Thursday, May 29, 2014

வீட்டில் செல்வம் பெருக ஐஸ்வர்ய கோலம்

அட்சய திருதியை தினத்தன்று ஐஸ்வர்ய கோலம் போட்டு பூஜை செய்வது நல்லது. இந்த கோல பூஜை மூலம் அனைத்து செல்வங்களும் உள்ள உன்னதமான வாழ்க்கை கிடைக்கும் என்பது ஐதீகம். ஐஸ்வர்ய கோலம் சக்தியின் ரூபத்தை காட்டுவதோடு மட்டுமின்றி, சிவனின் கோலத்தையும் (காட்சி) நமக்குக் காட்டுகின்ற கோலமாகும்.
வீட்டில் செல்வம் பெருக ஐஸ்வர்ய கோலம்
ஐஸ்வர்ய கோலத்தின் நடுவில் உள்ள நாற்கோணங்களைப் பாருங்கள். மேலும் கீழும் சிவசக்தியாக ஈஸ்வரர் நின்றிருக்க, இருபுறமும் மற்ற இரு மூர்த்திகளான பிரும்பாவும், விஷ்ணுவும் தத்தம் பத்தினிகளுடன் நிற்பதைக் காட்டும் பகுதி அது.

அந்தக் கோலத்தில் உள்ள ஈஸ்வரனின் இதயத்தில், சக்தியின் ஒரு அம்சமான லட்சுமி தேவி அமர்ந்திருந்து பக்தர்களுக்கு ஐஸ்வர்யத்தைத் தருவது என்ற ஐதீகத்தை இந்த கோலம் காட்டுகிறது. பூஜை அறையில் ஐஸ்வர்ய கோலத்தை மாட்டி வைத்து 45 நாட்கள் அதன் முன் நெய் விளக்கேற்றி பிரார்த்தனை செய்ய வேண்டும்.

ஒருநாள் கூட இடைவிடாமல் இந்த பூஜையை செய்து முடித்தால், நீங்கள் நினைத்தது நடக்கும். தேய்பிறை போல நம்முடைய பிரச்சினைகள் மறையத் தொடங்கும். பவுர்ணமி அன்று பிரார்த்தனையை ஒரு காகிதத்தில் எழுதி அதை மடித்து வைத்து விட வேண்டும்.

பிரார்த்தனை எழுதி வைக்கப்பட்டுள்ள காகிதத்தினால் ஐஸ்வர்ய கோலத்தை ஒருமுறை தொட்டுவிட்டு, சுவாமி பீடத்தில் ஒரு இடத்தில் வைத்து விட வேண்டும். அதன்பின் ஒரு நெய்விளக்கை ஏற்றி, ஐஸ்வர்ய கோலத்திற்கு முன் அதைக்காட்டி விட்டு சாமி அறையில் வைத்து விட வேண்டும்.

பிறகு நமக்குத் தெரிந்த லட்சுமி துதியைச் சொல்லி, நம்மால் இயன்ற ஒரு சிறிய நைவேத்தயத்தைச் செய்யலாம். தொடர்ந்து 45 நாட்கள் இவ்வாறே பிரார்த்தனை எழுதப்பட்டுள்ள காகிதத்தால் ஐஸ்வரியக் கோலத்தை ஒருமுறை தொட்டுவிட்டு நெய் விளக்கை ஏற்றி அதை ஐஸ்வர்யக் கோலத்திற்கு முன் காட்டி விட்டு வைத்து விட வேண்டும்.

முடியாத தினங்களில் வேண்டுதல் எழுதி வைக்கப்பட்டுள்ள காகிதம் மாற்றப்படுவதில்லை என்பதால், வீட்டில் உள்ள வேறு எவர் வேண்டுமானாலும் அதைத் தொடர்ந்து செய்யலாம்.

ஆனால் 45 நாட்கள் தொடர்ந்து அதைச் செய்ய வேண்டும். அட்சய திருதியை அன்று இப்பூஜையைச் செய்வது மிகவும் விசேஷம். அன்று மட்டுமோ அல்லது அன்றிருந்து 45 நாட்களுமோ செய்யலாம். இப்படிச் செய்வதால் வீட்டில் செல்வம் பெருகும். மகிழ்ச்சி தாண்டவமாடும்.

No comments:

Post a Comment