Wednesday, September 5, 2012

புத்திர பாக்கியம்

ஒருவருடைய ஜாதகத்தில் 5ம் இடத்தை வைத்து புத்திர பாக்கியத்தை கணிக்க வேண்டும். ஆனால் பெண்கள் ஜாதகத்தில் 5ம் இடத்தை பார்ப்பதோடு, 5க்கு 5ம் இடமான 9ம் இடத்தை பார்த்தும் புத்திர பாக்கியத்தை கணிக்க வேண்டும். குரு பகவான் புத்திரகாரகன் ஆகிறார், அவருடைய நிலையை வைத்தும் புத்திர பலனைக் காணலாம். ஒருவருடைய ஜாதகத்தில் புத்திர ஸ்தானாதிபதியும், குருவும் நன்றாக அமையவில்லை என்றால், அதாவது பகை நீசம் பெற்று கெட்டு நின்றால் புத்திர பாக்கியம் நன்றாக அமைவதில்லை. புத்திர ஸ்தானாதிபதி சூரியனுடன் சேர்க்கை பெற்று அஸ்தங்கம் அடைந்தால் புத்திர பலன் உண்டாவதில்லை அல்லது புத்திர இழப்பு ஏற்படுகிறது. புத்திர ஸ்தானத்தில் குரு அமர்ந்திருந்தாலும்(காரகா பாவ நாஸ்த்தி) புத்திர பலன் உண்டாவதில்லை. அது குருவினுடைய ஆட்சி உச்ச வீடாக இருந்தால் மாறாக நற்பலன்கள் ஏற்படுகிறது. புத்திர ஸ்தானாதிபதி, புத்திரகாரகன், இவர்கள் அம்சத்தில் நின்ற இடத்தின் அதிபதி ஆகியோருடைய திசை புத்தி காலங்களில் புத்திர பலன் உண்டாகிறது. கோசார ரீதியாக குரு ராசியிலிருந்து 2,5,7,9,11ம் இடங்களில் சஞ்சரிக்கும் போது புத்திர பலன் உண்டாகிறது. ரிஷபம், சிம்மம், கன்னி, விருச்சிகம் ஆகிய ராசிகள் புத்திர ஸ்தானமாக வந்தால் புத்திர வழியில் நற்பலன்கள் அமைவதில்லை. 5ம் இடத்தில் எத்தனை கிரகங்கள் உள்ளதோ அத்தனை புத்திர பாக்கியம் ஏற்படும். புத்திர ஸ்தானத்தில் ராகு, கேது வீற்றிருந்தால் புத்திர தோஷம் ஏற்படுகிறது. புத்திர ஸ்தானாதிபதி அம்சத்தில் அமர்ந்த இடத்தில் இருந்து ஜென்ம லக்கினம் வரை எண்ணினால் எத்தனை ராசிகள் வருகிறதோ அத்தனை புத்திர பாக்கியம் ஏற்படும். ஒருவருடைய ஜாதகத்தில், சூரியன், புதன், சனி சேர்க்கை பெற்று 11ம் இடத்தில் வீற்றிருந்தால் பல பிள்ளைகளை பெற்றெடுக்கும் யோகம் உண்டாகும். இதில் எது மிக அதிக பலமோ அதன்படி பலன்கள் நடக்கும். 5ஆம் இடத்து கிரகம் 6,8,12-ல் இருந்தால் ஒரு குழந்தை மட்டும் இருக்கும். ஆனால் குருபகவான் 5ஆம் இடத்தையோ, அவ்வீட்டிற்கு உரியோனை பார்த்தால் இரண்டு குழந்தைகள் வரை இருக்கும். ஒரு சாதகத்தில் குரு பகவான் பலம்பெற்று இருந்தால் பரிகாரம் மூலம் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். குருவின் அனுக்கிரகம் இல்லாவிட்டால் காசி, ராமேஸ்வரத்தில் மூழ்கினாலும் ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்தாலும் குழந்தை ஏற்படாது. ஒருவருக்கு புத்திரதோஷம் ஏற்பட்டால் அவரது நட்சத்திரமும் அமாவாசையும் கூடும் ஒருநாளில் கணவர்-மனைவி இருவரும் ராமேஸ்வரம் கடலில் 21 தடவை மூழ்க வேண்டும். ஒவ்வொரு தடவையும் ஒம் நம சிவ என்று 10 தடவை செபித்து மூழ்க வேண்டும். பின்பு கோவில் பிரகாரத்தில் உள்ள 21 தீர்த்தத்திலும் மூழ்கி சுவாமி தரிசனம் செய்ய வேண்டும். பின்பு புத்திர பாக்கியம் வேண்டி சுவாமியை மனதில் நிறுத்தி ஒரு மணி நேரம் தியானம் செய்ய வேண்டும். பின்பு அடுத்து வரும் அமாவாசை அன்று தனது சாதகம் சம்பந்தப்பட்ட கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும். ஐந்தாம் இடத்தில் ராகு இருந்தால் அல்லது கேது இருந்தால் திருநாகேஸ்வரம் சென்று அங்குள்ள தீர்த்தத்தில் நீராடி ராகுவை தரிசனம் செய்து அங்கு ராகுவை ஒரு மணி நேரம் தியானம் செய்ய வேண்டும். இப்படி செய்தால் உடனே குழந்தை பிறக்கும். சனி ஈஸ்வரன் 5-ம் இடத்தில் இருந்தால் திருநள்ளாறு சென்று அங்கு தீர்த்தமாடி சனி பகவானை தியானித்து ஒரு மணி நேரம் கோவிலில் தியானம் செய்ய வேண்டும். செவ்வாய் பகவான் 5-ம் இடத்தில் இருந்தால் வைத்தீஸ்வரன் கோவில் சென்று தீர்த்தமாடி அங்கு கோவிலில் ஒரு மணி நேரம் தியானம் செய்ய வேண்டும்.*

No comments:

Post a Comment