Thursday, September 6, 2012

மூன்றடி நிலம்- அளந்து கொடுத்தால் போதும்'

நரசிம்மரால் வதைக்கப்பட்ட இரண்யன் அசுர குணம் கொண்டவனாக இருந்தாலும், அவன் மகன் பிரகலாதன் மகாவிஷ்ணுவின் பக்தனாகத் திகழ்ந்தான். அந்த பிரகலாதனின் வம்சத்தில் வந்தவனே மகாபலிச் சக்கரவர்த்தி. மகாபலி மலைநாட்டினை நீதி வழுவாது நேர்மையுடன் ஆட்சிபுரிந்து வந்தான். இவனை மக்கள் "மாவேலி' என சிறப்புப் பெயரிட்டு அழைத்துப் போற்றினர். மிக நல்லவனாகத் திகழ்ந்தாலும் பெயரும் புகழும் பெற்றதால் ஆணவம் கொஞ்சம் கொஞ்சமாகத் தலை தூக்கியது. ஒரு கட்டத்தில் தேவலோகத்தையே வெற்றிகொண்டான். மகாபலி மன்னன் முற்பிறவியில் எலியாகப் பிறந்தவன். இந்த எலி, வேதாரண்யம் கோவில் வளாகத்திற்குள் சுற்றித் திரிந்து சுகமாக வாழ்ந்து வந்தது. ஒருசமயம் வேதாரண்யேஸ்வரர் கோவில் கருவறைக்குள் நுழைந்த அந்த எலி, அங்கே உணவு ஏதாவது கிடைக்குமா என்று பார்த்தது. சுவாமி முன் சரவிளக்கு ஒன்று எரிந்துகொண்டிருந்தது. அந்த விளக்கில் நெய் இடப்பட்டிருந்ததால் அதன் மணம் எலியைக் கவர்ந்தது. அதனால் அந்த விளக்கு நோக்கி மேலே பாய்ந்து ஏறியது எலி. அந்த வேளையில் விளக்கின் திரி அணையும் தறுவாயில் இருந்தது. எலி, விளக்கில் உறைந்திருந்த நெய்யினை உண்டபோது, தற்செயலாக திரி தூண்டப்பட்டு பிரகாசமாக எரிந்தது. அணையவிருந்த ஆலய விளக்கைத் தூண்டி எரியச் செய்ததால் அந்த எலி மகாபுண்ணியம் பெற்றது. அதன் விளை வாக மறுபிறவியில் மலை நாட்டின் சக்கரவர்த்தி யாக- மகாபலியாக அசுர குலத்தில் பிறந்தது. பிரகலாதன் வம்சத்தில் பிறந்ததால் தெய்வீகப்பற்று இருந்தாலும், பிரக லாதனின் தந்தை இரணியனின் அசுர குணமும் சிறிதளவு இருந்ததால்தான் அவனுக்கு கர்வமும் உண்டானது. இந்நிலையில் மகாபலியின் அசுரகுணம் மேலோங்கியிருந்ததால், தேவலோகவாசிகள் பயத்துடன் மறைந்தே வசிக்கலானார்கள். இந்த நிலையை மாற்ற எண்ணிய அதிதி தேவி, தன் கணவர் காசிப முனிவரிடம் ஆலோசனை கேட்டாள். விரதம் மேற்கொண்டு மகாவிஷ்ணுவை வணங்குமாறு கூறினார் காசிபர். அவ்வாறே அதிதி தவம் மேற்கொள்ள, அவள் தவத்திற்கு மகிழ்ந்து காட்சி தந்த மகா விஷ்ணு, ""என்ன வரம் வேண்டும்?'' என்றார். ""தாங்கள் எனக்கு மகனாகப் பிறந்து, மூவுலகத் தில் வாழும் தேவர்களின் அச்சத்தைப் போக்க வேண்டும்'' என்று வேண்டினாள்; மகாவிஷ்ணு வும் அருளினார். அதன்படி ஆவணி மாத சுக்லபட்ச துவாதசி திதியில், திருவோணம் கூடிய சுபயோக சுபதினத் தில் அதிதி- காசிப முனி தம்பதிக்கு வாமனராக அவதரித்தார் மகாவிஷ்ணு. குழந்தையாகக் காட்சி தந்த பகவான், அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே ஐந்து வயது பாலகனாக மாறி காட்சி தந்தார். மகாவிஷ்ணுவின் வாமன அவதாரத்தை அறிந்த