Monday, March 31, 2014

அக்குபஞ்சர் புள்ளிகள்

அண்டத்தில் இயங்குகின்ற ஆற்றல்கள் பிண்டத்திலும் இயங்கும்
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
"வாறான சனங்களுக்கும் ஐந்து பூதம்
மருவியதோர் தேவதைக்கும் ஐந்து பூதம்
தாறான அண்டமெலாம் ஐந்து பூதம்
சதாசிவமாய் நின்றதுவும் ஐந்து பூதம்
கூறான யோனியெல்லாம் ஐந்து பூதம்
குரும்பனே ஐந்தினால் எல்லாம் ஆச்சு'' - சட்டைமுனி
பிரபஞ்சம் என்பது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐம்பூதங்களால் ஆனது. இந்த ஐம்பூதங்களும் ஒன்றை ஒன்று சார்ந்தும் , ஒன்றை ஒன்றும் கட்டுப்படுத்தியும் முறையாக இயங்கினால் மட்டுமே இந்த பிரபஞ்சம் நிலைக்கும். மாறாக.... ஏதேனும் ஒன்றின் ஆதிக்கம் அதிகமானாலோ, குறைந்தாலோ பிரபஞ்சம் சமநிலையை இழக்கும்... உதாரணமாக பஞ்ச பூதங்களில் நெருப்பு குறைவாக இருந்தால் தண்ணீர் அதனை அனைத்து விடும் , தண்ணீர் குறைவாக இருந்தால் நெருப்பு அதனை ஆவியாக்கி விடும் .., நெருப்பு குறைவாக இருந்தால் காற்று அதை அனைத்து விடும் ...., அதே நெருப்பு அதிகமாக இருந்தால் காற்று அதனை ஊதி ஊதி அதிகமாக்கும் ...
“பூத உடலுக்கு ஐம்பூதமே
நன் மருந்தாம்
பூத நிலை என்னாளும் போற்று”
நமது உடம்பை ஆட்சி செய்வதும் பஞ்ச பூதங்களேயாகும்.
இந்த பஞ்சபூத சக்திகளும் ஒரு குறிப்பிட்ட அளவில் , கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் . பஞ்சபூதங்களின் அளவில் ஒன்று மாறினாலும் உயிருக்கு ஆபத்து. அண்டத்தில் இயங்குகின்ற ஆற்றல்கள் பிண்டத்திலும் இயங்கும் என்பதே பொதுவான விதி.
நம் உடல் துவர்ப்பு, உப்பு, இனிப்பு, புளிப்பு, கசப்பு, காரம் என அறுசுவைகளால் ஆனது. அறுசுவைகளில் ஒரு சுவை குறைந்தாலோ அல்லது அதிகமானாலோ மேற்கூறிய உறுப்புகளுக்கு கிடைக்கும் சக்தியின் அளவு குறைந்தோ அல்லது கூடியோ பெறப்படும்போது தான் உடலில் பல தொல்லைகள் தலை தூக்க ஆரம்பிக்கும்.
அப்படி உடலில் உறுப்புகள் அதிகமான (அ) குறைவான சக்தியுடன் செயல்பட்டால் அக்குபஞ்சர் புள்ளிகள் மூலம் சக்தியை சமன்படுத்தி உள்ளுறுப்புகளையும் சீராக்கலாம். நம் உடலுக்குள் அமைந்து இருக்கும் உறுப்புகள் அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டு இருப்பதோடு, உடலின் மேற்பகுதியுடனும் தொடர்பு கொண்டுள்ளது. இப்படி உள்ளுறுப்புடன் நேரடித்தொடர்புடைய உடலின் மேற்பகுதியில் அழுத்தம் (pressure) கொடுத்தோ, நுண்துளையிட்டோ (puncture) பாதிக்கப்பட்ட உள்ளுறுப்பை சரிசெய்து இயங்க வைப்பதே அக்குபஞ்சர் மருத்துவம்.
இயற்கை பல அரிய விஷயங்களை அளித்திருந்தாலும் மனிதன் மட்டுமே மிகப்பெரிய சக்தியாக, அனைத்தையும் கட்டுப்படுத்தி நிர்வகிக்கும் ஆற்றல் பெற்றவனாக திகழ்கிறான். ஒரு மனிதனின் நிரந்தர மூலதனம் ஆரோக்கியம் மட்டுமே. இயற்கையோடு ஒன்றி வாழும் யாரும் அத்தனை சீக்கிரம் நோய்வாய்ப்படுவதில்லை. ஆனால் இன்றைய சமுதாயம் வாழ்வின் ஆதாரமான ஆரோக்கியத்தை இழந்து தவிக்கிறது. செலவே இல்லாமல் ஒரு மனிதனால் வீட்டிலேயே ஆரோக்கிய வாழ்வு வாழ முடியுமா என்றால் ..... முடியும். ருசிக்காக உண்ணாமல் பசியறிந்து உண்டு வந்தாலே வியாதியை அப்புறமாக தள்ளி வைக்கலாம்.
ஒரு நோயாளி வந்தாலே அவரின் குணாதிசயங்கள், உணவுப்பழக்கங்கள், போன்றவற்றை வைத்தே அக்குபஞ்சர் முறைப்படி அவரின் வியாதியை அறிந்து கொள்ளலாம். சிகிச்சைக்கு வருபவரிடம் எதுவும் கேட்காமல் நோயை கண்டுபிடிப்பவரே, மிக சிறந்த அக்குபஞ்சர் மருத்துவர். நம் உடலில் தோன்றும் நோயின் காரணங்கள் என்னவென்று ஆராய்ந்து அதிலிருந்து விடுபட்ட சீரான உணவு முறையும், பழக்கவழக்கங்களும், ஊசியை உடலின் மேல்பகுதியில் செலுத்தி தடைப்பட்ட இயக்கத்தை சமநிலைப்படுத்தினால் உடல் பூரண குணமாகும்.
அக்குபஞ்சர் மருத்துவமானது மிக சிறப்பான மருந்தில்லா மருத்துவம். உடலில் தோன்றி உள்ள நோயின் மூல காரணத்தை கண்டு சரியான முறையில், முற்றிலும் தீர்வு காண முடியும். ஆனால் இந்த மருத்துவத்தை முழுதும் கற்று அறியாமலும், உண்மையான தத்துவங்களை புரிந்துகொள்ளமலும், உடற்கூறு, அதன் இயக்கங்களை பற்றிய அறியாமையாலும் இன்னும் இதன் வளர்ச்சி முழுமை பெறாமலே இருக்கிறது. அக்குபஞ்சர் சிகிச்சையில் ஒரு ஊசியைக் கொண்டே ஒரு நோயாளியின் உடலில் தோன்றி உள்ள அனைத்து விதமான நோய்களையும் நீக்கி விட முடியும் . உறுப்புகளின் செயல் குறைபாடே நோயாக வெளிப்படுகிறது. எந்த உறுப்பின் இயக்கம் குறைந்துள்ளது என்பதை கண்டறிந்து, அதோடு தொடர்புடைய மற்ற உறுப்புகளின் இயக்கம் எந்த அளவில் உள்ளது என்று கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
உணவே மருந்தாக இருந்த காலம் மலையேறி, இப்போது மருந்தே உணவாக மாறிவிட்டது. உடலை வலுவாக்கும், நோயை நெருங்க விடாத தற்காப்பையும் கொடுக்கும் சிறுதான்ய வகைகளை மறந்தும் வாழ்வதால் இன்று நம் அனைவரின் நிலையம் கீழிறங்கிக் கொண்டிருகிறது. நம் முன்னோர்கள் உருவாக்கிய பாரம்பரிய மருத்துவ உணவுகள் ஏராளம். அவற்றில் அறுசுவகளும், உயிர் சக்திக்கு தேவையான மொத்த சத்துக்களும் நிறைந்து உள்ளன.
இதனை உணராமல் இரசாயன மருந்துகளால் நோயை விரைவில் குணமாக்கி, இலவச இணைப்பாய் கொஞ்சம் பக்கவியாதிகளையும் கொடுக்க கூடிய மருந்துகளின் பிடியில் இருந்து மக்களை மீட்டு, முறையான உணவுப்பழக்கத்தால் நோய்கள் வராமல் பாதுகாக்கவும், அப்படியான உணவு முறையால் அறுசுவைகளில் ஏதேனும் ஒரு சுவை குறைந்து அதன் மூலம் ஏதேனும் நோய்கள் வந்தாலும் கூட ரசாயன மருந்தின் துணையின்றி அக்குபஞ்சர் மருத்துவத்தின் மூலமே பக்கவிளைவுகள் ஏதும் இல்லாமல் அவற்றை சரிசெய்து மக்களை நோய் நொடியின்றி வாழவைக்கும்

நான்கு ரகசியங்கள்!

நம்மாழ்வார் சொன்ன நான்கு ரகசியங்கள்!
''உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால், நான்கு விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும்.
ஒன்று... பசி வந்து சாப்பிட வேண்டும்,...
இரண்டு... தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும்,
மூன்று... சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும்,
நான்கு... தூக்கம் வந்து தூங்க வேண்டும்.’

நெற்றியில் குங்குமம்

நெற்றியில் புருவமத்தியில் மூளையின் முன்புறமாக, பைனீயல் க்ளாண்ட் என்ற சுரப்பி அமைந்துள்ளது. இதை, யோக சாஸ்திரத்தில் ஆக்ஞா சக்ர ஸ்தானம் என குறிப்பிட்டுள்ளனர். மூன்றாவது கண், ஞானக்கண் என்றும் இதற்குப் பெயருண்டு. சிவபெருமானுக்கு ஆக்ஞா சக்கரமே நெற்றிக்கண்ணாக இருப்பதைக் காணலாம். திபெத்தில் லாமாக்கள் ஞானக்கண் திறப்பது என்றொரு சடங்கு செய்கின்றனர். இதன் சிறப்பை உணர்வதற்காகவே நெற்றியில் குங்குமம் இடுகிறோம். பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் குங்குமம் வைக்க வேண்டும். உடல் முழுவதும் மின்காந்த... சக்தி வெளிப்பட்டாலும், நெற்றியில் புருவமத்தியிலுள்ள நுண்ணிய பகுதியில் அதன் சக்தி அதிகமாக வெளிப்படுகிறது. இதன் காரணமாகத்தான், மனக்கஷ்டம் வந்தாலோ, ஏதாவது ஒன்றை தீவிரமாக சிந்தித்தாலோ அந்த இடம் உஷ்ணமடைந்து தலைகனம், தலைவலி போன்ற பிரச்னை உண்டாகிறது. இதை தவிர்த்து, குளிர்ச்சியை உண்டாக்கவே சந்தனம், குங்குமம் போன்றவற்றை நெற்றியில் இடுகிறோம். இதனால், உடல், மனோசக்தி வீணாகாமல் பாதுகாக்கப்படுகிறது. முகம் களையோடு பிரகாசமாகத் திகழ்கிறது. பொட்டு வைப்பது என்பது அலங்காரத்திற்காகவும், ஆன்மிக காரணத்திற்காகவும் மட்டுமல்ல... ஆரோக்கியத்திற்காகவும் நம் பெரியவர்கள் இப்பழக்கத்தை ஏற்படுத்தினர்

முழு ஈடுபாடு இல்லாமல் செய்யும் எந்த செயலும்... முழு பயன் தராது..

வீட்டை அழகாக வைத்திருக்க விரும்பிய ஒருவர்
...நிறைய செடிகொடிகளை நட்டு வைத்தார்.... உரமிட்டார்.... நீர் பாய்ச்சினார்....
செடிகள் பெரிதாக வளரவில்லை.
...
பக்கத்தில் ஒரு பூங்காவைப் பராமரிக்கும் கிழவரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார்.
இரண்டே மாதங்களில் செடி கொடிகள் செழித்து தழைத்து வளரத் தொடங்கின.
வீட்டின் உரிமையாளருக்கு வியப்பு.
அதே தண்ணீர். அதே உரம். அதே இடம்.
இது எப்படி சாத்தியம்?
கிழவர் சொன்னார்: "அய்யா! நீங்கள் அலுவலகத்திற்குப் போகும் அவசரத்தில் நீர்பாய்ச்சுகிறீர்கள். நான், குழந்தைக்கு உணவு தரும் அன்னையின் மனநிலையில் இருந்து நீர்பாய்ச்சுகிறேன்..."
அப்பொழுது தான் உரிமையாளருக்கு புரிந்தது... முழு ஈடுபாடு இல்லாமல் செய்யும் எந்த செயலும்... முழு பயன் தராது...என்று.

யோகா என்பது ஆற்றல் வடிவம்.

யோகா என்பது ஆற்றல் வடிவம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ரிஷிகள், படைப்பின் ரகசியங்களைப் புரிந்து கொள்வதற்கு யோகத்தைக் கடைபிடித்தனர். அவர்கள் கண்டுபிடித்த உண்மைகளையே பின்னர் நவீன அறிவியல் மறுகண்டுபிடிப்பைச் செய்தது.
1905 இல் ஆல்பரட் ஐன்ஸ்டீன் E=mc2 என்ற சமன்பாட்டைக் கண்டறிந்தார். படைப்பு என்பது ஆற்றலைத் தவிர வேறெதுவும் இல்லை என்பதே அவரது கண்டுபிடிப்பு. ஆற்றல் ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவம் எடுக்க முடியுமே தவிர அதை அழிக்க முடியாது. படைப்புச் செயல்பாட்டைப் பொருத்தவரை எல்ல...ாப் பொருட்களும் ஆற்றலின் வடிவங்கள்தான். மாற்றம்தான் இங்கு நியதி. எதுவும் புதிதாகப் பிறப்பதில்லை.
இந்த மாற்றத்திற்கு மூலம் யார்? நமது மூதாதையர்கள் அதை எண்ணமாகப் பார்த்தார்கள். எண்ணத்தை ஆற்றல் தொடர்கிறது. ஒரு அணுகுண்டு முதலில் எண்ணத்தில்தான் இருந்தது. அதேபோலவே விமானமும் முதலில் பறக்க வேண்டும் என்ற ஆசையிலிருந்து உருவானதே. படைப்பின் அடிப்படையே ஒரு எண்ணம்தான். அனுபவத்தை அடைவதற்கான ஆசைதான். இந்த எண்ணம்தான் மாதா ஆதிசக்தியை உருவாக்கியது. அவளிடமிருந்தே மும்மூர்த்திகளும் உருவானார்கள்.
ஒரு எண்ணத்தின் அடியில் பிறக்காத செயலின் கரு உள்ளது. நமது எண்ணங்கள், நடவடிக்கைகள், செயல்கள் அனைத்தும் அதிர்வலைகளை உருவாக்கிக்கொண்டே இருக்கின்றன. அதற்கு எதிர்வினைகளும் உண்டு. இதுதான் கர்ம விதி என்பதை வேத ரிஷிகள் உணர்ந்திருந்தனர். நியூட்டனின் மூன்றாம் விதி இதன் இன்னொரு வடிவமே.
நமது எண்ணங்களை நாம் ஊன்றிப் பார்த்தோமென்றால் அதுவும் நம்மிலிருந்து உருவாவதில்லை. அவை பிரபஞ்ச வெளியில் நீந்திக்கொண்டிருக்கின்றன. நமது தனிப்பட்ட அதிர்வலைகளின் தன்மையைப் பொருத்து, நமது இயல்பைப் பொருத்து அவற்றைப் பிடித்துக்கொள்கிறோம். பசித்த மனிதன் பூமியில் அமைதியை உருவாக்குவான் என்று எதிர்பார்க்க முடியாது. உணவை எப்படியாவது சம்பாதிப்பதில்தான் அவன் நாட்டம் சென்றபடி இருக்கும். நமது எண்ணங்கள் நமது ஆசையால் நிர்வகிக்கப்படுபவை. நமது ஆசைகளிலிருந்து எண்ணத்தை விடுவித்து உறையச் செய்வதே யோக சாதனையின் நோக்கம். அதை “யோக: சித்த வ்ருத்தி நிரோத:” (மனதில் எழும் சலனங்களை நிறுத்துதலே யோகம்) என் யோக சாஸ்திரம் சொல்கிறது. இப்படி நிறுத்துவதற்கான சுத்தி நடைமுறைகள் சந்தான கிரியையில் உண்டு.
எண்ணங்களும் ஆசைகளுமே ஒருவரைத் தனிப்பட்ட பிரக்ஞையுடன் கட்டிப்போட்டுவிடுகின்றன. இந்த தொந்தரவுகள் அகற்றப்பட்டால் ஒருவரால் மேல்நிலை பிரக்ஞையை அடையமுடியும். ஒரு யோகியால் தனது ஆற்றலை குவித்து தெய்வீக ஆற்றலை அடைய முடியும். ஆனால் அந்த ஆற்றலை ஒரு யோகி, சொந்த நலன்களுக்குப் பயன்படுத்தக்கூடாது. சூரியன் தனது சேவைகளுக்காக சன்மானம் கேட்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதே நிலை யோகிக்கும் பொருந்தும்.

சிவலிங்க வழிபாடு

சிவலிங்க வழிபாடு.
உலகின் முதல் கடவுள் சிவன். அவன் தான் எல்லாவற்றிக்கும் மூலம் என்பார்கள் பெரியோர்கள். உருவமில்லா உருவமாக சிவ லிங்கம் வணங்கப்படுகிறது
உருவ வழிபாடு லிங்கத்திலிருந்தே தொடங்கியிருக்க வேண்டும் என்பது ஆய்வாலர்களின் கருத்து. ஏனென்றால் லிங்கம் ஒரு வகையில் உருவமுடையது. மறுவகையில் உருவமில்லாதது.
...
அறிவியலும் சித்தநெறியும் -
அறிவியலும் சித்தநெறியும் பிரிக்க முடியாத இரட்டைக் குழந்தைகள் என உங்களுக்கு தெரிந்திருக்கலாம். வடக்கே தலை வைத்து படுக்க கூடாதென வீட்டில் சொல்வதற்கு காரணம் மூடநம்பிக்கை இல்லை. அறிவியல். வடக்கு பகுதியின் புவி காந்தம் இருக்கிறது. அதனால் வடக்கே தலை வைத்து உறங்கும் போது அது மூளையை பாதிக்கின்றது என்கிறது அறிவியல். இது போல லிங்கத்திற்கும் ஒரு அறிவியல் காரணம் இருக்கிறது
லிங்கத்திற்கும் அறிவியலுக்கும் இடையே உள்ள உறவை தெரிந்து கொள்வதற்கு முன் கோவிலைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். இந்துக் கோவிலின் அமைப்பு மனித உடலை ஒத்துள்ளது.
கால் – கோபுரம்.
ஆண்குறி – கொடிமரம்.
பெண்குறி – பலிபீடம்.
தலை – கருவறை.
ஒரு கோவிலின் பிரதானப் பகுதி கருவறை. அந்தக் கருவறையில் இருக்கும் கடவுள் சக்தி வாய்ந்தவர். மனித உடலிலும் தலை தான் பிரதானப் பகுதி. அந்த தலையில் இருக்கும் மூளைதான் சக்தி வாய்ந்த உறுப்பு. என்ன ஒரு ஒற்றுமை!.
மூளையில் இருந்து எல்லாவற்றிக்கும் கட்டளைப் பிரப்பித்துக் கொண்டிருப்பது பீனல்சுரப்பி. பீனலின் சுரப்பி முதன்மையான சுரப்பி. பீனல்சுரப்பியானது, உடல்சமநிலையை (ஹீமோஸ்டாஸிஸ்) ஒழுங்குப்படுத்தும் ஹார்மோன்களைச் சுரக்கிறது. இதில் பிற நாளமிள்ளா சுரப்பிகளைத் தூண்டும் ட்ரோபிக் ஹார்மோன்களும் அடங்கும். இதனுடைய செயல்பாடு ஹப்போதலாமஸுடன் மைய நரம்பு மண்டலம் மூலம் இணைக்கப்படுகிறது.
பீனல்சுரப்பியின் வடிவமும் லிங்கத்தின் வடிவமும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. எனவே லிங்கம் என்பது பீனல்சுரப்பி( pineal gland)யை வைத்து வடிவமைக்கப்பட்டிருக்கலாம்.
பீனல்சுரப்பியின் வடிவமும் லிங்கத்தின் வடிவமும் ஒத்துப்போவதை உங்களால் காண முடியும்.
படங்களும் அதன் விரிவாக்கமும்
1. கோவிலின் அமைப்பு
2. பீனல்சுரப்பியின் வடிவம்
3.பீனல்சுரப்பி
4.மனித மூளையில் பீனல்சுரப்பியின் இடம் .
Mehr anzeigen

