Thursday, February 7, 2013

சமையல் செய்யும் போது கவனியுங்க !

நாள்தோறும் தவறாமல் பூஜை செய்யும் பக்தர் ஒருவர் இருந்தார். அவருடைய மனைவியும் நல்ல குணவதி. இருவரும் கடவுளை நினைக்காத நேரமில்லை. எப்போதும் அவனுடைய பெருமைகளைப் பேசி மகிழ்வர். அவருடைய பெருமையை அறிந்த மகான் ஒருவர் பக்தரின் வீட்டுக்கு வந்தார். தன் வீட்டுக்கு வந்திருப்பவர் மகான் என்பதை அறிந்து பக்தர் மிகவும் மகிழ்ந்தார். மகானுடன் சேர்ந்து ஒருவேளை உணவு சாப்பிட வேண்டும் என்ற விருப்பத்தை பக்தர் தெரிவித்தார். அவரை அன்புடன் உபசரித்தார். பக்தரின் மனைவியும் உடனிருந்தார்.
திடீரென்று பக்தரின் மனைவிக்கு மாதவிலக்கு உண்டானதால், ஒதுங்கிக் கொண்டாள். உடனடியாக பக்கத்துவீட்டு பெண்மணியை அழைத்து உணவு தயாரிக்க ஏற்பாடு செய்தனர். சாதுவும், பக்தரும் சேர்ந்து உணவு சாப்பிட்டு மகிழ்ந்தனர். ஆனால், என்னவோ அந்த மகான் தன்னை அறியாமல் தனக்கு அருகில் இருந்த வெள்ளி
டம்ளரைத் திருடிவிட்டார். டம்ளர் காணாமல் போனதை அறிந்த பக்தர் அதைப் பொருட்படுத்தவில்லை. ஆனால், மகானோ அன்றிரவு முழுவதும் தூங்க முடியாமல் அவதிப்பட்டார். மனசாட்சி அவரை உறுத்தியது. பொழுது புலர்ந்ததும் பக்தரின் வீட்டுக்கு வெள்ளி டம்ளரோடு புறப்பட்டார். பக்தரிடம் தன்னை மன்னிக்கும்படி வேண்டியதோடு டம்ளரையும் கொடுத்தார். காவியுடைக்கு பொருத்தமில்லா மல் நடந்து கொண்ட மகானைக் கண்ட பலரும் ஆச்சரியம் கொண்டனர். பக்தர் இதற்கான காரணத்தை அறிய முற்பட்டார். உண்மையும் அவருக்கு புரிந்து விட்டது. சாப்பாடு தயாரித்த பெண் அங்குள்ள சில பொருட்களைத் திருட வேண்டும் என்ற தீய எண்ணத்துடன் சமைத்தாள். அந்த உணவைச் சாப்பிட்டதும் அவளது புத்தி மகானை ஒட்டிக் கொண்டது. சமையல் செய்யும்போது நல்ல எண்ணத்துடன் சமைக்க வேண்டும். தீய எண்ணங்களுடன் சமைக்கும் சமையல் குடும்பத்தினரின் மனதைச் சிதறடிக்கும். நம் குழந்தைகளின் கவனம் சிதறுவது கூட இதனால் தான்! இனியேனும், சமையலின் போது தெய்வ சிந்தனையுடன் சமைப்பீர்களா!

No comments:

Post a Comment