Monday, December 23, 2013

பாப புண்ணியங்கள்



 இந்த உலகில் நாம் எவருமே பாவியாக இருக்க விரும்பவில்லை. ஆனால் பாவ காரியமே அதிகம் செய்கிறோம். நாம் எல்லோருமே புண்ணிய பயன் பெறத்தான் விரும்புகிறோம். ஆனால் புண்ணிய காரியங்களைச் செய்வதில்லை.

பாவம் செய்ய யாறுமே விரும்பவில்லை. ஆனாலும், கிருஷ்ணா அவனை எதுவோ பாவத்திலேயே பலாத்காரமாகத் தூண்டிக் கொண்டிருக்கிறதே. அது என்ன என்று அர்ஜுனன் பகவானைக் கேட்டான்.

அதுதாண்டா அப்பா, ஆசை ஆசை என்பது என்று பகவான் பதில் சொன்னார். ஆசையினால் ஒன்றை அடைய முயல்கின்றோம். எப்படியாவது அதை அடைந்துவிட வேண்டும் என்பதால் தர்ம அதர்மங்களைப் புறக்கணித்து விடுகிறோம். அந்த ஆசை நிறைவேற்றிவிட்டால் அதோடு திருப்தி உண்டாகிறதா. இல்லை. அக்னியில் நெய்யை விட்டால் அது அணைந்தாபோகிறது. மேலும் பெரிதாக வளர்கிறது. அப்படியே ஒர் ஆசை பூர்த்தியான மனசில் இன்னோர் ஆசை பெரிதாக மூளுகிறது.

சரி, அப்படியானால் ஆசை நிறைவேறாவிட்டாலே நல்லது என்று சொல்லவா. அப்படியும் இல்லை. ஆசை நிறைவேறாவிட்டால் நமக்கு ஆத்திரம் உண்டாகிறது. சுவரில் ஆத்திரம் உண்டாகிறது. சுவரில் எறிந்த ரப்பர் பந்து திரும்புவதுபோல் நிறைவேறாத ஆசையானது கோபமாகத் திருப்பி வந்து நம்மைப் பாபத்தில் மேலும் தள்ளுகிறது. ஆசைக்கு அடுத்தபடி இந்தக் குரோதத்தைத்தான் பகவான் கீதையில் சொன்னார். இதுவும் ஆசையின் விளைவுதான்.

அப்படியானால் பாவம் செய்யாதிருப்பதற்கு ஒரே வழி ஆசைகளை அழிப்பதுதான். இதை எப்படிச் செய்வது. நாம் காரியம் செய்யாமல் இருக்கமுடியாது. உடம்பு காரியம் பண்ணாதபோதுகூட நம் மனசு காரியம் பண்ணிக்கொண்டேதான் இருக்கிறது. எதையாவது எண்ணிக் கொண்டேயிருப்பதுதான் மனசின் காரியம். உடம்பு, மனசு ஆகியவற்றால் இந்த இரு வகையிலும் நாம் செய்கிற அத்தனை காரியங்களும் இப்போது நம்முடைய சொந்த ஆசை அபிலா¬க்ஷகளையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கின்றன.

இதனாலேயே அவை நம்மை மேலும் மேலும் பாபத்திலே கொண்டு போய்த் தள்ளிக் கொண்டிருக்கின்றன. அப்படியானால் இனி காரியமே இல்லாமல் சும்மாயிருந்து விடலாமா என்று பார்த்தால், மநுஷ்ய ஸ்வாபாவம் நம்மை அப்படியிருக்க விடமாட்டேன் என்கிறது.

சிந்தையே அடக்கேயே சும்மாயிருக்கின்ற திறம் அரிது என்று தாயுமாந ஸ்வாமிகள் சொன்னார். உடம்பின் காரியத்தைக் கொஞ்சம் நிறுத்தினால் கூட சித்தத்தின் காரியம் நிற்கமாட்டேன் என்கிறது. அது தன் காரியம் செய்வதோடு உடம்பையும் காரியத்தில் ஏவவிடுகிறது.

