Tuesday, September 4, 2012

துவாதசி தானங்கள்

துவாதசி நாட்களில் செய்யப்படும் தானங்கள் அதிக புண்ணியம் தரவல்லவை. துவாதசி தானங்கள் துவாதசி நாட்களில்தான் கொடுக்கப்பட வேண்டும். ஆஷாட சுக்லபட்ச துவாதசி ஆரம்பித்து என்ன வேண்டுமானாலும் கொடுத்து 24 என்ற எண்ணிக்கையில் முடிக்கலாம். துவாதசி அன்று நாம் தானம் கொடுப்பதாக இருக்கும் பொருளை சாமி முன் வைத்து விளக்கேற்றி வணங்கி விட்டு பிறகு மாலைக்குள் தானம் கொடுக்கலாம். ஆனால் துவாதசி அன்று சாமி முன் வைக்காத பொருளை தானம் கொடுப்பது என்பது கூடாது. துவாதசியில் எதை-எதை தானம் கொடுக்கலாம் என்ற விவரம் வருமாறு:- நெல்பொரி உருண்டை: ஆஷாடமாத சுக்லபட்ச துவாதசி அன்று ஆரம்பித்து, அடுத்து ஜேஷ்ட மாத கிருஷ்ணபட்ச துவாதசி வரை நெல்பொரி தானம் செய்யலாம். நெல் பொரியில் 25 உருண்டைகள் செய்து வாழை இலையில் வைத்து வெற்றிலை, பாக்கு, தேங்காய், துளசிதளம், தட்சணையுடன் தானமாக கொடுக்க வேண்டும். ரவை உருண்டை : இந்த தானமும் துவாதசி தானம்தான். 25 அல்லது 12 ரவை உருண்டைகள் செய்து பித்தனை தட்டில் வைத்து வெற்றிலை, பாக்கு, தேங்காய், துளசி தளம், தட்சணையுடன் தானம் கொடுக்க வேண்டும். பித்தளை தட்டு முடியாதவர்கள் வாழை இலையில் உருண்டைகளை வைத்து தானம் கொடுத்து விட்டு, எவர்சில்வர் தட்டு கையில் கொடுத்து விடலாம். ஆனாலும் 24 துவாதசியும் ஒரே மாதிரிதான் தானம் கொடுத்து வரவேண்டும். பாயாசம்: இதுவும் துவாதசி தானம்தான். ஒவ்வொரு துவாதசியும் பாயாச தானம் கொடுக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, தேங்காய், தட்சணை, துளசி தளம் வைத்து கொடுக்க வேண்டும். ரவை சம்பந்தப்பட்ட பாயாசம்தான் கொடுக்க வேண்டும். அரிசி பாயாசம், பாசிப்பருப்பு பாயாசம், கடலைப் பருப்பு, அரிசி கலந்த பாயாசம் தானத்திற்கு ஏற்றது அல்ல. விரத காலத்தில் தேங்காய் அரைத்து பால் எடுத்து, அதில் ரவை பாயாசம் தயாரித்து தானம் கொடுக்கலாம். கொப்பரை கிண்ணம் : இதுவும் ஆஷாட சுக்லபட்ச துவாதசி அன்று ஆரம்பித்து, இன்னொரு ஜேஷ்ட மாத கிருஷ்ண பட்ச துவாதசி வரை கொடுக்க வேண்டும். ஒரு முழு கொப்பரை தேங்காயை இரண்டாக கிண்ணமாக நறுக்கி, ஒன்றில் மஞ்சள் தூளும், இன்னொன்றில் குங்குமமும் நிரப்பி, இரண்டிலும் சக்தியானுசாரம் தட்சணையை வைக்க வேண்டும். மற்றபடி வெற்றிலை, பாக்கு, தேங்காய், தட்சணை, துளசி தளம் வைத்து சாமி முன் வைத்து பூ அட்சதை போட்டு வணங்கி விட்டு சுமங்கலிக்கு தானம் கொடுக்க வேண்டும். பெண்கள் கல்யாணத்திற்கு (வெள்ளிக் கிண்ணம்) வாங்க முடியாதவர்களுக்கு நாம் அவர்களுக்கு உதவி புரியவேண்டிய நிலையில் இருந்தால், இந்த தானம் முடிக்கும் பொழுது அவர்களுக்கு கொடுத்தால், அவர்களுக்கு உதவி புரிந்த மாதிரியும் இருக்கும். நமக்கும், தானம் முடித்த