Wednesday, September 5, 2012

வெற்றி தரும் அங்காள பரமேஸ்வரி வழிபாடு

சிலர் எதில் இறங்கினாலும் தோல்வியே வரும். தொட்டது துலங்காது. மேலும், வேலை வாய்ப்புகளும் அமையாது. பணமும் பாழாகும். இத்தகைய தோல்விகளால் பலரும் துவண்டு போய் விடுவார்கள். இதற்கெல்லாம காரணம் அவர்களின் ஜாதக அமைப்பே!. எப்படிப்பட்ட ஜாதக அமைப்பையும் மாற்றிவிடக்கூடிய சக்தி அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் செய்யப்படும் பரிகாரத்துக்கு உண்டு. ஈஸ்வரி பட்டம் உள்ள அம்மன் தெய்வங்கள் கஷ்டப்படுகிறவர்களுக்கெல்லாம் இரக்க உணர்வோடு வெற்றியைத் தரும் சிறப்பு வாய்ந்தவள் என்று கருதப்படுகிறாள். குறிப்பாக அங்காள பரமேஸ்வரி அனைவருக்கும் வெற்றிக்குத் துணை நிற்கும் தெய்வமாவாள். தொடர்ந்து 27 வெள்ளிக்கிழமை அங்காள பரமேஸ்வரி ஆலயத்துக்கு சென்று காலை 9 மணி முதல் 10 மணிக்குள் அதாவது சனி ஹோரையில் , 18 எலுமிச்சம்பழங்களால் ஆன மாலையிட்டு, 9 எலுமிச்சம்பழங்களை இரண்டாக வெட்டி மஞ்சள் குங்குமம் இட்டு, 18 தீபமிட்டு வழிபட்டு வந்தால், தோல்வியைத் தரும் தோஷம் விலகி ஓடும். வெற்றி மேல் வெற்றி கிட்டும். நினைத்த காரியம் கைகூடும். இந்த பரிகார பூஜை செய்யும் போது தீபமேற்றி `அங்காள பரமேஸ்வரி தாயே! எனக்கு வெற்றியை நீ மட்டுமே தர முடியும். என் வாழ்வில் ஒளியேற்று!' என மனமுருகி வேண்டி கொள்ள வேண்டும். இதனால் தோல்வி தோஷம் அடியோடு நீங்கி , வெற்றி மேல் வெற்றிகள் குவியும் அங்காளம்மனிடம் எப்படி வேண்டிக்கொள்வது? குடும்பத்தில் குழப்பம், நோய், நொடிகள், பேய் பிசாசு, பில்லி,சூன்யம், வைப்பு, ஏவல், காட்டேரி போன்ற பிணிகள் பிடித்து இருந்தால் அங்காளபரமேசுவரியை மனதில் நினைத்தாலே போதும், அவள் வந்து துன்பத்தைத் தீர்த்து வைப்பதாக பக்தர்கள் கருதுகின்றனர். பொதுவாக எந்த பாதிப்பு வந்தாலும் அம்மா தாயே எங்கள் குடும்ப கஷ்டங்கள், தொல்லைகள், துயரங்கள் போன்றவற்றை எல்லாம் விலக்கி விடு என்று வேண்டிக் கொள்ள வேண்டும். அங்கப்பிரதட்சணம் ஆன்மாக்களுக்கு எல்லாம் அதி தேவதையாக விளங்கும் தலைமைத் தாய் அங்காளி ஆகும். அந்த அங்காளி மனிதப் பிறவிகள் செய்யும் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப அவர்களைப் பற்றிக் கொண்டு ஆட்டுதாகவும் கருதப்படுகிறது. ஆன்மாவானது பற்றிக் கொண்ட மனிதன் என்ற பூத உடலை விட்டு விலகி மீண்டும் அம்மனுடைய கோயிலிலேயே! அம்மனுடைய சிற்சக்தி சொரூபத்தை சென்று அடைய வேண்டும் என்பதை கருதியே அங்கபிரதட்சணம் என்ற பிரார்த்தனையே செய்யப்படுகிறது. பூமியானது தன்னைத்தானே சுற்றிவர ஒரு நாளும், தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றிவர