Wednesday, April 3, 2013

தமிழ்ப் புதுவருடம்

இந்துக்களின் தமிழ்ப் புதுவருடம் சித்திரை மாதத்தில்தான் ஆரம்பமாகிறது. அதாவது மேஷ ராசியில் இருந்து மீன ராசி வரை பன்னிரண்டு ராசிகள் சூரியன் செல்லுகின்ற கதியை நிர்ணயிக்கின்றன. ஒவ்வொரு ராசியிலும் சூரியன் வரும்போது தமிழ் மாதம் பிறக்கின்றது. சூரியன் சஞ்சரிக்கும் காலங்களே ஒவ்வொரு சூரிய மாதமாகக் கணக்கிடப்படுகிறது. சித்திரை முதல் பங்குனி வரை 12 மாதங்களைக் கொண்டதே ஒரு தமிழ் வருடமெனக் கொள்வது எம்முடைய மரபாகும். புதுவருடத்தை கணக்கிடும்போது சூரியனை முதலாகக் கொண்ட காரணத்தால் 'சௌரமானம்'' என்ற பெயரும் வழங்கப்படுகிறது. அதுபோல சந்திரனைக் கொண்டு புது வருடத்தைக் கணக்கிடும் முறைக்கு 'சாந்தரமானம்'' என்ற பெயர் வழங்கப்படுகின்றது. 'சாந்தரமானம்'' முறை மூலம் புது வருடத்தைக் கணிப்பவர்கள் பெரும்பாலும் ஆந்திர தேசத்தைச் சேர்ந்த தெலுங்கர்களாவர். ஆனால் தமிழர்களின் புதுவருடமானது 'சௌரமானம்' எனப்படுகிறது. அதாவது சூரிய தேவனை முழு முதலாகக் கொண்டு புது வருடத்தைக் கணிப்பதாகும். ஆண்டுகளைக் கணக்கிடுகின்ற முறை இடத்துக்கு இடம் இனத்திற்கு இனம் வேறுபாடு கொண்டு காணப்படுகிறது. சர்வதேச ரீதியில் ஜனவரி முதல் டிசம்பர் வரையான 12 மாத காலப் பகுதியை ஆங்கில ஆண்டாகக் கணிக்கிறார்கள். இம்முறையைத் தான் அனைத்துலக மக்களும் பொதுத் தொடர்பு ஆண்டாகக் கைக்கொள்கிறார்கள். தெலுங்கு தேசத்தவர்கள் 'சாந்தரமானம்' முறையை கடைப்பிடிக்கிறார்கள். கேரள தேசத்தவர்கள் தமது ஆண்டு முறைமையை 'கொல்லம்' என்று கூறுகிறார்கள். இவ்வாறு இனத்திற்கு இனம் புது வருடப் பிறப்பு வேறுபட்டாலும் அனைத்து இன மக்களும் தமது புதுவருடப் பிறப்பை சம்பிரதாயபூர்வமாகக் கொண்டாடுவதற்கு மிகவும் விருப்பு உடையவர்களாக உள்ளார்கள். ஏப்ரல் மாத நடுப்பகுதியில் வருகின்ற சித்திரை மாதப் பிறப்புடன் பாரம்பரியமாக ஆரம்பமாகிறது 'தமிழ்ப் புதுவருடம்'. இதைத்தான் சிங்கள பௌத்த மககளும் தமது வருடப் பிறப்பாகக் கொண்டாடும் மரபு உண்டு. இது இரண்டு இன மக்களிடையே காணப்படுகின்ற மிக முக்கியமான ஒற்றுமையாகும். இச்சித்திரைப் புதுவருடம்தான் தமிழ் - சிங்கள மக்களினது வருடத் தொடக்கமாகக் கைக்கொள்ளப்படுகிறது. எந்த ஒரு காரியத்திற்கும் அல்லது செயலுக்கும் தொடக்கமும் முடிவும் கட்டாயமாக உண்டு. அதை நம் ஆன்றோர்கள் மரபு வழியாக பேணி வருகிறார்கள். அதே போலத்தான் புது வருடத்தையும் காலங் காலமாக நாம் கொண்டாடி வருகிறோம். 'நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்' எனக் கருதி சித்திரையை மகிழ்வுடன் வரவேற்கும் மரபு நம்மிடம் உண்டு. இதன் காரணமாக தமது மனதில் உள்ள துன்பங்கள், துயரங்கள், கோபதாபங்கள், பழைய பகைமை உணர்வுகள் ஆகியவற்றை மறந்து, மன்னித்து ஒரு புதிய நினைவுடன், புதிய உறவுடன் புதுவருடத்தை நாம் வரவேற்கும் விதத்தில் நம் பெரியவர்கள் கொண்டாட்டங்களை அமைத்துள்ளார்கள். 