Friday, January 31, 2014

சூரியனுக்கே சவால்

கவுசிக முனிவரின் மனைவி சைப்யா கணவனுக்கு சேவை செய்வதில் மிகவும் சிறந்தவள். முன்வினைப்பயன் காரணமாக, கவுசிகர் குஷ்டரோகத்தால் அவதிப்பட்டார். எனினும் அவள், அவருக்கு பணிவிடை செய்வதில் குறை வைக்கவில்லை.
இருப்பினும், மனைவியின் மனஉறுதியைப் பரிசோதிக்க எண்ணினார் முனிவர். சைப்யா விடம், தன்னை ஒரு தாசியின் வீட்டுக்கு அழைத்துச் செல்லும்படி கூறினார். பதிலேதும் பேசாத சைப்யா, ஒரு தாசியிடம் சென்று தன் கணவர் தொழுநோயாளி என்ற <உண்மையையும், அவரது விருப்பத்தையும் சொல்லி, மன்றாடி சம்மதிக்க வைத்து விட்டாள். சைப்யாவிடம் அந்த தாசி, ""உன் கணவர் இங்கு வந்து சென்ற விஷயம் வெளியில் தெரியக் கூடாது,'' என நிபந்தனை விதித்தாள்.
சைப்யாவும் அவ்வாறே வாக்களித்தாள். பின், தன் கணவரை, ஒரு கூடையில் அமரச் செய்து தாசி வீட்டுக்குப் புறப்பட்டாள்.
அந்த வேளையில், மாண்டவ்யர் என்ற முனிவரைக் கழுமரத்தில் ஏற்றும்படி அந்நாட்டு மன்னன் உத்தரவிட்டிருந்தான். கழுவில் ஏற்றப்பட்ட மாண்டவ்யர் உயிர் பிரியாமல் வேதனையில் துடித்துக் கொண்டிருந்தார். அந்த வழியை சைப்யா கடந்தாள். அந்த நேரத்தில், கவுசிகருக்கு தன் காலை மடக்கி கூடைக்குள்ளே வைத்திருந்ததால் வலி அதிகமானது. அதனால் கூடைக்கு வெளியில் காலை தூக்கி உதறினார். அது கழுமரத்தில் தொங்கிக் கொண்டிருந்த மாண்டவ்யரின் மீது பட்டுவிட்டது. ஏற்கனவே, வலியால் துடித்துக் கொண்டிருந்த மாண்டவ்யர், தன் ஞானதிருஷ்டியால் கவுசிக முனிவர் தான் தன்னை உதைத்தார் என்பதை உணர்ந்து கோபம் கொண்டார்.
""கழுவிலே கிடந்து அவதிப்படும் என்னை உதைத்த கவுசிகரே! உமது உயிர் நாளை சூரியன் உதிக்கும் போது போய்விடும்,'' என்று சபித்தார். மாண்டவ்யரின் சாபம் கேட்ட சைப்யா, ""தெரியாமல் நடந்து விட்ட தவறைப் பொருட்படுத்தாமல் மன்னியுங்கள்,'' என அவரிடம் மன்றாடினாள். மாண்டவ்யரோ மனம் இரங்கவில்லை.
சைப்யாவுக்கு கோபம் வந்து விட்டது. ""மாண்டவ்யரே! நான் எனது பதிவிரதா தர்மத்திற்கு பங்கம் வராமல் இது நாள் வரையில் நடந்திருக்கிறேன். அது உண்மையானால், நாளை சூரியன் உதிக்காது,'' என்று பதிலுக்கு சபதம் செய்தாள்.
அதன்படியே சூரியனால் மறுநாள் உதிக்க முடியவில்லை. இது கண்ட தேவர்கள், அத்திரி முனிவரின் தர்மபத்தினி அனுசூயாவை, சைப்யாவிடம் தூது அனுப்பினர்.
அனுசூயா சைப்யாவிடம், ""சூரியன் உதிக்காததால் பூலோகமே இருண்டு கிடக்கிறது. உயிர்களின் நன்மைக்காக உன் சாபத்தை திரும்பப்பெறு'' என்று வேண்டினாள்.
சைப்யா அவளிடம்""அம்மா! சூரியன் உதயமானால் என் கணவரின் உயிர் போய்விடும். அதனால், என் சபதத்தை மாற்ற முடியாது,'' என்று மறுத்தாள்.
""கலங்காதே! மாண்டவ்யர் இட்ட சாபம் பலித்தாலும், கவுசிகரின் உயிரை மீட்டுத் தருவது என் பொறுப்பு,'' என்று தைரியம் சொன்னாள் அனுசூயா.
சைப்யாவும் மனம் இரங்கி, சூரியன் உதிக்க சம்மதித்தாள். கிழக்கில் சூரியன் உதயமானது. கவுசிகர் இறந்து போனார்.
அனுசூயா தன் இரு கரங்களையும் குவித்தபடி, விஷ்ணுவைப் பிரார்த்தித்தாள்.
""திருமாலே! நான் இதுவரை பதிவிரதையாக வாழ்ந்திருக்கிறேன். அதனால் இந்த வரத்தை எனக்கு தந்தருள வேண்டும். சைப்யாவின் கணவர் கவுசிகர் உயிர் பெறுவதுடன், அவரது குஷ்டநோயும் நீங்கி குணம் பெற வேண்டும்,'' என்றாள்.
சற்று நேரத்தில் கவுசிக முனிவரும் தூங்கி எழுந்தது போல கண் திறந்து பார்த்தார். அவருடைய குஷ்டநோயும் நீங்கியது. தன் மனைவியின் கற்புத்திறத்தை எண்ணி வியந்தார். தன் மனைவியின் பெருமையை உலகறியச் செய்யவே இவ்வாறு செய்ததாகக் கூறினார். கற்புத்திறன் மிக்க இத்தகைய பெண்கள் வாழ்ந்ததால் தான், இன்றும் நம் பூமியில் ஆன்மிகம் நிலைத்திருக்கிறது.

No comments:

Post a Comment