மகாபாரதத்தின் சகுனி

சகுனி மகாபாரதத்தின் ரியல் ஹீரோ ..
காந்தார நாட்டு மன்னன் சுபாலன் இவரின் கடைசி மகன்தான் சகுனி.காந்தாரி திருமணம் குறித்து எழுந்த சர்ச்சை குறித்து விசாரித்து வர ஒற்றர்களை காந்தார நாட்டுக்கு அனுப்பினார். காந்தாரியின் முதல் கணவருக்கு ஆயுள் இல்லை என்றும்,அதனால் காந்தாரியை ஒரு ஆட்டுக்கடாவுக்கு மணம் செய்வித்தும்,பிறகு அந்த ஆட்டை பலியிட்டதாகவும் ஒற்றர்கள் தெரிவித்தார்கள், நுணுக்கமாய் அன்றைய சாத்திரப்படி பார்த்தால் காந்தாரி ஒரு விதவை..
"என்னை சுவலன் ஏமாற்றிவிட்டான்,ஒரு விதவையையா? என் வ...ீட்டுக்கு மருமகளாக கொண்டு வந்தேன்.உலகுக்கு தெரிந்தால் நகைப்புக்கு இடமாகுமே,சுவலன் குடும்பத்தை அழித்து அந்த ரகசியத்தை வெளிவராமல் செய்துவிடுகிறேன்" என்று சுவலனையும அவன் மகன்களையும் பிடித்து சிறையில் அடைத்தார்.
ஒருகுடும்பத்தையே கொள்வது அதர்மம் என்பதை அறிந்த பீஷ்மர் தினமும் ஒரு கைபிடி அரிசி மட்டும் உண்ணக்கொடுத்தார்."ஒருகுடும்பத்தையே கொள்வது அதர்மம் என்பதை அறிந்த பீஷ்மர் அந்த நியதியை மீறாமல் சிறிது உணவே தருகிறார்.இன்னும் கொஞ்சம் உணவை கேட்பதும் நமக்கு அதர்மம் எனவே பட்டினி கிடந்துதான் மடியவேண்டும். நாட்கள் செல்லச் செல்ல நிலைமை மோசமாகியதுசகோதரர்களுக்குள் உணவுக்காக சண்டை வந்தது சுவலன் ஒரு யோசனை சொன்னான் "நம்மில் யாராவது புத்திசாலியானவன் ஒருவன் மட்டும் உணவை உண்டு பிழைத்து இந்த அநியாயத்தைச் செய்த பீஷ்மரை பழிவாங்கட்டும்" இந்த யோசனைக்கு அனைவரும் உடன்பட்டனர்...
வயதில் இளையவனான சகுனிதான் உணவை சாப்பிட தேர்ந்தெடுக்கப்பட்டான்.குடும்பத்தில் சகுனியின் முன் பட்டினி கிடந்து ஒவ்வொருவராக மடிந்தனர். இறக்கும் முன் சுவலன் சகுனியின் கால்களில் ஒரு காலின் கணுக்காலை அடித்து உடைத்தான்.
"இனி நீ நடக்கும் போதெல்லாம் நொண்டுவாய், ஒவ்வோரு முறை நொண்டும் போதும் கௌரவர் செய்த அநீதியை நினைவில் கொள், அவர்களை மன்னிக்காதே" என்றார்.
சகுனிக்கு தாயத்தின் மீது ஒரு சபலம் உண்டு என்று சுவலனுக்கு தெரியும், சாகும் தறுவாயில் தன் மகனிடம் "நான் இறந்த பிறகு என் கை விரல் எலும்புகளை எடுத்து தாயக்கட்டையை உண்டாக்கு, அதில் என் ஆத்திரம் முழுவதும் நிறைந்து இருக்கும் நீ எப்படி தாயக்கட்டையை போட்டாலும் நீ விரும்பிய படியே எண்ணிக்கை விழும் நீயே எப்போதும் வெற்றி பெறுவாய்" என்றார்.
சிறிது காலத்தில் சுவலனும், அவனது பிள்ளைகளும் இறந்து போயினர். சகுனி மட்டும் தப்பிப் பிழைத்து கௌரவர்களுடன் பீஷ்மரின் கவனிப்பில், பாதுகாப்பில் வாழ்ந்தான். பாதுகாப்பில் வாழ்ந்தான். கௌரவர்களின் நண்பனாகக் காட்டிக்கொண்டான், ஆனால் பீஷ்மர் தன் குடும்பத்தை அழித்தது போல பீஷ்மரின் குடும்ப வீழ்ச்சிக்காக திட்டமிட்டுக்கொண்டே இருந்து கௌரவர்களை அளித்தான் ...

ஆணவத்தை கைவிட்டு, அடக்கமாக இருந்து, இறைவனின் அருளைப் பெறுவோம்

உயிர்களின் பரிணாம வளர்ச்சி தான் மனிதனின் தோற்றம். இம்மனித இனத்திற்கு, மேலும் வளர்ச்சி என்பது, மிகவும் அவசியமானது; அதை மறுக்க முடியாது. ஆனால், பிரச்னை எங்கு வருகிறது என்றால், நாம் வளர்ச்சி அடையும் போதே, கூடவே, ஆணவமும், அடுத்தவர்களை மதிக்காத தன்மையும் வந்து விடுகிறது.
கடுமையான உழைப்பின் மூலம் பெறும் வளர்ச்சி, கட்டுப்படுத்தப்பட்ட ஆணவத்தை கொடுக்கிறது என்றால், உழைக்காமல் கிடைக்கும் செல்வம், பதவி, உச்சகட்ட ஆணவத்தை கூடவே கூட்டிக் கொண்டு வந்து விடுகிறது. இத்தகைய, ‘தான்’ எனும் ஆணவத்த...ால், ராவணன் அவதிப்பட்ட கதை இது.
ராவணன் பல வரங்கள் பெற்றவன். ஆற்றல், அறிவு, வீரம், இசை ஞானம் என, அனைத்திலும் சிறந்து விளங்கியவன். தன் ஆற்றலின் காரணமாக, இறைவன் படைப்பினில், என்னை விட உயர்ந்தவர்கள் கிடையாது என்ற ஆணவம், அவனுள் ஏற்பட்டு விட்டது. ஒருசமயம், ராவணன், தன்னுடைய புஷ்பக விமானத்தில், ஆகாய மார்க்கமாக சென்று கொண்டிருந்தான். வழியில், கைலாய மலை குறுக்கிட்டது. அதைத் தாண்டி அவனால், செல்ல முடியவில்லை.
குனிந்து கீழே பார்த்தான். நந்திதேவன் அமர்ந்திருந்தார். அவர் ராவணனைப் பார்த்து, ‘அப்பா தசக்கீரிவா… உன்னால் கைலாய மலையை தாண்ட முடியாது. அதனால், சுற்றிப் போ…’என்று, அறிவுரை கூறினார்.
‘குரங்கு மூஞ்சி நந்தியே… நீ, என்ன எனக்கு புத்தி சொல்வது?’ என, இகழ்ச்சியாகப் பேசினான் ராவணன்.
கோபம் கொண்ட நந்திபகவான், ‘ஏ ராவணனே… அழகு முகம் படைத்த ஆணவமா உனக்கு… எந்த செல்வத்தின் காரணமாக, என்னை குரங்கு மூஞ்சி என்று, இழிவாகப் பேசினாயோ, அந்த உன் செல்வ செழிப்பு மிக்க நகரம், குரங்குகளாலேயே அழிக்கப்படட்டும்…’ என, சாபம் கொடுத்தார்.
அந்த வார்த்தைகளை கேட்டு, ராவணன் சீற்றம் கொண்டான். ‘இந்த மலையை, இப்போதே, இங்கிருந்து எடுத்து வீசி விடுகிறேன் பார்…’ என்று கூறி, கைலாய மலையை, தன் தோள்களால் அசைத்து தூக்க முயன்றான். அப்போது அம்மலையின் அடியில், அகப்பட்டுக் கொண்டான். வலியால் அழுது கதறிய ராவணன், வாகீச முனிவரால், அத்துயரத்தில் இருந்து காப்பாற்றப்பட்டான் என்பது தனிக்கதை.
செல்வம், பதவி, புகழ் கிடைத்து விட்டது என்று ஆணவம் கொள்ளாமல், எப்போதும் எளிமையாகவும், இனிமையாகவும், அடக்கமாக இருப்போரை, திருமகளும், கலைமகளும், மலைமகளும் ஒரு நாளும் பிரிய மாட்டார்கள் என்பது சாஸ்திரம் கூறும் தத்துவம். அதனால், எத்தகைய உயர்வான நிலைக்கு சென்றாலும், ஆணவத்தை கைவிட்டு, அடக்கமாக இருந்து, இறைவனின் அருளைப் பெறுவோம்!

தேங்காய் உடைப்பது ஏன்?

தேங்காய் உடைப்பது ஏன்?
கோயில்களிலும், வீடுகளிலும் இறைவனுக்குப் பூஜை செய்யும் போது தேங்காய் உடைப்பதை நாம் வழக்கமாக வைத்திருக்கிறோம். திருமணம், பண்டிகைகள் போன்ற சமயங்களிலும், புதியதாக வாகனம், வீடு வாங்கும் சமயங்களிலும் கூட முதலில் தேங்காய் உடைக்கப்படுகிறது. ஏன் தேங்காய் உடைக்கிறோம், இதில் என்ன தத்துவம் இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெரியாது. தொன்றுதொட்டு செய்து வரும் ஒரு வழக்கத்தை நாமும் அப்படியே கடைபிடிக்கிறோம் என்பதே நம் நிலைப்பாடாக இருக்கிறது. அறிந்து செய்யும் போதே எதுவும் அர்த்தமுள்ளதாகிறது என்பதால் தேங்காய் உடைப்பதன் பல்வேறு காரணங்களைப் பார்ப்போம்.
ஒரு காலத்தில் தன்னிடம் உள்ள விலங்கியல்புகளை இறைவனுக்கு அர்ப்பணித்துப் புனிதமாவதன் நோக்கத்தைக் காட்டும் வகையில் விலங்குகளை பலியிடும் வழக்கம் இருந்தது. ஜீவகாருண்யத்தை மகான்கள் அறிவுறுத்த ஆரம்பித்த பின் காலப்போக்கில் மிருகபலி வழக்கம் மறைய ஆரம்பித்தது. அதற்குப் பதிலாக தேங்காய் உடைக்கப்படுகிறது. ஹோமம் செய்யும் போது ஹோமத்தீயில் தேங்காய் அர்ப்பணிக்கப்படுகிறது.
தேங்காய் ஒரு மனிதனின் தலை போன்று காணப்படுகிறது. மனிதனின் ஆணவத்தை, கர்வத்தைத் தலைக்கனம் என்று சொல்கிறோம். அன்பு இதயத்தில் இருப்பதாகக் குறிப்பிடுவது போலவே கர்வம் தலையில் இருப்பதாகக் குறிப்பிடுகிறோம். நம் ஆணவத்தை அழித்துக் கொள்வதற்கு அடையாளமாக நாம் தேங்காய் உடைக்கிறோம். அந்த ஆணவம் அழியாத வரை மனிதன் என்றுமே இறை அருளுக்குப் பாத்திரமாக ஆவதில்லை.
தேங்காயின் அமைப்பில் வேறுசில தத்துவங்களும் சொல்லப்படுகின்றன. தேங்காயின் மேல் உள்ள கடுமையான ஓடு மனிதனின் அறியாமை மற்றும் கர்வம். அது மாயையாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. அதனுள் இருக்கும் வெண்மையான பருப்பு தூய்மையான ஞான நிலை அல்லது ஆத்மஞானம். உள்ளே இருக்கும் நீர் ஆத்மஞானத்தால் விளையும் பரமானந்தம். அறியாமை, கர்வம், மாயை என்ற கெட்டியான ஓடு உடைந்தால் மட்டுமே ஆத்மஞானம் கிடைக்கும், அதனுடனேயே இருக்கும் பரமானந்த நிலையை மனிதன் பருக முடியும் என்கிற தத்துவம் தேங்காய் உடைப்பதன் மூலம் நினைவுபடுத்தப்படுகிறது. உள்ளே இருக்கும் ஆத்மஞானத்தையும், பரமானந்த நிலையையும் ஒருவன் அறிய முடியாமல் என்றுமே மாயை மிகவும் உறுதியாக இருந்து தடுத்துக் கொண்டிருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுவதாக தேங்காய் இருக்கிறது.
சிவபெருமானுக்கு மூன்று கண்கள் இருப்பதைப் போலத் தேங்காய்க்கும் மூன்று கண்கள் இருப்பது, அதற்குரிய மிக முக்கியமான சிறப்பு. இரண்டு கண்களுடன் பிறந்த மனிதன் நன்றாகப் பக்குவப்பட்ட பின்னர் அகக்கண் அல்லது ஞானக் கண்ணைப் பெறுகின்றான். அதனால் பண்பட்டு பக்குவப்பட்டு அடையும் ஞான மனநிலைக்கும் கூட தேங்காய் ஒரு குறியீடாக உள்ளது. அதனால் தான் மூன்று கண்களுடன் இருக்கும் தேங்காய் இறைவழிபாட்டுக்கு உகந்ததாக கருதப்படுகிறது.
முக்கிய நிகழ்ச்சிகளின் போது மா இலைகளுடன் கூடிய நீர் நிரம்பிய கலசத்தின் மேல் தேங்காய் வைக்கப்பட்டு அந்தக் கலசம் பூஜிக்கப்படுவதை பலரும் பார்த்திருப்போம். மகான்களைப் போன்ற பெரியோர்களை வரவேற்கவும் கூட இது போன்ற கலசம் பயன்படுத்தப்படுகிறது. இவ்வளவு உயர்ந்த நிலையில் தேங்காயை நம் முன்னோர் வைத்திருக்கக் காரணம் தேங்காயை ஆன்ம ஞானத்திற்கு சம்பந்தப்பட்ட பொருளாய் அவர்கள் நினைத்திருந்தது தான்.
தேங்காய் முற்றுவதற்கு முன் இளநீராய் இருக்கும் போது இறைவனின் அபிஷேகத்திற்கு மிக உகந்ததாய் கருதப்படுகிறது. உப்பு நீரை பூமியிலிருந்து உறிஞ்சிக் கொண்டாலும் தென்னை மரம் அதனை, சுவையான இனிப்பான இளநீராக மாற்றித் தருவதும் கூட பக்குவப்பட்ட ஞான மனநிலை பெற்றவரின் தன்மையாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது. உலகத்தில் தான் பெறுவது எத்தனை மோசமானவைகளாய் இருந்தாலும் அவற்றை அப்படியே உலகிற்குத் திருப்பித் தந்து விடாமல் தன் ஞானத் தன்மையினால் அதனை நன்மை தருவனவாக மாற்றி உலகிற்கு அளிக்கும் ஞானியின் செயலாய் இளநீரைச் சொல்லலாம். அதனாலேயே இளநீர் இறை அபிஷேகத்திற்கு விசேஷமான பொருளாக எண்ணப்படுகிறது. அதனாலேயே இறைவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்பவருக்கு ஆன்மிகம் அல்லது ஞானப் பாதையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று பல அறிஞர்கள் கருதுகிறார்கள்.
இளநீர் நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக இருக்கிறது. பல ஆயுர்வேத மருந்துக்கள் தயாரிக்கவும் இளநீர் பயன்படுகிறது. வேறுசில மருத்துவ முறைகளிலும் இளநீர் பயன்படுத்தப்படுகிறது. இளநீரின் இந்த மருத்துவப் பயன்பாட்டினாலும், குளிர்ச்சியான தன்மையாலும், அம்மை வந்தவர்கள் மாரியம்மனுக்கு இளநீர் அபிஷேகம் செய்விப்பது தங்கள் அம்மை நோய் விரைவில் குணமடைய உகந்த வழிபாடு என்று நம்புகிறார்கள்.
இளநீராக இருக்கையில் இப்படி என்றால் அறவே நீரற்ற முற்றிய கொப்பரைத் தேங்காயோ பற்றற்ற நிலைக்கு அடையாளமாய் மாறுகிறது. கொப்பரைத் தேங்காயாக மாறும் போது மூன்று மேலான நிலைகளைத் தேங்காய் அடைவதாக அறிஞர்கள் சிலாகிக்கிறார்கள்.
முதலாவதாக, தேங்காய் தன் அகப்பற்றான நீரை அகற்றி விடுகிறது.
இரண்டாவதாக, அந்த நீரின் உண்மையான சுவையையும், சத்தையும் தன்னுள் இணைத்துக் கொண்டு விடுகிறது.
மூன்றாவதாக, புறப்பற்றான ஓட்டை விட்டு விலகி விடுகிறது.
அதனால் தான் அறிஞர்கள் கோப்பரைத் தேங்காயை ஞானத்தோடு உவமைப்படுத்திக் கூறுவார்கள். உலகத்தில் இருந்து பற்றுத் தொடர்பினை முறித்துக் கொள்ளும் மனநிலைக்கு அறிகுறியாகவே கொப்பரையும் அதன் ஓடும் கருதப்படுகின்றன. இந்தக் கொப்பரைத் தேங்காயை வேள்விகளின் போது “பூரண ஆகுதி"யாகப் பயன்படுத்துகின்றனர். வேள்வி யாகத்தில் பழங்கள், தானியங்கள், உணவுப் பொருள்கள், ஆடைகள் முதலிய பல பொருள்கள் முதலில் சமர்ப்பிக்கப்படுகின்றன. நிறைவாக ஒரு பட்டுத்துணியில் கொப்பரைத் தேங்காயைக் கட்டி அக்னியில் இடுகின்றனர். இவ்வாறு அதன் பற்றற்ற நிலையின் காரணமாக கொப்பரைத் தேங்காயே “பூரண ஆகுதி" ஆகிற முழுத்தகுதியை பெறுகிறது.
இறைவனிடம் பிரார்த்தனை செய்து தேங்காய் நைவேத்தியம் ஆக செய்யப்படுகிறது. தேங்காய் பிரசாதமாகவும் பக்தர்களுக்கு அளிக்கப்படுகிறது. பிள்ளையாரிடம் ஏதாவது பிரார்த்தனை செய்து அது நிறைவேற தேங்காயை நாலாபக்கமும் சிதறுமாறு தெருவில் உடைப்பதும் உண்டு. தேங்காயை உடைப்பது ஆணவத்தை உடைப்பதற்கொப்பானது என்பதைப் பார்த்தோம். சிதறு தேங்காய் உடைப்பதில் மனிதனின் அகங்காரத்தின் முடிவையும் தியாகத்தின் தொடக்கத்தின் நிலையையும் காண முடியும். எப்படி என்றால் சிதறு தேங்காய் துண்டுகளை எத்தனையோ ஏழைகள் எடுத்துச் செல்வது மறைமுகமாக செய்யும் தர்மமாகிறது. (இந்த சிதறு தேங்காய் வழிபாட்டு முறை தமிழகத்திலேயே அதிகம் காண முடிகிறது).
இப்படி தேங்காய் இறைவடிவமாகவும், ஞான நிலைக்கான சின்னமாகவும் கருதப்படுவதால் தான் இறை வழிபாட்டில் தேங்காய்க்கு முதலிடமும், முக்கிய இடமும் அளிக்கப்படுகிறது.

வாழ்க்கை வியாபாரத்தில் பிறப்பு வரவு கணக்கு... மரணம் செலவு கணக்கு

குரு÷க்ஷத்திரத்தில் நடந்தபோரில், கவுரவர்கள் அமைத்த வியூகத்தின் உள்ளே சென்ற அபிமன்யு, வெளிவரத் தெரியாமல் உயிர் இழந்தான். விஷயமறிந்த அர்ஜூனன், மகனுக்காக கண்ணீர் விட்டான். அப்போது, கிருஷ்ணரின் முகம் வாடியது.
""உன் மருமகன் அபிமன்யு மாண்டதை எண்ணித்தானே பரம்பொருளான நீயும் வாடுகிறாய்!'' என்றான் அர்ஜூனன்.
கிருஷ்ணர் சிரித்தார்.
...
""அர்ஜுனா! நான் அதற்காக வருந்தவில்லை. உன்னைப் போன்ற மூடனுக்கு கீதையை உபதேசித்ததை எண்ணியே வருந்துகிறேன். உடலுக்குத்தான் அழிவு, ஆன்மாவுக்கு அழிவில்லை என்று கீதை மூலம் உனக்கு எடுத்துச் சொன்னேன். உன் மகன் அபிமன்யு வீர சொர்க்கத்தில் தான் இருக்கிறான். ஆனால், நீ கலங்குகிறாய்! அதை எண்ணியே வாடினேன் ,'' என்றார்.
உடனே, அர்ஜூனன் மகனைப் பார்க்கும் ஆவலில் கிருஷ்ணருடன் சொர்க்கம் புறப்பட்டான். அங்கு பொன் ஊஞ்சலில் அபிமன்யு ஆடிக் கொண்டிருந்தான்.
"அபிமன்யு!அபிமன்யு!' என்று கூவியபடி, கட்டியணைக்கச் சென்றான்.
அவனோ,""நீங்கள் யார்?'' என அர்ஜூனனைக் கேட்டான்.
அப்போது கிருஷ்ணர்,""போர்க்களத்தில் கிடக்கும் கட்டை தான் உன் மகன். பிறப்பும், இறப்பும் உடலுக்குத் தான் இருக்கிறது. ஆன்மாவுக்கு உறவுமில்லை. பகையுமில்லை என்பதை இப்போதாவது உணர்ந்து கொள்,'' என்று விளக்கம் அளித்தார்.
ஆம்...வாழ்க்கை வியாபாரத்தில் பிறப்பு வரவு கணக்கு... மரணம் செலவு கணக்கு..!