விதம் நிறைவாக அமையும். கொப்பரை கிண்ணம் மட்டும் கொடுத்து வந்து, நம் மகளுக்கு கல்யாணம் ஆனவுடன், மகளுக்கே இரண்டு கிண்ணம் தானமாக கொடுத்தும், தானத்தை நிறைவு படுத்திக் கொள்ளலாம். தம்பதி தாம்பூம்: இதுவும் ஆஷா சுக்லபட்ச துவாதசி அன்று ஆரம்பித்து, ஜேஷ்டமாத கிருஷ்ணபட்ச துவாதசி வரை துவாதசிகளில் மட்டும் கொடுத்து வரவேண்டும். இருவருக்கு கொடுக்கும் மாதிரி வெற்றிலை, பாக்கு ஜோடித்து இரண்டிலும் தனித்தனியாக தேங்காய், பழம் தட்சணை, துளசி தளம் வைத்து தம்பதியாக உள்ளவர்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும். மனைவியை இழந்த நபருக்கு இந்த தானம் கொடுப்பது கூடாது. ஆண்களுக்கு மட்டும்தான் கொடுக்க வேண்டும் என்பது இல்லை. சுமங்கலிகளுக்கும் கொடுக்கலாம். தட்டுடன் கொடுக்க வேண்டியது இல்லை. சாதுர் மாசத்தில் முதல் மாத துவாதசிகளில் மாம்பழமும் கடைசி மாத துவாதசிகளில் வாழைப் பழமும் வைத்து கொடுக்க வேண்டும். மற்ற எல்லா துவாதசிகளில் எந்தப் பழம் வேண்டுமானாலும் கொடுக்கலாம். கிருஷ்ண தானம் : இதுவும் ஆஷாட சுக்ல பட்சே துவாதசி ஆரம்பித்து, இன்னொரு ஜேஷ்ட கிருஷ்ண பட்ச துவாதசி வரை துவாதசிகளில் மட்டும் கொடுத்து வர வேண்டும். ஒரு எலுமிச்சம் பழம் அளவு பசு வெண்ணை, கிடைக்காவிட்டால் சாதா வெண்ணையில், ஒரு சிறிய தவழும் கிருஷ்ண விக்ரகத்தை வைத்து வெற்றிலை, பாக்கு,தேங்காய், தட்சணை, துளசி தளத்துடன் தானமாக கொடுக்க வேண்டும். சந்தன தானம் : இதுவும் ஆஷாட மாத சுக்ல பட்ச துவாதசியில் இருந்து ஜோஸ்ட மாத கிருஷ்ண பட்ச துவாதசி வரை துவாதசிகளில் மட்டும் கொடுக்க வேண்டிய தானம். வீட்டிலேயே அரைத்த சந்தனத்தை ஒரு சிறிய உருண்டையாக செய்து அதில், சக்திக்கு தக்கவாறு ஒரு ரூபாய் நாணயம், ஐந்து ரூபாய் நாணயம், 10 ரூபாய் நாணயம் வைத்து, வெற்றிலை, பாக்கு ஆகியவைகளுடன் தானம் கொடுக்க வேண்டும். வீட்டில் சந்தனம் அரைத்துத் தயாரிக்க முடியவில்லை என்றால், சந்தன பவுடரிலும் கொடுக்கலாம். பவுடரில் தண்ணீர் விட்டுக் கலக்காமல் அப்படியே கொடுத்தால் சந்தன பவுடர் பூஜைக்கு உபயோகம் ஆகும். தீப தானம் : தீப தானம் கொடுப்பது இரண்டு வகையாகும். ஒன்று ஆஷாட சுகலபட்ச துவாதசி அன்று ஆரம்பித்து, ஜேஷ்ட மாத கிருஷ்ண பட்ச துவாதசியில் துவாதசிகளில் மட்டும் கொடுக்க வேண்டிய தானம். இன்னொன்று உத்தான துவாதசி ஆனவுடன் வரும் கார்த்திகை பவுர்ணமி ஆரம்பித்து, இன்னொரு ஆஸ்வீஜ மாத பவுர்ணமியுடன் கொடுத்து முடிக்க வேண்டும். விளக்கு எரிந்து கொண்டிக்கும் பொழுதே தேங்காய் உடைத்து நைவைத்யம் செய்து விட்டு கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும். பிறகு வெற்றிலை, பாக்கு ஆகியவைகளுடன் துளசி தளம் வைத்தும் தானம் கொடுக்க வேண்டும். விளக்கு குளிர