'சித்திரைப் புதுவருடம்' எப்பொழுது தொடக்கம் கொண்டாடப்படுகிறது? இக்கேள்விக்குப் பதில் கூறுவது அவ்வளவு எளிதல்ல. காரணம் என்னவெனில் எழுத்து மூலமான எந்த ஆவணமும் இது தொடர்பாகக் கிடையாதென்பர். நம் முன்னோர்கள் வழி வழியாக, மொழி வழியாக செய்தவற்றை நல்ல நோக்கத்துடன் நாமும் பின்பற்றுகிறோம். ஆனாலும் முற்காலங்களில் 'வேங்கை' மரம் பூத்து புது வருடத்தை அறிவித்ததாகவும் அறியக் கிடக்கிறது. இதன்மூலம் இளவேனிற் கால தொடக்கமான சித்திரையிலேயே புது வருடத்தை கொண்டாடும் வழக்கம் நம் முன்னோர்களிடம் இருந்துள்ளது என்பது புலனாகிறது. காலங்காலமாக சித்திரைப் புது வருடத்தை நாம் சில நடைமுறைகளுடன் கொண்டாடுகிறோம். அதிகாலையில் எழுந்து மருத்து நீர் தேய்த்து நீராடுவது நாம் பழங்காலந் தொட்டு செய்து வரும் மரபாகும். இம்மருத்து நீரில் சேர்க்கப்படும் பொருட்கள் உடல் நலத்திற்கு ஏற்றனவாக உள்ளன. சித்திரை மாதம் என்பது பனி முடிந்து இளவேனிற் காலம் தொடங்கும் காலமாகும். இப்பருவ மாற்ற காலத்தில் எமது உடலை மருந்துகள் மற்றும் சடங்குகள் மூலமாக நம் பெரியோர்கள் காத்தார்கள். இதனால் தான் பல மூலிகைப் பயன்பாடு கொண்ட மருத்து நீர் தயாரிக்கப்பட்டு ஆலயங்களில் வழங்கப்படுகின்றது. ஆலயங்களுக்குச் சென்று அதை வாங்கி வந்து வீடுகளில் உள்ள பெரியவர்களிடம் கொடுத்து அதிகாலையில் கிழக்கு நோக்கி நின்று அதை தலையில் வைப்பது பாரம்பரியமான ஒரு நடைமுறையாகும். தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம்பூ, துளசி, விஷ்ணு கிரந்தி, சீதேவியார் செங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், மிளகு, திப்பிலி, சுக்கு போன்றவற்றை தூய்மையான நீரில் சேர்த்து காய்ச்சி மருத்து நீர் பெறப்படுகிறது. சித்திரைப் புது வருடத்தன்று எம்மால் ஆன அறங்களைச் செய்ய வேண்டும். தான தர்மங்களைச் செய்தல் மாத்திரமின்றி தெய்வம், குரு, பெற்றோர் ஆகியோரை வணங்கி ஆசி பெற்று ஊரும் உறவும் சூழ நண்பர்களுடன் அறுசுவை உணவுகளை உண்டு மகிழ்தல் பொதுவான கொண்டாட்டமாகும். புது வருடத்தன்று 'வேப்பம்பூ பச்சடி' சிறப்பானதாகும். வேப்ப மரம் மருத்துவப் பயன் கொண்டது. சித்திரை பிறந்து விட்டால் வேம்பு பூக்க ஆரம்பித்து விடும். யாழ்ப்பாணத்து மக்கள் வேப்பம் பூ கொண்டு செய்யப்படும் வடகத்தை ஆண்டு முழுவதற்கும் பயன்படுத்துவார்கள். வாழ்க்கையில் இரவும் - பகலும், இன்பமும் - துன்பமும் ஒரு நாணயத்தில் இரண்டு பக்கங்களாகும். இதை உணர்த்துவதற்காக துவர்ப்பு சுவை கொண்ட வேப்பம் பூவுடன் இனிப்பு சுவை சேர்த்து புது வருடத்தன்று வேப்பம் பூ பச்சடி தயாரிக்கப்படுவது வழக்கமாகும். அறுசுவை உணவுடன் மற்றவர்களுக்கு தானமும் தர்மமும் செய்து புது வருடத்தை கொண்டாடுவதன் மூலம் ஆண்டு முழுவதும் நிறைவான வாழ்க்கையைப் பெற முடியும் என்பது நம் பெரியோர்களின் நம்பிக்கையாகும். சித்திரைப் புது வருடத்தில் காலையில் ஆலய