Monday, July 21, 2014

இறைவனை நம்பினோர் கெடுவதில்லை

இறைவனை நம்பினோர் கெடுவதில்லை


கப்பல் ஒன்று கடலில் வழிதவறிச் சென்றது. அப்போது வீசிய புயலில் சிக்கி கப்பல் மூழ்கியது. அதில் ஒருவன் மட்டும் எப்படியோ தப்பி, அருகில் இருந்த தீவில் கரையேறினான். கரையேறிவன் இறைவனை மனமாற வேண்டினான்.

‘இறைவா! இங்கிருந்து எப்படியாவது என்னை தப்பிக்க வைத்துவிடு. ஆள் அரவமற்ற இந்த தீவில் எத்தனை நாள் நான் இருப்பது?. என் மனைவி மக்களை பார்க்கவேண்டாமா?’ என்று பிரார்த்தித்தான். ஏதாவது ஒரு ரூபத்தில் தனக்கு உதவிக்கரம் நீளும் என்று தினமும் எதிர்பார்த்து, எதிர்பார்த்து ஏமாந்து போனான்.

பல நாட்கள் சென்று விட்டன. தீவில் தன்னைக் காத்துக் கொள்ள, தீவில் கிடைத்த பொருட்கள் மற்றும் கப்பலின் உடைந்த பாகங்கள் போன்றவற்றைக் கொண்டு ஒரு சிறிய குடிசை ஒன்றை கட்டினான். குடிசையில் தன்னுடன் கரை ஒதுக்கிய பொருட்கள் மற்றும் உடைமைகள் சிலவற்றை மட்டும் பத்திரப்படுத்திக் கொண்டு, தானும் தங்கிக்கொண்டான்.

இப்படியே சில நாட்கள் சென்றன. அவன் இறைவன் மீதான பிரார்த்தனையை மட்டும் விடவில்லை. ‘கடவுள் ஏதாவது ஒரு ரூபத்தில் நமக்கு நிச்சயம் உதவுவார்’ என்று தன்னை தேற்றிக்கொண்டான். ஒரு நாள் இவன் உணவு தேடுவதற்காக வெளியே சென்றுவிட்டு திரும்புகையில், அவன் கண்ட காட்சி அவனை திடுக்கிட வைத்தது.

பட்ட காலிலே படும்’ என்பது போல துன்பத்திற்கு மேல் துன்பம் வந்து சேர்ந்தது. தங்குவதற்காக இருந்த ஒரே குடிசையும் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது. அதில் இருந்து வானுயரத்திற்கு புகை கிளம்பிக் கொண்டிருந்தது. குடிசைக்குள் இருந்த உடைமைகள் அனைத்தும் தீக்கிரையாகியிருந்தன. அதை பார்த்தவன் அலறித் துடித்தான்.

எல்லாம் போய்விட்டது. இவனிடமிருந்த ஒருசில பொருட்களும் கூட தீக்கிரையாகி விட்டன. ‘இறைவா! என்னை காப்பாற்றும்படி தானே உன்னை மன்றாடினேன். நீ என்னவென்றால் இருப்பதையும் பறித்துக் கொண்டாயே! இது தான் உன் நீதியோ?’ என்று கதறி அழுகிறான்.

மறுநாள் காலை ஒரு கப்பலின் சப்தம் அவனை எழுப்பியது. அவன் கரை ஒதுங்கி இருந்த தீவை நோக்கி அது வந்துகொண்டிருந்தது. ‘அப்பாடா! நல்ல வேளை! ஒரு வழியாக இங்கிருந்து தப்பித்தோம். யாரோ நம்மை காப்பாற்ற வருகிறார்கள்’ என்று உற்சாகத்தில் துள்ளி குதித்தான்.

கப்பல் சிப்பந்திகள் இவனை, படகில் வந்து அழைத்து சென்றார்கள். ‘நான் இங்கே தீவில் மாட்டிக் கொண்டிருப்பது எப்படி தெரியும்’ என்று கப்பல் சிப்பந்திகளிடம் கேட்டான். அதற்கு அவர்கள், ‘தீவில் ஏதோ பற்றி எரிந்து புகை எழும்பியதை பார்த்தோம்.

யாரோ தீவில் கரை ஒதுங்கி காப்பாற்ற வேண்டி சிக்னல் கொடுக்கிறார்கள் என்று நினைத்தோம்’ என்றார்கள். அந்த வழியில் கப்பல்கள் வருவதே மிக மிக அரிதான நிலையில், குடிசை மட்டும் தீப்பிடித்து எரியவில்லை என்றால் தன் நிலை என்னவாகியிருக்கும் என்று அவனுக்கு புரிந்தது.

அவசரப்பட்டு இறைவனை நிந்தித்ததை நினைத்து வெட்கினான். இறைவனுக்கு நன்றி சொன்னான். இறைவனை நம்பினோர் கெடுவதில்லை. 

No comments:

Post a Comment