வைக்கப்பட்ட பிறகு தானம் வாங்கி கொள்பவர்களுக்கு இலை அரிசியுடன், விளக்கு எல்லாம் கொடுத்து விட வேண்டும். தேங்காய் நைவைத்யம் முடியவில்லை என்றால் பழம், கல்கண்டு ஆகியவைகளும் வைக்கலாம். தானம் கொடுக்கும் விளக்கு எல்லாம் ஒரே ரகமாக இருக்க வேண்டும். ஒருவருக்கு வெள்ளி ஒருவருக்கு பித்தளை ஒருவருக்கு குத்துவிளக்கு என்று பலவிதமாக கொடுப்பது கூடாது. எவர்சில்வர் விளக்கு தானம் கொடுப்பது கூடாது. 24 துவாதசி அல்லது 12 பவுர்ணமி ஒரே மாதிரி விளக்கு கொடுத்து வர வேண்டும். 25வது துவாதசி அல்லது 13-வது பவுர்ணமி தானத்தின் பொழுது, வெள்ளி விளக்கு அல்லது குத்துவிளக்கு வைத்து தானம் கொடுக்கலாம். குத்துவிளக்கு என்பதினால் ஒத்தையாக கொடுப்பது கூடாது. விளக்கு தானம் என்றாலே ஜோடி விளக்கு தான் கொடுக்க வேண்டும். நிறைவாக தானம் கொடுக்கும் விளக்கு தானமும், வழக்கமாக விளக்கு தானம் கொடுத்து வந்த முறையை போலவே கொடுக்க வேண்டும். நெய் அல்லது நல்லஎண்ணையை தவிர வேறு எந்த எண்ணையையும் உபயோகித்து விளக்கு ஏற்றுவதும் தானம் கொடுப்பதும் கூடாது. விளக்கு எரியும் பொழுதே தானம் கொடுக்க முடியவில்லை என்றால் மனதில் இன்னார் அல்லது யாருக்காவது கொடுப்பதாக நினைத்து தாம்பூலத்தை இடம் விட்டு நகர்த்தி விட்டு, விளக்கு குளிர வைக்கப்பட்ட பிறகு விளக்குடன் இலையை நகர்த்தி விட்டு, பிறகு கொடுக்கலாம். விளக்கு தானம் கொடுப்பது என்பது நாம் நல்லவழியில் நடக்க தெளிவான அகஞானமும் புறவாழ்வில் கண்களுக்கு பார்வை குறைவும் ஏற்படாது என்பது ஐதீகம். தேன், நெய் தானம் : இந்த தானமும் துவாதசிகளில் மட்டும் கொடுத்து, வர வேண்டிய தானமாகும். தேன் ஒரு கின்னத்தில் போட்டு சுவாமி முன் வைத்து விளக்கேற்றி வெற்றிலை, பாக்கு, தட்சணை துளசி தளம் ஆகியவைகளை வைத்து கின்னங்களுடன் தேனையும் நெய்யையும் கொடுக்க வேண்டும். நம் முன்னோர்கள் இப்படி தான் கொடுத்து வந்தார்கள். கோபி தானம் : இதுவும் ஆஷாட சுக்ல பட்த துவாதசி அன்று ஆரம்பித்து ஜேஷ்ட க்ருஷ்ண பட்ச துவாதசி வரை துவாதசிகளில் மட்டும் கொடுக்க வேண்டிய தானம். ஒரு ஜோடி ஜனி வாரம் சிறிய கோபி சந்தன கட்டியும் வைத்து வெற்றிலை, பாக்கு ஆகியவைகளுடன் துளசி தளமும் வைத்து தானம் கொடுக்க வேண்டும். ஜனி வாரம் தானம் கொடுப்பதினால், நமக்கு இனி வரும் பிறவிகள் இன்னும் சிறப்பானதாக இருக்கும் என்பது ஐதீகம். மணி தானம் : இந்த தானமும் துவாதசிகளில் மட்டும் கொடுக்கக்கூடிய தானம் ஆகும். வெண்கலத்தில் ஆஞ்சநேயர் உள்ள பூஜை மணியை சிறியதாகவோ, பெரியதாகவோ நம் சக்திக்கு தக்கவாறு வாங்கி வெற்றிலை, பாக்கு ஆகியவைகளுடன் துளசி தளமும் வைத்து தானம் கொடுக்க வேண்டும். இந்த மாதிரியாக பூஜை மணி தானம் கொடுப்பதினால், நமது குரல் கணிரென்று இருக்கும் என்பதும் ஊமையாக