Monday, June 16, 2014

குருவுக்கே குரு!

ரங்கநாதர் மீது பக்தி கொண்ட ஒருவருக்கு வாழ்வே வெறுத்துப் போனது. வாழ்வில் ஏற்பட்ட கஷ்டநஷ்டம் விரக்தியை உண்டாக்கியது.
துறவி ஒருவரை நாடிச் சென்று தன்னை சீடனாக ஏற்கும்படி வேண்டிக் கொண்டார். அவரும் ஏற்று அருள்புரிந்தார்.
குருவும் சீடனுமாக காவிரிக் கரையோரம் உள்ள வயல் வரப்பில் நடந்து சென்றனர்.
காவிரியில் தண்ணீர் இல்லாமல் வயல் வறண்டு கிடந்தது. வழியில் ஒரு விவசாயி மாட்டுக்குப் புல் அறுத்துக் கொண்டிருந்தான். அவனைக் கண்ட குரு, ""ஏனப்பா! நிலமெல்லாம் வறண்டு கிடக்கிறதே! இந்த வருஷம் விளைச்சல் இல்லாததால் நஷ்டம் தானே!'' என்று கேட்டார்.
விவசாயி அவரிடம்,""என்ன சாமி செய்றது! நம்மையெல்லாம் அரங்கன் பார்த்துக்குவான் '' என்று கை குவித்து நின்றார்.
அவரைச் சீண்டும் எண்ணத்துடன்,"" வாழ்வில் இத்தனை கஷ்டம் வந்தும், அரங்கன் பார்த்துக்குவான் என்கிறாயே? இன்னும் அந்த பெருமாளை ஏன் கும்பிடுகிறாய்?'' என்றார்.
விவசாயி மலர்ந்த முகத்துடன் சிரித்தான்.
"" சாமி! கடந்த காலத்தில் எல்லாம் காவிரி கரை புரண்டு ஓடுச்சு. விளைச்சல் அமோகமாய் இருந்தது. பெருமாள் அப்போ அள்ளிக் கொடுத்தார். பஞ்சகாலமான, இப்போது கொஞ்சமா கிள்ளிக் கொடுக்கிறார். லாபத்தை ஏற்றுக் கொண்ட நாம், நஷ்டத்தையும் ஏற்கத்தானே வேண்டும்,'' என்றான்.
குருவுக்கே பாடம் போதித்த குருவாகத் தெரிந்தான் அந்த விவசாயி.

No comments:

Post a Comment