Monday, September 3, 2012

வாழ்வில் எதுவும் எப்போதும் நடக்கலாம்

செல்வந்தர் ஒருவருக்குச் சொந்தமாகப் கப்பல்கள் நிறைய இருந்தன. ஒருநாள், கப்பல் ஒன்று கடலில் மூழ்கிவிட்டதாக செய்தி வந்தது. அவர் தன் வேலையாட்களை அழைத்து, ""இன்று மாலையில் நம் வீட்டில் உணவுக்கு ஏற்பாடு செய்யுங்கள். ஊரில் உள்ள ஏழைகள் அனைவருக்கும் அழைப்பு விடுங்கள்!'' என்று கட்டளையிட்டார். வெளியூர் சென்று திரும்பிய செல்வந்தரின் மனைவி, மாலை வீட்டுக்குத் திரும்பினாள். வீடு முழுவதும் ஊர்மக்கள் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியம் கொண்டாள். கப்பல் மூழ்கிய விஷயத்தைக் கேள்விப்பட்டதும் கோபமும் அவளைத் தொற்றிக் கொண்டது. நேராக கணவரிடம் ஓடிவந்தாள். ""உங்களுக்கு பைத்தியமா! கப்பல் கவிழ்ந்து போன இந்த சமயத்தில் அன்னதானம் தேவைதானா? நஷ்டத்தோடு மேலும் நஷ்டம் உண்டாக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டீர்களா?,'' என்றாள். "" நீ கேட்பது சரி தான். ஆனால், கடவுள் நமக்கு ஒரு பாடம் நடத்தி இருக்கிறார். வாழ்வில் எப்போது என்ன நடக்கும் என்று ஒருவருக்கும் தெரியாது. பணத்தைச் சேர்த்து பெட்டியில் பூட்டி வைப்பதால் யாருக்கும் லாபமில்லை. கப்பல் மூழ்கியதால் கோடிக்கணக்கான பணம் ஒரே நாளில் போய்விட்டது. மிச்சம் இருக்கும் பணமாவது நாலுபேருக்கு பயனுள்ளதாகட்டும்,'' என்றார். அவள் அமைதியானாள். வந்தவர்களுக்குப் பரிமாறத் தொடங்கினாள்.

No comments:

Post a Comment