Tuesday, September 25, 2012

வாழ்க அந்தணர் வானவ ரானினம்...-பொழிப்புரை

வாழ்க அந்தணர் வானவ ரானினம் வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக ஆழ்க தீயதெல் லாமர னாமமே சூழ்க வையக முந்துயர் தீர்கவே. பொழிப்புரை : உலக நன்மையின் பொருட்டு வேள்விகள் , அர்ச்சனைகள் , வழிபாடுகள் ஆகியவை செய்யும் அந்தணர்கள் வாழ்க . அவ்வேள்விகளைச் சிவன் நியதிப்படி ஏற்றுச் செலுத்தும் வானவர்கள் வாழ்க . வேள்வி , வழிபாடு இவற்றிற்குரிய பஞ்ச கௌவியங்களையும் , திருநீற்றினையும் அளிக்கும் பசுக்கூட்டங்கள் வாழ்க . வேள்வியின் பயனால் குளிர்ந்த மழை பொழிக . சிவாலய பூசை முதலியவற்றை அழியாது காத்துவரும் மன்னனின் செங்கோலாட்சி ஓங்குக . வேள்விகளால் வரும் நலங்களை அடைய வொட்டாது கேடுவிளைவிக்கும் அயனெறிகளிலுள்ள தீயவை ஆழ்க . உயிர்கள் யாவும் சிவன் நாமத்தை ஓதுக . இவ்வுலக மக்களின் துன்பம் நீங்குக . குறிப்புரை : ( அ ) அந்தணர் , வானவர் . ஆன் இனம் வாழ்க என்றது வேள்வி முதலியவற்றாலும் ஆலயங்களில் சிவார்ச்சனை முதலிய வழிபாடுகளும் நிலைத்து நிற்கவும் , அங்ஙனம் நிலைத்து நிற்றலால் உலகம் சுபிட்சமாக வாழவும் வேண்டி இங்ஙனம் வாழ்த்துவது வேள்வியால் உலகம் சுபிட்சம் உறும் எனலை , ` கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே செற்றார் ` என்பதாலும் அறிக . ( முதல் திருமுறை ) ( ஆ ) தண்புனல் வீழ்க என்றது . வேள்வியின் பயன்மழை பெய்தலும் , குறித்து . மழையை வாழ்த்தியவாறு . ( இ ) வேந்தனும் ஓங்குக என்றது - சிவாலய பூசை முதலாகிய இவற்றை என்றும் அழியாது காத்துவருபவன் அரசன் , ஆதலின் அரசனை வாழ்த்தியவாறு . ` ஆ பயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர் காவலன் காவான் எனின் ` என்பதை நோக்குக . ( குறள் . 560) ( ஈ ) தீயது எல்லாம் ஆழ்க என்றது . சைவசமய மல்லாத மற்றைச் சமய நெறிகளெல்லாம் ஒழிக , என்றும் உயிர்கட்குத் தீமை பயப்பன பிற அனைத்தும் ஒழிக என்றவாறு . எல்லாம் என்னும் எழுவாய்க்குப் பயனிலை சூழ்க என்பது . இது சேக்கிழார் அருளிய பொருளிற் கண்டது . ( உ ) அரன்நாமமே சூழ்க என்றது . ஆன்மவர்க்கங்கள் அனைத்தும் சிவபெருமான் திருப்பெயராகிய திருவைந்தெழுத்தை ஓதி வாழ்ந்து , ஓங்குவன ஆகுக என்றவாறு . ` ஐந்தெழுத்தின் புணை பிடித்துக் கிடக்கின்றேனை , முனைவனே முதல் அந்தம் இல்லாமல்லற் கரை காட்டி ஆட்கொண்டாய் ` என்ற திருவாசகக் கருத்தும் காண்க . ( ஊ ) வையகமும் துயர்தீர்கவே என்றது . உலகத்தவர்க்கு இம்மை மறுமை இரண்டிலும் நேரக்கூடிய துன்பங்கள் நீங்குக என்றவாறு சம்பந்தர் இறைவனிடம், சைவத்துக்கு இடைஞ்சல் செய்பவர்களைத் தண்டிக்க வேண்டுமென வேண்டிக்கொண்டார். இதனிடையே மன்னனின் நோயைக் குணப்படுத்த முடியாமல் வீடு திரும்பிய சமணர்களை அவர்களது மனைவிமார் கேவலமாகப் பேசினார்கள். இதனால் சமணர்களுக்கு அவமானமாகப் போய்விட்டது.மனைவி கூட மதிக்க மறுக்கிறாளே என்று கோபபப்பட்ட அவர்கள் சம்பந்தரை ஒரு போட்டிக்கு அழைக்க முடிவு செய்தனர். அவைக்கு வந்து மன்னன் முன்னிலையில், இளம் பாலகனே! உன் மந்திரம் பெரிதா? எங்கள் மந்திரம் பெரிதா? என முடிவு கட்டவே இங்கு வந்துள்ளோம். நாம் இருதரப்பும் எழுதிய மந்திரங்களை அனலில் போடுவோம். அது எரியாமல் இருக்கிறதோ, அதுவே உயர்ந்த மந்திரம். இதுதான் போட்டி, என்றனர்.