Wednesday, February 6, 2013

பூஜையின் போது மணி அடிப்பது ஏன் ?



 

பூஜை ஆரம்பிப்பதற்கு முன்னால் மணி அடித்தால், அந்த மணி சப்தம் கேட்டதும் வீட்டிலுள்ள துர் தேவதைகள் போன்றவை வெளியே ஓடிவிடும். துர்தேவதை, பேய், பிசாசு போன்றவைகளுக்கு மணி சப்தம் கேட்டால் பயம்; எனவே, ஓடி விடும். அதனால், மணியடித்து அவைகளை விரட்டி விட்டு பூஜையை ஆரம்பிப்பர். ஒவ்வொரு நாளும் ஏன் இப்படி அடிக்க வேண்டும் என்றால், ஓடிப்போன துர்தேவதைகள் இருட்டிய பின் மீண்டும் வந்து விடும். மறுநாள், மறுபடியும் மணியடித்து விரட்ட வேண்டும். அவை இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டுமே என்றால், அவை இருக்குமிடத்தில் தேவதைகள் வரமாட்டார்கள்! அதனால், மணியடித்துதான் தினமும் பூஜையை ஆரம்பிப்பது வழக்கம். கிராமங்களில் கூட இந்த துர்தேவதைகள் சுற்றிக் கொண்டே இருக்கும். ஆலயங்களில் காலை, மாலை மணியடிக்கும் போது, இந்த சப்தம் கேட்டதும் அந்த துர்தேவதைகள் ஓடி விடும். மறுபடியும் எப்போது திரும்பி வரும் என்று யாரும் சொல்லவில்லை. இருந்தாலும், அவை வந்து விடும் என்று மட்டும் சொல்கின்றனர்.
மற்ற மாதங்களை விட மார்கழி மாதத்துக்கு சிறப்பு அதிகம். அந்த மாதம் முழுவதும் பகவானுக்கு உகந்த நாட்கள். அதனால், மார்கழி மாதத்தில் எல்லாரும் விடியற் காலையில் எழுந்து நீராடி, நெற்றிக்கிட்டு, தெய்வ பூஜையில் ஈடுபடுவர்; ஆலயங்களுக்குச் செல்வர். இம்மாதத்தில் தெய்வ வழிபாடு மும்முரமாக இருக்கும். கிராமங்கள் என்றில்லாமல் நகரங்களிலும் இப்படி நடக்கிறது. கிராமங்களில் மார்கழி மாதம் முழுவதும் பிரதி தினம் விடியற் காலையில் ஒவ்வொரு தெருவாக சங்கு ஊதிக் கொண்டும், மணியடித்துக் கொண்டும் வருவர். அதற்கென்று மணியடிப்பவர், சங்கு ஊதுகிறவர் உண்டு. அவர்கள் அதை தினமும் செய்வர். இதனால், கிராமத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் துர்தேவதைகள் ஓடிவிடும். கிராமம் நோய் நொடி இல்லாமல் சுபிட்சமாக இருக்கும் என்று சொல்வர்.

 

No comments:

Post a Comment