Thursday, April 4, 2013

திருவிளக்கு தீபம்

திருவிளக்கு தீபம் பூஜை முடிந்ததும் திருவிளக்கு தீபம் எவ்வளவு நேரம் சுடர்விட வேண்டும். எண்ணெய் தீரும் வரை சுடர்விட்டு, பிறகு தானாக அணைய விடலாமா? அதிகாலை ஐந்தரை மணிக்கே பளபளவென விடிந்துவிட்டால், மின் விளக்கை அணைத்துவிடுவோம். ஆறரை மணிக்குத் தாமதமாக விடியும்போது, அதுவரைக்கும் மின்விளக்கு எரியும். தேவை இருக்கும்போது சேவை தொடர்வது பொருந்தும். கருவறையில் அலங்கார தீபம் காட்டியதும் அதை அணைத்து விடுவார்கள். பஞ்சமுக தீபம், கும்ப தீபம் போன்றவற்றையும் வேலை முடிந்ததும் அணைத்துவிடுவார்கள். பூஜை முடிந்ததும் திருவிளக்கை அணைக்கலாம். தரிசனம் செய்ய அடியார்கள் வந்துகொண்டிருந்தால், அவர்களுக் காக திருவிளக்கு எரிந்துகொண்டிருக்க வேண்டும். வீட்டு பூஜையின்போது... அந்த பூஜை முடிந்ததும் அணைத்து விடலாம். விளக்கைத் தானாக அணையவிடக்கூடாது. திரி எரிதல் அபசகுனம். அணையும் விளக்கு அதீத சுடருடன் எரிவதை சாஸ்திரம் ஏற்காது. விளக்கை இறை வடிவமாகப் பார்க்கும் நாம் உபசாரத்துடன் அணைக்க வேண்டும். அணைப்பதற்கு முன் குங்குமம் போன்ற மங்கலப் பொருட்களை அளித்து அணைக்க வேண்டும். தானாகவே அணைய விடுவது அபசாரமாகும். வெளிச்சத்துக்காக மட்டும் நாம் தீபம் ஏற்றுவதில்லை. நாம் செய்யும் சடங்குகளுக்குச் சாட்சியாக விளக்கை எண்ணுவோம். விளக்கை வழிபடுவது பண்பின் அடையாளம்.

No comments:

Post a Comment