்பிடாது.

இந்த மாதிரியான தெய்வ லோக, தெய்வத் தன்மையுடைய பசுவெல்லாம் உண்டு. அதனால் பசு வீட்டிற்குள் வந்துவிட்டுச் செல்வது என்பது நல்லது.

No comments:

Post a Comment