Tuesday, September 25, 2012

சைவத்திலே ஐந்து வகையான ஆசௌசங்கள்

ஆசூசம் இல்லை அருநிய மத்தருக்கு ஆசூசம் இல்லை அரனைஅர்ச் சிப்பவர்க்கு ஆசூசம் இல்லையாம் அங்கி வளர்ப்போரக்கு ஆசூசம் இல்லை அருமறை யோர்க்கே” -திருமந்திரம் 2552- சைவத்திலே ஐந்து வகையான ஆசௌசங்கள் அல்லது துடக்கு கூறப்படுகின்றன. இவற்றை பஞ்ச ஆசௌசம் என்பர். 1. ஜனன ஆசௌசம் அல்லது பிறப்பு துடக்கு; இது ஒரு குடும்பத்தில் குழந்தை பிறப்பதனால் அக்குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு ஏற்படும் துடக்காகும். 2. மரண ஆசௌசம் அல்லது மரணத்துடக்கு; இது ஒரு குடும்பத்தில் மரணம் நிகழும்போது அக்குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு ஏற்படும் துடக்காகும். 3. சூதக ஆசௌசம் அல்லது பூப்புத்தீட்டு; ஒரு பெண் பருவமடையும்போதும் அதன் பின்னர் மாதாமாதம் மாதவிடாய் குருதிப்போக்கு வரும்பொழுதும் அவளுக்கு மட்டும் ஏற்படும் துடக்கு இது. இதன்போது ஐந்தாம் நாள் தலை முழுகி பால் அல்லது பஞ்ச கவ்வியம் உண்ண இந்த துடக்கு விலகும். பெரும்பாடு போன்ற மாதவிடாய்க் குருதிப்போக்கு தீட்டாக கருதப்படுவதில்லை. - பராசர ஸ்மிருதி 7.18. 4. உச்சிஷ்ட ஆசௌசம் அல்லது எச்சில் துடக்கு; இன்னொருவரின் எச்சில்பட்ட உணவு அல்லது பானத்தை அருந்துவதால் ஏற்படும் துடக்கு. இது ஸ்நானத்தினாலும், பிராயச்சித்தத்தினாலும் போகும். 5. ஜாதி ஆசௌசம் அல்லது சாதித் துடக்கு; இறை சிந்தனை மற்றும் நல்ல வாழ்நெறி இல்லாதவர்களுடன் இணங்குவதால் ஏற்படும் தோஷம். இது பிறப்பால் மட்டும் வருவது இல்லை, குணத்தாலும், பண்பாலும், வாழ்க்கை நெறியாலும் வருவது. இதனாலேயே சம்பந்தர் பல் குடிப்பிறந்த சிவ தொண்டர்களுடன் ஒன்றாக உண்டு, குடித்து, உறங்கி யாத்திரை செய்து வந்தார். வீர சைவ மரபில் உள்ளவர்களுக்கு மட்டும் இவ்விதமான ஆசௌசங்கள் கடைப்பிடிக்கப்படுவதில்லை.

No comments:

Post a Comment