Saturday, December 22, 2012

தயானந்தர்

தயானந்தர்
குஜராத் மாநிலத்திலுள்ள டங்காரா கிராமத்தில் வசித்தவர் ஹர்சன்ஜிலால்ஜி. சிவபக்தராக திகழ்ந்தார். குபேரநாத மகாதேவர் என்ற பெயருடன் சிவன் கோயில் ஒன்றை கட்டினார். இவரது மூத்தமகன் மூலசங்கரன். இவரை "தயாராம்' என்றும் "தயானந்தர்' என்றும் அழைப்பார்கள்.
மூலசங்கரன் இளமையிலேயே வேதங்கள் பல கற்றார். வடமொழி ஸ்லோகங்களில் இவருக்கு பெரும் ஆர்வம் இருந்தது. தந்தையைப்போலவே மகனும் பக்தி மார்க்கத்தில் இறங்கினார். இது தயாராமின் தாய்க்கு பிடிக்கவில்லை. அந்த தாயாரும் சிவபக்தையே என்றாலும், தங்களைப்போல ஆழமான பக்தி வழியில் செல்லவேண்டாம் என்றுமகனிடம் சொன்னார். ஆனால் ஹர்சன்ஜி, மகனின் சிவபக்திக்கு ஆதரவு தெரிவித்தார்.
சிவராத்திரி நாட்களில் மூலசங்கரன் விடிய விடிய பூஜை செய்வார். 13 வயதிலேயே அவர் சிவராத்திரி விரதம் இருக்க துவங்கிவிட்டார். ஒரு சிவராத்திரியின்போது ஏராளமான பக்தர்கள் சிவன் கோயிலில் வழிபட்டுக் கொண்டிருந்தனர். நேரம் செல்லச்செல்ல எல்லாருக்கும் தூக்கம் வந்துவிட்டது. மூலசங்கரனின் தந்தையும் கோயில் சுவரில் சாய்ந்தபடியே தூங்கிவிட்டார். மூலசங்கரன் மட்டும் கண்விழித்து எல்லாரும் இப்படி தூங்குகிறார்களே என வருந்தியபடியே, சிவலிங்கத்தை கவனித்தார். லிங்கத்தின் மீது சில எலிகள் ஏறி விளையாடிக் கொண்டிருந்தன. அவை நைவேத்தியப் பொருட்களை கொறித்துக் கொண்டிருந்தன. "யாராலும் தொடமுடியாத லிங்கத்தை இந்த எலிகள் தொட்டு விளையாடுகிறதே. இதைத்தடுக்க இந்த சிவனால் முடியாதா?' என மூலசங்கரன் சிந்தித்தார். தன் தந்தையை எழுப்பி எலிகளை காட்டினார். "இவற்றை விரட்டாவிட்டால் சிவனுக்கு உரிய பொருட்களை எலிகள் தின்றுவிடுமே. இது சிவனுக்கு நாம் செய்யும் அபச்சாரம் ஆகாதா? சிவன் இருப்பது உண்மையானால், அவரே இந்த எலிகளை விரட்டலாம் அல்லவா?' என கேட்டார்.
மகனிடம், "இப்படியெல்லாம் பேசக்கூடாது. சிவபெருமான் கயிலாயத்தில் வசிக்கிறார். அவரை நாம் வணங்குவதற்காக சிலை வடிவில் இங்கு வைத்துள்ளார்கள். சிலையால் எலிகளை விரட்டமுடியாது,'' என்றார்.
"அப்படியானால் சக்தியில்லாத இந்த சிலையை என்னால் வணங்கமுடியாது. இது அர்த்தமற்றது,'' என சொல்லிவிட்டு தயாராம் வீட்டிற்கு சென்றுவிட்டார். சிவராத்திரி விரதத்தை கைவிட்டார். உடனே சாப்பிட்டார். இதைக்கேள்விப்பட்ட அவனது தந்தை கடுமையாக திட்டினார்.
ஆனாலும், உருவங்களை வழிபடுவதில் அர்த்தமில்லை என மூலசங்கரன் உணர்ந்தார். கோயிலுக்கு செல்வதை விட்டுவிட்டு படிப்பில் அக்கறை செலுத்தினார். அவருக்கு 16 வயதானபோது அவரது பாசத்திற்குரிய தங்கை கொடிய நோயால் இறந்துவிட்டார். உறவினர்கள் அனைவரும் அழுதனர். மூலசங்கரன் தங்கை மீது பாசம் கொண்டிருந்தாலும்கூட அசையாமல் அமர்ந்திருந்தார்.
""மரணத்தை வெல்லும் சக்தி யாருக்கும் இல்லை. மரணத்தை தவிர்க்க பிறவியற்ற நிலைக்கு செல்லவேண்டும். இதற்கு தியானமே சிறந்த வழி,'' என உணர்ந்தார். இதே போல அவரது மாமாவின் மரணமும் அவரை இதே சிந்தனையில் தள்ளியது. பாசத்தை மறந்து துறவறம் மேற்கொண்டால்தான் முக்தி பெறுவதற்குரிய வழி பிறக்கும் என உணர்ந்தார். அன்று முதல் பைத்தியம் போல காணப்பட்டார். மகனுக்கு திருமணம் செய்துவைத்தால் எல்லாம் சரியாகும் என பெற்றோர் எண்ணினர்.
மூலசங்கரன் மறுத்துவிட்டார்.