தரிசனம் செய்த பின் குருமார்கள், ஆசிரியர்கள், பெரியோர்களை சென்று தரிசித்து ஆசி பெற்றுக் கொள்வதுடன் கைவிசேஷம் பெறுவதும் வழக்கமாகும். புத்தாண்டு தினத்தில் பெரியவர்களுடைய கரங்களில் இருந்து பெற்றுக் கொள்கின்ற எந்தப் பொருட்களும் வளரும் அல்லது பெருகும் என்ற நம்பிக்கை எம்மிடையே உண்டு. பெரியவர்கள் என்றால் வயதில் பெரியவர்கள் மட்டுமல்ல, எண்ணத்திலும் பெரியவர்களாக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களிடம் இருந்து நாம் பெறுகின்ற ஒரு ரூபா கூட பல்கிப் பெருகும். வாழ்க்கையிலே செல்வச் செழிப்பைக் கொடுக்கும். பஞ்சாங்கங்களில் கூறப்பட்டிருக்கின்ற கைவிசேஷத்துக்குரிய நேரங்களில் பெரியவர்களிடம் இருந்தோ அல்லது இறைவன் பாதத்தில் வைத்தோ கைவிசேஷத்தைப் பெற்றுக் கொள்ளலாம். அது தவிர புதுவருடம் பிறந்த பின்னர் வேலை, வியாபாரம், புதுக்கணக்குப் பதிதல், ஏர் பூட்டுதல், புது விதைப்பு, புதுநெல் எடுத்தல், வித்தியாரம்பம், பொங்கலிடுதல், உறவினர்கள் வீடுகளுக்குச் செல்லுதல் போன்றவற்றை நல்ல நேரம் பார்த்து தொடங்கும் பழக்கம் தொன்று தொட்டு தமிழர்களிடையே இருந்து வருகிறது. புது வருடத்தன்று மாலை நேரம் மகிழ்ச்சியான விளையாட்டுக்குரிய நேரமாக வகுக்கப்பட்டிருந்தது. மாலை நேரத்தில் மாட்டு வண்டிச் சவாரிப் போட்டி மிக முக்கிய விளையாட்டாக தமிழர்களிடையே இருந்து வந்துள்ளது. இது தவிர போர்த் தேங்காய் உடைத்தல், ஊஞ்சல், கிட்டிப்புள், கிளித்தட்டு, எட்டுக்கோடு, கொக்கான் வெட்டுதல், பட்டம் விடுதல், கயிறு இழுத்தல் போன்ற விளையாட்டுகளையும் விளையாடினார்கள். இவ்விளையாட்டுகளை விளையாடுவதன் மூலம் தோல்வி ஏற்பட்டாலும் அதை வெற்றியாகக் கருதக்கூடிய மனப்பாங்கை பெரியவர்கள் வளர்த்தார்கள். மனதிலே பொறாமை உணர்வைக் களைந்து நட்பை வலுப்பெறச் செய்வதற்காக தமிழர் விளையாட்டுகள் உருவாக்கப்பட்டன. எனவே பிறக்கின்ற புதுவருடத்தை வரவேற்று கொண்டாடுவோமாக பருவங்களில் சிறந்தது இளவேனிற் பருவம். இளவேனிற் காலத்தின் முதல் மாதமே சித்திரை தான். தமிழ் மக்கள் புத்தாண்டுப் பிறப்பும் சித்திரை மாதப் பிறப்பும் ஒன்றாகவே இடம்பெறும்.சித்திரை மாதத்தில் மல்லிகையும் முல்லையும் மலர்ந்து மணம் பரப்பி மக்களை மகிழ்விக்கும். தேமாவும் தீம்பலாவும் இனிய பழங்களை மாந்தருக்கு வாரி வழங்கும். சிறப்பான வைதீக காரியங்கள் ஆற்றவும் சிறந்த காலம் இது. முத்தமிழ் போல் முக்கடல் சூழ் குமரி முனை வளரும் உத்தமியே ஸ்ரீ சக்கரன் தன்னில் உதித்தவனே அத்தருணத்திலும் எனைப் பிரியாமல் எனக்கிரங்கி சித்திரைத் திங்களில் வந்தருள் செவ்வாய் சிவக்கொழுந்தே அகத்தியர் விகிர்தி என்றால் நலன்களைத் தருவது என்று பொருள். இஃது பொன்னான பொலிவான காலம். ஆறு வகைப் பருவங்களும் சிறந்து விளங்கும் இவ்விளவேனிற் காலத்திலே பூ மழை பொழிந்து இனிய மணம் பரப்பி, நறுங்கனிகள் தந்து எம்மை மகிழ்விப்பவள் சித்திரையாள். இவளே