உள்ளங்கைகளில் தரிசனம்!

உள்ளங்கைகளில் தரிசனம்!
நம் அன்றாடப் பணிகளைச் செய்வதற்கு கைகள் மிகவும் பயன்படுகின்றன. கைகளின் உதவி இல்லையெனில் நம்மால் ஒரு வேலையும் செய்ய இயலாது. நம் புலன்களில் கைகளுக்கு சிறப்பான இடம் உண்டு.
காலையில் எழுந்தவுடன் இரண்டு கைகளையும் தேய்த்து உள்ளங் கைகளைப் பார்க்க வேண்டும். இதனால் அன்றைய பொழுது பிரச்னையில்லாமல் நடக்கும். பெற்ற தாயைத் தவிர வேறு எவர் முகத்திலும் விழிக்காமல் காலையில் உள்ளங்கையைப் பார்க்கலாம்.
...
கை வெளுப்பாக இருக்கும். இந்த வெளுத்த உள்ளங்கையில் விழிப்பது நல்ல சகுனமாகும்.
உள்ளங்கையில் மகாசக்தி, மகாலட்சுமி, மகாசரஸ்வதி இருந்து அருள் புரிகிறார்கள். இவர்களின் அருளைப் பெறுவதற்கு கை பார்க்கும் பழக்கம் உதவும்.
ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் உடனே நாம் சொல்வது “யார் முகத்தில் விழித்தேனோ இன்றைய நாளே சரியில்லை’ என்றுதான். நம் கைகளில் விழித்தால் பிரச்னை இல்லையே.
கையை பார்க்கும்போது…
“கராக்ரே வஸதே லக்ஷ்மீ கரமத்யே சரஸ்வதி
கரமூலேது கௌரி: ஸ்யாத் ப்ரபாதே கரதர்சனம்”
என்ற ஸ்லோகத்தை சொல்லிவிட்டு விழிக்கலாம். இதனால் அன்றைய நாள் குதூகலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். காரியத் தடைகள் இருக்காது.

உலகில், வியாதிகளால் இறப்பதை விட, அது தரும் பயத்தால் இறப்பவர்களே அதிகம்.

ஒரு கிராமத்தில் காலரா பரவி நூறு பேர் வரை இறந்து விட்டார்கள்.
அந்த "காலரா' ஒரு பெண் தேவதை வடிவெடுத்து, குரூர உருவத்தில், அந்த ஊரை விட்டு புறப்பட்டது. ஒரு வயல்வெளியில், அது நடந்து கொண்டிருந்த போது, எதிரே ஒரு துறவி வந்தார்.
""தேவதையே! உனக்கு ஏன் இந்த கொடிய உருவம் வந்தது?'' என்றார்.
""நான் உயிர்களைக் கொல்லும் வியாதி தேவதை. அதனால், கடவுள் என்னை இப்படி படைத்து விட்டார் போலும்!'' என்றது தேவதை.
...
""சரி... இப்போது எங்கிருந்து வருகிறாய்?''
""நிலவூர் கிராமத்தில் இருந்து!''
""அங்கே எத்தனை பேர் உன்னால் இறந்தார்கள்?''
""பத்து பேர்,''
இவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்த போது, அந்த வயல்வழியே இன்னொரு மனிதன் வந்தான்.
""துறவியே! இந்த தேவதை பொய் சொல்கிறது. இவள் பத்து பேரையா அழித்தாள்! மொத்தம் நூறு பேர் இறந்திருக்கிறார்கள்,'' என்றான்.
துறவி அதுபற்றி தேவதையிடம் விளக்கம் கேட்டார்.
""சுவாமி! இந்த மனிதர் சொல்வதில் ஒரு திருத்தம் இருக்கிறது. நான் பத்து பேரைத் தான் கொன்றேன். மற்ற 90 பேரும், "நான்
வந்திருக்கிறேன்' என்ற பயத்திலேயே இறந்து போனார்கள். பயத்தால் இறந்தவர்களை, என் கணக்கில் எப்படி சேர்க்க முடியும்?'' என்றது.
இதுகேட்டு, துறவி அர்த்தபுஷ்டியுடன் சிரித்தார்.
""தேவதையே! நீ சொல்வது சரியே! உலகில், வியாதிகளால் இறப்பதை விட, அது தரும் பயத்தால் இறப்பவர்களே அதிகம்.
பயத்தை விட்டாலே போதும்! நோய்கள் மனிதர்களை அணுக அஞ்சும். சரி..சரி.. அடுத்து, கடவுள் எங்கே உன்னை அனுப்பப்போகிறார்?'' என்று கேட்டார்.
""எந்த ஊரை, மக்கள் அசுத்தமாக வைத்திருக்கிறார்களோ, அவர்களைத் தண்டிக்க என்னை அங்கே அனுப்புவார், '' என்ற காலரா தேவதை, அவரிடம் விடைபெற்றது.

கருவறையில் உறையும் இறைவனின் சிலையை 'வெறும் கல்' என்று எழும் விமரிசனம் பற்றி?

(தெய்வத் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் 'ஆலயம் ஏன்?' என்ற நூலில் இருந்து)
1. கருவறையில் உறையும் இறைவனின் சிலையை 'வெறும் கல்' என்று எழும் விமரிசனம் பற்றி?
நேர்க்கோடு ஒன்றும் குறுக்குக் கொடு ஒன்றும் போட்டால் படிக்காத சிறுவன் அதைக் கோடு என்பான். படிக்கத் தெரிந்த சிறுவன் அதை 'ட' என்பான். கோடு என்பதும் அது தான். 'ட' என்பதும் அது தான். படிக்காதவனுக்கு கோடாகத் தெரிகிறது. படித்தவனுக்கு 'ட' ஆகத் தெரிகிறது. அது போல கடவுளைக் கல்லாகக் காண்பார்கள் அஞ்ஞானிகள். சிலைக்குள் இறைவனைக் ...காண்பார்கள் ஞானிகள்.
2. கும்பாபிஷேகம் என்பது என்ன?
இறைவன் ஜோதி வடிவானவன். "ஜோதியே, சுடரே, சூழொளி விளக்கே" என்பார் மணிவாசகர். அப்படி, ஜோதி வடிவான இறைவனைக் கல்லிலே அமைப்பர். பிரதிஷ்டை செய்யுமுன் மூர்த்தியை தானியத்திலும் (தான்யவாசம்), நீரிலும் (ஜலவாசம்) வாசம் செய்ய வைத்து, மந்திர யந்திரத்தை எழுதி, ஆகம முறைப் படி, மூர்த்தியின் அடியிலே வைப்பர்.
பின்னர், யாகங்களால் ஜோதியை வளர்த்து, அந்த இறை ஜோதியை கும்பத்திற்குக் கொண்டு போய், கும்பத்தில் இருந்து பிம்பத்துக்குக் கொண்டு போவது தான் கும்பாபிஷேகம். கும்பாபிஷேகத்துக்கு முன் அது கல். கும்பாபிஷேகத்திற்குப் பிறகு கடவுள். எப்படி காகிதம் கரன்சி நோட்டாக மாறுகிறதோ அது போல என்று உணர்க.
காகிதம் பற்பொடி மடிக்க உதவும். ஆனால், கரன்சி நோட்டினால் இரயில்வேயில் டிக்கெட் வாங்கலாம். அது போல, இறைவன் கல் வடிவில் கருவறையில் இருந்து நமக்குக் காட்சி அளித்து ஆட்கொள்கிறான்.
3. கடவுளுக்குக் கற்பூரத்தை ஏற்றுவது ஏன் ?
கோயிலுக்குப் போன பொருள் எல்லாம் திரும்பி விடும். கற்பூரம் ஒன்று தான் திரும்பி வராது. கற்பூரம் நெருப்பில் எரிந்து கரியோ சாம்பலோ இல்லாமல் மறைந்து விடுகிறது. அதுபோல், ஆன்மாவானது இறைவனுடைய அருட் ஜோதியில் கரைந்து ஒன்று பட வேண்டும் என்ற முக்கியக் குறிப்பைக் கற்பூரம் உணர்த்துகிறது.
"தீதணையா கற்பூர தீபமென நான்கண்ட
ஜோதியுடன் ஒன்றித் துரிசறுப்பது எந்நாளோ?"
என்பார் தாயுமானார்.

Sunday, March 30, 2014

தியானம்

தியா என்றால் ஒளி, விளக்கு, பிரகாசம் என்று பொருள். அயானம் என்றால் சுபாவம், இயற்கை அல்லது இயல்பு என்று பொருள். ஒளியை இயல்பாக உடைய ஆன்மாவை அடைதல் அல்லது ஒளியை இயல்பாக அடைதல் என்பதே பொருள். பரம்பொருளாகிய இறைவன் ஒளிமயமானவர் என்று அனைத்து மதங்களும் சொல்வதைக் கருத்தில் கொள்ளுங்கள். எனவே... பொதுவான பொருள் என்னவென்றால் நம் இயல்பான சுபாவமான ஒளியை அடைதல் என்பதே. ஆன்மாவை விட்டு விலகி இருப்பது அஞ்ஞானமாகிய இருளாகும். ஆன்ம ஒளி நம் அறிவில் பிரகாசிப்பது ஞானமாகும். உலகில் மற்ற எல்லா இடங்களிலும் ஜெபம், பிரார்த்தனை மூலமாகவே ஒளியாகிய இறைவனை அடைய முயற்சி செய்திருக்கிறார்கள். நம் தேசத்தில் தோன்றிய ரிஷிகளே மனதை ஒடுக்கி அதன் மூலம் தியானத்தை அடையும் உபாயத்தை கண்டறிந்து கடைபிடித்திருக்கிறார்கள். ஆனால் இன்று மேல் நாட்டினர் கூட நம் தியானத்தின் அருமையை உணர்ந்து அதை கடைபிடிக்க ஆரம்பித்துவிட்டனர்.

இதைக்குறித்து அவர்கள் நிறையவே ஆராய்ச்சி செய்கிறார்கள். தியானம் செய்யும் போது உடல் ஆரோக்யத்திற்கும், மன ஆரோக்யத்திற்கும் உகந்த அலைகள் நம் உடலில் உருவாகி வருவதைக் கண்டுபிடித்துள்ளனர். மேலும் அந்த அலைகள் மூளையிலிருந்து உருவாகி எழுவதையும் கண்டுபிடித்துள்ளனர். மூளையில் இருந்து உருவாகும் அலையை அவர்கள் நான்காக வகைப்படுத்தியுள்ளனர்.
டெல்டா - 0.5 to 4 Hz/Sec. இந்த அலை ஆழ்ந்த தூக்கத்தின் போது உருவாவது.
தீட்டா - 4 to 7 Hz. இந்த அலை கனவுநிலையில் தோன்றுவது.
ஆல்பா - 8 to13 Hz. இந்த அலை தியானத்தின் போது தோன்றுவது. இந்த அலைகளால் தீர்க்க முடியாத பிரச்சினைகளையும் தீர்க்க முடிகிறது.
பீட்டா - 13 to 30 Hz. இந்த அலை ஆழ்ந்த தியானத்தில் தோன்றுவது. இதுவும் சக்திவாய்ந்த அலையாகும்.
தியானம் செய்யும் போது இந்த ஆல்பா அலை உருவாவதையும், பின்னர் விழித்த பிறகும் தொடர்ந்து இந்த அலை வந்து கொண்டே இருப்பதையும் கண்டு பிடித்துள்ளனர். தன்னை அறிவதற்கும், சுய முன்னேற்றத்திற்கும் உதவுவனவாக இந்த ஆல்பா அலைகள் இருப்பதை கண்டறிந்தனர். கண்ணைத் திறந்து தியானம் செய்தால் இடது பக்க மூளை நன்றாக செயல்படுவதையும், கண்ணைமூடி தியானம் செய்தால் வலது பக்க மூளை நன்றாக செயல்படுவதையும் கண்டனர். பீனியல் சுரப்பி நன்றாக செயல்படுவதையும் கண்டு சொல்லியிருக்கிறார்கள். முதன் முதலில் மனித மூளையில் அலை உருவாவதை கான்ஸ் பர்ஜர் என்ற விஞ்ஞானி கண்டறிந்தார். இந்த அலைகளை அளக்க 'இலக்ட்ரோ செபலோகிராபி' என்ற இயந்திரத்தை பயன்படுத்தினர். தியானத்தால் ஆன்மீக சக்தி வளர்வதோடு, ஆரோக்யமும், மனவளமும் மேம்படுவதை விஞ்ஞானமும் இப்போது ஒத்துக் கொள்கிறது.

சகல நோய்களும் மன வித்தியாசத்தால் உருவாகின்றன என்றும் மனநிலை மாற்றத்தால் அவைகளை குணப்படுத்தமுடியும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. மனநிலை மாற்றம் என்கிற பொழுது மனதில் எழும் எண்ணங்களின் எண்ணிக்கையைக் குறைத்து எப்பொழுதும் பரபரப்பாகக் கடல் அலைகளைப் போலக் கொந்தளித்துக் கொண்டிருக்கும் மனதை அமைதியடையச் செய்வதேயாகும். எனவே முதலில் புலன்களில் வழியே கட்டுப்பாடின்றிச் சுற்றித் திரியும் மனதைப் பிரித்து உள் முகமாகத் திருப்பி விட வேண்டியது அவசியமாகும். பிறகு உள் முகமாகத் திரும்பிய மனதை ஒரு புள்ளியில் குவிப்பது அடுத்த கட்டமாகும். இதற்காக முதலில் வெளி முகமான பயிற்சி அவசியமாகும். இதற்காக தீபம், சுவற்றில் உள்ள சிறிய புள்ளி மற்றும் கண்ணாடிப் பயிற்சிகள் மேற்கொள்வது எளிதில் மனதின் குவிந்த நிலையை உருவாக்கித் தரும். இதைத் தாரணை என்று சொல்வார்கள். பொதுவாக தற்காலங்களில் நமக்குத் தரப்படும் தியானப் பயிற்சிகள் அனைத்துமே தாரணைதான். ஏன் அவ்வாறு சொல்கிறேன் என்றால் தியானம் என்பது ஒரு பாதையோ, நெறியோ அல்ல. அதையெல்லாம் கடந்த ஒரு நிலை. மனதில் எழுகின்ற எண்ணங்களின் எண்ணிக்கையைக் குறைக்கின்ற முயற்சி தாரணை என்றால், தியானத்தில் எந்த முயற்சியும் கிடையாது என்பதை உணருங்கள்.
எனவே தியானம் என்பது உயரிய நிலை என்பதை உணர்ந்து, கடைபிடித்து உய்வோமாக.





தனக்கு அளிக்கப்பட்ட ஒரு பொருளை ஒருவர் ஏற்க மறுத்தால் அது கடைசியில் யாரைச் சென்றடையும்?“

ஒரு சமயம் ஞானி ஒருவர் ஒரு மரத்தடியில் அமர்ந்து மக்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார். கூட்டத்தில் இருந்த ஒருவனுக்கு அவரது உபதேசங்கள் எரிச்சலைக் கொடுத்தன. உடனே அவன் எழுந்து அந்த ஞானியைக் கடுஞ்சொற்களால் திட்டினான்.
அவன் திட்டி முடிக்கும் வரை பொறுமையாய் இருந்த ஞானி, அவனைப் பார்த்துப் புன்னகைத்தார்.
“மகனே! இப்பொழுது நான் உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொல்வாயா?“ என்று கேட்டார்.
“என்ன கேள்வி?“ என்று அவன் கேட்டான்....
“தனக்கு அளிக்கப்பட்ட ஒரு பொருளை ஒருவர் ஏற்க மறுத்தால் அது கடைசியில் யாரைச் சென்றடையும்?“ என்று கேட்டார் ஞானி.
“இதென்ன கேள்வி? அந்தப் பொருளை யார் கொடுத்தாரோ அவரைத்தான் சென்று சேரும்“ என்றான் அவன்.

அதற்கு ஞானி, “நீ என்னை வாய்க்கு வந்தபடியெல்லாம் கன்னாபின்னாவென்று திட்டினாய். அவற்றை நான் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. அதனால், இப்பொழுது அந்தத் திட்டுக்கள் யாவும் உன்னிடம் தானே வந்து சேரும்!“ என்றார் அமைதியுடன்.
திட்டியவன் தலை கவிழ்ந்தான்

ஸ்ரீராமரைவிட உயர்ந்தது எது தெரியுமா?

ஸ்ரீராமரைவிட உயர்ந்தது எது தெரியுமா?

எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் பக்திப் பரவசத்துடன் கண்களில் நீர் மல்க எவன் காணப்படுகிறானோ, அவனே மாருதி எனும் வாயுபுத்திரன் என்ற வாசகங்களால் ஆஞ்சநேயன் எனும் ஹனுமனுக்கு அடையாளம் காட்டப்படுகிறது. ராம ஸேவை ஒன்றையே தன் லட்சியமாகக் கொண்டு, ராம நாமத்தையே யுகம் யுகமாக ஜபித்துக்கொண்டு இருப்பவன் சிரஞ்ஜீவியான அனுமன். அப்பேர்ப்பட்ட ஹனுமனுக்கும் ஸ்ரீராமருக்க...ும் யுத்தம் நடந்தது என்று சொன்னால், நம்புவீர்களா? அப்படியொரு சம்பவம் நம் புராணங்களில் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. அது, காலத்தால் அழியாத உண்மை ஒன்றை உலகுக்கு எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. பட்டாபிஷேகத்துக்குப் பிறகு நீதி தவறாது ராமராஜ்ஜியம் நடத்தி வந்த ஸ்ரீராமர், மக்களின் நலன் கருதி, நாட்டின் வளமைக்காக, வசிஷ்டர், விஸ்வாமித்திரர், அத்ரி முதலான மகரிஷிகளைக் கொண்டு யாகம் ஒன்றை நடத்தினார், அவர் அயோத்தியை அடுத்த அழகிய வனத்தில், பெரிய யாக குண்டங்கள் அமைத்து, முனிவர்கள் யாகத்தை நடத்திக்கொண்டு இருந்தனர்.

சக்கரவர்த்தி ஸ்ரீராமரின் ராஜ்ஜியத்துக்கு உட்பட்ட ஒரு சிறிய நாட்டின் மன்னன் சகுந்தன். அவன் ஒருநாள், வேட்டையாடிவிட்டு வரும்போது, யாகசாலைக்கு அருகில் வந்தான். தான் வேட்டையாடிவிட்டுத் திரும்பியிருந்தபடியால், யாகசாலைக்குள் நுழைவது சரியல்ல என்று கருதி, வெளியில் நின்றபடியே நமஸ்கரித்து, வசிஷ்டாதி முனிவர்களுக்கு என் வணக்கங்கள் என்று கூறிப் புறப்படத் தயாரானான். சகுந்தன் கூறிய வார்த்தைகள், நாரத முனிவரின் காதில் விழுந்தது. விறுவிறுப்பான நாடகம் ஒன்றைத் தொடங்க நினைத்தார். அற்புதமான கதைக்கு, கரு ஒன்று கிடைக்க... விடுவாரா நாரதர்? நேராக, விஸ்வாமித்திரரிடம் சென்றார். பார்த்தீர்களா மகரிஷி. இந்தச் சகுந்தன் சாதாரண சிற்றரசன். இவனுக்கு எத்தனைத் திமிர்? இங்கே, யாகசாலைக்கு முன்னே நின்றுகொண்டு, வசிஷ்டாதி முனிவர்களுக்கு வணக்கம் என்று கூறிச் செல்கிறான். அப்படியென்ன வசிஷ்டர் உயர்ந்துவிட்டார்? தாங்களும்தான் ஸ்ரீராமரின் குரு. தாங்களும்தான் இந்த யாகத்தை முன்னின்று நடத்துகிறீர்கள். தங்கள் பெயரையும் சொல்லி, ஒரு நமஸ்காரம் செய்திருக்கலாம் ? தங்களை வேண்டும் என்றே அவமானப்படுத்த, இவன் வசிஷ்டரை முதன்மைப்படுத்தி, மற்றவர்களைச் சிறுமைப்படுத்தி, அவருக்கு மட்டும் வணக்கம் செலுத்தியிருக்கிறான் என்றார் நாரதர். உடனே விஸ்வாமித்திரரின் முகம் கோபத்தால் சிவந்தது. கண்களில் தீப்பொறி பறக்க.. அவர் சாபமிடத் தொடங்குமுன், நாரதர் தடுத்து நிறுத்தினார். அந்த அற்பனுக்குச் சாபமிட்டு, தங்கள் தவ பலத்தை ஏன் குறைத்துக் கொள்ள வேண்டும்? தங்கள் சீடர் ஸ்ரீராமர். சகுந்தனோ அந்த ஸ்ரீராமரின் கீழே இருக்கிற சிற்றரசன். இவன் செய்த பிழையை ஸ்ரீராமரிடம் கூறி, இவனுக்கு உரிய தண்டனையை அவரையே தரச் சொல்லுங்கள் என்றார் நாரதர்.

