Wednesday, September 5, 2012

விநாயகரும் எண் ஐந்தும்...

முழுமுதற்கடவுளான விநாயகருக்கும் ஐந்தாம் எண்ணிற்கும் ஒரு விசேஷ தொடர்பு உள்ளது. `சுக்லாம்பரதரம் விஷ்ணும்' எனும் கணேச மந்திரத்தில் அவரைப் பற்றிய அடைமொழிகள் ஐந்து உள்ளதால், இம்மந்திரத்தைச் சொல்லும்போது, நாம் நமது நெற்றிப் பொட்டில் ஐந்துமுறை கொட்டிக்கொள்ள வேண்டும். (3 முறை அல்ல) விநாயகருக்கு மகிழ்ச்சி தரும் `கணானாம் த்வா' என்ற மந்திரத்திலும் இவருடைய 5 திருநாமங்கள் கூறப்பட்டுள்ளன. பிரம்மா, விஷ்ணு, ருத்ரர், சூரியன், சக்தி என உலகம் புகழும் ஐந்து தெய்வங்களும் மகா கணபதியின் அங்கங்களிலிருந்து உதித்ததாக நம்பப்படுகிறது. அகாரம், உகாரம், மகாரம், நாதம், பிந்து இவைகளை உள்ளடக்கியவர் பஞ்சாட்சரமாகிய ஓங்கார சொரூபர் கணபதி. பஞ்ச பூதங்களும் முதன்முதலாக இவரிடமிருந்தே தோன்றியதாக முக்கல மகரிஷி தெரிவிக்கிறார். ஸ்வானந்தபுவனம், ஸ்வர்கம், கைவாளம், பாதாளம், மïரேசம் ஆகிய ஐந்து இடங்களிலும் மகா கணபதி மகிழ்வுடன் வாழ்கிறார். ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம், அனுக்ரஹம், திரோதானம் எனப்படும் ஐம்பெரும் தொழில்களையும் செய்யும் விநாயகரை பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், சக்தி, சூரியன் ஆகிய ஐந்து தெய்வங்களுக்கும் `பதி' என்கிறார்கள். பஞ்சாஸ்ய கணபதியை, பஞ்சமுக கணபதி என்கிறோம். பஞ்முக கணபதியை ஹேரம்ப கணபதி என்பார்கள். `ஹே' என்றால் எளியவர், `ரம்ப' என்பதற்கு `நாயகன்' என்று பொருள். ஆகவே ஹேரம்பர் என்றால் `எளியவருக்கு நாயகன்' என்றாகும். ஹேரம்ப கணபதிக்கு ஐந்து யானை முகம் உண்டு. இந்த ஐந்து யானை முகங்களும் முத்து, தங்கம், நீலம், குந்த புஷ்பம், குங்குமப்பூ ஆகிய ஐந்து நிறங்களுடன் பிரகாசிக்கின்றான். நான்கு கைகளுடன் தும்பிக்கையையும் சேர்ந்து கணபதியை ஐங்கரன் என்கிறோம்.

No comments:

Post a Comment