Monday, July 15, 2013

வெற்றிலையின் எண்ணிக்கை அடிப்படையில் பலன் கூறலாம்

வெற்றிலையில் ஆண், பெண் என்ற இரு வகை உள்ளது. இதன் பின்பக்க நரம்புகள் நடு நரம்பில் தொடங்கி ஒரே சீராக இருந்தால் அது பெண் வகை என்றும், ஏற்ற இறக்கமாகக் காணப்பட்டால், கடினத்தன்மையோடு இருந்தால் அது ஆண்வகை என்றும் சொல்வார்கள்.

பெண்வகை வெற்றிலையின் எண்ணிக்கை அடிப்படையில் பலன் கூறலாம். இப்போதும் திருமணம், சீமந்தம், வீடுகட்டத் தொடங்குதல், பொதுச் செயல்களுக்குச் செல்லுதல், சுபகாரியங்கள் எதற்கும் வெற்றிலை ஆரூடம் பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில் ஒரு பெண் வெற்றிலை மட்டும் இருந்தால் நினைத்த செயலைச் சிறிதுகாலம் தள்ளிப் போடுதல் நல்லது.

இப்போது தொடங்கினால் மனக் கவலை வரும் என்று அமைதியாக இருக்கலாம். இரண்டு பெண் வெற்றிலை வந்தால் சீக்கிரமாகக் காரிய ஜெயம் ஏற்படும். மனதில் இன்று நாள்வரை இருந்த குழப்பங்கள் தீர்ந்து விடும். குலதெய்வத்தின் அருள் கிடைத்து விடும்.

மூன்று பெண் வெற்றிலை வந்தால் வாழ்க்கையில் தடைகள் அகன்று முன்னேற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத உதவிகள் வந்து சேரத் தொடங்கும். நான்கு வெற்றிலை வந்தால் கடன் தொல்லை நெருக்க ஆரம்பிக்கும். தொடங்கும் தொழிலை உடனே கைவிட்டால் நலம், இரண்டு அமாவாசைகள் கடக்கும் வரை பொறுமை காக்க வேண்டும்.

ஐந்து பெண் வெற்றிலைகள் வந்தால் - நண்பர்கள் மூலமாகக் காரிய வெற்றி எளிதாகக் கிடைத்து விடும். அதே நேரம் எதிரிகளும் உங்களைச் சுற்றி வருவார்கள். எக்காரியத்திலும் ஒரு கண் வைத்திருக்க வேண்டும்.

ஆறு பெண் வெற்றிலைகள் வந்தால் - பெண்கள் மூலமாக நன்மைகள் பலவும் வந்து சேரும். அவர்களால் எண்ணிய செயலை வெற்றியாக மாற்றிக் காட்ட முடியும். நன்மையை நமக்குத் தருவது போல சாதகச் சத்துருக்கள் பணி நேரத்தில் அதிகமாக வருவார்கள்.

ஏழு பெண் வெற்றிலைகள் வந்தால் - கணவனும் மனைவியும் தங்களுக்குள் ஒரே பொருள் குறித்து வாக்குவாதம் செய்வர். உறவினர்களும் எதிர்க்கக் கூடிய நிலை வரும். உடன் இருக்கும் நண்பர்கள் பகைவர்களாக மாறுவர். பணிகளைத் தள்ளிப் போடுவதே நல்லது.

எட்டு பெண் வெற்றிலைகள் வந்தால் - புதிய பணிகளைத் திட்டமிட்டுத் தொடங்காமல் அடுத்து வரும் பவுர்ணமி வரைக் காத்திருத்தல் நல்லது. அமைதியாகத் தெய்வ சிந்தனையில் இருந்து தியானம் செய்ய வோண்டும். ஒன்பது பெண் வெற்றிலை வந்தால் நவக்கிரகங்களின் ஆசீர்வாதம், நல்லருக உங்களுக்கு உண்டு.

நற்பலன்கள் மிகும். அதிஷ்டமும், திடீர் யோகங்களும் உங்களுக்கு வந்து சேரப் போகிறது. உங்களுக்கு உதவிட பல நண்பர்கள் முன் வருவார்கள். வெற்றி உங்கள் பக்கம்தான். எந்த காரியத்தையும் துணிச்சலுடன் செய்யலாம்.

ஒன்பது பெண் வெற்றிலைக்கு மேல் வந்தால் ஒன்பதைத் தள்ளி மற்ற பெண் வெற்றிலைகளை வைத்துப் பலன் கூறுதல் வழக்கத்தில் இருக்கிறது.

1 comment:

  1. தகவலுக்கு மிக்க நன்றி.

    மொத்தம் எத்தனை வெற்றிலைகள் வைத்து அதில் இப்படி பலன் பார்க்கலாம் என்று தெரிவிக்க வேஏண்டுகிறேன்.

    ReplyDelete