விஸ்வாமித்திரருக்கும் அது சரியெனப்பட்டது. சில நாழிகைகள் கழித்து யாக சாலைக்கு வந்த ஸ்ரீராமரிடம், உன் குருவை ஒருவன் அவமதித்தால், அவனுக்கு நீ என்ன தண்டனை தருவாய்? என்று கோபத்துடன் கேட்டார். அவரை யாரோ அவமரியாதை செய்திருக்கிறார்கள் என்பதை ஊகித்துக் கொண்டார் ஸ்ரீராமர். குருதேவா! தங்களை அவமதித்தவர்கள் யாராயிருந்தாலும் சரி, அவர்களுக்குத் தக்க தண்டனையை தாங்களே கூறுங்கள். நிறைவேற்றி வைப்பது என் கடமை என்றார். சகுந்தன் என்னை அவமதித்து விட்டான். அவன் சிரசை இன்று சூர்ய அஸ்தமனத்துக்குள் என் காலடியில் சேர்க்கவேண்டும் என்று விஸ்வாமித்திரர் சொல்லி முடிக்கக் கூட இல்லை... தங்கள் ஆணைப்படியே செய்கிறேன். இது சத்தியம்! என்று வாக்களித்துவிட்டார் ஸ்ரீராமர். நாரதர் தொடங்கிய நாடகத்தின் முதல் காட்சி முடிந்தது. ஸ்ரீராமர் செய்தியனுப்பினால் போதும், சகுந்தனே தன் தலையை வெட்டி ஒரு தட்டில் வைத்து அனுப்பிவிடுவான். இருந்தாலும், அது ஸ்ரீராமர் கடைப்பிடிக்கும் க்ஷத்திரிய தர்மத்துக்கு அழகாகுமா? எனவே, ஸ்ரீராமர் போர்க்கோலம் பூண்டு, சகுந்தனின் நாட்டை நோக்கிப் புறப்படத் தயாரானார். நாடகத்தின் இரண்டாவது காட்சியைத் தொடங்கினார் நாரதர். நேரே சகுந்தனிடம் சென்றார். என்ன காரியம் செய்து விட்டாயப்பா? வசிஷ்டரின் பெயரைச் சொன்னவன், விஸ்வாமித்திரர் பெயரையும் சொல்லியிருக்கக் கூடாதா? இப்போது பேராபத்தைக் தேடிக் கொண்டாயே! படையெடுத்து வருபவர் ஸ்ரீராமர் ஆயிற்றே! என்ன செய்யப் போகிறாய்? என்று ஆதங்கமாகக் கேட்டுவிட்டு, மற்ற விவரங்களையும் சொன்னார்.

நான் என்ன செய்ய முடியும் சுவாமி? இலங்கேஸ்வரன் ராவணனாலேயே எதிர்க்க முடியாத ஸ்ரீராமரை நான் எப்படி எதிர்க்க முடியும்? முடியாது. என் தலைதானே ஸ்ரீராமருக்கு வேண்டும்? அதைத் தாங்களே வெட்டியெடுத்துச் சென்று, அவரிடம் தந்துவிடுங்கள் என்று உருக்கமாகக் கூறி, சகுந்தன் தன் வாளை உருவ, நாரதர் அவனைத் தடுத்துச் சிரித்தார். சகுந்தா! உண்மையில் நீ விஸ்வாமித்திரரை அவமதிக்கவில்லையே... அப்படி இருக்கும்போது, ஏன் கலங்குகிறாய்? என்ற நாரதர், சகுந்தா.. உன் நாட்டை அடுத்த வனத்தில், ஆஞ்சநேயனின் தாய் அஞ்சனாதேவி ஆட்சி புரியும் கானகம் இருக்கிறது. அங்கே சென்று தவம் செய். அவள் கருணை மிக்கவள். அவளால் உனக்கு உயிர்ப்பிச்சை தரமுடியும். பிறகு, ராம பாணம்கூட உன்னை ஒன்றும் செய்யமுடியாது என்று உறுதி கூறினார் நாரதர். சகுந்தன் மனதில் நம்பிக்கை பிறந்தது. அஞ்சனாதேவி ஆட்சி புரியும் கானகம் சென்றான். அங்கே அக்னியை வளர்த்தான். அஞ்சனாதேவி சரணம் என்று பக்தியுடன் அக்னியைச் சுற்றிப் பலமுறை வலம் வந்து பிராணத் தியாகம் செய்யத் தயாரானான். தாயல்லவா அவள்! தன்னைச் சரணடைந்த குழந்தையை சாக விடுவாளா? அவன் முன் தோன்றி, குழந்தாய், கவலைப்படாதே! என்னைச் சரணடைந்த உயிருக்கு எந்த ஆபத்தும் நேராது. தீர்க்காயுஷ்மான் பவது என்று ஆசி கூறி, அவன் நீண்ட ஆயுள் வாழ வரம் தந்தாள். சகுந்தன் அவளது திருவடியில் விழுந்து வணங்கினான். நான் மரண கண்டத்தில் சிக்கியுள்ளேன், தாயே! ஸ்ரீராமர், என் சிரஸைத் தன் குருவின் காலடியில் சூர்ய அஸ்தமனத்துக்குள் சேர்க்கும் சபதம் பூண்டு, என் மீது போர் தொடுத்து வருகிறார். இப்போது நான் உயிர் பிழைக்க என்ன செய்ய வேண்டும் என அருளுங்கள் என்றான்.

அதைக் கேட்டுப் பதறிப் போனாள் அஞ்சனாதேவி. ஸ்ரீராமரின் பாணத்திலிருந்து சகுந்தனைக் காப்பாற்றுவது என்பது இயலாத காரியமாயிற்றே எனக் கலங்கினாள். இருந்தாலும், தான் உயிர்ப்பிச்சை அளித்தவனைக் காக்க வேண்டியது தன் கடமை என்பதில் உறுதியாக இருந்தாள். தன் வாக்கைக் காக்கும் பொறுப்பை, தன் மைந்தன் ஹனுமனிடம் ஒப்படைக்க முடிவு செய்தாள். தன் மகனை, தன் முன்னே தோன்றும்படி சங்கல்பித்தாள். அந்த நிமிடமே, எதிரே வந்து நின்று வணங்கினான் ஹனுமன். ஸ்ரீராமரின் பித்ரு பக்திக்கு ஹனுமனின் மாத்ரு பக்தி எந்த விதத்திலும் சற்றும் குறைந்ததல்ல. மகனே! இவன் சகுந்தராஜன். பிராணத்தியாகம் செய்யத் துணிந்தபோது, இவனைக் காப்பாற்றி, உயிர்ப்பிச்சை தருவதாக வாக்குறுதி தந்துவிட்டேன். என் வாக்கைக் காப்பாற்றும் பொறுப்பை இப்போது உன்னிடம் ஒப்படைக்கிறேன். இவனை எப்படியேனும் காப்பாற்று! என்று கட்டளையிட்டாள். அப்படியே ஆகட்டும் தாயே! என உறுதியளித்தான் ஹனுமன். பின்பு, தனது உயிரைப் பறிப்பதற்கு ஸ்ரீராமர்தான் தேடுகிறார் என்பதைச் சகுந்தன் சொல்ல.. சலனமே இல்லாமல் நின்றான் ஹனுமன். எதிர்ப்பது ஸ்ரீராமராக இருந்தால் என்ன? மும்மூர்த்திகளே ஆனாலும், என்ன? தாயிடம் அடைக்கலம் கேட்டு வந்தவனைக் காப்பது தன் கடமை எனும் உறுதியுடன் நின்றான். எந்த ஆபத்தையும் எதிர்க்கும் வல்லமையின் ரகசியம் ஒன்றை அவன் அறிந்து வைத்திருந்தான். தன் வாலை நீளமாக வளர்த்து, அதனை ஒரு கோட்டைபோல அமைத்தான். அதற்குள் சகுந்தனைப் பாதுகாப்பாக அமர்த்திவிட்டு, சிறு குரங்கின் உருவெடுத்து, வால் கோட்டையின் மேல் அமர்ந்துகொண்டு, தாய்க்குச் செய்யும் கடமைக்காகத் தாயினும் மேலான தலைவனையே எதிர்க்கத் தயாரானான்!

இதனிடையில் ராம - லட்சுமணர்களின் சைன்யம் சகுந்தராஜனின் தலைநகரில் புகுந்தது. உயிருக்குப் பயந்து, சகுந்தன் அஞ்சனா வனத்தில் மறைந்து இருப்பதை அறிந்து, ஸ்ரீராமர் அங்கே சென்று, போரைத் தொடங்கினார். சகுந்தராஜன் மறைந்திருக்கும் மலை போன்ற வால் கோட்டையை நோக்கி ஸ்ரீராமரின் அஸ்திரங்கள் சரமாரியாக வானில் பறந்தன. ஆனால், அவர் எய்த அஸ்திரங்கள் யாவும் அடுத்த சில விநாடிகளில் அவரின் திருவடிகளிலேயே திரும்பி வந்து விழுந்தன. அதிசயித்துப் போனார் ஸ்ரீராமர். யுத்தம் தொடர்ந்தது. ஸ்ரீராமர் கற்ற அஸ்திர வித்தைகள் அனைத்துமே தோற்று நின்றன. இதற்கான காரணம் தெரியாமல் ஸ்ரீராமர் திகைத்து நிற்க, நாரத முனிவர் தான் போட்ட முடிச்சை அவிழ்க்க, அங்கே வந்து நின்றார். ராமா! உன் அஸ்திரங்களின் சிம்ம நாதமும், உனது யுத்த பேரிகையின் சப்தமும் ஒரு கணம் நிற்கட்டும். அப்போது இதன் காரணத்தை நீ அறியலாம் என்றார் சூசகமாக. ஒரு கணம் யுத்த பூமியில் அமைதி தோன்றியது. அப்போது எங்கிருந்தோ, காற்றில் மிதந்து வந்த ராம்.. ராம் என்னும் ராம நாம சப்தம் கேட்டு, அனைவரும் மெய்சிலிர்த்தனர். அது ஹனுமனின் குரல்தான். அவன் ஒருவனால்தான் ராம நாமத்தை அத்தனை பக்தியோடும் சக்தியோடும் ஜபிக்க முடியும் என்பது ஸ்ரீராமருக்குத் தெரியும். நாடகத்தின் இறுதிக் காட்சிக்கு வந்தார் நாரதர். ராமா! உன் திருநாமத்தின் சக்திக்கு முன்னால், உன்னாலேயே எதுவும் செய்ய முடியாது. உன் நாமம் அத்தனை புனிதமானது. சக்தி வாய்ந்தது. உலகின் எந்த சக்தியாலும் உன் நாமத்தை எதிர்த்து நிற்க முடியாது. காலத்தால் அழியாத பெருமை வாய்ந்தது உன் நாமம். அதிலும், அதனை ஆஞ்சநேயன் ஜபிக்கிறான் என்றால், அதை வெல்ல எவராலும் முடியாது? என்று கூறி, நடந்ததையெல்லாம் விளக்கினார்.

ஹனுமன் ராம நாமம் ஜபிப்பதை நிறுத்தினால்தான், உன் அஸ்திரங்கள் இந்த எல்லையைக் கடக்கும். ஹனுமனை அழித்தால்தான் அந்த நாமம் ஒலிப்பது ஓயும். அவன் இதயத்திலோ, ஸ்ரீராமனையோ பிரதிஷ்டை செய்து வைத்திருக்கிறான். அவனை அழிப்பது சுலபமல்ல. ஆனால், ஹனுமனை வென்றால்தான் சகுந்தனை வெல்ல முடியும். அப்படியெனில், ஸ்ரீராமன் தன்னையே அழித்துக்கொண்டால்தான் இது சாத்தியமாகும் என்று சிக்கலை மேலும் சிக்கலாக்கி, நாரதர் விளக்கியபோது, வேண்டாம் ராமா, வேண்டாம்! இந்த விபரீதத்துக்கு என் அகந்தையே காரணம். போரை நிறுத்திவிடு. சகுந்தன் நிரபராதி என்று கூறியபடியே, ஓடி வந்தார் விஸ்வாமித்திரர். சரி... ஆனால், சகுந்தனின் சிரசை சூரிய அஸ்மனத்துக்குள் விஸ்வாமித்திரரின் பாதத்தில் சேர்ப்பதாக வாக்களித்தாரே ஸ்ரீராமர்! அது என்ன ஆவது? ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் வாக்கு பொய்ப்பதா? அதற்கும் ஒரு வழி சொன்னார் நாரதர். சகுந்தராஜனை நாரதர் அழைக்க, அவன் வால் கோட்டையிலிருந்து வெளியே வந்து, விஸ்வாமித்திரர் பாதங்களில் தன் சிரம் படும்படி நமஸ்கரித்தான். சகுந்தன் சிரசைத் தன் காலடியில் சேர்க்க வேண்டும் என்று தானே அவர் கேட்டிருந்தார். ஆக, ஸ்ரீராமரின் வாக்கும் பொய்க்கவில்லை. சகுந்தனின் சிரம் விஸ்வாமித்திரரின் பாதங்களில் சேர்ந்தது. அஞ்சனாதேவியின் வாக்கும் பொய்க்கவில்லை. ஹனுமனும் எடுத்த கடமையில் இருந்து தவறவில்லை. ஸ்ரீராம நாமத்தின் பெருமையை ஸ்ரீராமரே தெரிந்துகொள்ள நாரதர் நடத்திய நாடகம் இது

நலம் தரும் ராமநாமம்

நலம் தரும் ராமநாமம்

காசியில் பத்மநாபர் என்ற அந்தணர் வாழ்ந்து வந்தார், அவர் இளம் வயதிலேயே வேதங்கள் உபநிடதங்கள், பிரம்மா சூத்திரம் உள்ளிட்ட அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார், இருப்பியம், இறைவனின் திருவருளைப் பெற வேண்டும் என்றால் குருவருள் மிகவு...ம் முக்கியம் என்பதை உணர்ந்திருந்த பத்மநாபர், கபீர் தாசரை சரணடைந்து அவரை குருவாக ஏற்றுக்கொண்டார், கபீர் தாசரும் பத்மநாபரை அன்புடன் ஏற்று அவருக்கு உபதேசம் செய்து வந்தார்.

தினமும் அதிகாலையில் கங்கைக்கு சென்று நீராடி, குருவிடம் உபதேசம் பெற்று அவருக்கு பணிவிடை செய்து இறைவனை தொழுவது பத்மனாபரின் வழக்கமாக இருந்தது., அன்றைய தினமும் அதிகாலையிலேயே எழுந்து கங்கை கரைக்கு சென்றார் பத்மநாபர், அப்போது கங்கை நதிக்கரையில் கூட்டமாக இருந்தது, ' என்றும் இல்லாத திருநாளாக இன்று என்ன இவ்வளவு கூட்டம்?' என்று எண்ணியபடி கூட்டம் இருந்த பகுதியைநோக்கி சென்றார் பத்மநாபர்.

அப்போது கூட்டத்தின் முன்பாக கங்கை நதியின் படித்துறையில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் அமர்ந்திருப்பதை பத்மநாபர் கண்டார். அந்த நபரைச் சுற்றிதான் இவ்வளவு கூட்டமும் திரண்டிருந்தது, அங்கிருந்த ஒருவரிடம் 'எதற்க்காக இப்படி கூட்டமாக நிற்கிறீர்கள்? என்று கேட்டார்.

'ஐயா! இவர் ஒரு பெரிய வியாபாரி, நல்ல மனமுடையவர், தான தருமங்கள் செய்வதிலும் சலிப்படையதவர் இவருக்கு அழகிய மனைவியும், ஐந்து பிள்ளைகளும் உள்ளனர். இருப்பினும் இவருக்கு கொடுமையான இந்த நோய் தாக்கி இருக்கிறது இதனால் மனைவியும் குழந்தைகளும் இவரை நெருங்கவே தயங்குகின்றனர், எனவே வேதனை தாளாமல் கங்கையில் மூழ்கி இறக்க முடிவு செய்து இங்கு வந்துள்ளார், அவரை நாங்கள் தடுத்துக் கொண்டிருக்கிறோம்' என்று கூடியிருந்தவர்களில் ஒருவர் கூறினார்

பத்மனாபறம் அந்த வியாபாரியின் அருகில் சென்றார், ' அன்புடையவரே! மனித பிறவி கிடைப்பது மிகவும் அரிதானது. அதிலும் ஊனமின்றி இருப்பதும் , புத்திசாலியாகவும், செல்வந்தனாகவும், வாழ்வது கிடைத்தர்க்கரியது, செல்வந்தனாக இருக்கும் பலர் தானம் செய்ய முன் வருவதில்லை, இவ்வளவு நல்ல குணங்களையும் கொண்டுள்ள நீங்கள் தற்கொலை செய்ய எண்ணுவது தவறு. உங்கள் எண்ணத்தை கைவிடுங்கள்' என்று அறிவுரை வழங்கினர்.

ஆனால் துயரத்தின் உச்சியில் இருந்த வியாபாரி, 'சீழும், புண்ணுமாக அழுகிக் கொண்டிருக்கும் இந்த உடலை இன்னமும் காப்பாற்ற வேண்டுமா என்று வினவினார் !?

முற்பிறவிகளில் செய்த வினை நம்மை விடாது அதன் பயனை அனுபவித்தே தீர வேண்டும், இருப்பினும் வியாதியை நீக்க மருந்தைதேட வேண்டுமே தவிர உயிரை போக்கிக் கொள்ள நினைப்பது பாவம் என்றார் பத்மநாபர்.

அப்போது அங்கே கூடியிருந்தவர்கள், 'இவரது வியாதி நீங்க தகுந்த உபாயத்தை கூறி அருள வேண்டும்' என்று பத்மனாபரிடம் கேட்டுக் கொண்டனர்.

அதற்க்கு அவர், 'கங்கையில் மூழ்கி மூன்று முறை ராம நாமத்தை உச்சரியுங்கள்' என்று கூறி விட்டு, கங்கையில் நீராடச் சென்றனர்.

வி யாதியால் பாதிக்கப்பட்ட வியாபாரி, மெதுவாக தவழ்ந்து, தவழ்ந்து சென்று கங்கையில், மூழ்கினார், பின்ன்னர் உதடுகளை குவித்தபோது ஏற்ப்பட்ட வலியையும் பொறுத்துக்கொண்டு ,ராம, ராம, ராம என்று ராம நாமத்தை உச்சரித்தார்.

தண்ணீருக்குள் மூழ்கியவன் எவ்வாறு தன்னந்தனியாக எழுந்து மேலே வரப்போகின்றான் என்று கடையில் கூடியிருந்த அனைவரும் எண்ணிக்கொண்டிருந்த போது அந்த வணிகனின் உடல் புதுப் பொலிவுடன்
எந்த சிறு வெடிப்புக்கூட இல்லாமல் கங்கையில் இருந்து எழுந்து வந்தான்
கரையில் நின்றுகொண்டிருந்த பத்மநாபரின் காலில் விழுந்து வணங்கினான்.

இந்த சம்பவத்தை அங்கிருந்த சிலர், கபீர்தாசரிடம் தெரிவித்தனர், ககீர்தாசருக்கு, பத்மனாபரின் செயல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது, இருபினும், 'மகத்துவம் முகுத தான நாமத்தை மூன்று முறை உச்சரிக்க வேண்டுமா? ஒரு முறை உச்ச்சரித்திருந்தாலே, அது தன சக்தியை வெளிப்படுத்தி இருக்குமே! என்று ஆதங்கமும் கொண்டார்.

இதுபற்றி தனது சீடரான பத்மனாபரிடமே, கபீர்தாசர் கேட்டார். அதற்க்கு அவர், 'குருதேவா! குரு முகமாக உபதேசம் ஏறாத குற்றம் நீங்க ஒருதடவை, தொழுநோய் நீங்க இரண்டாம் தடவை, அவன் ஞானம் பெற்று மோட்சம் அடைய மூன்றாம் முறை ராமநாமத்தை ஜெபிக்கச் சொன்னேன், நீங்கலாக இருந்தால் மூன்றையும் ஒரே தடவையில் செய்து முடித்து இருப்பீர்கள், என்னால் அது முடியுமா? என்று பணிவுடன் கூறினார்,

தன சீடர்களில் மிகவும் சிறப்புக்குரியவராக இருந்த பத்மநாபரை ஆராதழுவி
பாராட்டினார் கபீர்தாசர்

முருகா என்றால் என்ன கிடைக்கும்?

முருகா என்றால் என்ன கிடைக்கும்?

