Thursday, April 26, 2012

அட்சயபாத்திரம்

ஹரிதாஸ் என்ற விஷ்ணுபக்தர், வறுமையில் வாடிய போதும், நாலுபேருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். அவரது இரக்க குணம் கண்ட இறைவன், அவருக்கு அட்சயபாத்திரம் ஒன்றைக் கொடுத்துவிட்டு மறைந்தார்.
மனதில் எதை நினைத்துக் கொண்டு அதைத் திறக்கிறோமே அது நமக்கு கிடைக்கும். பசியால் வாடும் மக்களுக்கு சோறிட எண்ணிய ஹரிதாஸ் சோறு வர வேண்டும் என நினைக்கவே, சோறு வந்து கொண்டே இருந்தது. மக்கள் வயிறார சாப்பிட்டு
அவரை வாழ்த்தினர். அவருடைய புகழ் ஊரெங்கும் பரவியது.
பக்கத்துவீட்டில் கிரிதாஸ் என்ற பணக்காரர் இருந்தார். பணம் இருந்தும் தன்னை ஊரில் ஒருவரும் மதிப்பதில்லை. ஆனால், ஹரிதாஸை அனைவரும் புகழ்கின்றார்களே என பொறாமை கொண்டார்.
அட்சயபாத்திரத்தின் மூலம் ஹரிதாஸ் சோறிடும் விஷயத்தை தெரிந்து கொண்டார். அன்றிரவு, ஹரிதாஸுக்குத் தெரியாமல் அதை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார்.
இரவோடு இரவாக, ஹரிதாஸ் வீடு தீப்பிடித்து எரிய வேண்டும் என்று மனதில் எண்ணினார். ஆனால், கிரிதாஸ் வீடு தீப்பிடிக்க ஆரம்பித்தது.
அலறி அடித்தபடி ஹரிதாஸிடம் ஓடினார். தூங்கிக் கொண்டிருந்த ஹரிதாஸை எழுப்பி தன்னைக் காப்பாற்றும்படி வேண்டினார். ஹரிதாஸ் அப்போதும் அவர் மீது இரக்கம் கொண்டு கடவுளை வேண்டினார்.
நொடியில் தீ அணைந்து போனது. பொறாமைத்தீ கொடியது என்பதை உணர்ந்த கிரிதாஸ் தன்னை மன்னிக்கும்படி வேண்டியதோடு பாத்திரத்தையும் ஒப்படைத்தார்.

No comments:

Post a Comment