Monday, June 16, 2014

நல்லதை நினைப்போம்! நல்லதே நடக்கும்!

தியாகசீலர்களின் பெருமையை சுலபத்தில் அறிய முடியாது. மற்றவர்களால் அறிய முடியாதது மட்டுமல்ல! அவர்களின் சந்ததியாலேயே அறிந்து கொள்ள முடியாது. அவர்களின் தியாகத்திற்கு வேறுவிதமாகப் பொருள் கொண்டு, விபரீதமாக எண்ணிப் பழிக்குப்பழி என்று கிளம்புவதும் உண்டு.
அப்படிக் கிளம்பிய ஒருவரின் கதை தான் இது.
ததீசி முனிவர் என்பவர், தேவர்கள் நல்வாழ்வு பெற தன் முதுகெலும்பையே ஆயுதமாகக் கொடுத்து உயிர் தியாகம் செய்தவர். அவர் அந்த தியாகத்தைப் புரிந்தபோது, அவரது மகன் பிப்பலாதன் சிறுவனாக இருந்தான். அவன் இளைஞனான பிறகு, அவன் தாயார் நடந்ததையெல்லாம் விவரித்தார். அதைக் கேட்டு அவனுக்கு கோபம் வந்தது.
""ஆகா! என் தந்தையின் முடிவிற்குக் காரணமான தேவர்களை அழித்து விட்டுத் தான் மறுவேலை.... பழிக்குப் பழி'' என்று புலம்பிய பிப்பலாதன் சிவபெருமானை நோக்கிக் கடும் தவம் செய்தான். சிவனும் காட்சி கொடுத்தார். அவரை வணங்கிய பிப்பலாதன், ""சிவபெருமானே! தாங்கள் நெற்றிக் கண்ணைத் திறந்து, தேவர்களையெல்லாம் எரித்து அழிக்க வேண்டும்'' என வேண்டினான். அதற்கு சிவன், ""பிப்பலாதா! என் நெற்றிக் கண்ணைத் திறந்து எரித்தால் தேவர்கள் மட்டுமல்ல! உலகம் முழுவதுமே எரிந்து போய் விடுமே!'' என்றார்.
பிப்பலாதனோ,""உலகமே அழிந்தாலும் எனக்குக் கவலையில்லை. தேவர்கள் ஒழிய வேண்டும். அவ்வளவு தான்!'' என்றான்.
சிவன் சிரித்தபடியே மெல்ல மெல்ல நெற்றிக் கண்ணைத் திறந்தார். அதே விநாடியில். பிப்பலாதனுக்கு உடம்பெல்லாம் எரிவதைப் போலிருந்தது. எரிச்சல் தாளாத அவன், ""சிவபெருமானே! என்ன இது? தேவர்களை எரிக்கச் சொன்னால், என்னை எரிக்கிறீர்களே!'' எனக் கதறினான்.
சிவனோ,"" பிப்பலாதா! அழிவு என்பதை எங்காவது ஓரிடத்தில் இருந்து தான் தொடங்க வேண்டும். தேவர்கள் அழிய வேண்டுமானால், அவர்கள் எங்கு ஆவாகனமாகி இருக்கிறார்களோ, அங்கிருந்து தான் அவர்கள் அழியத் தொடங்குவார்கள்.
உன் உடம்பில் மனதின் தேவதை சந்திரன். மூக்கின் தேவதை அஸ்வினி குமாரர்கள். கையின் தேவதை இந்திரன். கண்ணுக்குரிய தேவதை சூரியன் என்று இருப்பதால், அந்தந்தப் பகுதிகள் உடம்பில் எரியத் தொடங்குகிறது என்பதை நினைவில் வை. அடுத்தவர்களுக்கு கெடுதல் நினைத்தால் முதலில் நமக்குத் தான் தீங்கு விளையும் என்பதை உணர்ந்து கொள்!'' என்றார்.
பிப்பலாதன் திருந்தினான்.
""சிவபெருமானே! தவறான வரம் கேட்ட என்னை மன்னித்து அருள்புரியுங்கள்'' என வேண்டினான்.
சிவன் நெற்றிக்கண்ணை மூடியதும் பிப்பலாதன் உயிர் பிழைத்தான். தேவர்களும் பிழைத்துக் கொண்டனர்.
நல்லதை நினைப்போம்! நல்லதே நடக்கும்!

No comments:

Post a Comment