“விழிக்குத் துணை திருமென்மலர்ப் பாதங்கள் - மெய்மை குன்றா மொழிக்குத் துணை முருகா” என்கிறார் அருணகிரிநாதர்

முருகா என்ற நாமங்கள் கூற அருணகிரிநாதர் என்ன சொல்கிறார்?
...
மு என்றால் முகுந்தன்

ரு என்றால் ருத்ரன்

கா என்றால் பிரம்மா

- இதனால் முருகா என்ற நாமத்தைச் சொன்னால் மூன்று பெருங்கடவுள்களின் பெயர்களைச் சொன்ன புண்ணியம் கிடைக்கும்.

இது மட்டுமல்ல.

முகுந்தன் தமது மார்பில் மகாலட்சுமியை வைத்துக் கொண்டிருக்கிறார்.

ருத்ரன் எனும் சிவபெருமான் உமையவளுக்கு உடலில் ஒரு பாகத்தையே கொடுத்திருக்கிறார்.

பிரம்மா தமது மனைவியான சரசுவதியை நாக்கில் வைத்திருக்கிறார்.

இதனால் முருகா என்றால் ஆறு பேர்களைத் தொழுத புண்ணியம் கிடைக்கிறது.

இதனால்தான் முருகா என்னும் நாமங்கள் என்றார் அருணகிரிநாதர்.

மதுராஷ்டகம் தமிழ் வடிவமாக

மதுராஷ்டகம் - அதரம் மதுரம்

சுத்தாத்வைத மகாகுரு, வல்லபாச்சார்யர் எழுதிய மதுராஷ்டகம் - அதரம் மதுரம்

- அதைத் தமிழ் வடிவமாக்கித் தருகிறேன்
...
ஸ்ரீ-ஹரீ-ஓம்

(1) அதரம் மதுரம் வதனம் மதுரம் - நயனம் மதுரம் ஹஸிதம் மதுரம்
ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்

இதழும் இனிதே! முகமும் இனிதே! -- கண்கள் இனிதே! சிரிப்பும் இனிதே!
இதயம் இனிதே! நடையும் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!

(2) வசனம் மதுரம் சரிதம் மதுரம் - வஸனம் மதுரம் லலிதம் மதுரம்
சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்

சொல்லும் இனிதே! குணமும் இனிதே! -- உடைகள் இனிதே! உடலும் இனிதே!
இயக்கம் இனிதே! உலவல் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!
-----------------------

(3) வேணூர் மதுரோ ரேணூர் மதுர: - பாணிர் மதுர: பாதௌ மதுரௌ
ந்ருத்யம் மதுரம் ஸக்யம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்

குழலும் இனிதே! கால் தூசி இனிதே! -- கைகள் இனிதே! பாதம் இனிதே!
நடனம் இனிதே! நட்பும் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!

(4) கீதம் மதுரம் பீதம் மதுரம் - புக்தம் மதுரம் ஸுப்தம் மதுரம்
ரூபம் மதுரம் திலகம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்

பாடல் இனிதே! பட்டாடை இனிதே! -- உண்ணல் இனிதே! உறக்கம் இனிதே!
உருவம் இனிதே! திலகம் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!
-----------------------

(5) கரணம் மதுரம் தரணம் மதுரம் - ஹரணம் மதுரம் ஸ்மரணம் மதுரம்
வமிதம் மதுரம் சமிதம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்

சேட்டை இனிதே! வெற்றி இனிதே! -- கள்ளம் இனிதே! உள்ளம் இனிதே!
எச்சில் இனிதே! வெட்கம் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!

(6) குஞ்ஜா மதுரா மாலா மதுரா - யமுனா மதுரா வீசீ மதுரா
ஸலிலம் மதுரம் கமலம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்

மணிகள் இனிதே! மாலை இனிதே! -- யமுனை இனிதே! அலைகள் இனிதே!
தண்ணீர் இனிதே! தாமரை இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!
-----------------------

(7) கோபீ மதுரா லீலா மதுரா - யுக்தம் மதுரம் சிஷ்டம் மதுரம்
த்ருஷ்டம் மதுரம் சிஷ்டம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்

ஆய்ச்சி இனிதே! ஆட்டம் இனிதே! -- கூடல் இனிதே! குணமும் இனிதே!
பார்வை இனிதே! பாவனை இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!

(8) கோபா மதுரா காவோ மதுரா - யஷ்டிர் மதுரா ஸ்ருஷ்டிர் மதுரா
தலிதம் மதுரம் பலிதம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்

ஆயர் இனிதே! ஆக்கள் இனிதே! -- செண்டை இனிதே! பிறவி இனிதே!
வீழல் இனிதே! ஆழல் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!

இதி ஸ்ரீமத் வல்லபாச்சார்ய விரசித மதுராஷ்டகம் சம்பூர்ணம்
இங்ஙனம் வல்லபர் விளம்பிய இனியவை எட்டும் இனிதாய் நிறைவே

14 வருஷம் கெட்டுப் போகாத பட்சணம்

14 வருஷம் கெட்டுப் போகாத பட்சணம்

அனைவருக்கும் தெரிந்த ராமாயணத்தை உதாரணக்
கதையோடு சொல்லி, ஸ்ரீ ராமரை நம் நெஞ்சில் அமர்த்தி,
ஒரு தர்மபட்டாபிஷேகமே நடத்துகிறார் ஸ்ரீமஹா சுவாமிகள் .
...
மகா சுவாமிகள் சொல்லும் கதையா நாமும் கேட்காலாமா !!!

"ராமன் என்றாலே, ஆனந்தமாக இருப்பவன் என்று அர்த்தம்; மற்றவர்களுக்கு ஆனந்தத்தைத் தருகிறவன் என்று அர்த்தம்.
எத்தனை விதமான துக்கங்கள் வந்தாலும், அதனால் மனம்
சலனம் அடையாமல், ஆனந்தமாக தர்மத்தையே
அனுசரித்துக்கொண்டு ஒருத்தன் இருந்தான் என்றால், அது ஸ்ரீராமன்தான். வெளிப்பார்வைக்கு அவன் துக்கப்பட்டதாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள்ளே ஆனந்தமாகவே இருந்தான்.

சுக - துக்கங்களில் சலனமடையாமல், தான் ஆனந்தமாக இருந்துகொண்டு மற்றவர்களுக்கும் ஆனந்தத்தை ஊட்டுவதுதான் யோகம். ஆப்படியிருப்பவனே யோகி. இவாறு மனசு அலையாமல் கட்டிபோடுவதற்க்குச் சாமானிய மனிதர்களுக்கான வழி, வேத
சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிற தர்மங்களை ஒழுக்கத்தோடு கட்டுப்பாட்டோடு பின்பற்றி வாழ்வதுதான்.

ஜனங்களுக்கெல்லாம் ஒரு பெரிய உதாரணாமாக வேத
தர்மங்களை அப்படியே அனுசரித்து வாழ்த்து கட்டுவதற்காக ஸ்ரீமந்நாராயணனே ஸ்ரீ ராமனாக வந்தார். ராம வாக்கியத்தை
எங்கே பார்த்தாலும், ' இது என் அபிப்ராயம்' என்று சொல்லவே
மாட்டார். ' ரிஷிகள் இப்படிச் சொல்கிறார்கள் சாஸ்திரம் இப்படிச் சொல்கிறது' என்றே அடக்கமாகச் சொல்வார். சகல வேதங்களின் பயனாக அறியப்பட வேண்டிய பரமபுருஷன் எவனோ, அவனே
அந்த வேத தர்மத்துக்கு முழுக்க முழுக்க கட்டுப்பட்டு அப்படிக்
கட்டுப்பட்டு இருப்பதிலேயே ஆனந்தம் இருக்கிறது என்று
காட்டிக் கொண்டு, ஸ்ரீ ராமனாக வேஷம் போட்டுக்கொண்டு
வாழ்ந்தான்.

ராவணன் சீதையைத் தூக்கிக்கொண்டு போனபோது,
ஒரே மைல் தூரத்திலிருந்த ஸ்ரீராமனுக்கு சீதை போட்ட கூச்சல்
காதில் விழவில்லையாம். அப்படிப்பட்ட ராமனை இப்போது
பக்தர்கள் கூப்பிட்டால் என்ன பிரயோஜனம்? என்று கேலி
செய்து கேட்டவர்களும், எழுதியவர்களும் இருக்கிறார்கள்.
இவர்கள், ஸ்ரீராமன் இந்த லோகத்தில் வாழ்ந்தபோது மனுஷ்ய வேஷத்தில் இருந்தான்; மனுஷ்யர்களைப் போலவே வாழ்ந்தான் என்பதை மறந்து போகிறார்கள்.

ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்

ஒரு நாடகம் நடக்கிறது. அதில் லவ- குசர்களை வால்மீகி,
ராமனிடம் அழைத்து வருகிறார். ராஜபார்ட் ராமஸ்வாமி
அய்யங்கார் ஸ்ரீராமராக வேஷம் போட்டிருக்கிறார் அவருடைய
சொந்தப் பிள்ளைகளே லவ - குசர்களாக நடிக்கிறார்கள்.
நாடக ராமன் வால்மீகியைப் பார்த்து இந்த குழந்தைகள் யார்?
என்று கேட்கிறார். ராமஸ்வாமி அய்யங்காருக்கு தம்முடைய பிள்ளைகளையே தெரியவில்லையே என்று நாடகம்
பார்க்கிறவர்கள் கேலி செய்யலாமா?

நாடக வால்மீகி, ' இவர்கள் ராஜபார்ட் ராமஸ்வாமி அய்யங்காரின் பிள்ளைகள், நீங்கள் தானே அந்த ராமஸ்வாமி அய்யங்கார்!"
என்று பதில் சொன்னால் எத்தனை ரஸாபாஸமாக இருக்கும்?

வாஸ்தவத்தில் இருப்பதை, வாஸ்தவத்தில் தெரிந்ததை,
நாடகத்தில் இல்லாததாக தெரியாததாகத்தான் நடிக்க வேண்டும். ஸ்ரீராமன் பூலோகத்தில் வாழ்ந்தபோது இப்படித்தான் மனுஷ்ய
வேஷம் போட்டுகொண்டு தம் வாழ்தவமான சக்தியையும்
ஞானத்தையும் மறைத்துக்கொண்டு வாழ்ந்தார்.

வேதப் பொருளான பரமாத்மா, தசரதனின் குழந்தையாக
வேஷம் போட்டுக்கொண்டவுடன் வேதமும் வால்மீகியின்
குழந்தையாக , ராமாயணமாக வந்துவிட்டது. அந்த ராமாயணம்
முழுக்க எங்கே பார்த்தாலும் தர்மத்தைத்தான் சொல்லி இருக்கிறது. ஊருக்குப் போகிற குழந்தைக்குத் தாயார் பட்சணம் செய்து தருகிற வழக்கப்படி , கௌசல்யாதேவி காட்டுக்குப் போகிற ராமனுக்குப் பதினாலு வருஷங்களும் கெட்டுப்போகாத பட்சணமாக இந்தத் தர்மத்தைத்தான் கட்டிக்கொடுத்தாள். 'ராகவா..... நீ எந்த தர்மத்தை தைரியத்தோடு நியமத்தோடு அனுசரிக்கிறாயோ, அந்தத் தர்மம் உன்னை ரக்ஷிக்கும' என ஆசீர்வாத பட்சணம் கொடுத்தாள்.
தனது என்ற விருப்பு - வெறுப்பு இல்லாமல் சாஸ்திரத்துக்கு
கட்டுப்படுவது முக்கியம், அதுபோல் தைரியமும் முக்கியம்.
ஒருத்தர் பரிகாசம் பண்ணுகிறார் என்று தர்மத்தை விடக்கூடாது. ஸ்ரீராமனை சாக்ஷாத் லக்ஷ்மனனே பரிகசித்தான்.

'அண்ணா! நீ தர்மம் என்று எதையோ கட்டிக்கொண்டு அழுவதால்
தான் இத்தனை கஷ்டங்களும் வந்திருக்கின்றன. அதை விட்டுத்
தள்ளு தசரதன் மேல் யுத்தம் செய்து ராஜ்யத்தை உனக்கு நான் ஸ்வீகரித்துத் தர அனுமதி தா' என்று அன்பு மிகுதியால்
சொன்னான். ஆனால் ராமனோ, யார் எது சொன்னாலும் பொருட்படுத்தாமல் தர்மத்தையே காத்தான். கடைசியில் அது
அவனை காத்தது, தர்மம் தலை காத்தது ராவணனுக்கு பத்து தலை இருந்தும் அதர்மத்தால் கடைசியில் அதனை தலைகளும்
உருண்டு விழுந்தன. ஸ்ரீராமன் இன்றும், 'ராமோ விக்ராஹ்வான்
தர்ம: என்றபடி தர்மத்தில் தலை சிறந்து தர்ம ஸ்வருபமாக
அனுகிரகம் செய்து வருகின்றான்.

சாக்ஷாத் ஸ்ரீராமனை லட்சியமாகக் கொண்டு 'ராம ராம' என்று
மனசாரச் சொல்லிக்கொண்டே இருக்கிறவர்களுக்குச் ஸித்த
மலங்கள் எல்லாம் விலகும். தர்மத்தை விட்டு எந்நாளும்
விலகாமல் அவர்கள் ஆனந்தமாக வாழ்வார்கள்."

ஆஹா எத்தனை அற்புதமாகச் சொல்லியிருக்கிறார் மகா பெரியவா?

பேச வைத்த முருகப் பெருமான்

பேச வைத்த முருகப் பெருமான்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள ஸ்ரீகைலாசபுரம் என்ற ஊரைச் சேர்ந்த சண்முகசிகாமணிக் கவிராயர் - சிவகாம சுந்தரி என்ற தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் குமரகுருபரர். இவருக்கு 5 வயது வரை பேச்சு வரவில்லை. ஊமை...யாக இருந்தார். பேச வைப்பதற்காக அவரது பெற்றோர் எடுத்த முயற்சிகளுக்கு எந்த பலனும் இல்லாமல் இருந்தது.

ஒரு நாள் சண்முகசிகாமணிக் கவிராயரும், அவரது மனைவி சிவகாம சுந்தரியும் குமரகுருபரரை அழைத்துக் கொண்டு கடல் அலைகள் தாலாட்டும் திருச்செந்தூருக்கு முருகப்பெருமானை தரிசிக்க சென்றனர். பேசாத குழந்தைக்கு பேச்சு வர வேண்டும் என்று வேண்டி 48 நாட்கள் விரதம் இருந்தனர். அப்படியும் குமரகுருபரருக்கு பேச்சு வரவில்லை. நொந்து போனார்கள் அவர்கள்.

இனி நமது பிள்ளைக்குப் பேச்சு வராது என்று எண்ணிய அவர்கள், மகனுடன் கடலில் விழுந்து தற்கொலை செய்வது என்று முடிவெடுத்தனர். தற்கொலை செய்யும் நோக்கத்துடன் அவர்கள் புறப்பட்டபோது அர்ச்சகர் ஒருவர் அவர்களை நோக்கி வந்தார். அவர்கள் அப்படியே நின்றனர்.

அர்ச்சகர் குமரகுருபரரிடம் ஒரு பூவை காட்டி, இது என்ன? என்று கேட்டார். குமரகுருபரரின் பெற்றோருக்கு ஒன்றும் புரியவில்லை. “நமது மகனுக்குத்தான் பேச்சு வராதே... இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?” என்று எண்ணிய போது, அந்த அதிசயம் நடந்தது.

அர்ச்சகர் கேட்ட கேள்விக்கு “பூ” என்று பதில் சொன்னார் சிறுவன் குமரகுருபரர்.

அவரது பெற்றோருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. ஊமையாக இருந்த மகன் பேசியதை கண்டு சந்தோஷத்தின் உச்சிக்கே சென்று விட்டனர்.

அதன் பிறகு முருகா... முருகா... என்றார். படிப்படியாக அவரிடம் இருந்து வார்த்தைகள் வெளிப்பட்டன. எல்லாப் பிள்ளைகளையும் போல் நன்றாக பேசினார். அதன்பிறகு தான், அவர் எப்படி பேசினார் என்பதற்கான காரணம் புரிந்தது. ஒரு நாள் குமரகுருபரர் கனவில் தோன்றிய முருகப் பெருமான், தனது வேலால் சிறுவன் குமரகுருபரர் நாவில் குருபரா என்று எழுதிப் படித்து காட்டிவிட்டு மறைந்த சம்பவம் தெரிய வந்தது.

முருகன் அருளால் பேசும் தன்மையை பெற்ற குமரகுருபரர், பூமேவு செங்கமல... என்று தொடங்கும், சைவ சித்தாந்த கருத்துகள் அனைத்தும் அடங்கிய கந்தர் கலிவெண்பாவை இயற்றிப் பாடினார். இவர் மதுரைக்குச் சென்று, மீனாட்சியம்மனை குழந்தையாக பாவித்து மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் பாடினார். சிதம்பரம் சென்ற குமரகுருபரர் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் இயற்றி பாடினார். இறுதியாக காசிக்குச் சென்று தவம் செய்தார். அங்கு காசி கலம்பகம் பாடினார். குமாரசாமி என்ற மடாலயத்தையும் நிறுவினார். காசியிலேயே முக்தியும் அடைந்தார்

...வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப் பார்"

வீடு கட்ட சோதிடம் சொல்லும் வழிமுறை

"வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப் பார்" என்று சொல்வார்கள். இந்த இரண்டிலும் எவ்வளவு கவனமாக இருந்தாலும் சிக்கல்கள் வந்துவிடுகின்றன. இதற்கு சோதிடம் சொல்லும் வழிமுறைகளைப் பின்பற்றாமல் போனதுதான் என்று பின...்னால் வருத்தப்படுகிறார்கள். வீடு கட்டுவதற்கு சோதிடம் சொல்லும் வழிமுறைகள்தான் என்ன?

வீடு கட்ட சரியான மாதங்கள்

தை, மாசி, சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்கள் வீடு கட்ட உகந்த மாதங்கள்.

ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதங்கள் வீடு கட்டவோ, கிருஹப்ரவேசம் (புதுமனை புகுதல்) செய்வதோ கூடாது.

வாஸ்து புருஷன்

வாஸ்து புருஷனது கையைக் கீழேயும், வலது கையை மேலாகவும் வைத்துப் படுத்திருப்பார். இவர் ஒவ்வொரு மாதமும் விழிப்பது இல்லை கீழ்காணும் எட்டு மாதங்களில் கீழ்காணும் நாட்களில் கீழ்காணும் 3 3/4 நாழிகை (90 நிமிடங்கள்) நேரம் மட்டுமே விழித்திருப்பார். இந்த 90 நிமிடங்களில் வீடு கட்டுவதற்கான வாஸ்து செய்யலாம்.

இந்த 3 3/4 நாழிகையில் வாஸ்து புருஷன்

1. பல் துலக்குகிறார்
2. நீராடுகிறார்.
3. பூஜை செய்கிறார்
4. உணவு உண்கிறார்.
5. தாம்பூலம் தரிக்கிறார்.

- இதில் உணவு உண்ணும் காலமும் தாம்பூலம் தரிக்கும் காலமும் கொண்ட 2 1/4 நாழிகைக்கு மேல் 3 3/4 நாழிகையில் (36நிமிடம்) வாஸ்து செய்வது மிகவும் சிறப்பானது என்கிறது சோதிடம்.

1. சித்திரை 10 ஆம் தேதி - காலை மணி 8.54 முதல் 9.30 மணி வரை

2. வைகாசி 21 ஆம் தேதி - காலை மணி 9.58 முதல் 10.34 மணி வரை

3. ஆடி 11 ஆம் தேதி - காலை மணி 7.44 முதல் 8.20 மணி வரை

4. ஆவணி 6 ஆம் தேதி - காலை மணி 7.23 முதல் 7.59 மணி வரை

5. ஐப்பசி 11 ஆம் தேதி - காலை 7.44 மணி முதல் 8.20 மணி வரை

6. கார்த்திகை 8 ஆம் தேதி - காலை 11.29 முதல் மதியம் 12.05 மணி வரை

7. தை 12 ஆம் தேதி - காலை 10.41 முதல் 11.17 மணி வரை

8. மாசி 22 ஆம் தேதி - காலை 10.32 முதல் 11.08 மணி வரை

இந்த வாஸ்து நேரங்களில்

1. சித்திரை,வைகாசி, பங்குனி மாதங்கள் வடக்கு வாசல் வைத்து வீடு கட்டுவதற்கு நல்லது.

2. ஆடி, ஆவணி மாதங்கள் கிழக்கு வாசல் வைத்து வீடு கட்டுவதற்கு நல்லது.

3. ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் தெற்கு வாசல் வைத்து வீடு கட்டுவதற்கு நல்லது.

4. தை, மாசி மாதங்கள் மேற்கு வாசல் வைத்து வீடு கட்டுவதற்கு நல்லது.

