Saturday, October 18, 2014

நவதுர்க்கைகள்


மகிஷாசுரனின் அக்கிரமங்களை அழிப்பதற்காக அவதாரம் எடுத்தவள் ஸ்ரீ துர்க்காதேவி. அவளை நவதுர்க்கை என்று பக்தர்கள் போற்றி துதிக்கின்றனர். அந்த நவதுர்க்கைகள்:
1. சாந்தி துர்க்கை, 2. சபரி துர்க்கை, 3. ஜாதவேதோ துர்க்கை, 4. ஜ்வாலா துர்க்கை, 5. சூலினி துர்க்கை, 6. வன துர்க்கை, 7. லவண துர்க்கை, 8. ஆசுரி துர்க்கை, 9. தீப துர்க்கை என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்களது இயல்பு பற்றிய விவரம் வருமாறு:-
1. சாந்தி துர்க்கை
தட்சன் தான் செய்த யாகத்தின் போது சர்வேஸ்வரனுக்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை. இதனால் சிவன் சினம் கொண்டு எழுந்தார். அந்த சினத்தை சாந்தி செய்தவளும் நோய் நொடிகளை ஒழித்து அமைதி அளிப்பவள் சாந்தி துர்க்கை எனப்படுகிறாள்.
2. சபரி துர்க்கை
வில்லவன் அர்ச்சுணனுக்குப் பாசுபதம் வழங்க ஈஸ்வரமூர்த்தி வேடனாய் உருவெடுத்துச் சென்றார். அப்போது துர்க்கை வேட்டு வச்சியாக மாறி ஆசி வழங்கினாள். இதனால் அவள் சபரி துர்க்கை எனப்படுகிறாள்.
3. ஜாதவேதோ துர்க்கை
முருகப்பெருமான் ஜனனத்தின் போது ஈஸ்வரனின் நெற்றிக் கண்ணிலிருந்துத் தோன்றிய அக்கினிப் பொறிகளாக விழுந்தார். அந்த தீ பொறிகளை வாயு பகவானும், அக்கினி தேவனும் ஏந்திச் சென்று சரவணப் பொய்கையில் சேர்த்தனர். அப்படி அவர்கள் செயல்பட அவர்களுக்கு மகாசக்தியினை அளித்தவள் என்பதால் ஜாதவேதோ துர்க்கையென போற்றி துதிக்கப்படுகிறாள்.
4. ஜ்வாலா துர்க்கை
பண்டாசுரன் என்னும் அரக்கணை ஒழிக்கப்போரிடும் போது, தனது படைகளைக் காக்க வேண்டியமையால் தானே தீப்பிழம்பு வடிவமாக தோன்றிமையினால் ஜ்வாலா துர்க்கை எனப்படுகிறாள்.
5. சூலினி துர்க்கை
திரிபுரத்தை எரிக்கச் சிவபெருமான் வெகுண்டெழுந்து சென்றார். அப்போது அவருடன் துர்க்கை சூலாயுதத்தை ஏந்திச் சென்றமையால் சூலினி துர்க்கை என்று போற்றுகின்றனர்.
6. வன துர்க்கை
நாம் செய்யும் பாவங்களை அழித்து ரட்சிப்பவளை வன துர்க்கை என கூறலாம். பவாரண்ய குடாரிகா என்ற லலிதா சகரஸ்ரநாமம் இதனை உணர்த்துகிறது. அஞ்சான வாசம் முடிந்ததும் பாண்டவர்கள் வன்னிமரப் பொந்திலிருந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து அந்த மரத்தடியில் வைத்துப் பூஜித்தார்கள்.
வன துர்க்கையாகவும், எல்லாச் சங்கடங்களையும் அடக்கி ஒடுக்கி நன்மை தருபவளாகவும் விளங்கும் தேவியை ஒன்பது நாட்களும் வழிப்பட்டனர். தசமியில் ஆயுதங்களை எடுத்துக் கொண்டனர்.
விஜயம் தரும் தசமி என்பதாலும் அர்ச்சுணனாகிய விஜயனால் மிகவும் பயப்பக்தியுடன் பூஜிக்கப்பெற்றது என்பதாலும் இது விஜயதசமி என்று பெயர் பெற்றது. இதனை விஜய நவராத்திரி என்றும், வன்னிய நவ ராத்திரி என்றும் வன துர்க்கா நவராத்திரி என்றும் சொல்கிறார்கள்.
7. லவண துர்க்கை
ராமபிரான் வாழ்ந்த காலத்தில் லவணாசுரனின் அக்கிரமத்தை அழிப்பதற்கு சத்துருக்கனனுக்கு துர்க்கை அருள் புரிந்தாள். இந்த உதவியால் அவள் லவண துர்க்கை என்று போற்றப்படுகிறாள்.
8. ஆசுரி துர்க்கை
திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்தெடுத்ததும், அசுரர்களை மயங்கச் செய்து, அந்த அமிர்தத்தை தேவர்களைப் பருகிடச் செய்யும் ஆற்றலை திருமாலுக்கு துர்க்கை வழங்கினாள். இதனால் அவள் ஆசுரி துர்க்கை என்று போற்றப்படுகிறாள்.
9. தீப துர்க்கை
யோகியின் தவத்தை மெச்சி ஞான ஒளியைக் காட்டியமையால் தீப துர்க்கை என்று போற்றி வழிபடுகின்றனர். இந்த ஒன்பது நாமங்களில் அன்னை துர்க்கா தேவி பிரதிபலித்து தன்னை வணங்கும் பக்தர்களுக்கு பேரருள் தந்து காத்து ரட்சிக்கின்றாள்

No comments:

Post a Comment