Tuesday, December 25, 2012

அம்பிகையின் கடைக்கண் கருணை

வ்வுலகிலுள்ள தாய்மார்கள் தன் குழந்தைகளிடம் பேதமே இல்லாமல் அன்பு காட்டுகிறார்கள். உலக மாதாவான பராசக்தியோ அனைத்து ஜீவராசிகளையும் தன் கடாட்சத்தினாலேயே ரட்சிக்கிறாள்.

தேவியின் கடாட்சத்தினால்தான் மும்மூர்த்திகளும் சக்தியைப் பெற்றார்
கள் என்று புராணங்கள் சொல்கின்றன.

வாய் பேசமுடியாத மூககவி, கல்வி அறிவே இல்லாத காளிதாசர், காளமேகப் புலவர் போன்றோர் அம்பிகையின் அருள்கடாட்சத்தினாலேயே கவி பாடும் திறமையைப் பெற்றார்கள்.

பரம பாகவதரான குசேலர் மிக வறுமையான நிலையில் இருக்கும்போது, மனைவி சுசீலையின் வேண்டுகோளை ஏற்று பால்ய நண்பரான ஸ்ரீகிருஷ்ணனை தரிசிக்க துவாரகை செல்கிறார். சிந்தனை முழுவதும் கண்ணனின் நாமத்தையே கொண்டு கால்நடையாகவே துவாரகை வருகிறார். கண்ணன் குசேலரைப் பார்த்ததும் ஆனந்தம் கொண்டு கட்டி அணைத்து தன் அருகே அமர்த்தி உபசரிக்கிறார்.



மகாலட்சுமியான ருக்மணி தேவியும் உடனிருந்து குசேலருக்கு அர்க்யம், பாத்யம் கொடுத்து விசிறிவிடுகிறாள். குசேலர் பிரமித்துப்போய் பேச முடியாமல் பரவசமாகி, லட்சுமிதேவியோடு கூடிய கிருஷ்ணனைக் கண்டு மெய்ம்மறந்த நிலையை அடைந்தார்.

ஸ்ரீ கிருஷ்ணன் குசேலருடைய வறுமையை நீக்கி அவருக்கு ஐஸ்வர்யங்களை அருள திருவுள்ளம் கொண்டாலும், அந்த சக்தி தேவிக்குதான் உண்டென்பதால் லட்சுமி கடாட்சம் குசேலருக்குக் கிடைக்க வேண்டுமென்று நினைத்தார் பரந்தாமன். அடுத்த வினாடி தேவி கண்ணனைப் பார்த்து, ""சுவாமி! இந்த பிராமணர் எந்த திக்கிலிருந்து வருகிறார்?'' என்று வினவுகிறாள். கண்ணபிரானும் இதுவே தருணமென்று, ""இதோபார் தேவி! இந்த திக்கிலிருந்துதான் வருகிறார்'' என்றவுடன், கருணாசாகரியான மகாலட்சுமி அந்த திசையில் தன் அருட்பார்வையை வீசுகிறாள். அந்த நிமிடமே அஷ்ட ஐஸ்வர்யங்களும் ஓடிப்போய் குசேலருடைய இல்லத்தை நிரப்புகின்றன.

பொதுவாக நம் இல்லத்திற்கு யாரேனும் வந்தால் "இவருக்கு எந்த ஊர்?' என்றுதானே கேட்போம். மகாலட்சுமியை திசை என்று கேட்க வைத்து, தேவியின் அருள் குசேலருக்குக் கிடைக்க வைத்தார் மாதவன். நாம் அம்பிகையிடம் பிரார்த்திக்கும்போது, "எனக்கு அதைக்கொடு, இதைக்கொடு' என்று யாசிக்கவே கூடாது. நாம் கேட்காமலேயே கடாட்சித்து விடுவாள் அம்பிகை. நாம் தேவியிடத்தில் பரிபூரணமான பிரேமையை மட்டும் வைத்தால் போதும்.

ஸ்ரீமத் ராமாயணத்தில் இராவணவதம் முடிந்ததும், ஸ்ரீராமபிரான் சீதா தேவியோடு அயோத்திக்குச் செல்ல ஆயத்தமாகிறார். அப்போது ஸ்ரீராமனின் முகம் வாடுகிறது. விபீஷண பட்டாபிஷேகம் எல்லாமே முடிந்த போதிலும் ராமன் மனம் தடுமாறுகிறது; தவிக்கிறது. இராவண வதத்திற்குப்பின் இலங்கை நகரமானது ராஜ்யஸ்ரீயை இழந்து சோபையே இல்லாமல் காட்சி அளிக்கிறது.

அத்தகைய இலங்கையை தன் பக்தனான விபீஷணனுக்கு அளிப்பதா என்றெண்ணி ராமன் வேதனைப்படுகிறார். அடுத்த நிமிடம் தன் அருகிலிருந்த சீதாதேவியைப் பார்த்து, ""தேவி!

உனது நயனங்களால் கடாட்சித்து இலங்கைக்கு அருள்புரிய வேண்டும்'' என்கிறார். திருமகளான தேவி கருணையோடு இலங்கை நகரை கடாட்சிக்கின்றாள். அந்த வினாடியே இலங்கை நகரம் பொலிவு பெற்று ராஜ்யஸ்ரீயுடன் திகழ்ந்தது.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகால விஷத்தால் அத்தனை பேர்களும் அவதிப்பட்டார்கள். ஸ்ரீபரமேஸ்வரன் எல்லாரையும் ரட்சிக்கும் பொருட்டு அந்த விஷத்தை அருந்தி நீலகண்டன் என்ற திருநாமம் பெற்றார் என்பது யாவரும் அறிந்ததே. சங்கரனார் விஷத்தை கையில் ஏந்தியபொழுது அம்பிகையான பார்வதிதேவி தன் கடாட்சத்தினாலேயே நஞ்சை அமிர்தம் ஆக்கிவிட்டாள். அமிர்தேஸ்வரி என்ற திருநாமம் கொண்டு அருள்பாலித்து வருகிறாள்.

