Monday, July 28, 2014

அம்பாள் எதிர்பார்க்கும் அன்பு

அம்பாள் எதிர்பார்க்கும் அன்பு
ஒரு கிராமத்து மக்கள் அம்மன் வழிபாட்டுவிஷயத்தில் இரு கோஷ்டியாகப் பிரிந்தனர். ஒரு சாரார் அம்பாளை உக்கிரதேவதையாக வடித்து, பலி முதலானவை கொடுத்தனர். மற்றொரு சாரார் சாந்த ஸ்வரூபியாக வடித்து, சைவ உணவுகளை படைத்தனர். ஒருமுறை, பெரியவர்ஒருவர் அங்கு வந்தார். தங்கள் வழிபாட்டு முறையில் எது உயர்ந்தது என இருபிரிவாரும் கேட்டனர்.பக்தர்களே! பக்தியில் ஒன்று உயர்ந்தது ஒன்று தாழ்ந்தது என்றெல்லாம் ஏதுமில்லை. மனிதர்களின் மனநிலைக்கு ஏற்பவே, அம்பாளுக்கு படைக்கும் பொருளும் மாறுகிறது. சிலருக்கு இறைச்சி பிடிக்கும். அவர்கள் அம்மனுக்கு பலியிடுகிறார்கள். சிலருக்கு சைவப்பொருட்கள் ஒத்து வரும். அவர்கள் சைவத்தைப் படைக்கிறார்கள். சைவம் படைப்பதால் மட்டும் உயர்ந்தவர், அசைவம் படைப்பவரெல்லாம் தாழ்ந்தவர் என்றில்லை. ஒரு உயிரைப் பலியிடுவது பாவம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அம்பாளுக்கு அந்தப் பொருள் எந்தளவுக்கு மனமொன்றி பக்தியுடன் படைக்கப்படுகிறது என்பதே முக்கியம். சைவமே படைத்தாலும் கூட, நீ தந்த பொருள் உனக்கே சொந்தம் என்ற எண்ணமில்லாமல் படைத்தால், அதுவும் அசைவ உணவே ஆகும். அம்பாள் நாம் என்னதருகிறோம் என எதிர்பார்ப்பதில்லை. நம் மனதிலுள்ள ஆணவம், கெட்ட எண்ணங்கள் ஆகியவற்றை அவள் முன்பலியிட வேண்டும். அதையே அவள் விரும்புகிறாள், என்றார்.இதன்பின் இருதரப்பாரும் சைவ, அசைவ சர்ச்சையை விட்டனர். பெரியவர் சொன்னபடி, தங்கள் எண்ணங்களை நல்லதாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment