Monday, September 3, 2012

பேராசை

சிருஞ்சயன் என்ற அரசனுக்கு ஒரு மகள் இருந்தாள். தனக்குப் பின் நாடாள மகன் இருந்தால் நல்லதே எனக்கருதினான். ஒருமுறை அவனது அரண்மனைக்கு சில வேதவிற்பன்னர்கள் வந்திருந்தனர். அவர்களிடம் அரசன், தனக்கு ஆண்குழந்தை பிறக்க யாகம் செய்ய முடியுமா என்று கேட்டான். அவர்கள் அதுபற்றி நாரதரிடம் கேட்டுச் சொல்வதாகக் கூறினர். அந்த அரசனுக்காக நாரதரிடம் கெஞ்சிய அவர்கள், குழந்தைவரத்துக்கு வழி சொல்லுமாறு கேட்டனர். இரக்கப்பட்ட நாரதரும் சிருஞ்சயனை அழைத்து, ""மகனே! உனக்கு எப்படிப்பட்ட குழந்தை வேண்டும் என நினைக்கிறாய்?'' என்றார். பேராசைப்பட்ட அரசன், ""நாரதரே! என் மகன் அழகாக, ஆரோக்கியமுள்ளவனாக இருக்க வேண்டும். அவனது உமிழ்நீர், இதர கழிவுகள், வியர்வை கூட உடலை விட்டு வெளியேறியதும் தங்கமாக மாறவேண்டும்,'' என்றான். நாரதரும் சிரித்தபடியே, ""இவ்வளவு தானே! சரி, நீ நினைப்பது போலவே பிள்ளை பிறப்பான்,'' என்று வாக்களித்தார். சிருஞ்சயனுக்கு ஆண்குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தது முதலே வெளியேறிய கழிவு அனைத்தும் தங்கமானது. எனவே அவனுக்கு, ""சுவர்ணஷ்டீவி' (தங்கத்தைப் பொழிபவன்) என்று பெயர் சூட்டினர். அரண்மனையில் கதவு, நிலை, தாழ்ப்பாள், தட்டு, நடைபாதை எல்லாமே தங்கமயமானது. கஜானாவில் தங்கக்காசுகள் நிறைந்து வழிந்தது. உலகிலேயே பெரிய பணக்கார அரசனாகி விட்டான் சிருஞ்சயன். இந்த அதிசய அரசகுமாரனைப் பற்றி, அந்நாட்டிலுள்ள கொள்ளைக்கும்பல் கேள்விப்பட்டது. அவனைக் கடத்திச் சென்றால் ஏராளமாகச் சம்பாதிக்கலாம் என திட்டமிட்டது. அவனது நடவடிக்கையை கண்காணித்தனர். வாரம் ஒருநாள், வெளியே உல்லாசமாகச் செல்லும் சுவர்ணஷ்டீவியைக் கடத்துவதென முடிவெடுத்தனர் கொள்ளையர்கள். ஒருமுறை, கொள்ளையர்கள் ராஜகுமாரனைப் பின்தொடர்ந்தனர். அவன் ஒரு நந்தவனத்துக்குள் நுழைந்தான். காவலர்களை வாசலில் நிறுத்தி விட்டு, அங்கு பூத்திருந்த மலர்களின் அழகில் லயித்திருந்தான். கொள்ளையர்கள் நந்தவன மதில் சுவர் வழியே ஏறிக்குதித்தனர். ராஜகுமாரனை நெருங்கிய அவர்கள் கழுத்தில் வாளை வைத்து, "சத்தமிட்டால் கொன்று விடுவோம்' என மிரட்டினர். அதிர்ச்சியடைந்த ராஜகுமாரனை சாக்கில் போட்டுக் கட்டினர். அவனை அலக்காகத் தூக்கிக் கொண்டு நந்தவனத்தின் பின்பக்கமாக தப்பி விட்டனர். காட்டுக்குச் சென்ற அவர்களுக்கு ராஜகுமாரன் மூலம் தங்கம் கிடைக்க ஆரம்பித்தது. ஆனால், அதைப் பங்கிடும்போது அவர்களுக்குள் சச்சரவு ஏற்பட்டது. கொள்ளையர் தலைவன் தன் சகாக்களிடம்,""அளவில் பெரிதும்,சிறிதுமாக இவனது கழிவு களில் இருந்து தங்கம் கிடைக்கிறது. எனவே பங்கிடுவதில் சிக்கல் ஏற்படுகிறது. இவனை வெட்டி விட்டால், இவனுக்குள் இருக்கும் தங்கத்தை மொத்தமாக எடுத்துக் கொள்ளலாம், என்ன சொல்கிறீர்கள்?'' என்றான். எல்லாரும் சம்மதித்தனர். ராஜகுமாரன் வெட்டப்பட்டான். ஆனால், அவன் உடலில் தங்கம் ஏதுமில்லை. அவன் அநியாயமாக இறந்து போனான். இதையறிந்த மன்னன் கோபமடைந்து கொள்ளையர்களைப் பிடித்து வந்தான். பேராசையால் அரசன் தன் மகனை இழந்தான். அதே பேராசையால் கொள்ளையர்கள் அரசனால் மரணதண்டனை விதிக்கப்பட்டு உயிரிழந்தனர். மகாபாரதத்தில் இந்தக் கதை வருகிறது.

No comments:

Post a Comment