Monday, September 3, 2012

ஆன்மிக தகவல்கள்

** கடவுளை நேருக்குநேர் நின்று வழிபடக்கூடாதாமே ஏன்? இறைவனுக்கு மூன்று கண்கள். இவற்றில் நெற்றிக்கண் நெருப்பு வடிவமானது. இந்தப் பார்வை நன்மை அளிக்காது. மற்ற இரு கண்களும் சூரியசந்திர வடிவானவை. இவை நன்மை தருபவை. தெய்வத்தின் கடைக்கண் பார்வை தான் நமக்கு வேண்டும். இதைத்தான் "கடாக்ஷம்' என்பர். இதை "கட+அக்ஷம்' என பிரிப்பார்கள். "கட' என்றால் கடைசி. "அக்ஷம்' என்றால் கண். அதாவது கண்களின் கடைப்புறப் பார்வை என்று பொருள். இது கருணையே வடிவானது. சகல ஐஸ்வர்யங்களையும் தரவல்லது. அதற்காகத் தான் நேருக்குநேர் நின்று தரிசிக்காமல், ஒரு பக்கமாக நின்று வழிபட வேண்டும். * பூஜையறையில் ஒரே ஒரு விளக்கை மட்டும் ஏற்றலாமா? பொதுவாக பூஜையறையில் குலதெய்வதீபம் என்று ஒரு காமாட்சி விளக்கும், எல்லா தெய்வங்களுக்குமாக குத்துவிளக்கும் ஆக இரண்டு தீபம் ஏற்ற வேண்டும். ஊதுபத்தி சூடம் போன்றவற்றை இந்த விளக்கில் இருந்து ஏற்றக் கூடாது. அதற்கு பூஜை நேரத்தில், தனியாக ஒரு கைவிளக்கை ஏற்றிக் கொள்ள வேண்டும். * சிவபெருமான் சுடுகாட்டுச் சாம்பலைப் பூசி நடனம் ஆடுவது ஏன்? . எல்லா சுகபோகங்களையும் அருளும் சிவபெருமான், நமக்கு தேவையில்லாதவற்றை, நாம் விரும்பாததை தனக்காக வைத்துக் கொண்டுள்ளார். இதுதான் கருணையும், எளிமையும் இணைந்த திருவருள். உலக போகங்களையே பெரிதும் விரும்பி மயங்காமல் வாழவும், இறுதியில் நம் உடல் கைபிடிச்சாம்பல் தான் என்பதை உணர்த்தவும் சுடலைப்பொடி பூசி அருள்கிறார். * சுமங்கலி பூஜை செய்வதன் நோக்கம் என்ன? பக்தர்களையும் இறைவனாகவே காணும் உயர்ந்த தத்துவத்தைக் கொண்டது இந்துமதம். உமையம்மை மகாலட்சுமி போன்ற தெய்வங்களின் அருளைப்பெற சுமங்கலிப் பெண்களை அம்பாளாக வழிபட்டு, புடவை குங்குமச்சிமிழ் போன்ற மங்கலப்பொருட்களைக் கொடுத்து விருந்தளிப்பது சுமங்கலி பூஜை. இதுமிக உயர்ந்த வழிபாடு. இதனைச் செய்தால் சுமங்கலிகளாக இறந்த மாதர்கள் சந்தோஷப்பட்டு, குடும்பத்தினர் நலமாகவும், தீர்க்கசுமங்கலிகளாகவும் வாழ வாழ்த்துவார்கள். * விரதநாட்களில் பகலில் தூங்கக் கூடாதாமே ஏன்? சாப்பாடும் தூக்கமும் உடலுக்கு சுகமளிப்பவை. ஒரு நிலைப்பட்ட மனதுடன் அன்று முழுவதும் தெய்வசிந்தனையாகவே இருப்பதற்குத் தடையாக இருப்பவை. பசியோடும், தூங்காமலும் இருக்கும்போது, நாம் இன்று விரதம் இருக்கிறோம் என்ற எண்ணம் மறக்காமல் இருக்கும். முழுமையான தெய்வ சிந்தனையுடன் விரதம் இருந்தால் நாம் எண்ணியது நிறைவேறும். * ஒரே நேரத்தில் அக்கா, தங்கை அல்லது அண்ணன், தம்பி இருவருக்கும் திருமணத்தடை பரிகாரபூஜை நடத்தலாமா? பரிகார பூஜை சேர்ந்தே செய்யலாம். ஒன்றும் தவறில்லை. இறையருளால் உங்கள் குடும்பத்தில் தடை நீங்கி விரைவில் திருமணம் கைகூடட்டும்.

No comments:

Post a Comment