Thursday, February 7, 2013

பெண்கள் நாட்டின் கண்கள்.

பெண்கள் நாட்டின் கண்கள். பெண்களை இம்சை செய்யும் எந்த வீடும், நாடும் உருப்படாது. புராணகாலத்திலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்தது. திதி என்பவள், சிவபார்வதியை வணங்கி வந்தாள். அவள் ஒரு பேரழகி.பூலோகம் வந்த இந்திரன் அவளைக்கண்டான். அழகிகளைக் கண்டால் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவது அவன் இயல்பு.
திதி பேரழகுப் பெட்டகம் அல்லவா! இந்திரன் கண்ணில் அவள் பட்டுவிட்டாள்.
அவளை தன்னுடன் தேவலோகம் வரும்படி அழைத்தான். அங்கே பல வசதிகள் இருப்பதாகச் சொல்லி ஆசை காட்டினான். திதிக்கு அவனுடன் செல்ல விருப்பமில்லை.
""இந்திரா! ஒரு பெண்ணுக்கு வசதிவாய்ப்பை விட, அவள் மனதுக்குப் பிடித்த கணவனே வேண்டும். நீ என் அழகுக்காக ஆசைப்படுகிறாய். இந்த அழகு உனக்கு சலித்துவிட்டால், நீ இன்னொரு பெண்ணைத் தேடிப் போய்விடுவாய். கடைசிவரை மனைவியை கண்கலங்காமல் பார்த்துக் கொள்ளும் நல்லவர்கள் எத்தனையோ பேர் இந்த பூமியில் உள்ளனர். அவர்களில் ஒருவரை என் கணவனாக அடைவதையே நான் விரும்புகிறேன். நீ போய் விடு,'' என்றாள்.
இந்திரன் மீண்டும் வற்புறுத்த அவர்களுக்குள் வாதம் வலுத்தது. கோபத்தில், அவளை தனது வஜ்ராயுதத்தால் ஏழு துண்டுகளாக வெட்டினான். ஆத்திரம் அடங்காததால், அந்த துண்டுகள் ஒவ்வொன்றையும் ஏழாக வெட்டினான். ஆக, 49 துண்டுகள் பூமியில் கிடந்தன.
தன் பக்தை வெட்டப்பட்டது கண்டு பார்வதிதேவி துடித்துப் போனாள்.
சிவனிடம், ""அன்பரே! இது என்ன கொடுமை! ஒரு பெண், ஒருவனுடைய ஆசையை நிறைவேற்றாமல் போனால், இப்படியா செய்வது! அதிலும், இந்திரனுக்கு மேகங்களின் தலைவன் என்ற பதவியைக் கொடுத்துள்ளீர்கள். இவன் பெய்விக்கும் மழைத்தண்ணீரைக் குடிப்பவர்களுக்கும் இதே குணம் தானே வரும்! நீங்கள் அவனுக்குப் பாடம் கற்பிக்கும் வகையில், அந்தப் பெண்ணுக்கு மீண்டும் உயிரூட்டுங்கள்,'' என்றார்.
சிவன் பார்வதியிடம்,""அவள் விதி முடிந்து விட்டது. எனவே, உயிர் கொடுப்பது இயலாது. ஆனால், ஒன்று மட்டும் உறுதி. பெண்களை இம்சை செய்பவர்கள் அதற்கான பலனை அனுபவித்தே தீருவார்கள். இந்திரனால் வெட்டப்பட்ட 49 துண்டுகளும் 49 இளைஞர்களாக எழும். அவர்களுக்கு ஒருவன் தலைவனாக இருப்பான். அவர்களுக்கு தனித்தனி பெயர் இருக்காது. அவர்களை "மாருதர்' என்று உலகத்தார் அழைப்பார்கள். பதவி இருப்பதால் தானே இந்திரன் அட்டகாசம் செய்கிறான்! அவனது பதவியை அவர்கள் பறித்து விடுவார்கள்,'' என்றார்.
அதன்படியே "மாருதர்' எனப்பட்ட அந்த இளைஞர்கள் பிறந்தார்கள். அனைவரும் பலசாலிகளாக இருந்தனர். மேகக்கூட்டத்தை எங்கே கண்டாலும் அவர்கள் பூமியிலிருந்தே ஊதி, சின்னாபின்னபடுத்தினார்கள். இந்திரன் ஆத்திரம் கொண்டு அவர்களுடன் போருக்கு வந்தான். அவனைத் தோற்கடித்து, மழை பெய்யும் அதிகாரத்தை தங்கள் கையில் வைத்துக் கொண்டார்கள். பதவி இழந்த இந்திரன் கண்டுகொள்வார் யாருமின்றி போனான்.

No comments:

Post a Comment