தேவர்களும் ரிஷிகளும் முனிவர்களும் மகிழ்ந்தனர். ஒவ்வொருவரும் ஒரு பரிசை அளித்து கௌரவித்தனர். இந்நிலையில் மகாபலிச் சக்கரவர்த்தி நர்மதைக் கரையில் அசுவமேத யாகம் செய்து கொண்டிருந்தான். யாகம் முடிந்ததும் அனைவருக்கும் தானம் கொடுத்து வாழ்த்துகள் பெற்றுக் கொண்டிருந்தான். மகாபலியின் யாகத்தாலும், தான தர்மத் தாலும் அவனது பலம் வலுப்படும் என்பதை அறிந்த வாமனர், மகாபலி தானம் கொடுக் கும் இடம் நோக்கி வந்தார். வாமனரை வர வேற்ற மகாபலி தன் மனைவி விந்தியா வலி மற்றும் மகள் ரத்னமாலாவுடன் வாமனருக்கு பாத பூஜை செய்தார். அப்போது மகாபலியின் மகள் ரத்னமாலா, "இந்தச் சிறுவன் எத்தனை அழகு! இவனுக்குத் தாயாகி பாலூட்டும் பாக்கி யம், எனக்கு அடுத்த பிறவியிலாவது கிட்ட வேண்டும்' என்று மனதிற்குள் நினைத் தாள். மகாபலியோ, "இந்தச் சிறுவன் வரவால் நம் நாடு மேன்மேலும் சிறப்பு பெறவேண்டும்' என்று நினைத்தான். அவர்களின் மனப்போக்கை அறிந்த வாமனர், "நினைத்தது நிறைவேறும்!' என்று அருளினார். "நான் நினைத்ததைத்தான் வாமனர் கூறுகிறார்' என்று இருவரும் எண்ணி மகிழ்ந்தார்கள். பாதபூஜை முடிந்ததும் மகாபலி, ""சுவாமி! தங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்க, ""பெரிதாக ஒன்றும் வேண்டாம். மூன்றடி நிலம்- அதுவும் என் காலடியில் அளந்து கொடுத்தால் போதும்'' என்றார் வாமனர். ""அவ்வாறே தருகிறேன்'' என்று மகாபலி கூற, அருகிலிருந்த அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் மகா பலியிடம் ரகசியமாக, ""மகாபலி, வந்திருப்பவன் சாதாரண சிறுவன் அல்ல. அவனுக்குத் தானம் தராதே. அவன் மூன்றடி மண் கேட்பது உன்னை அழிக்கத்தான்'' என்று கூறினார். ""வாக்குக் கொடுத்து விட்டேன். கொடுத்த வாக்கை மீற மாட்டான் மகாபலி'' என்று நீர் வார்க்க கமண்டலத்தை எடுத்தான். அப்போது சுக்கிராச்சாரியார் வண் டாக மாறி கமண்டலத் தின் வாயை நீர் வராமல் அடைத்தார். இதை யறிந்த வாமனர், தர்ப் பையை எடுத்துக் குத்தவே, அது வண்டின் ஒரு கண்ணைப் பழுதாக்கிவிட்டது. வலி பொறுக்கமுடியாமல் கமண்டலத்திலிருந்து வெளியேறிப் பறந்தார் சுக்கிராச்சாரியார். அதன்பின் தாரை வார்த்துக் கொடுத்தான் மகாபலி. மறுகணம் திரிவிக்கிரமனாக விண்ணுக்கும் மண்ணுக்கும் வளர்ந்து நின்றார் வாமனர். வானையும் பூமியையும் இரண்டடியால் அளந்து, ""மூன்றாவது அடிக்கு எங்கே இடம் மகாபலி?'' என்று கேட்க, அவரை வணங்கிய மகாபலி, ""இதோ என் தலை. மூன்றாவது அடியாக அளந்து ஆட்கொள்ளுங்கள்'' என்று திரிவிக்கிரமன் காலில் பணிந்தான். உடனே பகவான், மகாபலியின் தலையில் வலது காலை வைத்து, ""ஏழு சிரஞ்சீவிகளுள் நீயும் ஒருவனாக இடம் பெறுவாய். நான் உன்னை என்றும் பாதுகாப்பேன்'' என்றார். மகாவிஷ்ணுவின் பாதம் பட்டதும் மகாபலியின் ஆணவம் முழுவதுமாக அழிந்தது. அந்தச் சமயத்தில், ""பகவானே, ஒரு வரம் வேண்டும்'' என்றான் மகாபலி. ""என்ன?'' என்று பகவான் கேட்க, ""பிரபுவே, நான் பாதாளத்தில் அழுத் தப்படும் இந்த நாள் போற்றப்பட வேண்டும். இதே நாளில் நான் மீண்டும் என் நாட்டு மக்களைக் காண வரவேண்டும்'' என்றான். அந்த வரத்தையும் அருளி னார் பகவான். பகவானிடம் மகாபலி வாங்கிய வரத்தின்படி ஆவணி மாத திருவோண நாளில் மக்களைக் காண மலை நாட்டிற்கு மகாபலி வருவதாக நம்பப் படுகிறது. ஆகவே, மலை நாடான கேரளாவில் அந்த நாள் ஓணம் பண்டிகையாகக் கொண் டாடப்படுகிறது. ஆவணி மாத அஸ்த நட்சத்திரம் துவங்கி பத்து நாட்கள் விழா கொண்டாடப் பட்டாலும், "ஆவணி திருவோணம், அதற்கு முதல் நாளான தலை ஓணம், மறுநாள் வரும் ஒன்றாம் ஓணம் ஆகிய மூன்று நாட்கள் மிகச் சிறப்பாக- தெருவெங்கும் மலர் மணம் மணக்க விழா கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகையின்போது இடப்படும் "அத்தப்பூ' கோலம் மிகவும் பிரசித்தம். சாதாரண மலர்களுடன், ஆவணியில் மட்டும் மலரும் விசேஷ பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டு இந்தக் கோலம் அமையும். மகாவிஷ்ணு குள்ள உருவில் வாமனராக அவதாரம் எடுத்து, அதேசமயம் நெடிதுயர்ந்த திரிவிக்கிரம திருக்கோலத்தில் காட்சி கொடுத்த தால்- அவதாரத்திற்குள் அவதாரமாகத் திகழ்வதால், ஆவணி மாதத் திருவோணம் மிகவும் போற்றப்படுகிறது. இந்தப் பண்டிகையின்போது பல்வகைப் பாயாசத்துடன் விருந்து படைப்பார்கள். இதை மலையாளத்தில் "ஓணசத்ய' என்பர். புத்தாடை அணிவது பண்டிகையின் சிறப்பு. ஓணம் பண்டிகைக்கென்றே சிறப்பாக புத்தாடை அணிவர். இப்பண்டிகையையொட்டி கேரளாவில் படகுப் போட்டிகள் நடைபெறும். கோவில்களில் பகவானுக்கு மஞ்சள் துண்டு அணிவித்து வழிபடுவது வழக்கம். பத்மநாபபுரம் பத்மநாப சுவாமிக்கு ஓணவில் சாற்றி வழிபடுவர். சபரிமலை ஸ்ரீஐயப்பன் கோவில் ஓணத்துக்காக ஐந்து நாட்கள் திறந்திருக்கும். குருவாயூரில் குழந்தை கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு பால் பாயாசம் சமர்ப்பித்து வழிபாடு நடைபெறும். அன்று குருவாயூர் உன்னிகிருஷ் ணரை தரிசிப்பது மிகவும் சிறப்பு. இதற்கு ஒரு புராணக்கதை சொல்லப்படுகிறது. வாமனராக வந்த பகவான், தன் தந்தை மகாபலியை பாதாளத்தில் அழுத்தியதைப் பொறுத்துக் கொள்ள முடியாத மகாபலியின் மகள், பகவானை பழிவாங்க வேண்டுமென்று நினைத்தாள். "நயவஞ்சகனாக வந்தவனுக்கா நான் பாலூட்ட நினைத்தேன். இவனை விஷம் கொடுத்துக் கொன்றால் என்ன?' என்ற எண்ணம் அவள் மனதில் உதித்தது.