Monday, October 20, 2014

சரஸ்வதி எங்கே ஓடுகிறது?

பிப்லாதன் என்பவன் இந்திரனைக் கொன்று பழிதீர்க்க முடிவு செய்தான் கடுந்தவம் செய்தான். இதன் காரணமாக கொடிய தவக்கனல் உருவானது. அந்த தவக்கனலை இந்திரனையும், அவனுடைய உலகத்தையும் அழித்திட ஏவி விட்டான்.

அக்கனலைக் கண்டு இந்திரனும், பிற தேவர்களும் நடுங்கினார்கள். பிறகு அவர்கள் ஓடோடி சென்று சரஸ்வதியிடம் சரண் அடைந்தனர். தாயே! பிப்லாதன் விடுத்த தவக்கனலின் உக்கிரத்தை தணிக்கும் ஆற்றல் தங்களுக்கு மட்டுமே உண்டு. தாங்கள் நதியாகப் பெருகி தவக்கனலை கடலில் தள்ளிவிட வேண்டும் என்றனர்.

உடனே சரஸ்வதி நதியாக மாறி பூமியில் ஓட சம்மதித்தாள். ஆனால் மக்கள் கண்களில் தெரியும் வகையில் அவள் ஓட விரும்பவில்லை. ஏனெனில் பிப்லாதனின் தவக்கனலுடன் மக்களின் பாவச் சுமையையும் தாங்க இயலாது என்றாள். அப்படியே ஆகட்டும் என்றனர் தேவர்கள்.

பிப்லாதன் எழுப்பிய கனலை, சரஸ்வதி, நதியாக பெருக்கெடுத்து கரைத்தான். பிறகு கடலில் செலுத்தி உலகத்தை காத்தருளினாள். இதையடுத்து சரஸ்வதி உள்முகமாக இன்றளவும் ஓடுகிறாள் என்பது புராண வரலாறு.

அத்தகைய சரஸ்வதி ஆறு ஏறத்தாழ ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பூமியில் ஓடியிருக்க வேண்டும் என்று அண்மைக்கால ஆய்வுகள் கூறுகின்றன. வடக்கே உள்ள சிந்துசமவெளி நாகரிகம் 2500 இடங்களை உள்ளடக்கியது.

அவற்றுள் 500 இடங்கள் மட்டுமே சிந்து நதிக்கரையில் அடங்கியவை. மீதமுள்ள இரண்டாயிரம் இடங்கள் சரஸ்வதி நதிக்கரையில் அடங்கியவை என்று தற்கால ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சரஸ்வதி நதி இமயத்திலுள்ள ஸ்வர்க்கா ரோஹிணி மலைத்தொடரில் உள்ள ஹர்கீதுன் பள்ளத்தாக்கில் உற்பத்தி ஆகிறது.

பஞ்சாப், அரியானா, சவுராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களின் வழியாக சுமார் 1600 கிலோ மீட்டர் பயணித்து, பிரபாஸா பட்டணத்தில் மேற்கு அரபிக் கடலில் கலந்திருக்க வேண்டுமென்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கடந்த இருபது ஆண்டுகளாக சரஸ்வதி நதி பற்றிய ஆய்வுகள் அறிவியல் வழியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அமெரிக்காவின் செயற்கைகோள் சரஸ்வதி படுகை முழுவதையும் படமெடுத்துக் கொடுத்துள்ளது. அதன் துணையுடன் மேற்கொண்ட ஆய்வுகள் சுவையான சரஸ்வதி நீரை கண்டுபிடித்து உறுதி செய்துள்ளன.

சரஸ்வதி நதி பாய்ந்த குஜராத் பகுதியில் பூகம்பம் தோன்றிய ஓர் பகுதியில் மிகவும் ஆழமான இடத்திலிருந்து நீர் வெளிப்பட்டது. அவ்வாறே ராஜஸ்தான் பாலைவனப் பகுதியில் ஆழ்குழாய் அமைத்து ஆய்வுகள் செய்தனர்.

அங்கு பூமிக்கு அடியில் இருந்து கிடைத்த நீரும், குஜராத் பூகம்பப் பகுதியில் கிடைத்த நீரும் அறிவியல் பூர்வமான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன. அவை சுமார் எட்டாயிரம் ஆண்டுகள் தொண்மையான, தூய, சுவையான சரஸ்வதி நதியின் நீரே என்று உறுதி செய்துள்ளனர்.

பூமியின் அமைப்பில் இயற்கையாகத் தோன்றிய மாறுதல்களால் சரஸ்வதி நதி பூமிக்கடியில் மறைத்துள்ளது என்பது இப்போது உறுதியாகி விட்டது. `பொக்ரான்' என்ற இடத்தில் அணுகுண்டு வெடித்து சோதனைகள் நடத்தப்பட்டன. அப்பகுதியில் சரஸ்வதி நதிப்படுகையில் உள்ளது.

அணுசக்தி சோதனைகளுக்கு பிறகு பூமிக்கு அடியில் இருந்த நீரை வெளியே கொண்டு வந்து சோதித்தனர். அங்கிருந்த சரஸ்வதி ஆற்றுநீர் அணுசக்தியில் சிறிதும் பாதிக்கப்படாமல் இருந்தது விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியத்தை அளித்தது. இதுதொடர்பாக மேலும் ஆய்வுகள் தொடர்கின்றன.

இதுவரை பூமிக்கு அடியில் உள்முகமாக இருக்கும் சரஸ்வதி ஆறு விரைவில் தொழில் நுட்பத்தால் மீண்டும் வெளிப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment