Wednesday, June 19, 2013

உறவில் விரிசல் வேண்டாம்


ஹசன் , உசேன் என்ற இரு சகோதரர்கள் . இவர்கள் அன்னையின் பெயர் பாத்திமா . இவர் , பெருமகனார் நபிகள் நாயகத்தின் புதல்வி
சகோதரர்கள் இருவரும் ஏதோ ஒரு மனத்தாங்கலில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதையே நிறுத்திக் கொண்டனர் . அன்னை பாத்திமாவுக்கு இது மிகவும் வருத்தத்தைக் கொடுத்தது . இருவரையும் சமாதானப்படுத்திப் பேச வைக்க முயற்சி செய்தார் .
" அன்பு மக்களே! இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றுகிறவர்கள் ஒருவருக்கு ஒருவர் மூன்று தினங்களுக்கு மேல் பேசாமலிருந்தால் , அது அவர்களில் ஒருவர் மற்றவரைக் கொலை செய்ததற்குச் சமானம் என்று உங்கள் தாத்தா ( பெருமகனார் நபிகள் நாயகம் ) சொல்லியிருப்பது உங்களுக்கு நினைவில்லையா ? ஆகவே , கோபதாபங்களை மறந்து உறவாடுங்கள் " என்று கனிவோடு கூறினார் .
தாங்கள் தவறு செய்து கொண்டிருக்கிறோம் என்பதை ஏற்கெனவே உணர்ந்த அந்தச் சகோதரர்கள் அன்னையின் வேண்டுகோளுக்குப் பிறகு , பேசிவிடத் துடித்தனர் . ஆனாலும் , அங்கு மவுனம் தான் நிலவியது . யார் முதலில் பேச்சைத் தொடங்குவது என்பதுதான் இப்போதைய பிரச்னை .
" மூத்தவன் என்பதால் அண்ணனுக்குக் கூடுதலான சுயகவுரவம் இருக்கும் . எனவே தம்பி முதலில் பேசத் தொடங்கலாமே ?" என்று அன்னை அடியெடுத்துக் கொடுத்தார் . அதற்குத் தம்பி உசேன் சொன்ன பதில் என்ன தெரியுமா ? " அம்மா ! நான் முதலில் பேசத் தொடங்குவதில் பிரச்னை இல்லை . ஆனால் , தாத்தா சொல்லியிருக்கிற இன்னொரு கருத்து என் நினைவுக்கு வருகிறது . ' பேசாமல் இருக்கிற இருவரில் பிணக்கைத் தீர்த்துக் கொள்ள யார் முதலில் பேசத் தொடங்குகிறார்களோ , அவர்களுக்குத்தான் சொர்க்கத்தின் வாசல் முதலில் திறக்கும் " என்று ஓரிடத்தில் அவர் சொல்லியிருக்கிறாரே ! அதனால் அந்தப் பாக்கியம் அண்ணனுக்குக் கிடைகட்டுமே என்பதற்காகத்தான் நான் பேசாமல் இருக்கிறேன் " என்றார் .
இதைக் கேட்டதும் அன்னையும் அண்ணனும் சிலிர்த்துப் போனார்கள் . " தம்பி !" என்று அவர் அழைக்க , " அண்ணா !" என்று இவர் அழைக்க இருவரும் தழுவிக் கொண்டார்களாம் .
--- இளசை சுந்தரம் . இலக்கியப்பீடம் . டிசம்பர் 2009 .
இயேசுவின் தாய் மேரியின் இஸ்லாமியப் பெயர் மரியம் . பாத்திமா போன்ற பொதுவான பெயர்களும் உண்டு . நபிகள் நாயகத்துக்கும் அவரின் முதல் மனைவியான கதீஜா அவர்களுக்கும் பிறந்த மகளே பாத்திமா

No comments:

Post a Comment