ஒரு வருடமும் ஆகிறது. மனிதன் செய்த பாவ எண்ணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதாகவும் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு கோயிலையும் சுற்றி வருவதால் அப்பாவச் செயல்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக விலகி விடுவதாகவும் கோயிலைச் சுற்றி வலம் வரும் போது அந்த பாவங்கள் அனைத்தும் அறவே நீங்கி விடுவதாகவும் கருதப்படுகிறது. அங்க அவயம் என்பது எட்டு உறுப்புகள் கொண்ட தொகுப்பாகும். அவை, தலை, நெற்றி, கரங்கள், தோள்பட்டைகள், மார்பு, வயிறு, கால் முட்டிகள், பாத விரல்கள் ஆகும். இவையாவுமே அம்மன் திருக்கோயில் வளாகத்தில் பூமியில் படும்படியாக நமஸ்காரம் செய்வதே அங்க பிரதட்சணம் என்பதாகும். பலி பீடத்திற்கு எதிராக உடலை தூய்மையாக்கிக் குளித்து ஈரத்துணியுடன் கிழக்கு நோக்கி தரையில் உருண்ட வண்ணம், மீண்டும் மேற்குப் பக்கமாக வந்து பலி பீடத்தின் முனபாகவே பிரார்த்தனையை முடித்து எழுந்து மீண்டும் குளித்து தூய ஆடை உடுத்தி அம்மன் திருக்கோயில் உள்ளே சென்று அம்மன் புற்றையே வலம் வந்த வண்ணம் மூலவரை தரிசிக்க வேண்டும் பிறகு காணிக்கையை உண்டியலில் செலுத்தி வழிபாட்டை நிறைவு செய்யலாம். அங்காரதட்சனை வழிபாடு செய்வதால் ஜீவ ஆத்மாக்களைப் பிடித்துள்ள பிணிகள், பீடைகள், சகடைகள், தோஷங்கள், பில்லி, ஏவல், வைப்பு, காட்டேரி, சூன்யங்கள் யாவும் அம்மன் அருளால் தானாக விலகிச் செல்வதாக கருதப்படுகிறது. அங்கப்பிரதட்சனம் சுற்றி வரும் பக்தர்கள் அம்மன் நினைவைத் தவிர வேறு சிந்தனையை மனதில் வைக்கக்கூடாது. எக்காரணம் கொண்டும் பெண்கள் அங்கப்பிரதட்சணம் செய்யக்கூடாது. மொட்டை அடிப்பது ஏன்? மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஆணவம் இறுமாப்பு தலைக்கணம், அகங்காரம் போன்ற தீய எண்ணங்கள் ஏற்பட்டு விடுகின்றன. இந்த தீய குணங்கள் அங்காளம்மனை தியானம் செய்வதாலும் வழிபாடு செய்வதாலும் சிறிது சிறிதாக உடலை விட்டு விலகும். அதற்காகவே தினந்தோறும் வீடுகளில் விளக்கேற்றி வைத்து தியானம் செய்யபடுவதாகவும் வருடத்திற்கு ஒரு முறையாகிலும் இக்குணங்கள் ஏற்படா வண்ணம் அறவே அழித்து ஒழிக்க அங்காளம்மன் கோயிலிலே வழிபட வேண்டும். மனித இயக்க செயல்கள் அனைத்தையும் தாங்கி நிற்பது தலையே! அங்காளம்மன் தலைமையிட கோயிலிலே தலையை மொட்டையடித்து அங்காளம்மனின் தெளிவான ஞானத்தையும் அம்மன் பேரில் தூய அன்பையும் அவளின் அருளையும் தான் மொட்டைத்தலை தாங்கிச் செல்ல வேண்டும். என்ற எண்ணத்திற்காகவே அங்காளம்மனுக்கு வேண்டுதல் பெயரில் மொட்டை அடிக்கப்படுவதாக கருதப்பபடுகிறது.

No comments:

Post a Comment