Saturday, June 23, 2012

மரங்களை வெட்டுவதில் மக்கள் கட்டுப்பாடு


காளையார்கோவிலிலுள்ள சிவாலயத்துக்கு புதிதாக தேர் செய்யும்படி மருதுபாண்டிய மன்னர் உத்தரவிட்டார். தச்சர்கள் மரம் தேடி அலைந்தனர். சிவகங்கை சமஸ்தானத்திற்குரிய திருத்தலமான பூவனநாதசுவாமி கோயிலில் ஒரு மரம் இருந்தது. அது நன்கு பருத்து அடர்ந்து வளர்ந்திருந்தது. அதனை வெட்டி தேர்ப்பணியைத் தொடங்குவது என முடிவெடுத்தனர். அதற்காக ஆட்களும் வந்துவிட்டனர். பலருக்கும் நிழல் தரும் மரத்தை வெட்ட கோயில் அர்ச்சகருக்கு மனமில்லை.
ஓடிவந்து, ""மன்னரின் மீது ஆணை! இந்த மரத்தை யாரும் வெட்டக்கூடாது '' என்று வேகமாக கத்தினார். பணியாட்கள் செய்வதறியாது திகைத்தனர். விஷயமறிந்த மன்னருக்கு கோபம் தலைக்கேறியது. ""என் கட்டளையை மீறும் தைரியம் அர்ச்சகருக்கு எப்படி வந்தது? '' என்றவர் கோயிலுக்கு விரைந்தார்.
அர்ச்சகர் சிவனை வணங்கி விட்டு மன்னரிடம் வந்தார்.
மன்னரைப் பார்த்து, ""மாமன்னரே! வணக்கம். உங்களைப் போலவே இந்த மருதமரமும் அனைவருக்கும் குளிர்ச்சியான நிழலைக் கொடுக்கிறது. நீங்களோ மருதுபாண்டியர். இது மருத மரம். இதைப் பார்க்கும் போதெல்லாம் உங்களின் நல்லாட்சியே என் நினைவிற்கு வருகிறது. அதனால் தான் மரத்தை வெட்டுவதற்கு எனக்கு சிறிதும் மனமில்லை,'' என்று சொல்லி வணங்கினார்.
அர்ச்சகரின் பேச்சைக் கேட்ட மன்னர் என்ன செய்வதென தெரியாமல் நின்றார். அவரைப் பாராட்டிய மன்னர் பரிசளித்து விட்டு அரண்மனை திரும்பினார். சுபமான ஒரு விஷயத்துக்கு கூட மரங்களை வெட்டுவதில் மக்கள் கட்டுப்பாட்டைக் கடைபிடித்ததை இதன்மூலம் தெரிந்து கொள்கிறோம்.

No comments:

Post a Comment