Monday, April 7, 2014

தாய் தன் குழந்தையுடன் சேர்ந்து சாப்பிடலாமா?

எப்பொழுது ஓர் அம்மா தம் குழந்தைகளுடன் அமர்ந்து சாப்பிடுகிறார்களோ அவர்களுக்கு உணவு ஒழுங்காக ஜீரணமாவது கிடையாது. என் குழந்தையுடன் நான் அமர்ந்து சாப்பிட்டால் எனக்கு எப்படி ஜீரணம் ஆகாது என்று தாய் கேட்கலாம். ஓர் அம்மா தம் குழந்தையுடன் அமர்ந்து சாப்பிடும் பொழுது அவர் தம் உணவில், கவனம் செலுத்துவதை விட்டு விட்டு குழந்தையை மட்டுமே கவனித்துக் கொண்டிருப்பார். குழந்தையை அதட்டுவார். சாப்பிடும்போது பேசாதே; கறிவேப்பிலையைச் சாப்பிடு; ஒழுங்காக உட்கார்ந்து சாப்பிடு; சட்னி தொட்டுக் கொள், கீழே கொட்டாதே இப்படி அந்தக் குழந்தையைக் கவனித்துக் கொண்டு அல்லது குழந்தைக்கு ஊட்டிக் கொண்டு ஒரு தாய் தானும் சாப்பிட்டால் குழந்தை நன்றாக இருக்கும். ஆனால் தாயின் உணவு ஒழுங்காக ஜீரணம் ஆகாது. எனவே தாய்மார்கள் முதலில் உங்கள் குழந்தைக்கும், உங்கள் வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்களுக்கும் பரிமாறி விட்டு அவர்கள் திருப்தியாக சாப்பிடுகிறார்களா என்று கவனித்து விட்டு சந்தோஷமாக நீங்கள் தனியாக உட்கார்ந்து சாப்பிடுங்கள். எனவே ஒரு தாய் தம் குழந்தைகளுடன் உட்கார்ந்து சாப்பிடக் கூடாது. மேலும் மற்றவர்களுக்குப் பரிமாறிக் கொண்டே சாப்பிடக்கூடாது. அப்படிச் சாப்பிடும் பொழுது கவனம் தம் உணவை விட்டு விலகி மற்றவர்கள் ஒழுங்காகச் சாப்பிடுகிறார்களா என்பதிலேயே இருப்பதால் நம் உணவு ஒழுங்காக ஜீரணம் ஆவதில்லை. கைக்குழந்தையை வைத்துக் கொண்டிருக்கும் தாய்மார்கள் அந்தக் குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு கொஞ்சிக் கொண்டே இவர்களும் சாப்பிடுவார்கள். அப்படிச் சாப்பிடக்கூடாது. சில குழந்தைகள் நாம் சாப்பிடும் போது பக்கத்தில் வந்து தொந்தரவு செய்து கொண்டேயிருப்பார்கள். அப்பொழுது அந்தக் குழந்தையுடன் கொஞ்சிக் கொண்டே அல்லது விரட்டிக் கொண்டோ மிரட்டிக் கொண்டோ அதட்டிக் கொண்டோ நீங்கள் சாப்பிடும்போது உங்கள் உணவு ஜீரணம் சரியாக நடப்பதில்லை. எனவே கைக்குழந்தையை வைத்துக் கொண்டிருக்கும் அம்மாக்கள் அந்தக் குழந்தையை மாமியாரிடமோ அல்லது யாரிடமாவதோ கொடுத்து விட்டுச் சாப்பிடும் அந்த ஐந்து நிமிடங்கள் உங்கள் சாப்பாட்டை மட்டுமே கவனித்துச் சாப்பிடுங்கள். வாழ்வோம் ஆரோக்கியமாக!

No comments:

Post a Comment