Monday, September 3, 2012

இறைவன் தருவது இன்பமோ, துன்பமோ அதை முழு மனதுடன் ஏற்றுக்கொள்பவனே மோட்ச கதிக்கு தகுதியானவன்'

ஜானஸ்ருதி என்பவர் பெரும் பணக்காரர். அள்ளிக்கொடுக்கும் மனசுள்ள அவரது வீட்டில் லட்சுமி தாயார் நிரந்தரமாக தங்கிவிட்டாள். நேற்று பத்தாயிரம் ரூபாய் தானம் கொடுத்தால், இன்று இருபதாயிரம் எங்கிருந்தோ வந்தது. பிறகென்ன! வள்ளலுக்கெல்லாம் வள்ளலாகி விட்டார். அவருக்கு பறவைகளின் பாஷை தெரியும். ஒருநாள் இரண்டு மகான்கள், அன்னப்பறவைகள் போல தங்களை உருமாற்றிக்கொண்டு பறந்தனர். ஒரு பட்சி மற்றொன்றிடம், ""கீழே தெரிகிறானே ஜானஸ்ருதி, அவனுக்கு மறுபிறவி உறுதி என்றது,''. ""என்ன உளறுகிறாய்? அவர் செய்கிற தர்மத்துக்கு மோட்சம் நிச்சயம்,''. ""உஹூம்...தானத்துக்கு குபேரபதவி கிடைக்கும். அதை அனுபவித்ததும் திரும்பவும் இங்கே வர வேண்டும். உனக்கு ரைக்குவரைத் தெரியுமா? அவரைப் போல் மாறினால் வேண்டுமானால், இவர் மோட்சம் போகலாம்,''. ஜானஸ்ருதி அசந்து விட்டார். ரைக்குவரைத் தேடிச் சென்றார். ஒரு ஆள் சாலையோரம் புழு அரித்து படுத்திருந்தார். அவர் தான் ரைக்குவர் என்றனர் மக்கள். ""இவர் எப்படி மோட்சம் போவார்? இருப்பினும் பறவைகள் பேசியது பொய்யாகாதே!'' சந்தேகத்துடன் ஜானஸ்ருதி ரைக்குவரை நெருங்கினார். தான் கொண்டு வந்த ரத்தினம், வைரம், தங்கம் அடங்கிய தட்டை அவரிடம் நீட்டி ஏற்றுக்கொள்ள வேண்டினார். ""அடேய்! இது யாருக்கு வேண்டும்? இந்த தங்கமும், வைரமும் என் உடலில் ஊறும் புழுவுக்கு சமமாகுமா! இறைவன் எனக்கு தந்துள்ள இந்த வியாதியை மனதார ஏற்றுக் கொண்டுள்ளேன். அவன் தருவதை ஏற்பது தான் இன்பமப்பா!''. ஜானஸ்ருதி அசந்து விட்டார். "இறைவன் தருவது இன்பமோ, துன்பமோ அதை முழு மனதுடன் ஏற்றுக்கொள்பவனே மோட்ச கதிக்கு தகுதியானவன்' என்ற உண்மையை உணர்ந்தார். தன் செல்வத்தை துறந்து ரைக்குவரின் சீடராகி விட்டார்.

No comments:

Post a Comment