யாரிடமும் சொல்லாமல் வீட்டைவிட்டு வெளியேறிய அவர் சித்திப்பூர் சென்று துறவு வாழ்க்கையை ஆரம்பித்தார். ""சுத்த சைதன்யன்'' என்று பெயர் சூட்டிக்கொண்டார். இந்த விஷயத்தை அவரது தந்தைக்கு சிலர் தெரிவித்தனர். ஹர்சன்ஜி அவரை தேடிபிடித்து அழைத்துவந்தார். வரும் வழியிலேயே மூலசங்கரன் தப்பி விட்டார். மகனைக் காணாமல் தவித்த தந்தை சில நாட்களில் இறந்து விட்டார். மற்ற மகன்களும் இறந்து போனார்கள்.
தப்பியோடிய மூலசங்கரன் பரோடாவில் வசித்த பரமானந்த பரமஹம்சரிடம் வேதம் பற்றி அறிந்தார். சன்னியாசம் பெற வேண்டும் என்ற தனது விருப்பத்தை பரமானந்தரிடம் தெரிவித்தார். சிறுவரான மூலசங்கரருக்கு துறவறம் வழங்கி பரமானந்தர் தயங்கினார். எனவே சிருங்கேரி மடத்திலிருந்த பூர்ணானந்த சரஸ்வதி சுவாமியைச் சந்தித்த மூலசங்கரன் தனக்கு சன்னியாச தீட்சை வழங்கும்படி கேட்டார்.
பூர்ணானந்தர் மூலசங்கரனுக்கு சன்னி யாச தீட்சை அளித்து "தயானந்த சரஸ்வதி' என்ற பெயர் சூட்டினார். மூலசங்கரன் தயானந்தர் ஆனார். தயானந்தரின் காலத்தில்தான் இந்தியாவின் பலஇடங்களிலும் சுதந்திரப் போராட்டம் வலுப்பெற்றிருந்தது. கான்பூர், மீரட் நகரங்களில் பெரும் கலவரம் நடந்தது. ஏராளமான அப்பாவிமக்கள் கொல்லப்பட்டனர். இதைப் பார்த்த தயானந்தர் வேதனை அடைந்தார். பின்னர் பஞ்சாபிலுள்ள கர்த்தார்பூர் என்ற இடத்திற்கு சென்ற அவர் விரஜானந்தர் என்பவரை சந்தித்தார். அவருக்கு பார்வை கிடையாது. இந்த நிலையிலும் கூட கையில் ஒரு கம்பை வைத்துக்கொண்டு ரிஷிகேஷ் வரை நடந்தே சென்றவர் அவர். தனது 15வது வயதிலேயே இந்த சாதனையை செய்தார். விரஜானந்தரை சந்தித்த தயானந்த சுவாமி அவரது சீடரானார். அவரிடம் பல போதனைகளைக் கற்றார். முக்தி பெறவேண்டும் என்ற தயானந்தரின் எண்ணத்தை மாற்றி, நாட்டின் சேவைக்காக அர்ப்பணித்துக் கொள்வதே உண்மையான தெய்வ வழிபாடு என்ன எடுத்துக் கூறினார். அதன்பின் விரஜானந்தர் இறந்துவிட்டார்.
விரஜானந்தரின் கருத்தை ஏற்ற தயானந்தர் மதமாற்றம், பால்ய விவாகம், உடன்கட்டை ஏறுதல் ஆகியவற்றுக்கு எதிராகக் குரல் கொடுத்தார். மூடக் கொள்கைகள் மக்களுக்கு ஆகாது என எடுத்துக் கூறினார். நாட்டு மக்கள் அனைவரும் ஒரே இனம், ஒரே மொழி என்ற கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்றார். 1875ம் ஆண்டில் மும்பையில் ஆரிய சமாஜம் என்ற அமைப்பை துவக்கினார். இந்த சமாஜத்தின் மூலம் கல்விக்கூடங்கள் அமைத்தார். தன்னிடம் வலியவந்து யாராவது பொருள்கொடுத்தால் அதை கல்விக்காக செலவிட்டார்.
ஜோத்பூர் மன்னர் தயானந்தரை அரண்மனைக்கு வரும்படி அழைத்தார். மன்னர் ஒரு பெண்பித்தர். எனவே தயானந்தரை அரண்மனைக்கு செல்லவேண்டாம் என அவரை சார்ந்தவர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால் சுவாமிகள் அவர்கள் சொன்னதை பொருட்படுத்தாமல் அரண்மனைக்கு சென்று மன்னரை கண்டித்தார். அப்போது மன்னரின் அருகில் நன்னிஜான் என்ற தாசிபெண் இருந்தாள்.
அவளைப்பார்த்த தயானந்தருக்கு கடும் கோபம் ஏற்பட்டது. ""இதுபோன்ற நாய்களுடன் அரசர்கள் தொடர்பு வைக்கலாமா?'' என கேட்டார். இதைக்கேட்டதும் நன்னிஜானுக்கு கடும் கோபம் ஏற்பட்டது.
தயானந்தரை கொல்ல திட்டமிட்டாள்.
விஷம் கலந்த பாலை அவருக்கு கொடுத்தாள். இதைக்குடித்த தயானந்தருக்கு எவ்வளவோ சிகிச்சை செய்தும் உடல்நிலை மோசமானது. அவரை ஆஜ்மீருக்கு அழைத்துச்சென்று வைத்தியம் செய்தனர். ஆனாலும் மருந்து எதுவும் பலனளிக்காமல் காயத்ரி மந்திரத்தை ஜெபித்தபடி உயிர்நீத்தார். பாசத்தை மறந்து முக்தி பெறுவதற்கான அவரது போதனைகளை இன்றும் ஏராளமானோர் பின்பற்றி வருகிறார்கள்.

No comments:

Post a Comment