Friday, September 12, 2014

ஏகாதசி விரதங்கள் ஏன் ?

ஏகாதசி விரதங்கள் ஏன் ?
வைகுண்ட ஏகாதசியன்று முக்கியமாக உபவாசம் இருப்பது ஏன்? துவாதசியன்று அகத்திக் கீரையும், நெல்லிக்காயும், சாப்பிட வேண்டும் என்பது எதற்காக?
சந்திரன் பூமியை ஒருதடவை சுற்றிவர ஏறக்குறைய இருபத்தொன்பதரை நாட்கள் ஆகின்றன. ஒவ்வொரு நாளும் ஒரு திதி (Phase of the moon) எனப்படும். ஒரு சந்திரமாதத்தில் 30 திதிகள் உள்ளன. அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரையில் உள்ள 15 திதிகள் சுக்லபட்சம் (வளர்பிறை) எனப்படும். பௌர்ணமியிலிருந்து அமாவாசை வரையில் உள்ள 15 திதிகள் கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) எனப்படும். அமாவாசையன்று சூரியனும், சந்திரனும் ஒன்றாக உதித்து ஒன்றாக மறைகின்றன. அதிலிருந்து ஒவ்வொரு நாளும் 12 டிகிரி வீதம் சந்திரன் சூரியனிலிருந்து பிரிந்து செல்லுகிறது. நான்காவது நாள் அதாவது, சதுர்த்தசியன்று சந்திரன் சூரியனிலிருந்து 36 டிகிரி முதல் 48 டிகிரி வரை பின்னால் உள்ளது. பதினொன்றாவது நாள் ஏகாதசியன்று சூரியனிலிருந்து132 டிகிரி பின்னால் இருக்கிறது. பௌர்ணமியன்று சந்திரன் சூரியனிலிருந்து 180 டிகிரியில் இருக்கிறது. மேற்கூறிய நாட்களில் சூரியனிலிருந்து சந்திரன் தொலைவில் விலகிச் செல்லுவதில் புவிஈர்ப்பு (Gravitation) சக்தி அதிகமாகிறது. அந்த சமயத்தில் எப்போதும் போல உணவு அருந்தினால் அது சரியாக் செரிக்காது. ஆகையால் நமது முன்னோர்கள் அந்த நாட்களில் விரதம் இருக்கச் சொல்லி இருக்கிறார்கள்.
வைகுண்ட ஏகாதசியன்று சந்திரன் சூரியனுக்கு 135 டிகிரி பின்னால் இருக்கிறது. அன்று சூரியன் நடுவரைக்குத் தெற்கே மிக அதிகமான தூரத்தில் இருக்கிறான். அன்று புவியீர்ப்பு சக்தி மிக அதிகமாக இருப்பதால் உபவாசம் இருக்கிறோம்.
ஏகாதசியன்று விரதமிருந்தால், முதல் பத்து நாட்கள் உணவு உட்கொண்டு அதனால் உள்ளே சேர்ந்துள்ள கழிவுப் பொருட்கள் கரைந்து வெளியேறுகின்றன. பதினோராவது நாளான ஏகாதசியன்று வயிறு சுத்தமாகிறது. அன்று ஜீரணக் கருவிகளுக்கும் ஓய்வு கிடைக்கிறது. பின் நமக்கு வைட்டமின்கள் தேவைப்படுகின்றன. முக்கியமாக வைட்டமின் ‘ஏ’ யும், ‘சி’ யும் தேவைப்படும். ஆகவேதான், துவாதசியன்று வைட்டமின் ‘ஏ’ சத்து நிறைந்த அகத்திக் கீரையையும், வைட்டமின் ‘சி’ சத்து நிறைந்த நெல்லிக்காயையும் உணவுடன் சேர்த்துக் கொள்ளுகிறோம். ஒவ்வொரு நாளும் நாம் செய்ய வேண்டிய சூரிய நமஸ்காரமும், இருமுறை ஏகாதசியோடு தொடர்ந்து வருகிற துவாதசி உணவும், நம்முடைய கண்ணொளியைக் காத்து உடல் நலத்தைப் பேணி வருகின்றன.
- ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி (குற்றாலம்)யினர் தொகுத்த, ‘இந்து சமயம் ஒரு விஞ்ஞானப் பார்வை என்ற நூலிலிருந்து
..

No comments:

Post a Comment