வடமொழியில் அக்ஷி என்றால் கண்களைக் குறிக்கும். இதனாலேயே பராசக்தியான அன்னை காமாக்ஷி, மீனாக்ஷி, விசாலாக்ஷி என்றெல்லாம் நாமம் கொண்டு பார்வை ஒன்றினாலேயே உலகத்தை ரட்சித்து வருகிறாள். காமாட்சி அன்னைக்கு கண்களை வைத்தே அந்த நாமம் ஏற்பட்டது. தேவி உபாசகரான ஸ்ரீமுத்துசுவாமி தீட்சிதர் தன்னுடைய கிருதியில் "சாரதா ரமா நயனே' என்று தேவியின் நயனங்களில் ரமையும், வாணியும் உள்ளார்கள் என்று உருகிப் பாடுகிறார்.

சீர்காழியில் சிவபாத ஹ்ருதயருடைய குழந்தையின் அழுகுரலைக் கேட்டு ஓடோடி வந்து ஞானப்பாலை ஊட்டி ஞானசம்பந்தராக ஆக்கிவிடுகிறாள் அம்பிகை. ஸ்ரீபரமேஸ்வரனும் கருணாமூர்த்திதான். இருந்தாலும் ஈசன் அன்னை உருக்கொண்டுதானே தாயாக வந்து ரத்னாவளி என்ற கர்ப்பிணிப் பெண்ணிற்கு பிரசவம் பார்த்து தாயுமானவர், மாத்ருபூதேஸ்வரர் என்று அருள்புரிந்தார்.

யுகம் யுகமாக துர்வாசர், தௌம்யர், தத்தாத்ரேயர், ஸ்ரீசுகர் போன்ற ஞானிகள் அம்பிகையை ஆராதனை செய்து ஆத்மானுபவத்தைப் பெற்றார்கள். ஸ்ரீஆதிசங்கரரும் அம்பிகையைப் பற்றி எண்ணற்ற துதிப் பாடல்களைப் பாடி அருளினார். அவற்றுள் ஸ்தோத்திர சிகரமாகத் திகழும் சௌந்தர்யலஹரி துதியில் தேவியின் கடாட்ச வைபவத்தைப் பற்றி பல பாடல்களில் வர்ணிக்கிறார்.

அதற்குப் பிறகு தோன்றிய ஸ்ரீமூககவி,

அம்பிகையை 500 பாடல்களில் தேன் சொட்ட வர்ணிக்கிறார். சோழ நாட்டில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஸ்ரீ அபிராமி பட்டர் என்ற தேவி பக்தர் அம்பிகையைக் குறித்து "அபிராமி அந்தாதி' என்ற நூறு பாடல்களைப் பாடி அன்னையின் கடாட்சம் பெற்றார். அன்னையின் கடைக்கண்களைப் பற்றிய 69-ஆவது பாடலை, "தனம் தரும் கல்வி தரும்' என்று பாடிப் போற்றுகிறார். அந்தாதியின் 79-ஆவது பாடலாகிய "விழிக்கே அருள் உண்டு' என்ற பாடலைப் பாடி முடித்தவுடனே ஸ்ரீஅபிராமியம்மை அவருக்கு காட்சியளித்து அருளினாள்.

நால்வரில் ஒருவரான சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு கண் அருளிய காமலோசனி, அருட்பிரகாச வள்ளலாருக்கு அன்னையாக வந்து அன்னமிட்ட அற்புதங்கள்... "கருணைக் கொடியே, ஞான சிவகாமி அருளுகவே' என்று பாடி உருகுவதைக் காண்கிறோம்.

ஸ்ரீரங்கம் தலத்தில் பெருமாளுக்கு நடக்கும் உற்சவத்தில் ஒருநாள் தாயார் அலங்காரம் செய்வார்கள். பெருமாளை தாயாரைப்போலவே மிகவும் நேர்த்தியாக அலங்கரித்திருப்பார்கள். இதை அனுபவித்த ஆழ்வார், "பெருமாளே! நீ என்னதான் தாயார் வேடம் பூண்டாலும், தாயாருடைய நயனங்களில் உள்ள கருணையைக் காணமுடியவில்லையே' என்று பாடுகிறார்.

அம்பிகையின் கடைக்கண் கருணை கிடைத்தாலே நாம் உயர்ந்து உன்னதமாக இருப்போம். அம்பிகையின் கருணையைப் பெற நாமும் தகுதியுடன் இருக்க வேண்டாமா? தூய்மையான உள்ளத்தோடு அன்னையை வணங்கி, மகான்கள் அருளிய பாடல்களைப் பாடி அவள் அருளைப் பெறுவோம். அம்பாள்தான் பிரம்மத்தின் சக்தி. அம்பாள் தன் இயற்கையான கருணையைப் பொழிந்து, அவளை உபாசிப்பவர்களது ஆத்மா பரமாத்மாவிலேயே கரைந்திருக்குமாறு அருளுகிறாள்.

No comments:

Post a Comment