Friday, July 19, 2013

காட்டுக்குள்ளே திருவிழா

சீதாதேவி ராமனுடன் காட்டுக்குச் சென்றாள். அவர்கள் அத்திரி மகரிஷியின் ஆஸ்ரமத்தை அடைந்தனர். அத்திரியின் மனைவி அனுசூயாவுக்கு சீதையைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. அவளை வரவேற்று அன்போடு அணைத்துக் கொண்டாள்.
""சீதா! அரண்மனையில் இருந்து சுக சவுபாக்கியங்களை அனுபவிக்க வேண்டியவள் நீ. இப்படி கணவனோடு வந்து கஷ்டப்படுகிறாயே! அயோத்தியிலேயே இருந்திருக்கலாம் அல்லவா!'' என்று வாஞ்சனை யாகக் கேட்டாள். மகாராணியாக விளங்க வேண்டியவள், காட்டுக்குள் வந்து சிரமப்படுவது குறித்து அனுசூயாவுக்கு கண்ணீர் வராத குறை.
அப்போது சீதா சொன்னாள்.
""தாயே! நீங்களே இப்படி சொல்லலாமா! கணவனோடு இருப்பது தானே பெண்ணுக்கு அழகு! தாங்கள் தங்கள் கணவருக்கு சேவை செய்வதற்குத்தானே இங்கே தங்கியிருக்கிறீர்கள். உங்களை விட நான் என்ன மேன்மையான தியாகம் செய்து விட்டேன்,'' என்று கேட்டாள். (கணவருக்கு தினமும் பாதபூஜை செய்து, அந்த தீர்த்தத்தின் சக்தியால் மும்மூர்த்திகளையே ஆட்டிப்படைத்தவள் அனுசூயா) சீதையை அனுசூயா பாராட்டினாள். அவளுக்கு பல ஆபரணங்களை அணிவித்து அழகு பார்த்தாள். அவளுக்கு தெரியும்! சீதையின் வடிவிலே வந்திருப்பது மகாலட்சுமியென்று! அவளது வாயாலேயே, மிதிலையில் சீதாராமருக்கு நடந்த கல்யாணம் பற்றி கேட்டாள். நாமெல்லாம், ஒரு பாகவதர் சொல்லித்தான் சீதா கல்யாணம் பற்றி கேட்டிருப்போம்.
அனுசூயாவோ, சீதையின் வாயாலேயே அதைக்கேட்டாள். கணவருக்கு சேவை செய்யும் பெண்களுக்கே இத்தகைய பாக்கியம் கிடைக்கும். அனுசூயா மிகுந்த பாக்கியசாலி. அந்த காட்டுக்குள் அன்றைய நாள், அவளுக்கு திருவிழா நாளாக அமைந்தது.

No comments:

Post a Comment