ஆசையை நேராக நிறுத்த முடியவில்லை. காரியத்தையும் நிறுத்த முடியவில்லை என்றால் நமக்கு கதிமேக்ஷமே இல்லையா. இந்தப் பிரச்சனைக்கு (Problem) தீர்வே (Solution) இல்லையா. இருக்கிறது. அதாவது இப்போது நாம் இருக்கிற நிலைமையில் காரியத்தை அடியோடு நிறுத்திவிட வேண்டுமென்பதில்லை. ஆனால் நாம் சொந்த ஆக்ஞைக்காகவே காரியம் செய்து கொள்கிறோம் என்ற நிலைமையை மாற்றி, நமக்கு லௌகிகமாக லாபம் தராத காரியங்களில் ஈடுபட வேண்டும். லோகோபகாரமாகவும், நமக்கே ஆத்மார்த்தமாகப் பலன் தருவதாகவும் இருக்கப்பட்ட காரியங்களில் இறங்க வேண்டும். இப்பட்டிப்பட்ட காரியங்களில் ருசியை உண்டாக்கிக் கொண்டு மேலும் மேலும் ஈடுபடிகிறபோது, ஆசைகளும் குறைந்து கொண்டே வருகின்றன. பாபம் குறைகிறது. புண்ணியம் ஏறுகிறது. அதாவது இப்போது நாம் செய்ய வேண்டியது என்னவென்னால் காரியம் செய்யப் பழக வேண்டும். ஆசையில்லாமல் செய்வதுதான் புண்ணிய காரியம்.

நாம் இப்போது நான்கு விதங்களில் பாபம் செய்கிறோம். உடம்பால் பல கெட்ட காரியம். வாயால் புரளிப்பேசும் அசத்தியமும், மனத்தினால் கெட்ட நினைவுகள், பணத்தினால் செய்கிற பாபத்தைப் சொல்லவே வேண்டாம்.

எந்த நான்கால் பாபம் செய்தோமோ, அந்த நான்காலுமே புண்ணியம் செய்யப் பழகிக் கொள்ள வேண்டும்.

உடம்பைப் பரோபகாரம், பகவானைப் பிரதக்ஷிணம் செய்து நமஸ்கரிப்பது இவற்றில் ஈடுபடுத்திப் புண்ணியம் செய்ய வேண்டும்.

வாயால் பகவத் நாமாவைத் சொல்லிப் புண்ணியம் செய்ய வேண்டும். சம்பாதிப்பதாலேயே பொழுதெல்லாம் போய்விடுகிறது. இதற்கு அவகாசம் இல்லையே என்பீர்கள். சம்பாதித்து கிருஹஸ்தர்களுக்கு அவசியம்தான். ஆனால் யோசித்துப் பார்த்தால் அதற்கே பொழுது முழுதும் போய் விடவில்லை என்று தெரியும். வீண் பேச்சு, பரிகாசம் வேடிக்கைப் பார்ப்பது, நியூஸ் பேப்பர் விமர்சனம் இவற்றில் எவ்வளவு பொழுது வீணாகிறது. அதையெல்லாம் பகவத்நாமஸ்மரணையில் செலவிடலாமே. இதற்கென்று தனியே பொழுது ஏற்படுத்திக் கொள்ள முடியாவிட்டாலும் பரவாயில்லை. காரியாலயத்திற்கு பஸ்ஸிலோ, ரயிலிலோ போகும்போது பகவத் நாமாவை ஜபித்துக் கொண்டே போகலாமே. ஒடி ஒடி சம்பாதிப்பதில் ஒரு பைசாகூட பிற்பாடு உடன்வராதே. மறு உலகத்தில் செலாவணி பகவத் நாமா ஒன்றுதானே.

மனசு பகவானின் இடம். அதைக் குப்பைத் தொட்டியாக்கி இருக்கிறோம்.

