Thursday, May 29, 2014

நரசிம்மரை வழிபடுவது எப்படி?

ஸ்ரீநரஸிம்மனுடைய அவதாரத் தோற்றம், சிம்ம முக உருவில் பயங்கரமாகவும், பக்தனான குழந்தை பிரகலாதனுக்கு இரணிய கசிபு இழைத்த கொடுமைகளினால் உக்கிரமான கோபம் கொண்டவனாகவும் சேவை சாதிப்பதால், அவனைப் பூஜிப்பது கடினம் என்று பலர், தவறான கருத்தைக் கொண்டுள்ளனர்.

தனக்கு அபசாரம் செய்தவர்களை அவன் பொறுத்துக் கொள்வான். ஆனால் தனது பக்தர்களுக்கு அநீதி செய்பவர்களைப் பொறுத்துக் கொள்ள அவனால் முடியாது. ஏனெனில் தன்னை நம்பும் பக்தர்களிடம் அத்தனை அன்பும், கருணையும் அவனுக்கு.

ஆதலால்தான் ``பக்தவத்ஸலன்'' என்ற திருநாமம் கொண்டவன் அவன், அதாவது, தன் பக்தர்களுக்குக் குழந்தை போன்றவன் என்பது பொருள். நம்மிடம் அளவற்ற கருணை கொண்ட ஸ்ரீ நரஸிம்மனிடம் பயம் ஏன்? திருமலையின் எழுந்தருளியுள்ள வேங்கடத்து இன் அமுதனின் ஆராதனை மணியின் அம்சமாக அவதரித்தவரும், மகாபுருஷருமான ஸ்ரீஸ்வாமி வேதாந்த தேசிகரும், ஸ்ரீநரசிம்மன் தனது பக்தர்களிடம் வைத்துள்ள கருணையைப் பற்றி, மனம் உருகிப் போற்றியிருக்கிறார்.

ஸ்ரீநரசிம்மனை பூஜித்து வழிபடுவது மிகவும் சுலபம். அனைவருக்கும் அவன் எளிதானவன். முற்பிறவித் தவறுகளின் பலனாக ஏற்படும் மிகக் கொடிய துன்பத்தையும் ஒரு நொடியில் போக்கி அருளக் கூடிய பேரருளாளன். ஆதலால், ஸ்ரீலட்சுமி நரசிம்மனைக் கிரக தோஷப் பரிகாரமாக எவரும் வழிபடலாம். அதற்கு உடனடியாகப் பலனும் காண முடியும்.

தினமும் ஸ்ரீலட்சுமி நரசிம்மனின் படத்தை வைத்து, நெய் தீபம் ஏற்றிக் குறைந்தது 12 முறையாவது வலம் வந்து வணங்க வேண்டும். வணங்கிய பிறகு வெல்லத்தினால் செய்த பானகம் அமுது செய்விக்க (நைவேத்தியம்) வேண்டும். 48 நாள்களாவது பூஜித்து வர வேண்டும். மாலை நேரத்தில் செய்வது விசேஷப் பலன் தரும்.

ஏனெனில் அவன் நரசிங்கமாக அவதரித்து மாலை நேரத்தில்தான். ஆனால் ஒன்று, ஸ்ரீலட்சுமி நரசிம்மன் மட்டுமன்றி, தெய்வத்தின் எந்த உருவையும், கிரமதோஷப் பரிகாரமாகப் பூஜித்து வரும் காலத்தில், புலால் உணவைத் தவிர்ப்பதும், நீராடி, நியமத்துடனும், தூய்மையாக உள்ளத்துடனும் நம்பிக்கை, பக்தியுடனும் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். இவ்விதம், வழிபட்டு வந்தால், கொடிய, நீண்டகாலத் துன்பமும் நீங்கும்.

No comments:

Post a Comment