Friday, February 21, 2014

பிறருக்குப் பயன்படுவதே பக்தி

எது பக்தி?

ஒரு புல் - நிலம், நீர், நெருப்பு (ஒளி), காற்று, ஆகாயம் - என்ற ஐந்து பூதங்களில் இருந்து பலவற்றைப் பெறுகிறது. அப்படிப் பெற்றதால், வளர்கிறது வாழ்கிறது.
வாழும்போது மூலிகையாகவோ, உணவாகவோ பிறருக்குப் பயன்படுகிறது அல்லது வாடி வதங்கி மடிகிறது.
இதுதான் வாழ்க்கை. ஒன்றைப் பெறுவது - பெற்றதால் வளர்வது அல்லது வாழ்வது - பிறகு பயன்படுவது - முடிவாக மறைவது....
இது எல்லா உயிரினங்களுக்கும் வகுக்கப்பெற்ற வாழ்க்கை நியதி.
உயிர்களில் உயர்ந்த மனிதனும், இந்த வாழ்க்கைப் பரிமாணங்களில் அகப்பட்டே வாழ வேண்டும்.
மனிதகுலத்துக்கு மட்டுமே அவன் பயன்பட முடியும். மனத்தால், சிந்தனையால், செயலால் பிறருக்குப் பயன்பட வாழ்வது சிறந்த வாழ்வு.
எந்த வகையிலும் பிறருக்குப் பயன்பட முடியாமல் வாழ்வது - இயற்கை நியதிக்கு எதிராவதை, ஆன்மிகம் பாபம் என்று சொல்கிறது. இயற்கையோடு ஒன்றியிருப்பது புண்ணியம் என்று சொல்லப்படுகிறது.
மனிதனின் மூளை விசாலத்தைக் கணக்கிட்டார்கள். மிகப்பெரும் பேரறிஞனாகிய ஐன்ஸ்டீனே எட்டு சதவிகித மூளையைத்தான் பயன்படுத்தி இருக்கிறாராம்.
அப்படியானால் சாதாரண மனிதர்கள் மூளையின் சக்தியில் நான்கு சதவிகிதம்தான் வெளிப்படுத்தியவர்கள் ஆகிறார்கள்.
இயற்கை ஒவ்வொருவருக்கும் தொண்ணூற்று இரண்டுக்கு மேலேயும் மூளை பலத்தை கொடுத்திருந்தும் மனிதர்கள் அதைப் பயன்படுத்தாமல் வீணே மடிகிறார்கள்.
பெரிய அளவு சக்தியைப் பயன்படுத்த வேண்டும் என்பதே இயற்கை நம்மிடம் எதிர்பார்ப்பதாகும்.
அன்பு, கருணை, இரக்கம், பாசம் முதலிய குணங்களோடு வாழும்போது, மேலும் பல சதவிகித மூளைப் பகுதிகள் பயன்கொள்கின்றன.
குறுகிய எண்ணங்களை விட்டுவிட்டுப் பரந்த மனம் உடையவர்கள் புண்ணியவான்கள். பிரபஞ்சம் முழுவதையும் தனக்குள் அடக்கிக் கொண்ட கடவுளைத் தியானிப்பதும் நல்ல ஒழுக்கத்துடனும் உதவியுடனும் வாழ்வதும் மனித வாழ்வு விரியக் காரணம் ஆகிறது.
இதுவே, ஆன்மிக வாழ்வு. பிறருக்கு உதவாதவன் வாழ்வு கல் வாழ்வதைவிடக் குறைந்த வாழ்வேயாகும்.
கோயிலுக்குப் போவது மட்டும் ஆன்மிகம் இல்லை என்பதைக் காட்டவே திருமூலர் பாடினார்:
யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் ஆவிற்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒருகைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே
ஒருவரின் ஆன்மிக வாழ்வின் விரிவை இப்பாடல் காட்டுகிறது. பிறருக்குப் பயன்படுவதே பக்தி என்பது இதன் குறிப்பு.

வழிபாட்டு முறை!
பணக்காரன், தன் பணத்தால், இறைவனை வழிபடும் அடியவர்களுக்கு சேவை செய்ய வேண்டும்.
ஏழையோ இறைவனது திருநாமத்தை திரும்ப திரும்ப ஜெபிப்பதன் மூலம் அவரை வழிபடலாம்.

-அன்னை சாரதாதேவி

No comments:

Post a Comment