பிறக்காமல் நல்ல பேச்சாளராக பிறவி அமையும் என்பது விஷ்ணு பக்தி விருத்தி ஆகும். மேலும் என்பதும் ஆஞ்சநேயர் அருள் நமக்கு கிடைக்கும் ஐதீகம். சில குழந்தைகளுக்கு பேச்சு சரியாக வராமலும், தாமதமாக பேசத் துவங்குவதும், குழறியபடி பேசுவதும் அல்லது பேசும் பொழுது தொண்டையில் ஏறுமாறாக சத்தங்கள் வருவது உண்டு. இந்த குறைகள் தீர கோவில்களிலும், மடங்களிலும் மணி வாங்கி கட்டுவதாக பிரார்த்தனை செய்து கொண்டு மணி கட்டுவதை நீங்கள் கேட்டிருக்கலாம். பஞ்சாமிருத தானம் : இந்த தானமும் துவாதசிகளில் கொடுக்க வேண்டியதொரு தானமாகும். பால், தயிர், தேன், நெய், சர்க்கரை என்பது தான் பஞ்சாமிருத அபிஷேகத்திற்கு, உண்டான அபிஷேக திரவியங்கள் உடன் பழமும் அபிஷேகமும் செய்வித்து சேர்க்கப்படுகிறது. தவிர மேற்கூறியவற்றில் ஏதாவது ஒரு வகை திரவியம் இல்லை என்றால், அதற்கு பதில் பழம் உபயோகித்துக் கொள்ளலாம். மேற்கூறிய சாமான்களை சிறுசிறு தொண்ணையில் வைத்து உடன் வெற்றிலை மற்றும் துளசி தளமும் வைத்து தானமாக கொடுக்க வேண்டும். முதல் இரண்டு துவாதசிகளில் தேன் கூடாது மற்றும் வாழைப் பழத்திற்கு பதில் மாம்பழம் வைக்க வேண்டும். தொன்னையில் கொடுக்க முடியாவிட்டால் யாருக்கு தானம் கொடுக்கிறோமோ அவர்கள் வீட்டு கின்னங்களிலேயே ஊற்றி விடலாம். இந்த தானமும் துவாதசி பூஜைக்கு உபயோகம் ஆகும் மாதிரி துவாதசி அதிகாலையிலோ அல்லது ஏகாதசி சாயங்காலமோ கொடுக்கலாம். ஏகாதசி அன்று கொடுப்பதினால் பாலுக்கு உண்டான பணம் கொடுத்து விடலாம். தொட்டில் தானம் : சிறிய மரத்தினாலான தொட்டில் அல்லது பித்தளை போன்ற உலோகத் தொட்டில் (இரும்புத் தொட்டில் கூடாது) அல்லது கை வேலையில் செய்யும் மணி, ஒயர் போன்றவைகளிலான தொட்டில், அதில் சிறிய கிருஷ்ண விக்ரகம் அல்லது படம் வைத்து வெற்றிலை, பாக்கு, தட்சணை, துளசி தளம் வைத்து, தானமாக கொடுக்க வேண்டும். இந்த தானமும் துவாதசி வரை துவாதசிகளில் மட்டும் கொடுத்து வர வேண்டிய தானம். இந்த தானம் கொடுக்கும் பொழுது சந்தான கோபால கிருஷ்ணனை வணங்கி கொடுக்க வேண்டும். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இந்த தானம் அவசியமாக கொடுப்பது நல்லது. இந்த தானம் கொடுப்பதனால் சந்தான பாக்கியம் கிடைக்கும் என்பதும், நமக்கு பிறந்த குழந்தைகளும் இனி நமது வம்சத்தில் பிறக்கும் குழந்தைகளும் ஆரோக்கியமாக நீண்ட ஆயுளுடன் இருப்பார்கள் என்பதும் எந்த பிறவியிலும் நமக்கு குழந்தை பாக்கியம் இருக்கும் என்பது ஐதீகம். மகா சிவராத்திரி தானம் : மகா சிவராத்திரி அன்று பண்டிகை சமையல் செய்து தம்பதிகளை சாப்பிடச் சொல்லலாம். முடியாவிட்டால் இருவர் சாëப்பிடும் அளவு சமையல் சாமான்கள் வெற்றிலை, பாக்கு தட்சணையுடன் வைத்து தானம் கொடுக்கலாம்.

No comments:

Post a Comment