அதைச் சுத்தப்படுத்தி மெழுகி, பகவானை அமரவைத்து, நாமும் அமைதியாக அமைந்துவிட வேண்டும். தினமும் ஜந்து நிமிடங்களாவது இப்படி தியானம் செய்ய வேண்டும். லோகமே மூழ்கிப்போனாலும் நிற்காமல் நடக்க வேண்டிய காரியம் இது. ஏனெனில் லோகம் மூழ்கும்போது நமக்குக் கைக்கொடுப்பது இதுதான்.

பணத்தைக் கொண்டு பகவானுக்காகவும் ஏழைகளுக்காகவும் பலவிதங்களில் தர்மம் செய்து புண்ணியம் சேர்க்க வேண்டும். பாபத்துக்கு இரண்டு சக்திகள். ஒன்று இன்று இப்போது நம்மைத் தவறில் ஈடுபடுத்துவது. இரண்டாவது, நாளைக்கும் நாம் இந்த தவற்றைச் செய்ய தூண்டுவது. உதாரணமாக, பொடி போடுவது அன்றைக்குக் கெடுதல் செய்கிறது. அதோடு நில்லாமல் நாளைக்கும் பொடிபோடுமாறு தூண்டுவது, இதுதான் பழக்க வாசனை என்பது. இந்த வாசனையை மங்கவைத்து, புண்ணியங்களைச் செய்து செய்து புண்ணியவாசனையை ஏற்ற வேண்டும். வாசனைதான் மீண்டும் மீண்டும் பாவத்தில் நம்மை இழுக்கிறது. அதற்காகப் பயம் வேண்டாம். நம்மைப் போல் இருந்தவர்கல் நம்மைப் போல் பாபிகளானவர்கள்கூட பக்தர்களாகவும், ஞானிகளாகவும் ஆகியிருக்கிரார்கள். பாபிகளை ரட்சிக்காவிட்டால் ஈஸ்வரனுக்குத் தான் என்ன பெருமை. நாம் பாவியாக இருப்பதாலேதான் அவனுக்குப் பதிதபாவனன் என்ற விருது கிடைக்கிறது. அவனுக்கு அந்த பெருமையை நாம்தான் கொடுக்கிறோம்.

என்னை மட்டும் சரணடைந்துவிடு. நான் உன்னை எல்லாப் பாபங்களிலிருந்தும் விடுவிக்கிறேன். ஸர்வ பாபேப்யோ மோக்க்ஷயிஷ்யாமி மாசுச. பயப்படாதே என்று தீர்மானமாக அபய வாக்குத் தருகிறார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா.

நாம் தைரியமாக இருப்போம். எத்தனை சுற்றுச் சுற்றினாலும் அத்தனையையும் திருப்பிச் சுற்றினால் தான் கட்டு கழலும். பாப வாசனை அவ்வளவும் தீர அத்தனை புண்ணிய வாசனை உண்டாக வேண்டும். அப்படிச் செய்தால் சுற்று சிக்கலாகி முடிச்சு விழுந்துவிடும். பொறுமையாக பகவானை நம்பி நம் தர்மத்தைச் செய்தால் நிச்சயம் கைகொடுப்பான்.

மனோ வாக்குக் காயங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக இந்திரிய வியாபாரத்திலிருந்து திருப்பி, பகவானிடம் வைத்துப் பழகுவதற்காகத்தான் இத்தனை மதங்களும் தோன்றியிருக்கின்றன. ஜீவனாகப்பட்டவன் இந்திரிய சுகங்களுக்காகச் செய்கிற பாபங்களிலிருந்து அவனை மீட்பதற்காகத்தான் ஒவ்வொரு பெரியவரும் தோன்றி ஒரு மதத்தைக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறார். பாபத்தால், இந்திரிய சுகத்தினால் கிடைக்கிற ஆனந்தம் ரொம்பவும் தற்காலிகமானதுதான். பரமாத்மாத்தான் சேர்த்திருப்பதுதானப்பா நிரந்தரமான ஆனந்தம் என்று சொல்லி, சம்ஸாரத்திலிருந்து அதனை விடுவித்து பகவானிடத்தில் சேர்ப்பதுதான் ஒவ்வொரு மதத்துக்கும் லட்சியமாகும்

No comments:

Post a Comment