Monday, September 3, 2012

மிச்சமிருந்தால் தான் சாப்பிட வேண்டும்

ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் சாரதாதேவியாரின் பிறந்தநாள் விழா நடந்தது. அன்னை சாரதாவின் படத்தை அலங்கரித்து, ஒரு வண்டியில் ஏற்றி ஊர்வலமாகக் கொண்டு வந்தனர். அந்த வண்டியில், துபுதனா கிராமத்தைச் சேர்ந்த ஆர்த்தி என்ற பத்து வயது சிறுமிக்கு சாரதாதேவி போல் வேடமிட்டு அமர வைத்திருந்தனர். அவளது அழகு முகத்துக்கு, அந்த வேடம் மேலும் அழகு சேர்த்தது. ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த விமோக்ஷõனந்தர் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். ஊர்வலம் முடிந்ததும் ஆர்த்தியை வண்டியை விட்டு இறக்கி, புல்தரையில் அமர வைத்தார்கள். விமோக்ஷõனந்தர் அவளிடம் பேச்சுக் கொடுத்தார். ""துபுதனாவிலிருந்து எத்தனை மணிக்கு கிளம்பினே?'' ""காலை 7 மணிக்கே கிளம்பிட்டேன் சுவாமி. ராஞ்சி வந்ததும், என் அக்கா எனக்கு அம்மாவைப் போல் (சாரதாதேவி) வேடமிட்டு வண்டியில் அமர வைத்தாள்''. ""ரொம்ப நேரமாயிட்டுதே! காலையில் ஏதாவது சாப்பிட்டாயா?'' என்ற சுவாமிக்கு சிரிப்பைப் பதிலாகக் கொடுத்தாள் ஆர்த்தி. அவளுக்காக கொஞ்சம் பிரசாதம் வாங்கி, ""இந்தா! இதையாவது சாப்பிடு,'' என்றார் சுவாமி. அவள் அதை சாப்பிடாமல் கையில் வைத்திருந்தாள். ""ஏன்..சாப்பிடவில்லை,''சுவாமிகேட்டார். ""காலையில் கிளம்பும்போதே என் அம்மா எதுவும் சாப்பிடக்கூடாதுன்னு சொல்லி அனுப்பினா,''. ஆர்த்தி பரம ஏழை. அவளது அம்மா கூலி வேலை செய்து ஆர்த்தியையும், இன்னும் இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றுகிறாள். தந்தையோ முழு சோம்பேறி. வேலைக்கே போவதில்லை. பசியோடு போராடும்அந்தச்சிறுமி,சாப்பிடமறுப்பது ஏன்? விமோக்ஷõனந்தருக்கு எதுவும்புரியவில்லை. ""அம்மா ஏன் சாப்பிடக்கூடாது என்று சொன்னாள்?'' அவரது கேள்விக்கு ஆர்த்தி பதிலளித்தாள். ""சுவாமி! அன்னை சாரதாதேவி ஆஸ்ரமத்திலுள்ள தன் சீடர்கள் எல்லாரையும் தன் பிள்ளைகளாகக் கருதினார். அவர்கள் சாப்பிட்ட பிறகே, அவர் சாப்பிடுவார். அன்னையின் வேடமிட்டுள்ள நீயும், நிகழ்ச்சி முடிந்து எல்லாரும் சாப்பிட்ட பிறகு, மிச்சமிருந்தால் தான் சாப்பிட வேண்டும் என்று என் அம்மா சொல்லியனுப்பினாள்,'' என்றாள். "ஆகா! அந்தக் குழந்தையைப் போல், எல்லாரும் மாறிவிட்டால்...இந்த உலகம் எவ்வளவு அன்புள்ளதாக மாறி விடும். ஒட்டுமொத்த சமுதாயமும் மேம்பட்டு விடுமே! இத்தகைய பக்தியை எங்களுக்கும் அருளுங்கள்' என்று அன்னையிடம் வேண்டினார் சுவாமி.

No comments:

Post a Comment