தமிழ்ப் புத்தாண்டின் நுழைவாயிலாக அமைகின்றவள். ருதுக்களுள் வசந்த ருதுவாக இருப்பேன் என்கின்றது கீதை. சைத்ரா என்றும் "சைத்ர விஷû' என்றும் அழைக்கப் பெறும் இக்காலத்திலே, சித்திரை மாதம் முதல் நாளன்று, கல்ப் பத்திலுள்ள யுகத்தின் ஆரம்பத்தில் பிரம்ம தேவன் உலகைப் படைத்ததாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. சித்திரை மாதம் பூரணையோடு கூடிய காலமாதலால் சித்திரை மாதம் என்றழைக்கப்பட்டது. இஃது இராசிச் சக்கரத்திலுள்ள பன்னிரண்டு இராசிகளுள் ஆறாவதான கன்னி ராசியிலும் அடுத்த துலா ராசியிலுமுள்ள மண்டலத்தைச் சாரும். நட்சத்திர வரிசை பதினான்காவது இடத்தையும் வகிக்கின்றது. இச் சித்திரை மாதத்தில் மழை நீங்கி, ஆதவன் வெளிப்பட உலகம் பிணி, பீடை நீங்கி, ஆரோக்கியமாக இயங்க ஆரம்பிக்கின்றது. இத் திங்களில் இரு பெருஞ் சுடர்களும் ஒளி தர இரவும் பகலும் செம்மையாகத் தோன்ற மக்கள்,மாக்கள், கால்நடைகள், பயிர்கள் தழைத்து இன்புறும். இச் சித்திரை மாதத்தில் மழை நீங்கி, ஆதவன் வெளிப்பட உலகம் பிணி, பீடை நீங்கி, ஆரோக்கியமாக இயங்க ஆரம்பிக்கின்றது. இத் திங்களில் இரு பெருஞ் சுடர்களும் ஒளி தர இரவும் பகலும் செம்மையாகத் தோன்ற மக்கள்,மாக்கள், கால்நடைகள், பயிர்கள் தழைத்து இன்புறும். . ஸ்நானம் செய்யும்போது சிரசிலே விளா இலையை வைத்து காலிலே கடப்பமிலையை வைத்து ஸ்நானம் செய்தல் முறையாகும். அன்றைய தினம் புத்தாடை அணிதல் உத்தமம். அல்லது பட்டாடையணிதல், ஆபரணமணிதல் விசேடமாகும். ஸ்நானம் முடித்து சுகந்த சந்தனம் பூசி, நவமலர்களைச் சூடி, கணபதியை வணங்கி, குலதெய்வ வழிபாடு செய்து இல்லத்திலே சூரிய பகவானுக்குப் பொங்கல் செய்தாக வேண்டும். அன்றைய தினம் ஆலய தரிசனம் செய்தல் முறையாகும். பொங்கலின் பின் படையல் செய்து பெற்றோர், மூத்தோர், குரு, உற்றார், உறவினர் ஆகியோரை வணங்க, அவர்கள் ஆசி பெற்று அறுசுவை உணவு உண்டு மகிழ்தலும் மரபாகும். அன்றைய உணவில் வேப்பம்பூ சேர்த்து அறுசுவைகளுடன் உணவு தயாரித்தல் வேண்டும். வருடம் பிறந்ததும் மங்கலப் பொருட்களான நிறை குடம், கண்ணாடி தீபம் ஆகியவற்றைத் தரிசித்தல் முக்கியம். தொடர்ந்து பெரியவர்கள் மூலம் இவ்வருடத்துக்குரிய பஞ்சாங்க பலனைக் கேட்டறிதல் வேண்டும். அன்றைய தினம் இயன்ற அளவு தானம் செய்தலும் நற்செயலாகும். அடுத்து வருடப் பிறப்பன்றைய ஸ்நானத்தில் முக்கிய இடம்பெறும் மருத்து நீர் பற்றி நோக்குவோம். சகல தோஷங்களையும் நீக்கவல்ல மருத்து நீரை, சுத்தமான நீரில், தாழம்பூ தாமரைப்பூ, மாதுளம் பூ, துளசி, விஷ்ணுகிராந்தி, சீதேவியால் செங்கழு நீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், மிளகு, திப்பிலி, சுக்கு ஆகியவற்றை இட்டு நன்கு காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லத்திலே இதனைக் காய்ச்சிக் கொள்ள இயலாதவர்கள் இப்புனித மருத்து நீரை, ஆலயங்களிலே அந்தணப் பெரியோர் மூலம் பெற்று ஸ்நானம் செய்தாக வேண்டும். இவ்வருடத்திற்குரிய தோஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தவறாது மருத்து நீர் ஸ்நானம் செய்தாக வேண்டும். வருடப் பிறப்பன்று ஆலய தரிசனம், சூரிய பொங்கல், விருந்துண்ணல், இயன்ற அளவு தான தருமம் செய்தல், பஞ்சாங்க பலன் கேட்டல், மாலையில் உறவினர் வீடு செல்லல் ஆகிய சம்பவங்கள் இடம்பெறுதல் பண்டு தொட்டு எமது முன்னோர் கடைப்பிடிக்கும் நிகழ்வுகளாம். இதில் பஞ்சாங்க பலன் கேட்டல் என்பது முக்கியம் வாய்ந்ததொன்றாகும். இதன் மூலம் அவ்வருடம் முழுவதும் எமக்கும் எமது நாட்டுக்கும் எத்தகைய பலன்கள் இடம்பெறவுள்ளன என்பதை யாம் மேலோட்டமாகத் தன்னும் அறிந்து கொள்ள முடியும். முதலில் பஞ்சாங்கம் என்றால் என்ன என்பதை யாம் அறிந்து வைத்திருத்தல் அவசியம் ஆகும். வருடம் என்னும் கால தேவதைக்கு 12 மாதங்களும் அவளது அவயவங்களாம். சூரியன் முதலிய 9 கிரகங்கள் இங்கு ராஜ்ய பரிபாலனம் செய்வர். திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்பனவே பஞ்ச அங்கங்களாம். இவற்றுள் யோகத்தில் அமிர்த சித்த யோகங்கள் சுபகாரியங்களுக்குரியன. மரண யோகம் தவிர்க்கப்பட வேண்டியது. பஞ்ச அங்கங்களுள் திதி நன்மையை விருத்தி செய்யும்; வாரம் ஆயுளை விருத்தி செய்யும். நட்சத்திரம் பாவத்தைப் போக்கும்; யோகம் ரோகத்தை நீக்கம், கரணம் வெற்றியை நல்கும். இவையே பஞ்ச அங்கங்களாம். தமிழ்நாட்டிலே வருடப் பிறப்பன்று நவக்கிரக பூசை, பித்ரு தர்ப்பணம் ஆகியவை இடம்பெறும் வழக்கம் உண்டு. கேரள மக்கள் அன்றைய தினம் அதிகாலை மங்கலப் பொருட்களில் கண் விழிப்பதை முக்கியமாகக் கொள்வர். உதாரணமாக கனி வர்க்கம், காய்கறிகள், புத்தாடை, பொன்னாபரணம், நவரத்தினம் ஆகியவற்றை ஆயத்தமாக ஓரிடத்தில் வைத்து அதிகாலையில் தீபமேற்றி அவற்றைத் தரிசித்த பின் பெரியோர் ஆசியும் பெறுவர். இவற்றை விட தமிழ் மக்கள் பண்பாட்டை காட்டி நிற்கும் ஆடல், பாடல், கூத்து வகைகள், கிராமிய விளையாட்டுக்கள், தேங்காய் அடித்தல், ஜல்லிக்கட்டு, தயிர் முட்டி உடைத்தல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளில் பொதுவாக கிராமத்து மக்கள் சளைக்காது விளையாடி சித்திரைப் புத்தாண்டை கொண்டாடுதல் கண்கூடு. அத்தோடு பட்டிமன்றம், கவிதை அரங்கம் ஆகியவையும் தமிழ்ப் புத்தாண்டைச் சிறப்பிக்கும் நிகழ்வுகளாம். இந்த வகையில் நாம் இப்புத்தாண்டை வரவேற்றுக் கொண்டாடுவதோடு நாம் நல்லவற்றை எண்ணி, நல்லவற்றை ஆற்றி, நாமும் நாடும் நலம் பெற இப்புத்தாண்டு தினத்தில் திடசங்கற்பம் பூணுவோம்.

1 comment:

  1. இன்றய தினத்தில் தான் சூரியன் ஒரு சுற்றை பூர்தியாக்கி மீன ராசியில் இருந்து மேட ராசிக்கு மாறுகின்றார். இச்சம்பவம் மதுரை மீனாட்ச்சி அம்மன் ஆலய கோபுரத்துக்கு மேலாக நடைபெருகின்றது. கடந்த 7 ம் திகதி இலங்கைக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுத்தது குறிப்பிடதக்கது.

    ReplyDelete