காலம் சென்றது. யுகம் மாறியது. திருமால், கிருஷ்ணனாக தேவகியின் வயிற்றில் பிறந்து, யசோதையிடம் கோகுலத்தில் வளர்ந்தபோது, மகாபலியின் மகள் ரத்னமாலா கம்சனின் அரக்கர் குலத்தில் பூதகியாகப் பிறந்து வளர்ந்து வந்தாள். கிருஷ்ணன், கோகுலத்தில் வளர்வதை அறிந்த கம்சன், பூதகியை அழைத்து அவனைக் கொல்லும்படி கட்டளையிட்டான். சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த பூதகி- அதாவது வாமன அவதாரத்தின்போது மகாபலியின் மகளாகப் பிறந்தவள், இதுதான் நல்ல சமயமென்று ஓர் அழகியாக மாறி கோகுலம் சென்றாள். அவள் வந்த வேளையில் வானத்தில் இடி மின்னல் தோன்றி, மழை வருவதற்கு அறிகுறியாக பலத்த காற்று வீசிக் கொண்டிருந்தது. அப்போது யசோதையின் வீட்டுக்கதவைத் தட்டினாள் பூதகி. கதவைத் திறந்த யசோதை, ""இந்த அகால வேளையில் வந்திருக்கும் நீ யாரம்மா?'' என்று இரக்கப்பட்டு கேட்டாள். ""அம்மா, எனக்கு பெண் குழந்தை பிறந்ததால், என் கணவர் வீட்டை விட்டு என்னைத் துரத்திவிட்டார். குழந்தையைக்கூட என்னிடம் தரவில்லை. இன்றிரவு இங்கே தங்குவதற்கு இடம் தாருங்கள். விடிந்ததும் சென்று விடுகிறேன்'' என்று கண்ணீர்விட்டாள். அந்தச் சமயத்தில் குழந்தை கண்ணன் அழும் குரல் கேட்கவே, ""அம்மா, குழந்தை அழும் சத்தம் கேட்கிறது. தொட்டிலை ஆட்டித் தாலாட்டவா?'' என்று கேட்க, யசோதையும் அவளை உள்ளே அனுமதித்தாள். இடி மின்னலுடன் பலத்த காற்றும் வீசவே, விளக்குகள் அணைந்தன. எங்கும் இருள். இதுதான் தக்க சமயம் என்று குழந்தையை வாரி எடுத்து பூதகி தன் மார்போடு அணைத் தாள். முன்கூட்டியே மார்பகத்தில் விஷத்தைத் தடவிக் கொண்டிருந்தவள் குழந்தைக்குப் பால் கொடுப்பதற்கு முயற்சித்தாள். குழந்தை கிருஷ்ணன், அவள் மார்பகத்தை உறிஞ்சி, கால்களால் உதைக்கவே அவள் மல்லாக்க விழுந்து பிணமாகிப்போனாள். அணைந்த விளக்கை ஏற்றிக்கொண்டு வந்த யசோதை தரையில் அரக்கி ஒருத்தி பிணமாகக் கிடப்ப தைக் கண்டு அஞ்சி நிற்க, குழந்தை கிருஷ்ணனோ அரக்கியான பூதகியின்மீது கால்களை உதைத்துக் கொண்டிருந்தான். அப்பொழுது தான் யசோதைக்குப் புரிந்தது, இவள் கம்சனால் அனுப்பப்பட்ட அரக்கி என்று. குழந்தையை வாரி எடுத்து அணைத்துக் கொண்டாள் யசோதை. இதில் தனிச்சிறப்பு என்னவென்றால் பகவான் கிருஷ்ணனைக் கொல்ல வந்த அரக்கி யானவள் பிணமானதும், அவளை இடுகாட்டில் எரியூட்டினார்கள். அப்போது பிணம் எரியும் போது வெளிப்படும் துர்நாற்றம் எழாமல், சந்தனக்கட்டையை எரித்தால் வரும் நறுமணம் போல வாசம் வந்ததாம். பகவானின் பாதங்கள் பூதகியின் உடல்மீது பட்டதால் அவள் புனிதம் அடைந்தாள் என்று புராண வரலாறு கூறுகிறது. மகாவிஷ்ணுவின் ஜென்ம நட்சத்திரம் திருவோணம் என்பதால், ஆவணி திருவோணம் மிகவும் போற்றப்படுகிறது. அன்று திருமால் கோவிலுக்குச் சென்று பெருமாளை வழிபடும்போது, அவர் பாதங்களை தரிசித்தால் பாவங்கள் அழியும்; புண்ணியம் சேரும்; வைகுண்டத்தில் ஓர் இடம் கிட்டும் என்பர் பெரியோர்

No comments:

Post a Comment