5. வாஸ்து சாஸ்திரப்படி கீழ்காணும் நீள, அகலமுள்ளபடிதான் அறைகள் அமைக்கப்பட வேண்டும்.

6, 8, 10, 11, 16, 17, 20, 21, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 35, 36, 37, 39, 41, 42, 43, 45, 52, 56, 60, 63, 64, 66, 68, 70, 71, 72, 73, 77, 79, 80, 84, 85, 87, 88, 89, 90, 91, 92, 95, 97, 99, 100, 101, 102, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 115, 116, 117, 119, 120 போன்ற அடிகளில்தான் நீளம், அகலம் இருக்க வேண்டும்.

பொதுவான சில குறிப்புகள்

1. வீட்டில் உள்ள அறைகளின் எண்ணிக்கை ஒற்றைப்படையில் இருக்க வேண்டும்.

2. வீட்டுக்குக் காலியிடம் அமைத்தால் அது வீட்டுக்கு வடக்கு, கிழக்குப் பகுதியில்தான் அமைய வேண்டும்.

3. கழிவு நீரை வீட்டிற்கு வடக்கு அல்லது கிழக்கில் வெளியேறுமாறு அமைக்க வேண்டும்.

4. வாசல்படிகள் ஒற்றைப்படியில் அமைக்க வேண்டும். இது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியோ, தெற்கிலிருந்து வடக்கு நோக்கியோ ஏறும்படி அமைப்பது சிறப்பு.

5. வீட்டின் மேல் தண்ணீர்த்தொட்டி அமைக்கும் போது வீட்டின் கன்னி மூலையில் இருக்கும்படி அமைக்க வேண்டும்.

6. வீட்டிற்கு வெளியில் இருக்கும் சாலையின் மட்டத்தை விட வீட்டுத்தளம் உயரமாக இருக்க வேண்டும்.

7. கிணறு, ஆழ்குழாய் கிணறு போன்றவைகளை கிழக்கு அல்லது மேற்கில் அமைக்க வேண்டும்.

8. வீட்டில் சமையலறை தென்கிழக்கில் கிழக்கு நோக்கி சமையல் செய்யும்படியாகவும், உணவு உண்ணும் அறை தெற்கிலும், படுக்கையறை மேற்கிலும், பூஜையறை வடகிழக்கிலும், குளியலறை கிழக்கிலும் அமைக்கப்படுவது நல்லது.

9. வீட்டின் அருகில் மா, வாழை, வேம்பு, எலுமிச்சை மரங்கள், மல்லிகைச்செடி வளர்க்கலாம்.

10. வீட்டின் அருகில் ஆலம், பனை, எருக்கு, எட்டி, வில்வம், முருங்கை, இலுப்பை மரங்களையும் பப்பாளி, அகத்தி போன்ற செடிகளையும் வளர்க்கக் கூடாது.

கிருஹப்ரவேசம் செய்ய (புதுமனை புகு விழா காண)

தை, சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் நல்லது.

1. ஆனி, ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசி, பங்குனி மாதங்கள் நல்லதல்ல.

2. திங்கள், புதன், வியாழன், வெள்ளிக் கிழமைகள் நல்லது.

3. கதவு போடாமலும், கூரை வேயாமலும், தரை, சுவர் பூசாமலும், வேள்வி, பிராமண

இறைவேட்கை அகங்காரம் ஆணவத்தைக் காட்டிலும் கொடியது

சித்தர் தாயுமான சுவாமிகளின் இறைவேட்கை அகங்காரம் ஆணவத்தைக் காட்டிலும் கொடியது, இந்தஇயல்பினை கட்டுபடுத்த இயலாது என வருந்தி இறைவனிடம் முறையீடு செய்தவர் தாயுமானவ சித்தர், மெய்யறிவு பெறுவதற்கு எவ்விதப் பயிற்சியும் பெறாமை கருதி வருந்தியவர், இறைய...ருள் பெறும் பக்குவம் எப்போது வாய்க்குமோ என்று ஏங்குகிறார், " எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே" என்னும் கொள்கையுடைய தாயுமானவ சித்தரின் அருள் வேட்கை அளப்பரியதாகும். திருச்சியில் கேடியப்ப பிள்ளையின் மைந்தராக இறையருளால் பிறந்த தாயுமானவர் தந்தை காலமானபோது திருச்சி மன்னராக இருந்த விஜயரங்க சொக்கநாத நாயக்க அரசில் கணக்கராகப் பணியமர்த்தப்பட்டார், சிவபிரான போதம் அறிந்த தாயுமானவரால் அரசாங்க கணக்குகளில் ஈடுபாடு கொள்ள முடியவில்லை, சிவநெறிச் சிந்தனையும் சித்தர் ஈடுபாடும் காலாவதியாகும் மனித வாழ்வின் அற்பக் கணக்குளின் கூட்டல் கழித்தலில் இருந்து பலநேரம் தாயுமானவரை ஒதுங்கியிருக்க செய்தன, அரசு அலுவலோடு இறைப்பணியையும் செய்து வந்தார், மெளனகுரு சுவாமிகளிடம் தன்னை மாணாக்கராக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டி தாயுமானவரை சீடராக ஏற்று அவருக்கு யோக ஞான முறைகளையும் உபதேசித்தருளினார். அரண்மனை உத்தியோகத்திலிருந்து நீங்கி விராலிமலைக்கு வந்து நிஸ்டையில் ஆழ்ந்தார் தாயுமானவர். விராலிமலை சித்தர்களின் வாசஸ்தலமாக அந்நாளில் விளங்கி வந்தது. சித்தர் பலரும் தங்கள் சித்திகளுக்கான பயிற்சிக்களமாக அங்கே வாழ்ந்து கொண்டிருந்தபோது சித்தர்களின் தொடர்புகளால் தாயுமானவரும் சித்தரானார். இறவாமை பற்றி சாகாக்கலை கண்டறிந்த சித்தர்களின் ரகசியம் பலவற்றை அவர்களின் அனுபவ வெளிப்பாடாக தாயுமானவர் கண்டறிந்தார். ஆன்மா முக்தியடைய உடம்பு அதற்கு ஒரு கருவியாக வந்தது முக்தியடைவது ஆன்மா மட்டுமே என்பதை உணர்ந்தார் தாயுமானவர். மனமடக்க தியான நிலையே மாற்று என உணர்ந்து தாயுமானவரின் மனம் மோகனத்தில் பற்றிக் கொண்டது, வெயிலின் ஒளியிலே காய்ந்த பலகாலம் சிதையாமலிருப்பது போல சூரியப் பிரகாசமான சிவஜோதியில் திளைப்பவரும் உடலும் ஆன்மாவும் ஒருநாளும் அழிவதில்லை, முக்திக்கு வழி அறியாமல் ஐம்புலங்களைக் காத்து வாழ்வதுதான், ஐம்புலங்களின் உணர்வுகளை வழியோடு தெரிந்து தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கற்றுக் கொண்டு விட்டால் இந்த உடலுக்கு இறப்பே இல்லை என்பதை உணர்ந்தார் தாயுமான சித்தர். உணர்வும் நினைவும் நடுங்கிய பின்னர் மனமானது சுத்த சூனியமான பரவெளியில் திளைத்திருக்கும் இந்நிலையில் மனம் செயலாற்று வெறுமையாக இருக்கும், மெய்யுணர்வாக விளங்கும் பரம்பொருளை தரிசிப்பதற்கு இந்த மன வெறுமை நிலையே தேவைப்படுகிறது என்பதை அறிந்து தெரிந்தார். தாயுமானவர் என்றைக்கும் அழியாத சிவராஜயோகம் வேண்டினார். சிவராஜயோகம் என்பது யோகத்தை கருவியாக கொண்டு சிவத்தியானம் சமாதி என்பனவற்றை முயன்று அடைதலாகும். அகங்காரம் ஆணவத்தை காட்டிலும் கொடியது இந்த இயல்பினை கட்டுபடுத்த இயலாது என வருந்தி இறைவினிடம் முறையீடு செய்தார். மெய்யறிவு பெறுவதற்கு எவ்வித பயிற்சியும் பெறாமை கருதி வருந்தினார். இறையருள் பெறும் பக்குவம் எப்போது வாய்க்குமோ என்று ஏங்கினார். மனம் இறைவனின் திருவடியில் இடும் பலியாகவும் அன்பு அபிசேக நீராகவும் உயிர் நைவேத்தியமாகவும் பிராணனையும் அறிவையும் தூபதீபமாகவும் கொண்டு துதிப்பாதாக கூறுகிறார் தாயுமானவர். உடலும் உயிரும் உடைமைகளும் மனிதனுக்கு சொந்தமானவையல்ல அவை இறைவனுக்கு சொந்தமானவை அவனிடம் ஒப்படைக்கப் படவேண்டியவை என்று கூறித் தன்னை சேர்த்து கொள்ளும்படி இறைவனிடம் முறையிடுககிறார் தாயுமானவர். தாயில்லாச் சேய் போல் அலைந்து துன்புற்ற தன்னை தாயைக் காட்டிலும் கருனை காட்டி மீட்கும்படி சிந்தை நைந்துருக இறைவனிடம் முறையிட்டவர் தாயுமானவர். இறப்பதும், பிறப்பதும் ஆன்மாவின் முடிவல்ல. உடல் மாயை அழிக்கூடியது இந்தச் சித்த தத்துவத்தை உணர்ந்து உலகுக்குரைத்தவர் ஞானாசிரியர் தாயுமானவர்

சிவ பக்திக்கு அர்த்தம் தெரியுமா

சிவ பக்திக்கு அர்த்தம் தெரியுமா உங்களுக்கு?

ஸ்ரீஹர தத்தர் என்பவர், வைஷ்ணவ குடும்பத்தில் பிறந்து, சிறந்த சிவபக்தராக விளங்கியவர். ஒருநாள், காவிரி கரையில் அமர்ந்து, தியானம் செய்து கொண்டிருந்தார் ஹரதத்தர். அந்த சமயம், ஒரு வேடனும், அவனது மனைவிய...ும் பேசிக் கொண்டது, இவர் காதில் விழுந்தது. அவ்விருவரும் காவிரியை கடந்து, அக்கரைக்கு செல்ல வேண்டியவர்கள். ஆற்றில் தண்ணீர் குறைவாகவே இருந்ததால், ஆற்றில் இறங்கி நடந்தே, அக்கரை சேர்ந்து விடலாம் என்றாள் மனைவி. அதற்கு அவள் கணவன், அப்படி செய்யக் கூடாது. கங்கையை காட்டிலும், காவிரி புனிதமானது. அதனடியில் உள்ள ஒவ்வொரு மணலும், ஒவ்வொரு சிவலிங்கம் என்று பெரியோர் சொல்வர். நாம், கர்ம வசத்தால் இந்த குலத்தில் பிறந்துள்ளோம். கரையிலிருந்த படியே, ஒரு பாத்திரத்தில் ஜலத்தை எடுத்து, காவிரி ஸ்நானம் செய்து விடலாம். இந்த கர்ம சரீரத்துடன், காவிரியில் இறங்கி, சிவலிங்கங்களை மிதிக்க வேண்டாம். கொஞ்ச தூரம் சென்றால், மூங்கில் பாலம் வரும். அதன் வழியாக அக்கரை சேரலாம்... என்றான்.

அவனது பக்தியும், ஞானமும் ஹரதத்தரை கவர்ந்ததால், அவன் அருகில் சென்று, அவனை வணங்கி நின்றார். உடன் அவன் பதறிப் போய், சுவாமிகளே... நீங்கள், என்னை வணங்கலாமா, என்னை தொடலாமா, இதனால், எனக்கல்லவோ பாவம் வந்து சேரும்... என்றான். அதற்கு ஹரதத்தர், அய்யனே... உன்னை போல சிவபக்தியும், ஞானமும் கொண்ட எவரையும், நான் பார்த்ததில்லை. காவிரியின் மகிமையையும், அதிலுள்ள மணல் ஒவ்வொன்றையும் சிவலிங்கமாக கருதும் எண்ணம் கொண்டவர்கள், உன்னைத் தவிர வேறு யாரையும் நான் கண்டதில்லை. வேத சாஸ்திரங்களில் கரை கண்டவர்கள் என்று சொல்லிக் கொள்வோரிடம் கூட, உன்னுடைய இந்த மனோபாவம் இருந்ததில்லை. நீயல்லவோ உண்மையில் சிவ தத்துவமறிந்தவன்... என்று புகழ்ந்து பாராட்டினர். இது, சிவலிங்கம்; இது கல்; இது மண்; என்ற பேதமின்றி, சர்வத்தையும் சிவமாக பாவிக்கும் எண்ணமே, சிறந்த சிவபக்திக்கு அடையாளம். இப்படிப்பட்ட எண்ணம் எல்லாருக்கும் வந்து விடுமா? இதற்கு, மனம் பக்குவப்பட வேண்டும். பக்குவமில்லாத மனதில் பக்தி ஏற்படாது. எதிலும், பகவானை காணும் மனோபாவம் இருந்தால், நாளடைவில், மனம் பக்குவப்படும்

காசி- ராமேஸ்வரம் யாத்திரை செல்வது எப்படி?

காசி- ராமேஸ்வரம் யாத்திரை செல்வது எப்படி?

இந்துவாக பிறந்த ஒவ்வொருவரது ஆசையும் வாழ்நாளில் ஒருதடவையாவது காசி யாத்திரை செல்வது தான். காசியாத்திரை என்பது காசிக்கு மட்டும் செல்வது கிடையாது. காசியுடன் ராமேஸ்வரமும் செல்வது தான். அப்படியானால் காசி...-ராமேஸ்வரம் யாத்திரை செல்வது எப்படி? என்பதை காண்போம்:

காசி யாத்திரை செல்ல விரும்புபவர்கள் முதலில் ராமேஸ்வரம் சென்று அங்குள்ள அக்னி தீர்த்தமாகிய கடலில் நீராடி ஈர உடையுடன் கடலில் மூன்று தடவை மூழ்கி எழ வேண்டும். ஒவ்வொரு தடவை மூழ்கும் போதும் ஒவ்வொரு பிடி மணல் எடுக்க வேண்டும். முதல் தடவை மூழ்கி எடுக்கும் மணலை சேது மாதவ என்று கூறி லிங்கமாக பிடித்தும், இரண்டாவது தடவை மூழ்கி எடுக்கும் மணலை பிந்து மாதவ என்று கூறி லிங்கமாக பிடித்தும், மூன்றாவது தடவை மூழ்கி எடுக்கும் மணலை வேணு மாதவ என்று கூறி லிங்கமாக பிடித்தும், கரையில் வைக்க வேண்டும். பின்னர் மூன்று லிங்கத்திற்கும் விபூதி சந்தனம் குங்குமம் இட்டு, வில்வ இலை போட்டு ஓம் நம சிவாய என்ற பஞ்சாட்சர மந்திரம் கூறி வாழைப்பழம் வெற்றிலை பாக்கு நைவேத்தியம் வைத்து, பின் சூட தீபாராதனை காட்டி கும்பிட வேண்டும். பின் சேது மாதவ லிங்கத்தை மட்டும் எடுத்து பத்திரமாக நாம் வைத்து கொள்ள வேண்டும்.

பிந்து மாதவ மற்றும் வேணு மாதவ லிங்கம் இரண்டையும் கடலில் போட்டு விட வேண்டும். அதன் பின் ராமநாதர் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் (1.மகாலட்சுமி தீர்த்தம்: செல்வவளம், 2.சாவித்திரி தீர்த்தம்: பேச்சுத்திறன், 3.காயத்ரி தீர்த்தம்: உலகத்துக்கே நன்மை 4. சரஸ்வதி தீர்த்தம்: கல்வி அபிவிருத்தி, 5. சங்கு தீர்த்தம்: வாழ்க்கை வசதி அதிகரிப்பு, 6. சக்கர தீர்த்தம்: மனஉறுதி பெறுதல் 7. சேது மாதவ தீர்த்தம்: தடைபட்ட பணிகள் சுலபமாக முடிதல். 8. நள தீர்த்தம், 9. நீல தீர்த்தம்,10.கவய தீர்த்தம்,11.கவாட்ச தீர்த்தம்,12. கந்தமாதன தீர்த்தம்: எத்துறையிலும் வல்லுனர் ஆகுதல்.13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம், 14. கங்கா தீர்த்தம், 15. யமுனை தீர்த்தம், 16. கயா தீர்த்தம், 17: சர்வ தீர்த்தம்: எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்குதல் 18. சிவ தீர்த்தம்: சகல பீடைகளும் ஒழிதல் 19. சத்யாமிர்த தீர்த்தம்: ஆயுள் விருத்தி 20. சந்திர தீர்த்தம்: கலையார்வம் பெருகுதல் 21. சூரிய தீர்த்தம்: முதன்மை ஸ்தானம் அடைதல் 22. கோடி தீர்த்தம்: முக்தி (மறுபிறவி இல்லாத நிலை) நீராடி விட்டு கோடி தீர்த்த்தை மட்டும் ஒரு கேனில் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

அதன் பின் ஈர உடையை மாற்றி கொண்டு ராமநாதர் மற்றும் பர்வதவர்த்தினி அம்மனுக்கு மாலை சாற்றி அர்ச்சனை செய்ய வேண்டும். பின் இறைவனை வழிபட்டு காசிக்கு கிளம்ப வேண்டும். உடனே காசிக்கு செல்ல இயலாதவர்கள் தம்முடன் வைத்திருக்கும் சேது மாதவ லிங்கத்தையும், கோடி தீர்த்தத்தையும் பூஜை அறையில் வைத்து காசி செல்லும் வரை பூஜை செய்ய வேண்டும். காசி செல்லும் போது மறக்காமல் சேது மாதவ லிங்கத்தையும், கோடி தீரத்த்தையும் எடுத்து செல்ல வேண்டும். காசி செல்பவர்கள் முதலில் அலகாபாத் சென்று அங்கு சேது மாதவ லிங்கத்தை திரிவேணி சங்கமத்தில் இட வேண்டும். பின் அங்கிருந்து ஒரு கேனில் தீர்த்தம் எடுத்து கொள்ள வேண்டும். பின் காசி சென்று அங்குள்ள விஸ்வநாதருக்கு ராமேஸ்வரத்தில் இருந்து எடுத்து சென்ற கோடி தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து வணங்க வேண்டும். பின்னர் தங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு உணவு பொருளை விட்டு விட வேண்டும். பின்னர் கயா சென்று அங்கு நமது இறந்த மூதாதையருக்கு பித்ருக்கடன் செய்தும், மோட்ச தீபம் ஏற்றியும் வழிபட வேண்டும். இதனால் இறந்த மூதாதையரின் பரிபூரண ஆசி நமக்கும் நமது சந்ததியினருக்கும் கிடைக்கும்.

அதன் பின் ராமேஸ்வரம் வர வேண்டும். உடனே ராமேஸ்வரம் வர இயலாதவர்கள் 15 நாட்களுக்குள் ராமேஸ்வரம் செல்ல வேண்டும். அது வரை அலகாபாத்தில் எடுத்த தீர்த்தத்தை பூஜை அறையில் வைத்து வணங்க வேண்டும். ராமேஸ்வரம் செல்லும் போது அலகாபாத்தில் எடுத்த தீர்த்தத்தை ராமேஸ்வரம் ராமநாதருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு காசி ராமேஸ்வர யாத்திரையை நிறைவு செய்ய வேண்டும. இப்படி செய்தால் தான் காசி ராமேஸ்வர யாத்திரையின் முழுபலனும் கிடைக்கும்.
Mehr anzeigen

ராமபிரான் கடைக்கண் பார்வையின் மகிமை

கடைக்கண் பார்வையின் மகிமை

ராமபிரான் தினமும் அரசபை செல்லும்போது பாதுகைகளை வாசலில் விட்டு உள்ளே செல்வது வழக்கம். ஒரு நாள் பாதுகைகள் நாம் உள்ளே செல்ல முடியவில்லையே என ஏங்கியதை ராமர் அறிந்து கடைகண்ணாள் ஒரு பார்வை பார்த்தார்.

அந்த பார்வையின் அ...ருளாள் பாதுகைகள் பதினான்கு ஆண்டுகள் சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிந்தன.

யார்.. யோகி..!!

யார்.. யோகி..!!

