Wednesday, September 5, 2012

ஆடிப்பெருக்கு

ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18-ம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும். இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள். தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். இப்பொழுது நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றாநதிகளை தங்கள் கடவுளாக போற்றி மகிழ்ந்து, பூசைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். இதனையொட்டியே ஆடிப்பட்டம் தேடிவிதை என்ற பழமொழியும் விளைந்தது. மக்கள் ஆற்றங்கரையில் கூடி ஆற்றுப் பெருக்கைக் கண்டு களிப்பர். இந்து சமயத்தவர் கோவில்களில் சென்று வழிபடவும் செய்வர். அன்றைய நாள் பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்கின்றனர். அந்த இடத்தை சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து, பிள்ளையார் சிலை வைத்து அதன் முன் அகல்விளக்கு ஏற்றி வைக்கின்றனர். வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, கற்பூரம் காட்டி, தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு விநாயகரை வழிபடுகின்றனர். ஆற்றினை வழிபட்டு வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். இப்படி செய்தால் நீர்வளம் பெருகியது போல், அவர்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் இச்சடங்குகளை செய்வார்கள். அது மட்டும் அல்லாமல் தங்கள் வீட்டில் பலவிதமான கலப்பு சாதங்கள் (தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சம்பழம் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம்) செய்து அதை ஏதாவது ஆற்றங்கரையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து குதூகலமாக உணவை சாப்பிடுவார்கள். காவிரியாற்றின் கரையில் திருச்சியில் இவ்விழா மிகவும் புகழ்பெற்றது. சீரங்கத்தில் புகழ்பெற்ற அம்மா மண்டபம் படித்துறையில் காவிரிக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடக்கும். ஆடிப்பெருக்கு நாளன்று சீரங்கம் கோவிலில் இருந்து உற்சவர் நம்பெருமாள் புறப்பாடாகி, அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும் மாலை வரை பெருமாள் அங்கு வீற்றிருப்பார். பெருமாளின் சீதனமாக தாலிப்பொட்டு, பட்டு மற்றும் மங்களப் பொருட்கள் ஆற்றில் விடப்படும். நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு நாளில் கொல்லிமலை சென்று அங்குள்ள ஆகா யகங்கை நீர்வீழ்ச்சியில் நீராடி அரப்பளிசுவரரை தொழுவது வழக்கம். ஆடிப்பெருக்கு நாளில் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தினர் நாமக்கல், சேலம் மற்றும் ராசிபுரத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்குவது வழக்கம். பழங்காலம் போல் தற்போது எல்லா ஆறு களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது இல்லை. என்றாலும், இந்நாளில் காவிரி போன்ற சில ஆறுகளில் மட்டுமாவது அணைகளைத் திறந்து விட்டு நீர்பெருக்கெடுத்து ஓடச்செய்கின்றனர். ஆறுகள் இல்லாத ஊர்களில் வாழும் மக்கள், அப்பகுதியில் இருக்கும் குளங்கள், நீர்நிலைகள், ஏரிகள் உள்ளிட்டவற்றில் ஆடிப்பெருக்கை கொண்டாடுவார்கள். புதுமணத் தம்பதிகள் குடும்பத்தினருடன் வந்து படையலிட்டு சாமி கும்பிடுவார்கள். அதேபோல மணமாகாத பெண்களும் நல்ல கணவர் கிடைக்க வேண்டும் என்று வேண்டி பனை ஓலையில் செய்யப்பட்ட தோடுகளை வைத்தும், கருகமணி, காப்பரிசி வைத்தும் வணங்குவார்கள். பவானி கூடுதுறை, திருச்சி, கரூர், ஈரோடு, பவானி உள்ளிட்ட காவிரிப் பகுதிகளில் உற்சாகத்துடன் ஆடிப்பெருக்கு விழாவை மக்கள் கொண்டாடுவார்கள். ஆடிப்பெருக்கு நடைபெறும் தினத்தன்று ஏராளமான புதுமணத் தம்பதிகள் ஆற்றில் புனித நீரோடுவதோடு, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்களகரமான பொருட்களோடு சிறப்பு வழிபாடு நடத்துவார்கள். இல்லத்தரசிகளும் தங்களின் மாங்கல்ய பாக்கியம் நிலைக்க வேண்டி வழிபாடு செய்வார்கள். கன்னிப்பெண்கள் தங்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டி சிறப்பு பூஜைகள் செய்து கைகளில் மஞ்சள் கயிறுகளை கட்டிக் கொள்வார்கள். வீடுகளில் விரதமிருந்து பெண்கள், முளைப்பாரியை கைகளில் ஏந்திக் கொண்டு காவிரி ஆற்றுக்கு வருவார்கள். எல்லா வளமும் பெருக வேண்டும் என்று இளம்பெண்கள் பூஜை செய்து முளைப்பாரியை காவிரியில் விட்டு விட்டு கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள். விவசாயம் செழிக்க வேண்டி விவசாயிகள் காவிரி அன்னைக்கு மலர்தூவி வணங்குவார்கள். மேட்டூர், ஒகேனக்கல்லிலும் புதுமண தம்பதிகள் புனித நீராடுவதோடு, மங்களகரமான பொருட்களோடு சிறப்பு வழிபாடு நடத்துவதுண்டு. இதேபோல திருவாரூர், நாகை, தஞ்சை ஆகிய மாவட்டத்தில் காவிரி அறு செல்லும் இடங்களில் எல்லாம் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.*

No comments:

Post a Comment