சம்பந்தர் தான் எழுதிய பாடல் ஏட்டைப் பிரித்து அதனிடையே கயிறைப் போட்டார். போகமார்த்த பூண்முலையாள் பொன்னகலம் என்று துவங்கும் திருநள்ளாற்றுப் பதிகம் கிடைத்தது. (ஏழரைச்சனி, அஷ்டமத்துச் சனியால் துன்பம் அனுபவிப்போர் இதைப் பாடுவது வழக்கம்) அதை அக்னி குண்டத்தில் போட்டார். சமணர்களும் தங்கள் மந்திரச் சுவடிகளைப் போட்டார்கள். குண்டம் அணைந்ததும் சமணர்களின் ஏடு சாம்பலாகி இருந்ததையும், திருநள்ளாற்றுப் பதிகம் முன்பை விட புதிய பொலிவுடன் இருந்ததையும் கண்டனர். இதுகண்டு மக்கள் ஆரவாரம் செய்தனர். சமணர்கள் விடவில்லை. நம் இருவரின் மந்திரங்களையும் வைகை ஆற்றில் விடுவோம். யாருடைய ஏடு நீரை எதிர்த்துச் செல்கிறதோ, அவரே வென்றவர், என்றனர். உடனே அமைச்சர் குறுக்கிட்டார். சமணர் களை கருவறுக்க இதுதான் தக்க சமயமென்பதை உணர்ந்து, சரி... தொடர்ந்து நீங்கள் தோற்று வருகிறீர்கள். இந்தப் போட்டியிலும் தோற்றால் என்ன செய்ய வேண்டும், என்று கேட்டார். வடைக்காக ஆசைப் பட்டு எலி, ஒரு பொறியில் சிக்கிக் கொள்வது போல, சமணர்கள் தங்கள் வாயாலேயே தங்கள் ஆயுளை நிர்ணயித்துக் கொண்டனர். அப்படி ஒருவேளை நாங்கள் தோற்றால் எங்களை கழுவில் ஏற்றிக் கொல்லுங்கள், என்றனர். கழு என்பது உடலைக் குத்தி இரண்டாகக் கிழிக்கும் அமைப்பு கொண்ட கருவி. மரத்தால் செய்யப்பட்டிருக்கும். அனைவரும் வைகைக் கரைக்குப் புறப்பட்டனர். மழைக்காலம் என்பதால், வெள்ளம் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது ஏடுகளை ஆற்றில் போடுங்கள், என மன்னன் உத்தரவிட்டான். அத்திநாத்தி என்னும் பெயர் கொண்ட தங்கள் கொள்கைகள் அடங்கிய ஏடுகளை ஆற்றில் போட்டனர். அவ்வளவு தான்! பெரும் வெள்ளத்தில் அது அடித்துச் செல்லப் பட்டது. சமணர்கள் தங்கள் உயிரை இழந்தோம் என கலங்கி நின்றனர். ஆசனத்தில் இருந்த சம்பந்தர் எழுந்தார். வாழ்க அந்தணர் வாழ்க ஆவினம் என்று எழுதப்பட்ட பாடல்களைக் கொண்ட பதிக ஏட்டை பக்தியுடன் ஆற்றில் இட்டார். கையில் விழுந்த ஏடு, தண்ணீரைக் கிழித்துக் கொண்டு எதிர்த்துச் சென்று ஓரிடத்தில் மாயமாய் மறைந்தது. அந்த இடத்தில் ஒரு வில்வமரம் இருந்தது. அந்த மரத்தடியில் சிவபெருமான் லிங்க வடிவில் தோன்றி சம்பந்தருக்கு காட்சியளித்தார். உடனே சம்பந்தர் வன்னியமும் மத்தமமும் என்ற பாடலைப் பாடினார். சுயம்புலிங்கத்தை பலமுறை வலம் வந்து போற்றினார். அப்போது, சிவபெருமான் ஒரு முதியவர் வடிவத்தில் அங்கு வந்தார். சம்பந்தரை மார்போடு தழுவி, நீ எனது இளைய பிள்ளையைப் போல் இருக்கிறாய் என்றார். சம்பந்தர் அவரிடம்,ஐயனே! எனது ஏட்டை ஆற்றில் இட்டேன், அது இவ்விடத்தில் மறைந்து விட்டது. அரியபாடல்கள் கொண்ட அந்த ஏட்டைத் தந்தருள வேண்டும், என்றார். முதியவரும் அந்த ஏட்டை அவரிடம் கொடுத்து, சம்பந்தா! நீ பல தலங்களுக்குச் சென்று எம்மைப்பாடி மகிழ்ச்சிப்படுத்திய பின் என் திருவடி நிழலை வந்தடைவாய், என்று சொல்லி மறைந்து விட்டார். சம்பந்தரும் சைவத்தைக் காப்பாற்றிய மகிழ்ச்சியுடன் மன்னனிடம் விடைபெற்று கிளம்பினார்.

No comments:

Post a Comment