சமீப நாட்களில் யோகிகள் என்ற பெயரில் வந்து இம்சிப்பவர்களின் எண்ணிக்கை கொசுத் தொல்லையை விடவும் மோசமானதாகிவிட்டது. மேலே பார்த்தேன் யோகியாய்ட்டேன். மொட்டை மாடில நின்னு கீழே பார்த்தேன், உணர்ந்தேன் உடனே யோகி ஆய்ட்டேன்ன்னு ஆளாளுக்...கு ஒரு கதையை சொல்லிக் கொண்டு யோகியாகி விடுகிறார்கள். யோகத்தின் அடிப்படை கூட தெரியாத இந்த அசடர்களையும் நம்பிக் கொண்டு அவர்களுக்கு வால்பிடிக்க ஒரு கூட்டம் இருப்பதினால்தான் இவர்கள் வெள்ளையும் சொள்ளையுமாய் குடுமியும், குங்குமமும் வைத்துக் கொண்டு இரண்டு நாளில் ஞானம் தருவதாய் கல்லா கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
யோகம் என்பது எட்டாம் கிளாஸ் பாஸ். பத்தாங்கிளாஸ் பெயில் மேட்டர் இல்லை. வாழ்வியல் அனுபவம். ஒவ்வொரு நிலையாக உணர்ந்து தெளிந்து கடந்து போகிற நிலை. இப்படிக் கடந்து போகிற எவனும் தன்னைச் சுற்றிய ஒளி வட்டத்துக்கோ, காசு பார்க்கும் கார்ப்பரேட் தனத்துக்கோ விலை போவதில்லை. அப்படி விலைப் போனால் அவன் பெயர் வியாபாரியே தவிர யோகி இல்லை. எவன் யோகி என்பதை எத்தனையோ பெரியவர்கள் வரையறுத்து சொல்லிவிட்டு போயிருக்கிறார்கள். அதையெல்லாம் பொருள் விளங்கி படிக்கிறவர்கள் தெரிந்து கொள்வர். பொருள் விளங்காமல் யானையை பூனை என பொருள் எழுதுகிறவர்கள் உண்மையான யோகத்தின் பொருள் அறிந்திருக்க வாய்ப்பே இல்லை.
யோக நிலைங்கிறது தன்னை அறிந்த பூரண நிலை. தொடரத் தொடர தொடர்ந்து கொண்டேயிருக்கும் நிலை. தன்னை அறிந்த யோகிகள் இந்த உலகத்தையும் நன்றாக அறிந்தவர் ஆவர். அவர்கள் குன்றின் மேல் வைத்த விளக்கு போன்று அனைவருக்கும் ஒளியாய் இருந்து வழிநடத்துவர். அவர்கள் வழி நடந்தால் உலகம் உய்யும்.
தன்வழி யாகத் தழைத்திடும் ஞானமும்
தன்வழி யாகத் தழைத்திடும் வையகம்
தன்வழி யாகத் தழைத்த பொருளெல்லாம்
தன்வழித் தன்ன ருளாகி நின்றானே.
சந்திரன் சூரியன் தற்பரன் தாணுவில்
சந்திரன் தானும் தலைப்படும் தன்மையைச்
சந்தியிலே கண்டு தான் ஆம் சகமுகத்து
உந்தி சமாதி உடைஒளி யோகியே.
- திருமந்திரம்
சந்திரன், கதிரவன், ஆன்மா என்னும் மூன்றும் விளங்கும் நிமிர்ந்த ஆயிர இதழ் கமலத்தில் சந்திர கலை விளங்கும் தன்மையை உலகில் உயிருடன் வாழும் போதே சீவ ஒளியைச் சிவ ஒளியுடன் பொருந்திச் சமாதி நிலை பெற்ற யோகியானவனே சுழுமுனை உச்சியில் உணர்ந்து உணர்ந்து சிவம் என்ற தன்மையை அடைவான்.
அணங்கற்ற மாதல் அருஞ்சன நீவல்
வணங்குற்ற கல்வி மாஞானம் மிகுத்தல்
சிணங்குற்ற வாயர் சித்திதூரம் கேட்டல்
நுணங்கற்றி ரோதல் கால் வேகத்து நுந்தலே.
ஆசை அழிதல், சுற்றத்தவரிடமிருந்து விலகி நிற்றல், பணிவைத் தரும் சிவஞானம், பதிஞானம் மிகுதல், சுருங்குதலையுடைய வாயினர் ஆதல், பேச்சு அடங்குதல், சித்தி பெறுதல், தொலைவில் நடப்பவை கேட்டல், நுண்மையாக மறைந்திருத்தல், காற்றை மேலே செலுத்துதல்.
மரணஞ்சரை விடல் வண்பர காயம்
இரணஞ்சேர் பூமி இறந்தோர்க்களித்தல்
அரணன் திருவுரு வாதன் மூவேழாங்
கரனுரு கேள்விக் கணக்கறிந் தோனே.
- திருமந்திரம்
இறப்பு, மூப்பு ஆகியவற்றைக் கடத்தல், அயல் உடலில் புகும் ஆற்றலைப் பெறுதல். பொன்னுலகத்தை இறந்தவர்களுக்கு அளிக்கும் ஆற்றல் பெறுதல், பாதுகாப்பான பிரணவ உடலைப் பெறுதல். மூண்டு எழுகின்ற சிவ சூரியனைப் பற்றிய கேள்வி ஞானம் அடைதல் ஆகிய இத்தனையும் யோகி அறிவார்கள் என்று கூறுகிறார் திருமூலர்.
யோகி என்ற வார்த்தையின் மகத்துவம் தெரியாமல் எவரும் தன்னை யோகி என அழைத்துக் கொள்ளும் இழி நிலை இன்று இருக்கிறது. அசல் எது போலி எது என்று தெரியாமல் குழம்பும் நிலையை இந்த போலிகள் உருவாக்கி விட்டனர். அவர்களை சரியாக இனம் கண்டு தவிர்ப்பதே நலம்.

கோபம் கொள்வது சரியா, தவறா

கோபத்தை விட கொடுமை

இறைவன் அனைத்து இடங்களிலும், நீக்கமற நிறைந்திருப்பவன் என்று சொன்னால், நாத்திகவாதிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நாத்திகர்கள் சொல்வதை, ஆன்மிகவாதிகள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அதேசமயம், ஆன்மிகவாதியோ, நாத்திகவாதியோ யாராக இர...ுந்தாலும், அனைவரையுமே கோப உணர்ச்சி ஆட்டிப் படைக்கிறது என்ற உண்மையை, ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும். கோபத்திற்கு, இன, மொழி, நாடு, வயது, ஆண், பெண், ஊர்வன, பறப்பன, நடப்பன என்று, எந்த பேதமும் இல்லை அரை விநாடியில் கோபப்பட்டு, ஆயுள் முழுவதும் துயரப்படுவோர் நம்மில் அநேகர் உண்டு. கோபத்தின் கொடுமையை விளக்கும் கதை இது: கலியுகம் துவங்கும் நேரம். காமன், கோபன் எனும் இருவர் உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தனர். அப்போது கட்டியங்காரன், காமனின் குணாதிசயங்களை விவரித்துக் கொண்டு வந்தான். காமனுக்கு அடிபணியாத உயிர்கள் இல்லை; அவன், பெரும் பெரும் முனிவர்களைக் கூட, வசப்படுத்தி இருக்கிறான். அப்பேற்பட்ட சக்தி படைத்தவன்... என்று, காமனின் ஆற்றலை கூறினான். அப்போது கட்டியங்காரனின் அருகில் இருந்த கோபன், கட்டியங்காரனின் பேச்சை யாரும் நம்பாதீர்கள். சின்னஞ்சிறு குழந்தைகளிடம், காமனின் ஆட்டம் செல்லாது. நோயாளிகள் மற்றும் முதியவர்கள், ஆகியோரிடமும் காமனின் ஆற்றல் அடிபட்டு போய் விடும். ஆனால், கோபனான என் சக்தி தான் எல்லா இடங்களிலும் செல்லுபடியாகும். ஆண், பெண், படித்தவன், படிக்காதவன், பெரியவன் - சிறியவன், ஏழை - பணக்காரன், நோயாளி- ஆரோக்கியசாலி என, அனைவரையும் ஆட்டிப் படைப்பேன். மா முனிவர்களை கூட ஆட்டிப் படைத்து, அவர்களின் தவ ஆற்றலை தள்ளாட வைத்திருக்கிறேன். எனக்கு கால நேரம், இடம், பொருள் என்பதெல்லாம் கிடையாது. தாய் - தாரம், தகப்பன் - பிள்ளை, குரு - சிஷ்யன் என, எல்லா பேதங்களையும் அடித்து நொறுக்கி, அனைவரையும் குப்பையாக்குபவன் நான். சிவபெருமானின் கோபத்திற்கு ஆளாகி எரிந்து போனவன் காமன். ஆகையால், காமனை விட கோபனான நான் தான் பெரியவன்... என்று, சொல்லி முடித்தான். உண்மை தானே... கோபத்தை விட, கொடுமை உண்டா? சற்று அமைதியாக இருக்கும் போது, கோபத்தின் கொடுமையை, அதனால், ஏற்படும் விளைவை யோசித்தால், கோபம் கொள்வது சரியா, தவறா என்பது நமக்கே புரியும்.

பதி,பசு,பாசம்

சைவசித்தாந்தம் கூறும் பதி,பசு,பாசம்

இந்து மதத்தில் பலகொள்கைகள் இருந்தாலும் பொதுவாக பெரும்பாலோரால் ஏற்றுக்கொள்ளப்படுவது சைவசித்தாந்தமும் வேதாந்தமுமே இதில் பெரும் பாலோனோர் சைவசித்தாந்தத்தையே ஏற்றுக்கொண்டுள்ளனர். அவர்களை சித்தாந்திகள் என அழைக்கப்படுகின்றனர். வேதாந்தத்தை பின்பற்றுபவர்கள் வேதாந்திககள் என அழைக்கப்படுகின்றனர். சைவசித்தாந்தத்தை நோக்கு வோமானால் அங்கு பதி,பசு,பாசம் எனும் முற்பொருள் உண்மையை...ப் பெற்றிக்கூறுகின்றது. மெய்ப் பொருளான பரம் பொருள் ,மனிதனனுக்கு அடிப்படையான ஆன்மா, மனிதன் வாழும் உலகம் . இதில் பதி என்பது இறைவன். பசு என்பது ஆன்மா ஆன்மாவானது பாசத்தால் கட்டுண்டது. பாசமானது மாயை. அது இல்லாததை இருப்பதாகக் காட்டுவது அது கானல்நீருக்கு ஒப்பானது அதனை இயக்குவது ஆணவ மலம் இது செம்பில் களிம்பு போல ஆன்மாவில் பற்றி இருக்கும். இதனை இருள் மலம் என்பர். இதனை அழிக்க முடியாது அடக்க முடியும். இயக்கும் தன்மை கன்ம மலத்தின் தன்மையில் உள்ளது. கன்மம் பிராத்தம், ஆகாமியம், சஞ்சிதம் என மூன்று வகைப்படும். பிராத்தம் என்பது முன் செய்த வினை, ஆகாமியம் செய்து கொண்டு இருக்கும் வினை, சஞ்சிதம் செய்ய இருக்கும் வினை, இவைகளை அனுபவிக்க வைக்க ஒருவர் தேவை அது தானாக அனுபவிக்காது.
பிரபஞ்சம் அறிவுடையதும் அறிவற்றதுமானது. உயிர் அறிவுள்ள சேதனப் பிரபஞ்சமாகும். பாசம் அறிவற்ற அசேதன பிரபஞ்சமாகும். பதி அறியாமையால் பற்றப்படாததும் பேரறிவுப் பொருள். பசு அறிவற்ற சடமும் அல்ல அறிவுடைய பொருளுமன்று எதைச்சாந்ததோ அதன் தன்மையைப் பெறும். பதி சத்துப் பொருள் பாசம் அசத்து பொருள். பசு எதைச்சாருகின்றதோ அதன் தன்மையைப் பெறுவதால் அது சதசத்து பொருளாகின்றது. பதியைச் சார்தால் சத்தெனவும் பாசத்தைத் சார்ச்தால் அசத்து எனவும் நிலை பெறுகின்றது. சடமாகிய பாசம் அறிவித்தாலும் அறியமாட்டா. பேரறிவான பதி பிறர் அறிவிக்கவேண்டாதது தானே அறியும் தன்மையானது. பசு சிற்றறிவாது சார்ததின் தன்மையை பெறுவது அழியாதது இதனால் பதி, பசு அனாதியான நித்தியப் பொருள். பசு சித்தும்மாகாமலும் அச்த்தாகாமலும் இரண்டுக்கிடையில் நிற்கும் நிலையும் உண்டு. பதி சுக்குமப் பொருள். பரந்தும் துலப் பொருள் உள்ளடங்கியும் (வியாபியாகவும் வியாபகமாகவும்) இருக்கும். பதியில் பசு தூலமாகவும் பாசத்தில் சுக்குமமாகவும், பசுவில் பாசம் உள்ளடங்கியதாக இருக்கும். கடல் போன்ற பதியில் கடல்நீர் போன்று பசுவும் நீரில் கலந்துள்ள உவர்ப்பு போன்று பாசமும் கலந்துள்ளது.
சதசித்தாகிய ஆன்மா துணையின்றி அறிவு பெறமாட்டா அறிவை ஆணவம் மறைத்து நிற்கும் மறைப்பகல தனு,கரண,புவன,போகம் என்பவற்றை கொண்டு பதி போக்கியருளுகின்றார். பசுவாகிய ஆன்மா மூன்று நிலையில்யுள்ளது. மும்மலங்களான ஆணவம், ,கன்மம் மாயை உள்ளவர்கள் சகலர் எனவும், மாயை நீங்கி ஆணவமும் கன்மமும் உள்ளவர்கள் பிரளயாகலர் எனவும், மாiயும் கன்மமும் நீங்கி ஆணவம் மட்டுமுள்ளவர்கள் விஞ்ஞானகலர் என கூறுகின்றது. மலங்களில் சேர்க்கையால் ஆன்மா பெறும் அனுபவத்தை அவர்த்தைகளாக குறிப்பிடுகின்றனர். ஆன்மா அனாதியில் ஆணவமலத்துடன் கூடி அனுபவிக்கும் அனுபவம் கேவலாவத்தை எனவும், மும்மலங்களுடன் கூடி அனுபவிக்கும் அனுபவம் சகலாவத்தை எனவும், மும்மலங்களிலிருந்து நீங்கியநிலையில் சுத்தாவத்தை எனவும் கூறுகின்றது.
சகல நிலையிலும் ஆன்மா ஜந்து அனுபவங்களை ஜந்து இடங்கனில் பொறுகின்றது. ஜந்து அனுபவங்களை முறையே சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீனம் எனவும். இடங்கள் முறையே புருவநடு (ஆக்ஞா), கழுத்து (விசுத்தி), இருதயம் (அனாகதம்), நாபி (மணிப்பூரகம்), மூலம் (மூலாதாரம்) கருவிகள் முறையே முப்பத்தைந்து (இதில் ஆத்மதத்துவம், வித்தியாதத்துவம், இருபத்தைந்து, மூன்று, இரண்டு, ஒன்று எனப்படும். பசு அறிவுடை பொருளாதலால் இச்சை செயல் உடையதாகும். இறைவனைப்போலவே பசுவாகிய ஆன்மா இச்சை, ஞானம், கிரியை என்பனவற்றைக் கொண்டது. ஆணவத்தால் பீடீக்கப்பட்டு கேவலத்தில் சிறிது தோண்றாது இருள் நிலையிலும் சகலத்தில் சிறிது தோன்றி மருள்நிலையிலும் சுத்தத்தில் முற்றாகத்தோன்றி அருள்நிலை நிற்கும். கேவலம் இருளாயும், சுத்தம் ஒளியாயும் விளங்கும். ஆன்மா கேவலத்தில் இறைவனின் திரோதானசக்தியாற் சகலத்துக்கு வந்து பிறப்பிறப்பை அனுபவித்து இருவிணையொப்பு, மலபரிபாரம் வந்த பின் இறைவனது அருட்சக்கியால் ஞானம் பெற்று முத்தியடைவர்.
திருமூலர் திருமந்திரத்தில் பதி,பசு,பாசம் பற்றி குறிப்பிடுகையில்
“விண்ணினைச் சென்று அணுள வியன் மேகங்கள்
கண்ணினைச் சென்று அணுகாப் பல காட்சிகள்
எண்ணினைச் சென்று அணுகாமல் எனப்படும்
அண்ணலைச் சென்று அணுகாப் பசுபாசமே” விண்ணில் மேசங்கள் பரந்திருந்தாலும் ஆகாயத்தோடு ஒட்டுவதில்லை. கண்கள் பல காட்சிகளைக் கண்டாலும் கண்ணில் அவை ஒட்டுவதில்லை. ஆனால் கண்கள் அதில் படிகின்றன. அதுபோல எண்ணம் நினைவுக்கு அப்பாலுள்ள இறைவன் அடையமாட்டாது. பசத்தால் பசுவாகிய ஆன்மா பசுவுள் பதி இருப்பதை அறியா. இதனால் ஆன்மா பதியை உணரா.
சிவமாகுதல் சித்தாந்தம் “ஒன்றும் இரண்டும் இலதுமாய ஒள்றாக
நின்று சமய நிராகர நீங்கியே
நின்று பராபரை நேயத்தைப் பாதத்தால்
சென்று சிவமாதல் கித்தாந்த சித்தியே” ஒன்றாகவும் இரண்டாகவும், இரண்டல்லாத இரண்டும் ஒன்றாகவும் இருப்பதை உணந்து அதி உன்;னதத்தில் திளைத்து. சமய வேற்றுமைகளை மறந்து. பிறசமய பேதங்களை நீக்கி நிபந்தனைகளை விட்டொழித்து பராபரையை அருட்துணையால் அவள் திருவடியை அடைந்து சிவமாகுதல் சித்தாந்தம்.
சுத்த சைவம் சித்தாந்தம் “வேடம் கடந்து விகிர்தம்தன் பால்மேவி
ஆடம்பரம் இன்றி ஆபாசம் செற்றுப்
பாடொன்று பாசம் பசுர்துவம் பாழ்படச்
சாடும் சிவபோகர் சுத்தசைவரே” உடலில் அணிந்து கொள்ளும் சிவசின்னங்களாகிய புறவேடங்களை தவிர்த்து. அகவழிபாட்டில் ஈடுபட பகட்டான தோற்றம், நடை, உடை, பாவனை அணுக்கள் பந்த பாசங்கள் விட்டகன்று துன்பப்பிறவிக்கு காரணமான அகபற்றுக்களான ஆன்மாக்கள் அழிவதைத் தடுத்து சிவத்தை சித்திக்கும் சுத்த சைவர்.
“உடலான ஐந்தையும் ஐராறும் ஐந்தும்
மடலான மாமாயை மாற்றுள்ள நீவப்
படலான கேவல பாசம் துடைத்துத்
திடமாய்த் தளை உறல் சித்தாந்த மார்க்கமே” ஐம்பூதங்களான உடம்பு ,காமம், வெகுளி, பொறாமை, பேராசை, ஆணவம், கர்வம் எனும் ஆறுகுற்றங்கள் மெய், வாய், கண், மூக்கு, செவி, ஐம்பொறிகளால் வரும் இச்சைகள் இவை தோன்;ற நிலைக்கழம் உடம்புபாகும். இவைகளால் ஏற்படும் மன அழுக்குகள், குற்றங்கள், மலங்கள் கழிந்து போக இறையருளைப்பெற தடையாக இருக்கின்ற கண்பார்வையை மறைக்கும் படலம் போன்ற ஆணவத்தையும் பாசத்தையும் விட்டொழித்து உள்ளத்துறுதி குறையாதிருப்பதே சித்தாந்த நெறியாகும் என திருமூலர் கூறுகின்றார்.
புதியின் இருப்பு முறையினை சித்தாந்திகள் “காண்டல் கருதல்”; முறையில் துனிகின்றனர். இப்பிரமானத்தை அடிப்படையாகக் கொண்டு உலகைப் படைக்க ஒருவர் உள்ளார். காணல் என்பது கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் ஆகும். இதில் பல பிரிவுகள் உண்டு. கருதல் என்பது இருப்பதைக் கொண்டு இல்லாததை ஊகிப்பது. இங்கு உதாரணமாக “பானையையும் குயவனையும்” கருகின்றனர். புhனை தன்னைத்தானே ஆக்கிக்கொள்ளாது அது முன் உருவாக்கப்பட்ட பொருளுமல்ல அது போல உலகமும் தன்னைத்தானே ஆக்கிக்கொள்ளாது அது முன்னர் படைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட பொருளுமல்ல பானையை வனைய குயவன் ஒருவன் இருந்தே ஆகவேண்டும். அதேபோல உலகத்தை படைக்க இறைவன் இருந்தே ஆகவேண்டும். எனவே இறைவன் உலகைப் படைக்க காரணன் என்பது தெளிவு. அதே போல பசுவாகிய ஆன்மாவுக்கும் தாம் செய்த வினையையும் அதற்கேற்ற பலனை தாமே அனுபவிக்கும் வல்லமையும் ஆன்மாவுக்குகில்லை. ஆன்மாவின் வினைக்கேற்ப தனு, கரண, புவன, போகத்தை வழங்க ஒருவன் தேவை அவனே இறைவன். ஆவன் “உளன் உனர” என்பது ஆத்தவாக்கியம் வேதாகமப் பிரமாணம். இது இறைவன் இருப்பதை உணர ஆதாரமானவை.
“அவன் அவள் அது எனும் அவை
முவினைமையின் தோன்றிய திரிபே
ஒடுங்கி மலத்துளதாம் அந்தம் ஆதி என்மனார் புலவர்” “சிவஞானபோதம்” முதல் சூத்திரத்தில் இறைவனிருப்பை நிரூப்பிக்கின்றார். இது போன்று “சிவஞான சித்தியார்” “ஒருவனோடு ஒருத்தியென்றத்தி யொன்றை யென்றுரைத்திரு மூலகமெல்லாம் வருமுறை வந்து நின்று போவது மாதலாலே தருவனொருவன் வேண்டும்”;என்று குறிப்பிடுகின்றார்.
கடவுளின் குணங்களை குறிப்பிடுகையில் வேதங்கள் இரு குணங்களை குறிப்பிடுகின்றது. ஓன்று பொது நிலைக்குணம் அதாவது எண்குணத்தான் என்பது. மற்றையது சிறப்பு நிலைக்குணம் அதாவது இறைவன் நிர்க்குணன். எனக் குறிப்பிடுகின்றது. சைவசித்தாந்தம் நிற்குண குணம் குறியற்ற சொரூபநிலை இறைவனைப் பற்றியே கூறுகின்றது. சொரூபநிலை என்பது அருவம், உருவம், அருவுருவத்துக்கு அப்பால்பட்ட ஒரு அடையாளமும் இல்லாத மனம், வாக்குக்கு அப்பால்பட்ட குணம் குறிக்கு அப்பால்பட்டவராய் ஆனந்தகுறியால் மலரகிதராய் ஓராதாரமும் மில்லாதவராய் பசுபாசஞானத்தால் அறிதற்கரியராய் ஒருகாலமும் சலிப்பற்றவராம் உவமை இல்லாதவராய் ஞானமாய் ஆதிசுக்குவமாய் விருப்பு வெறுப்பில்லாதவராய் பரம்சோதியாய் மூவகை ஆன்மாக்களுக்கும் முத்திதாரகராய் இருப்பவர். ஏனக் குறிப்பிடுகின்றனர். இதனை கந்தப்புராணத்தில் “ஊரிலான் குணங்குறியிலான் செயலிலான் னுரைக்கும் பேரிலானொரு முன்னிலான் பின்னிலான் பிறிதோர் சாரிலான் வரல் போக்கிலான் மேலிலான் நேரிலான் னுயிர்க் கடவுளாறனக்கு யென்னுளே நிற்கின்றான்”
பிறவாமை என்பது அத்மா அனாதியில் எப்படியானதோ அந்த நிலையை அடைவதே ஆகும். அது பிறப்பெனும் நிலையை அடைந்து ஆன்மாவின் உண்மை நிலையை மறந்து உலகியலில் உளன்று அசத்தில்லிருந்து சத்தாகி சத் ,சித், ஆனந்தத்தில் நிலைத்தலே பிறவாமை அதற்கு மீண்டும் பிறப்பில்லை. “இரத்தினக்கல்லின் மேல் சாணம் விழுந்தால் இரத்தினக்கலின் ஒளி வெளியில் தெரிவதில்லை” அதானால் என்ன இரத்தினக்கல்லின் ஒளி மங்கிவிட்டதா? இல்லை. அதன் தன்னையை இரத்தினக்கல் இழந்துவிட்டதா? அதுவும் இல்லை. எப்போது சாணம் அதில் மேல்லிருந்து நீக்கப்படுகின்றதோ அப்போது அதன் தன்மை மாறாத ஒளிமிக்க அக் கல் “அப்பழுக்கு மாறாது மீண்டும் பெறப்படுகின்றது”. இதுவே பிறவாமை.
பிறந்ததும் அன்னை உலகியலை பாலூட்டும் போதே சேர்த்தே ஊட்டுகின்றாள். அன்னையை மகாமாயை என்று குறிப்பிடுகின்றனர். தனு, கரண, புவன, போகத்தை அவர்அவர் வினைக்கேற்ப கொடுத்து அனுபவிக்க வைத்து அதன் விழைவை உணர்தி விடுதலை கொடுப்பவள்.
குருதேவர்; ஸ்ரீ இராமகி~;ண பரமஹம்சர் காசியாத்திரை சென்ற போது கங்கைக்கரையில் அமந்து தியானத்தில் திளைத்த போது கங்கைகரையில் இறந்தவர்களை தகனம் செய்யும் மயானத்தில் முத்திக்கு வழிகாட்ட அப்பன் காதில் மூலமந்திரத்தை ஓத அம்மை மோட்சத்துக்கு வழிகாட்டுவதை தாம் கண்டதாக குறிப்பிட்டுள்ளார். எனவே அன்னையே முத்திக்கு வழிகாட்டுபவள். சப்தரி~pகள், மக~pசிகள், சித்தர்கள், ஆதி சத்தியின் மூலமே பெறுபெற்றனர்

