Monday, October 20, 2014

ராம சேவையின் மகிமை

ராவண வதமும், 14 ஆண்டு வனவாசமும் முடிந்து ராமர் அயோத்தி செல்லும் வேளை வந்து விட்டது. ராமர் பட்டாபிஷேகத்திற்கு அயோத்தியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொள்ள ராமர், லட்சுமணன் மற்றும் சீதையுடன், ஜாம்பவான், சுக்ரீவன், விபீஷணன், அனுமன், வானர வீரர்கள் என அனைவரும் புறப்பட்டனர்.

ஆனால் வானர வீரர்களில் ஒரு பகுதியினர் மட்டும் சோகமே உருவாக நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் காரணம் கேட்டான் ராமன். அதற்கு அவர்கள், 'பிரபு! எங்கள் படைத்தலைவர் வசந்தன். போரின்போது கும்பகர்ணன் அவரை கொன்று விட்டான்.

எங்கள் படைத் தலைவர் இல்லாமல் நாங்கள் எவ்வாறு மகிழ்ச்சி அடைவது' என்றனர். இதையடுத்து எமனிடம் சென்று, தான் கூறியதாக சொல்லி, வசந்தனை மீட்டு வரும்படி அனுமனுக்கு உத்தரவிட்டார் ராமன். அதன்படியே எமலோகம் சென்ற அனுமனிடம், 'ராமனின் அடியவர்கள் நரகத்திற்கு வர மாட்டார்கள்.

அவர்கள் வானவர் உலகிலேயே இருப்பார்கள்' என்றான் எமதர்மன். அனுமன் இந்திரலோகம் சென்று இந்திரனிடம் ராமரின் கோரிக்கையை கூறினான். 'அனுமனே! ராமரின் அடியார்கள் இந்த உலகிற்கு வரமாட்டார்கள்.

அவர் பிரம்மன் உலகில் இருக்கலாம்' என்றான் இந்திரன். பிரம்மலோகம் சென்று பிரம்மனிடம் வந்த விஷயத்தை கூறினார் அனுமன். அதற்கு பிரம்ம தேவர், 'ஆஞ்சநேயா! ராமனின் அடியார் எவ்வுலகிற்கும் செல்ல மாட்டார். அவர்கள் விஷ்ணுவின் பரமபதத்தில்தான் இருப்பார்கள்' என்றார். வைகுண்டம் சென்றார் ஆஞ்சநேயர்.

அங்கு வசந்தன் சூட்சும உருவில் பரம்பொருளான விஷ்ணுவுக்கு சேவை செய்து கொண்டிருந்தான். பிரம்மாவின் மூலம் வசந்தனுக்கு உருகொடுக்கச் செய்து, பூலோகம் அழைத்து வந்தார் அனுமன். வசந்தனைப் பார்த்ததும் அவனது படைவீரர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ராமனிடம் ஆசிபெற்று அவரின் பட்டாபிஷேகத்தில் கலந்துகொண்டான் வசந்தன். 

No comments:

Post a Comment