Wednesday, September 5, 2012
அங்காளம்மன் தரும் பலன்
மாசி மாதம் சிவராத்திரிக்கு மறுநாள் அமாவாசை. அங்காள பரமேசுவரி அம்மன் அன்று தன் பூரண வலுவோடும், பலத்தோடும் இருப்பாள். அனைத்துக்கும் மூலாதார சக்தியான அங்காளி அன்று சுடுகாட்டில் ஆவிகள், ஆன்மாக்கள் போன்ற அனைவருக்கும் சூரை இடும் நாள் ஆகும். அதுவே மயானக்கொள்ளை என்று கூறப்படுகிறது.
சூரை என்பது உணவு அளிப்பதை குறிக்கும். இதன் பின்னணியில் ஒரு புராண கதை உள்ளது. ஒரு சமயம் சிவபெருமானுக்கு பிரம்மசக்தி தோஷம் பிடித்துக்கொண்டது. இந்த தோஷத்தை நீக்க அம்பிகை அங்காளம்மன் தீர்மானித்தாள்.
மாசி மாதம் சிவராத்திரிக்கு மறுநாள் அமாவாசையாக இருக்கவே அன்று அங்காளியம்மன் சூரையின் முதல் கவளத்தை பிரம்ம கபாலத்தில் இட, பிரம்மஹத்திக்கு உணவு கிடைக்க அது சாப்பிடுகிறது. இரண்டாவது கவளமும் கபாலத்திலேயே அன்னை இடுகின்றாள்.
உணவின் ருசியில் தன்னை மறந்த பிரம்மஹத்தி அதையும் உண்ண, மூன்றாவது கவளத்தைச் சூரையாகச் சுடுகாட்டில் இறைக்கும்போது ஈசனைப் பற்றி இருந்த பிரம்ம ஹத்தி அந்தச் சூரையைச் சாப்பிட வேண்டி ஈசன் உடலில் இருந்து கீழே இறங்கியது.
கீழே இறங்கிய கபாலம் சூரையைச் சாப்பிடும்போது சிவன் அங்கிருந்து தாண்டித் தாண்டி ஓடி, தாண்டவேஸ்வரர் ஆக அந்த ஊரிலேயே அமர்ந்தார். அதன் பின்னரே அவர் அங்கிருந்து சிதம்பரம் சென்று ஸ்படிக லிங்கமாக அமர்ந்தார், என அங்காளம்மன் கோயில் வரலாறு கூறுகிறது.
இந்த வரலாற்றை உணர்த்தவே அங்காள பரமேசுவரி அம்மன் ஆலயங்களில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
அங்காள பரமேசுவரி அம்மன் கோவிலுக்கு மூன்று முறை சென்று அம்மனை தரிசிக்க வேண்டும். அம்மன் அருள்பார்வை கிடைக்கும் விதத்தில் மனதார வேண்டவேண்டும்.
மூன்று முறை சென்றால் மூன்று ஆற்றல்களான இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானா சக்தி என்ற முப்பெரும் சக்திகளும் உடலில் நிறைந்து நன்மை பயக்கும்.
மனிதரை பிடித்த கெட்ட ஆவிகள் யாவும் அங்காள பரமேசுவரி பார்வை பட்டவுடன் சூரியனைக்கண்ட பனிபோல் தானாக மறைந்து அழிந்து ஒழிந்துவிடும்.
சீமந்த வழிபாடு
அங்காள பரமேஸ்வரியின் அருளால் கர்ப்பம் தரிக்கும் பெண்கள் தங்களுக்கு சீமந்தம் நடத்தப்படுவதற்கு முன்பு, அம்மனுக்கு முதலில் சீமந்த வழிபாடு நடத்துவதை மரபாக வைத்துள்ளனர்.
5, 7, 9-வது மாதங்களில் இந்த சீமந்த வழிபாட்டை கோவிலில் நடத்தலாம். இந்த வழிபாட்டை செய்பவர்கள் 7 வித சாதம் செய்து அம்மனுக்கு படைத்து வழிபட்டு பிறகு பக்தர்களுக்கு வினியோகிக்க வேண்டும்.
வளையல் போன்றவற்றையும் படைத்து வணங்கி வினியோகிக்கலாம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment