Monday, June 16, 2014

படிக்காத பாவலர்

திருச்செந்தூர் முருகன் கோயில் மடப்பள்ளியில் சுவாமிக்கு நைவேத்யம் தயாரிக்கும் பணியில் முதியவர் ஒருவர் ஈடுபட்டிருந்தார். முருகன் மீது தீவிர பக்தி கொண்டிருந்த அவரால், வயது முதிர்வின் காரணமாக சரியான நேரத்திற்கு உணவு தயாரித்து தரமுடியவில்லை. அர்ச்சகர்கள் அவரிடம் கோபம் கொண்டு கத்தினர்.
முதியவர், முருகனிடம் தன் நிலை குறித்து புலம்பினார்.
ஒருநாள், அவர் மிகவும் தாமதமாக உணவு சமைத்து கொடுக்கவே, ஒரு அர்ச்சகர் கோபத்தில் அவரை கடுமையாகத் திட்டிவிட்டார். மனம் வருந்திய முதியவர், தன் உயிரை மாய்த்து விடுவதே மேல் என்றெண்ணி கடலுக்குள் இறங்கினார்.
அவர் கடலினுள் செல்லச்செல்ல நீர்மட்டம், அவரது முழங்காலுக்கு மேல் கொஞ்சம்கூட ஏறவில்லை. சற்று தூரம் சென்றதும், ""நில்லுங்கள்!'' என்று ஒரு குரல் கேட்டது. முதியவர் திரும்பிப் பார்த்தபோது, கரையில் ஒரு சிறுவன் நின்று கொண்டிருந்தான். அவன் முதியவரிடம், ""முதலில் கரைக்கு திரும்பி வாருங்கள். கடலில் மூழ்கி உயிரை விடும் அளவிற்கு உங்களுக்கு அப்படியென்ன கஷ்டம் வந்து விட்டது?'' என்றான்.
முதியவர் அவனிடம், தன் கவலைகள் அனைத்தையும் ஒரே மூச்சில் சொல்லி முடித்தார்.
சிறுவன் சிரித்தான்.
""உங்களுக்கு வேறு பணி இருக்கும் போது, எதற்காக மடப்பள்ளியில் வேலை பார்க்கிறீர்கள்?'' என்றான்.
முதியவர், ""எனக்கு சமையலைத் தவிர வேறு பணி எதுவும் தெரியாதே!'' என வருத்தத்துடன் சொன்னார்.
""நீங்கள் திருச்செந்தூரில் பல காலமாக இருக்கிறீர்கள். இந்த தலத்தின் புராணத்தை எழுதினால் என்ன?'' என்றான் சிறுவன்.
அந்த துன்பமான நிலையிலும் முதியவர் சிரித்து விட்டார்.
""என்ன இந்த தல புராணத்தை நான் எழுதுவதா? கல்வியறிவு இல்லாத எனக்கு அது எப்படி சாத்தியமாகும்?'' என்றார்.
""அதெல்லாம் இல்லை. நீங்கள் தலபுராணம் எழுத வேண்டும் என செந்தில் ஆண்டவன் விரும்புகிறான். அதற்கான ஊதியத்தை இதோ பிடியுங்கள். இனிமேல் நீங்கள் "வென்றிமாலை கவிராசர்' என்று அழைக்கப்படுவீர்கள்,'' என்று சொல்லி ஒரு பணமுடிப்பைக் கொடுத்தான்.
முதியவர் ஒன்றும் புரியாமல் நின்ற போது, வந்த சிறுவன் அழகே வடிவான செந்தில் வேலனாக சுயரூபம் காட்டி மறைந்தான்.
மகிழ்ச்சி அடைந்த வென்றிமாலை கவிராசர், கிருஷ்ண சாஸ்திரி என்பவரிடம் தல புராணத்தை விபரமாகக் கேட்டார்.
அதனை நூலாக எழுதினார். அதனை அரங்கேற்ற கோயிலுக்கு சென்றார்.
முருகன் தனக்கு காட்சி தந்ததையும், அவர் சொல்லியபடி நூல் இயற்றியதையும் அர்ச்சகர்களிடம் கூறினார். அங்கிருந்தவர்கள் யாரும் அதை நம்பவில்லை. அவரைக் கேலி செய்து விரட்டினர்.
கோயிலை விட்டு வெளியேறிய கவிராசர், தான் இயற்றிய நூலை கடலில் வீசி விட்டார்.
அடுத்த ஊரில் கரை ஒதுங்கிய அந்த புத்தகம் அங்கு வசித்த அறிஞர் ஒருவரிடம் சிக்கியது. அதனை படித்துப்பார்த்த அவர் வியப்படைந்து, அந்நூலை கோயிலுக்கு கொண்டு சென்று படித்துக் காட்டினார்.
நூலை எழுதியது வென்றிமாலை கவிராயர் என குறிப்பிடப்பட்டிருந்தது. அனைவரும் வியந்தனர். கவிராயரை வரவழைத்தனர். அவரை அவமதித்ததற்காக மன்னிப்பு கேட்டு, தகுந்த மரியாதை செய்தனர். செந்திலாண்டவன் முன்னிலையில் தல புராண அரங்கேற்றம் சிறப்பாக நடந்தது.
படிக்காதவரையும் பாவலராக்கிய செந்திலாண்டவனின் கருணையே கருணை

No comments:

Post a Comment