Thursday, November 29, 2012

அளவோடு உணவுண்டால் உடல் அதை ஜீரணிக்கும்.வேதாத்ரி மகரிஷி

அளவோடு உணவுண்டால் உடல் அதை ஜீரணிக்கும். அதிகமாக உணவு உண்ணும்போது உணவு, உடலை ஜீரணித்துவிடும்.
* பழக்கம், புலன்கவர்ச்சி, சூழ்நிலை ஆகிய காரணங்களால் மனிதன் தவறுகளைச் செய்கிறான். செய்த தவறுகளே பின்னர் துன்பமாக முளைக்கின்றன.
* பெரும்பாலும் நாம் செய்யும் தவறுகள்நமக்குத் தெரிவ தில்லை. விழிப்புணர்வுடன் இருந்து தவறுகளைக் கண்டறிவதோடு, மீண்டும் நிகழாமல்தடுக்கவும்வேண்டும்.
* மனம் தான் மனித வாழ்வின் விளைநிலம். மனதின் தன்மையே மனிதனிடம் வெளிப்படுகிறது. மனதின் உயர்வே மனிதனின் உயர்வாகும்.
* மனதை அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தால் அடங்கிவிடும். மனதின் குறைகளைக் களைவதோடு நல்வழியில் செல்லும் மனவலிமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
* இன்பமும், அமைதியும் மனதிற்குள் இருந்து தான் வரவேண்டும். ஒருவன் தன்னைத் தாழ்த்திக்கொள்வதும், உயர்த்திக் கொள்வதும் மனதிடத்தில் தான் இருக்கிறது. மனம் தன்னை உணரத் தொடங்கிவிட்டால் மனிதனும் தெய்வ நிலையைப் பெற முடியும்.
* மனமும், எண்ணமும் ஒன்றுதான். எண்ணத்தில் நன்மையும், உறுதியும், ஒழுங்கும் அமைந்துவிட்டால் எண்ணியதையெல்லாம் பெறமுடியும்.
* தீர்க்க முடியாத துன்பம் என்று ஒன்று உலகில் கிடையாது. அதைக்கண்டு வருத்தப்படக்கூடாது. துன்பத்தைத் தீர்க்கும் வழியை அறியாமல் மனிதன் கவலையால் தவிக்கிறான். திறக்க முடியாத பூட்டே கிடையாது. சரியான சாவியைக் கண்டுபிடிக்காதவர் கள் தான் உண்டு.
* வேண்டாத விருந்தாளி என்றால் ஒருமுறை முகத்தைச் சுளித்துவிட்டால் ஓடிவிடுவார். ஆனால், வேண்டாத தீய எண்ணமோ விரட்ட விரட்ட மீண்டும் வரும். அதனால், தீய எண்ணத்திற்கு ஒருபோதும் இடம் தருவது கூடாது.
* ஆரோக்கியம் இருந்தால் தான் அமைதியான, மகிழ்ச்சியான வாழ்வு வாழ முடியும். அறிவும் திறம்பட இயங்க ஆரோக்கியம் அவசியம். எனவே, ஒவ் வொருவரும் திடமான உடல்நலத்துடன் வாழும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.
* நாம் அனைவரும் இந்த பரந்த சமுதாயத்தின் ஓர் அங்கம். சமுதாயத்தில் பெற்ற வசதி வாய்ப்புகள், பொருட்கள் மூலமாகத் தான் இந்த உடலை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். எனவே, நம்முடைய இந்த உடலும் சமுதாயத்தின் சொத்து.
* நோய் வந்த பின் அதைப் போக்க முயற்சி செய்வதைவிட, நோய் வராமல் தடுப்பதே சிறந்தது. மனத்தூய்மை,சத்துள்ள உணவு, உழைப்பு, ஓய்வு இவற்றில் போதிய அக்கறை இருந்தால் உடல் நலத்தைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
* ஆசையை அடியோடு ஒழிப்பது என்பது நடக்காத செயல். அதற்கான தேவையும் நமக்கு இல்லை. அதனைச் சீர்படுத்தி வாழக் கற்றுக் கொள்வது அறிவுடைய செயலாகும்.
* தேவைகளைப் பெருக்கிக் கொண்டே செல்வது கூடாது. இல்லாவிட்டால் சுகபோகங்களிலேயே மனம் ஈடுபடத் தொடங்கிவிடும். இயன்றவரை குறைத்துக் கொள்ள முயலவேண்டும்.
* எந்தச் சூழ்நிலையிலும் ஒருவனைக் கோபம் அணுகவில்லை என்ற நிலையைப் பெற்றுவிட்டால், அவன் ஞானம் அடைந்து விட்டான் என்று பொருள் கொள்ளலாம்.
* தேவையான இடத்தில் கோபம் கொண்டது போல நடிக்கவேண்டுமானால் செய்யலாம். நமது மனம் அப்போது அமைதியாக சலனமற்று இருப்பது அவசியம்.

No comments:

Post a Comment