Monday, June 16, 2014

நீயே உனக்கு ஒளி!

புத்தர் வயோதிகத்தால் கனிந்த பழம் போலாகி விட்டார். அவருடைய இறுதி நாட்கள் நெருங்கிக் கொண்டிருந்தது. சீடர்களின் உதவியோடு தான் பணிகளைச் செய்ய முடிந்தது.
ஒருநாள், தளர்ந்த உடலுடன் படுத்த படுக்கையாகி விட்டார். அவரைச் சுற்றி சீடர்கள் அமர்ந்து கொண்டனர்.
தவவாழ்க்கை வாழ்ந்தாலும், பிரிவுத்துயர் யாரையும் அவ்வளவு எளிதில் விடுவதில்லை போலும்! சீடர்கள் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக் கொண்டாலும், கண்களில் நீர் பெருக்கெடுத்தது.
சீடர்கள், "" இந்த பூலோகத்தையே சொர்க்கம் ஆக்கிய குருவே! நீங்கள் இறக்கப் போவதை எங்களால் சகித்துக் கொள்ள முடியவில்லையே!'' என்று அழுதனர்.
மலர்ந்த முகத்துடன் புத்தர் கண்களை மெல்லத் திறந்தார்.
""ஏன் அழுகிறீர்கள்? முதலில் கண்ணீரைத் துடையுங்கள். நான் இதுவரை சொல்லிய எதையும் நீங்கள் புரிந்து கொள்ளவில்லை.
அது தான் பிரச்னையே!'' என்றார்.
தலைமைச் சீடரான ஆனந்தன் அவரிடம், ""குருவே! நீங்கள் எங்களை விட்டுப் போகப் போகிறீர்கள். நாங்கள் ஒளியை இழந்து இருளில் தவிக்கப் போகிறோம். நாற்பது வருடங்களாக தங்களின் நிழல் போல வந்தவன் நான். நீங்கள் போன பின் எப்படி தவிக்கப் போகிறோனோ? நீங்கள் இருக்கும்போதே கிடைக்காத ஞானம், இனி எப்போது எனக்கு வரப்போகிறது?'' என்று சொல்லி அழுதார்.
இன்னொரு சீடரான மஞ்சுஸ்ரீயைக் காட்டிய புத்தர், ""என்னை யாரும் நம்ப வேண்டாம். அதோ அந்த மரத்தடியில் அமர்ந்திருக்கும்
மஞ்சுஸ்ரீயைப் பாருங்கள். எப்படி அமைதியாக உட்கார்ந்திருக்கிறார். அவரிடம் சென்று கேளுங்கள்'' என்று சைகை காட்டினார்.
மஞ்சுஸ்ரீ அவர்களைப் பார்த்து புன்னகைத்தபடி எழுந்து வந்தார்.
""என்னுடைய ஒளியைத் தெரிந்து கொள்ள புத்தர் எனக்கு உதவி இருக்கிறார். அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இப்போது அழுவதற்கு ஒன்றுமில்லை. "நானே சாகப்போவதில்லை' என்று நன்றாகத் தெரிகிறது. அப்படி இருக்கும்போது, புத்தர் எப்படி சாக முடியும்? ஒருநாளும் அவர் சாக மாட்டார். நதி கடலுக்குள் கலப்பது போல, அவர் இந்த பிரபஞ்சத்துடன் கலக்கப் போகிறார். உடல் என்னும் சிறு கூட்டுக்குள் அடைபட்டுக் கிடந்த அவர், இன்று முதல் இயற்கையோடு இரண்டறக் கலந்து விடப் போகிறார் . ஆகாயத்து சூரியன், பறக்கும் பறவை, ஆர்ப்பரிக்கும் கடல் என எங்கும் நீக்கமற நிறைந்திருப்பார். இனி எங்கும் புத்தரைக் காணப் போகிறேன் என்பதால் மனதில் சாந்தமும், மகிழ்ச்சியும் தான் மேலிடுகிறது'' என்றார்.
புத்தர் மீண்டும், எல்லா சீடர்களையும் தன் அருகில் அழைத்தார்.
""அப்ப தீபோ பவ'' (நீயே உனக்கு ஒளி) என்று சொல்லி விட்டுக் கண்ணை மூடிய படி உயிர் துறந்தார்.
மஞ்சுஸ்ரீ மற்றவர்களிடம், ""ஆம்! புத்தர் நமக்குச் சொன்ன இந்த மந்திர வார்த்தையை ஒருபோதும் மறக்காதீர்கள். புத்தரின் நிலையை எண்ணினால் நீங்கள் அழ வேண்டியிருக்கும். உங்களுக்கு நீங்களே ஒளியாகி விட்டால், நீங்களே புத்தர் என்பதை உணர்ந்து விடுவீர்கள். அப்போது யாரும் யாருக்காகவும் அழ வேண்டியிருக்காது,'' என்று விளக்கம் அளித்தார்.

No comments:

Post a Comment