Thursday, November 29, 2012

செருப்பணிந்து பெண்கள் கோலமிடுவது சரியானதா?

 செருப்பணிந்து பெண்கள் கோலமிடுவது சரியானதா?
.
வீடு என்பது கோயில் போன்றது. வீட்டிற்குச் செய்யப்படுகின்ற எல்லாமே கோயிலுக்கு செய்யப்படுவதாக எண்ண வேண்டும். சாணம் தெளித்து கோலம் போடுவது என்பது, மகாலட்சுமியை வீட்டிற்குள் வரவேற்கும் நிகழ்ச்சியாகும். கிருமிகளை வீட்டிற்குள் வராமல் பார்த்துக் கொள்ளும் ஆற்றலும் அதற்கு உண்டு. அரிசி மாவினால் தான் கோலம் போடவேண்டும். எறும்பு, பறவைகள் அதை உண்பதால் நமக்கு புண்ணியம் சேரும். இவ்வளவு தெய்வீகமான செயலைச் செருப்பணிந்தபடி செய்வது கூடாது.

தீட்டு என்றால் என்ன என்பதை விளக்குங்கள்
பிறரைத் தீண்டக்கூடாத நாட்களை சுருக்கமாகத் தீட்டு என்பர். பங்காளிகள் வீட்டில் பிறப்பு, இறப்பு நிகழ்ந்தால் பத்துநாட்கள் தீட்டு உண்டு. பெண்களின் மாதவிடாய் காலமான மூன்றுநாள் தீட்டு. இக்காலங்களில் கோயிலுக்குச் செல்வது கூடாது. பிறரைத்
தீண்டக்கூடாது. இதனால் லட்சுமி கடாட்சம் குன்றி வறுமை உண்டாகும். ஆயுள் குறையும் என சாஸ்திரம் கூறுகிறது. ஆனால், தற்காலத்தில் பலர் இதை ஏற்றுக் கொள்வதில்லை.

ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா?
.

ஒவ்வொருவரும் பிறக்கும் போது அந்தந்த நட்சத்திரங்களின் அடிப்படையில் ஏதாவது ஒரு கிரகத்தின் தசையில் வாழ்வு தொடங்குகிறது. உதாரணமாக ஒருவர் பரணி நட்சத்திரத்தில் பிறந்தால் சுக்கிரதசையில் பிறந்திருக்கிறார். பொதுவாக சுக்ரதசை நல்லது என்றாலும், தொடர்ந்து வரும் தசாபுத்திகளான செவ்வாய், ராகு நடக்கும் காலத்தில் திருமண வயதை அடைவார். இதே பரணியில் பிறந்த பெண்ணை மணம் முடித்தால் இருவருக்கும் ஒரே தசாபுத்தி நடக்கும். இதற்கு "தசாசந்தி' என்று பெயர். நல்ல தசை நடந்தால் இருவருக்கும் நன்மை. கெட்ட தசை நடந்தால் இருவருக்கும் கஷ்டம் ஏற்படும். எனவே தான் ஒரே நட்சத்திரத்தில் பிறந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணம் செய்யக்கூடாது என்பர். இது தவிர ஜாதகத்தில் கிரகபலம் அதிகமிருந்து, தசை சந்திப்பு இல்லாவிட்டால் ஒரே நட்சத்திரக்காரர்கள் திருமணம் செய்யலாம். சிறந்த ஜோதிடரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

**மெகாசைஸ் சிலைகளை சில கோயில்களில் வைக்கிறார்களே. சாஸ்திரத்தில் இதற்கு இடமுண்டா?
மிகவும் பழமை வாய்ந்த கோயில்களில் அமைந்திருக்கும் சிலைகளைப் பற்றி ஆராயக்கூடாது. இவை கோயில் தலவரலாறோடு சம்பந்தப்பட்ட விஷயமாக அமைந்திருக்கும். ஆனால், தற்போது இதுபோல மெகாசைஸ் சிலைகள் அமைப்பதற்கான காரணம் புரியவில்லை. மூலஸ்தான விக்ரஹத்தின் அளவைக் கணக்கிட்டே மற்ற சிலைகளைச் செய்ய வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

* கழுத்தில் சந்தனம் குங்குமம் வைக்கலாமா?
நெற்றி, கழுத்து, மார்பு, இரு புறங்கைகள் ஆகிய ஐந்து இடங்களில் சந்தனம் குங்குமம் திலகமிட்டுக் கொள்ளலாம். அவரவர்களின் சமயம் மற்றும் குடும்ப வழக்கப்படி மாறுபடலாம்.

No comments:

Post a Comment