ஸ்படிக மாலை

ஸ்படிகம்.!

ஸ்படிக மாலை பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது. மிகவும் குளிர்ச்சியான பிரதே சங்களில் வசிப்பவர்களும், குளிர்ச்சியான உடல் நிலை கொண்டவர்களும் ஸ்படிகம் அணிவதைத் தவிர்க்கவேண்டும். மற்றவர்கள் யார் வேண்டுமா னாலும் அணியலாம்.

ஸ்படிக ...மாலையை ஒருவர் அணிந்த பின் மற்ற வர்கள் மாற்றி அணியும் போது தண்ணீருக்குள் குறைந்தது 3 1/2 மணி நேரமாவது ஊறவிட வேண்டும். மற்ற ரத்தின உபயோகத்திற்கும் ஸ்படிக மாலை உபயோகத்திற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. ஸ்படிகத்தைத் தவிர மற்ற அனைத்து ரத் தினங்களையும் இரவில் அணியலாம். ஆனால் ஸ்படிகத்தைக் கண்டிப்பாக இரவில் அணியக்கூடாது. காரணம், அது உப ரத்தின வகையைச் சார்ந்தது மட்டுமல்ல. தானாகத் தன் அதிர்வுகளை வெளியேற்றும் சக்தி ஸ்படிகத்திற்குக் கிடையாது என்பதும்தான். காலையில் இருந்து இரவு வரை ஒருவர் ஸ்படிக மாலை அணியும் போது அவரது உடற்சூட்டை இந்த ஸ்படிகம் தன்வசம் இழுத்துக் கொள்ளும். காலையில் ஒருவர் ஸ்படிகத்தை அணியும் முன் அது குளிர்ச்சியாகவும் இரவில் அதை கழட்டும்போது உஷ்ணமாக இருப்பதைக் கொண்டு இதை நீங்கள் உணரலாம்.

இந்த ஸ்படிக மாலையை இரவில் கழற்றித் தரையில் வைக்க வேண்டும். அப்போது பூமியின் ஈர்ப்பு சக்தியினால் மறுபடியும் ஈர்ப்புப் பெறும். தினமும் இதைச் செய்ய வேண்டும். அந்த தரு ணத்தில் உங்கள் மன, உடல் அழுத்தம் குறை வதை நீங்கள் உணரலாம். எத்தனை நாட்க ளுக்கு அணிந்தாலும் அதன் சக்தி குறையவே குறையாது.

ஸ்படிகத்தை நேரடியாகவோ, வெள்ளி அல்லது தங்கத்துடன் இணைத்தோ அணியலாம். வீட்டிற்கு ஒரு ஸ்படிகமாலை இருந்தாலே போதும். அதிக உஷ்ணம் உள்ள குழந்தைகள் ஸ்படிகத்தை அரைஞாணில் அணியலாம். இவ்வளவு அற்புத மான ஸ்படிகத்தை மற்றவர்களுக்குப் பரிசாகவும் கொடுக்கலாம். ஸ்படிக விநாயகர், சிவலிங்கம் போன்றவற்றை நமது பூஜை அறையில் வைத்து பூஜிக்கும் போது ஈர்ப்பு சக்தி நன்றாக இருக்கும். வாரம் இருமுறையாவது அபிஷேகம் செய்யும் போது அதன் சக்தி அப்படியே இருக்கும்.

ஸ்படிகத்தில் மிகச் சக்தி வாய்ந்தது, மகா மெகரு. இந்த மெகரு ஸ்படிகத்தை வாங்கும்போது வெடிப்பு, உடைப்பு இல்லாமல் உள்ளதா என்று சுத்தமாகப் பார்த்த பின் வாங்க வேண்டும். மகா மெகருவை வெள்ளி அல்லது தாமிரத் தட்டிலோ வைத்து பூஜை அறையில் வைக்க வேண்டும். அதற்கும் அபிஷேகம் மிகவும் முக்கியம். ஸ்படிகத்தை யானை வடிவில் வைக்கும்போது லஷ்மி கடாட்சம் வரும். இவ்வளவு அற்புதங்கள் அடங்கிய ஸ்படிகத்தை அனைவரும் உபயோகித்துப் பயன் அடைவீர்களாக.
Mehr anzeigen

யாராவது உன் தாயைப் பழித்தால் நீ என்ன செய்வாய்?'

யாராவது உன் தாயைப் பழித்தால் நீ என்ன செய்வாய்?'
சுவாமி விவேகானந்தர்..
சூயஸ் கால்வாய் வழியாக இந்தியா திரும்பிய சுவாமிஜி வந்த கப்பலில் இரண்டு பாதிரிகள் பயணம் செய்தனர். சுவாமிஜியுடன் வாதம் செய்து, கிறிஸ்தவ மதத்தின் மேன்மையை நிலைநாட்ட அவர்கள் விரும்பினர். ஆனால் சுவாமிஜியுடன் பேசிய போது நிலைமை விபரீதமாகியது. அவர்கள் தோற்கத் தொடங்கினர். அவருடன் பேசி வெற்றி காண முடியாது என்பதை அறிந்து கொண்ட அவர்கள் இந்து மதத்தைத் தாக்கிப் பேச ஆரம்பித்தனர். இழிவாகப் பேசினர். சுவாமிஜி பொறுமையாக அனைத்...தையும் கேட்டுக் கொண்டிருந்தார். அவர்களின் ஏச்சும் ஏளனமும் எல்லை மீறிய போது மெதுவாக எழுந்தார்.
நேராக ஒரு பாதிரியின் முன்னால் சென்றார். திடீரென்று அவரது சட்டையைப் பற்றிப் பிடித்து, வேடிக்கையாக ஆனால் அழுத்தமாக, 'இன்றும் ஏதாவது சொன்னால் அப்படியே தூக்கிக் கடலில் போட்டு விடுவேன்' என்றார். பாதிரிகள் நடுங்கிப் போய்விட்டனர். சுவாமிஜியின் பிடியில் சிக்கியவர் பயந்துபோய், 'விட்டுவிடுங்கள். இனி எதுவும் சொல்ல மாட்டேன்' என்று கூறினார். அந்தப் பாதிரி அதன்பிறகு சுவாமிஜியிடம் மிகுந்த மரியாதையுடன் நடந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியைப் பின்னாளில் பிரிய நாத் சிங்கரிடம் கூறிவிட்டு அவரிடம், 'மகனே, யாராவது உன் தாயைப் பழித்தால் நீ என்ன செய்வாய்?' என்று கேட்டார். அதற்குப் பிரியநாத், 'அவனைவிட மாட்டேன், அவனுக்கு பாடம் புகட்டுவேன்' என்றார்.
'சரியாகச் சொன்னாய். அதே உணர்வு நமது இந்தியத் திருநாட்டின் உண்மைத் தாயான உன் சொந்த மதத்திடமும் உனக்கு இருந்திருக்குமானால் ஓர் இந்து சகோதரன் கிறிஸ்தவனாக மதமாற்றம் செய்யப்படுவதை நீ ஒருபோதும் சகித்துக் கொண்டிருக்க மாட்டாய். ஆனால் உன் கண்முன்னே மதமாற்றம் தினமும் நடந்து கொண்டிருக்கிறது.நீஅதைப் பற்றி கவலைப்படாமல் இருக்கிறாய். எங்கே உன் நம்பிக்கை? எங்கே உன் தேச பக்தி?
உன் கண்முன்னாலேயே கிறிஸ்தவப் பாதிரிகள் இந்து மதத்தை இகழ்ந்து பேசுகின்றனர். மதமாற்றம் செய்கின்றனர். இதைத் தடுக்க தவறை எண்ணி எத்தனை பேரின் ரத்தம் கொதிக்கிறது?' என்று கேட்டார் சுவாமிஜி.

வினை

வினை இந்து தத்துவங்கள் குறிப்பிடும் பிறவிக்குக் காரணமான விடயமாகும். அதாவது, ஒருவர் செய்யும் செயல்களே வினை என்று அறியப்படுகின்றது. அவரவர் செய்யும் செயல்களின் தன்மைகளுக்கேற்ப நல்வினை, தீவினை என கணிக்கப் பெறுகின்றன. நல்வினை செய்தவர் நற்பிறவியை அல்லது சொர்க்கத்தினையும், தீவினை செய்தவர் இழிவான பிறவியை அல்லது நரகத்தினையும் அடைவர் என்று இந்து இலக்கியங்கள் கூறுகின்றன.
உபநிடதங்கள் நல்வினை நெய்தவன் நல்ல கர்ப்பையிலும், தீவினை புரிந்தோர் நாய், பன்றி, சூத்திரர் முதலான இழிவான கர்ப்பையிலும் சென்று பிறப்பர் என்று கூறுகின்றனக.
பௌத்த தத்துவங்களும் வினை பற்றிக் குறிப்பிடுகின்றன. பௌத்தத்தில் கம்மா என இவை அழைக்கப்படுகின்றன.
வினைகளைத் துறக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். ஆனால், ஒரு கட்டத்தில் எண்ணம் கூட வினைதான் என்றும் சொல்கிறீர்கள். எண்ணாமலும், எந்த வித செயலையும் செய்யாமலும் ஒரு மனிதன் எப்படி இந்த உலகில் வாழ முடியும் ? ஒரு வேளை யோகிகள் வேண்டுமானால் அப்படி வாழ்ந்து விடக் கூடும். நம்மைப் போல சராசரி மனிதர்கள் அப்படி வாழ முடியாதே ? பிறகு என்றுதான் வினைகளைக் கடப்பது ? எப்போதுதான் உண்மையை உணர்ந்து மேன்மையை அடைவது ? என்று ஒரு தோழி அருமையான கேள்வியை முன் வைத்தார்கள். வினைகளைக் கடப்பது என்பது நடைமுறை வாழ்க்கையில் சாத்திமில்லாத விஷயமாகும். இந்த மொத்த பிரபஞ்சமும் இயங்கி வினை புரிந்து கொண்டேயிருக்கும் போது, அதிலுள்ள நாம் மட்டும் எப்படி எந்த வித வினையும் புரியாமல் உயிர் வாழ முடியும் ? இதற்கு வியாஸ பகவான் மகாபாரதத்தில் கீதை மூலமாக விளக்கம் தருகிறார். அதாவது செயல்களைத் துறப்பது, செயல்களைச் செய்வது இந்த இரண்டுமே மனிதனை முக்திக்கு இட்டுச் செல்பவைதான். இதில் செயல்களைத் துறப்பதை விடச் செயல்களைச் செய்வதே விரைவில் மேன்மையடையச் செய்யும் என்கிறார்.
இது என்னடா இது புதுக் கதை. வினையற்று இரு, வினைகளைக் கடந்து விடு என்றெல்லாம் சொல்லி விட்டு, இப்பொழுது வினைகளைச் செய்பவன்தான் விரைவில் மேன்மையடைவான் என்று சொல்கிறாரே என்று மனதில் கேள்வி எழத்தான் செய்யும். இங்கே இவ்வளவு சௌகரியங்கள் இருந்தும் அத்தியாவசியத் தேவைகளை அடைவதே போராட்டமாக இருக்கிறது. எல்லாவற்றையும் துறந்து வனத்தில் போய் இருக்கும் துறவி வினையாற்றாமல் எதையும் அடைய முடியாதே ? என்றெல்லாம் பல விதமான கேள்விகள் எழுவது நியாயம்தானே. துறவு என்பது என்ன ? இன்ப, துன்பங்கள் என்ற பற்றுகளைப் பந்தங்களைத் துறப்பது. விருப்பு வெறுப்புகளைக் கடப்பது . இதுவே துறவுக்கான கோட்பாடு. அதாவது ஒரே நாளில் எல்லாவற்றையும் துறந்து விட்டு வினையற்று யாராலும் இருக்க முடியாது. ஆனால், ஒரு வினை செய்யப்படும் போது அதன் தொடர்ச்சியாக மேலும் வினைகளையும், எண்ணங்களையும், துக்கங்களையும் உருவாக்குகிறது என்றால், அதைத் துறக்க வேண்டும் என்பதே நுட்பம். வினைகளை வளரவொட்டாமல் வேரறுக்கும், மனதை அமைதிப்படுத்தும் விதமான, சாத்வீகமான வினைகளையே செய்ய வேண்டும் என்பதே துறவுக்கான கோட்பாடு.
எனவே முதலில் செயல்பட வேண்டும். அதன் மூலமாக மனதைத் தூய்மைப்படுத்த வேண்டும். அதற்குப் பிறகு உடலிலுள்ள புலன்களையும் வசப்படுத்த வேண்டும். அதன் மூலமாக உலகம் முழுவதும் ஆன்மாவாக விளங்குபவனே தன்னுள்ளும் ஆன்மாவாக விளங்குகிறான். அவன் வேறு நாம் வேறு அல்ல என்றத் தெளிவைப் பெற வேண்டும். இந்தத் தெளிவை ஒருவர் பெற்று விட்டார் என்றால், அவர் செயல்கள்களும், நோக்கமும் எப்படிப்பட்டதாக இருக்கும் ? செயலுக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு எப்படிப்பட்டதாக இருக்கும் ? தெளிவடைந்த யோகியின் செயலானது பலனை எதிர்பார்த்துச் செய்யப்படுவதாக இருக்காது. அதில் சுயநலம் துளியும் இருக்காது. அவருக்கும், அவருடைய செயலுக்குமான பந்தம் தாமரை இலைக்கும், தண்ணீர்க்குமிடையே உள்ள பந்தத்தை ஒத்ததாகவே இருக்கும். எனவேதான் வியாஸர் இந்த துறவு நிலையை கர்ம யோகம் என்கிறார். இந்த யோக நிலையை அறிந்து உணர்ந்து கடைபிடிப்பவர் எதையும் தான் செய்யவில்லை என்றுதான் எண்ணுவார். அவர் பார்பார், தொடுவார், கேட்பார், உண்பார், நடப்பார், நிற்பார், ஓடுவார், மூச்சு விடுவார், தூங்குவார் எல்லாம் செய்வார். ஆனால் , இவையனைத்தையும் உடல்தான் சரிவரச் செய்கிறது, தான் செய்யவில்லை என்றே எண்ணுவார்.
இப்படிச் செயல்களோடு பந்தப்படாத மனநிலையில் உள்ளவரோடு வினைகள் பாதிப்பை விளைவிப்பது இல்லை. தாமரை இலையில் எப்படித் தண்ணீர் ஒட்டுவதில்லையோ அப்படி அவர் வினைகள் மனதில் பதிவதில்லை. எனவே வினைத் தொடர்ச்சி என்பது அவருக்கில்லை என்பது கோட்பாடு. உள்முகமாக விளங்கி வினைகளோடு பந்தங்களை உருவாக்கிக் கொள்வது மனம்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதற்கான காரணம் பலன் மீது கொள்ளும் பற்றே. பலன்களைப் பற்றிக் கருத்தில் கொள்ளாதவருடைய மனமானது செயல்களைப் பற்றுவதில்லை. அவரைப் பொருத்தவரை உடல், மனம், அறிவு மற்றும் ஐம்புலன்கள் மீது பற்று வைக்காமல், ஆத்மாவில் மறைந்திருக்கும் முன் வினைப்பதிவுகளை களைவதற்காகவே செயல்களைச் செய்வார். இப்படி கர்மத்தையே யோகமாகக் கொண்டவர் பலன் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஆதலால் அவர் மனம் எப்பொழுதும் தெளிந்த நீரோடை போல் சலனமற்று அமைதியாக விளங்குகிறது. எனவே தெளிந்த நீரோடையில் எப்படி ஆழத்தில் உள்ள பொருட்கள் தோன்றுகின்றதோ, அதுபோல தெளிவடைந்த அமைதியான மனதில் ஆழ்மனமான ஆத்மா பிரிதிபலிக்கிறது. உள்ளுக்குள் இருக்கும் ஆன்மாவை உணர்ந்து அதில் திளைத்தவர், வெளி உலகக் காரியங்களில் பற்றில்லாமல் அழிவே இல்லாத சுகத்தை அனுபவிப்பவராக வாழ்வார். பிரம்மத்தில் கலந்து பிரம்மமாகி விட்டவரை எந்த வினைகளும் தொடர்வதில்லை. அவர் எப்பொழுதும் பரிசுத்மானவராகவே விளங்குவார்.