Monday, October 20, 2014

சரஸ்வதி பூஜையின் மகிமை

அன்னை ஆதிபராசக்தி துர்க்கையாக வடிவெடுத்து மகிஷன் என்ற எருமை முகம் கொண்ட அசுரனின் கர்வத்தை ஒடுக்கி அவனை அழித்தாள். இதனால் அன்னையை அனைவரும் புகழ்ந்தனர். பராசக்தியும் மனம் மகிழ்ந்து சாமரன், உதக்கிரன், தாம்ரன், அந்தகன், பாஷ்கலன், சுராளன் ஆகிய அசுரர்களை அழித்தார்.

இதையடுத்து தேவர்கள் தங்களுக்கு எப்போது ஆபத்து வந்தாலும் நீயே இருந்து பாதுகாக்க வேண்டும் என்று துர்க்கையிடம் வேண்டிக் கொண்டனர். அப்போது அவர்கள் பல துதிப்பாடல்களைப் பாடினர். இந்த பாடல்களை எந்த உலகத்தில் இருப்பவர் பாடினாலும் அவர்களுக்குச் சகல நலன்களையும் சொல்லாற்றலையும் உடல் நலத்தையும் கொடுத்தருள வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டனர்.

அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கித் தோன்றிய வடிவமே மகா சரஸ்வதி அம்சமாகும். கலைமகளாம் சரஸ்வதி சந்திரனைப் போன்ற ஒளியை உடையவள். எட்டு வகை கருவிகளைக் கொண்டிருப்பவள். வெள்ளை நிறமுடையவள்.

தாமரைப்பூவில் காட்சியளிப்பவள், சத்திய லோகத்தில் பிரம்மனுடன் சேர்ந்து வேத நாதமாக்த் திகழ்பவள். நமது நாட்டில் நதியாக ஓடுகின்றாள். சரஸ்வதி நதிஎன்பது நாம் தேசப்படத்தில் காணமுடியாத நதியாகும். இந்த நதி பற்றி வேதங்களில் கூறப்பட்டுள்ளது.

சரஸ்வதி என்ற சொல்லுக்கு தண்ணீர் என்று பொருள் உண்டு. இந்த நதியின் கரையில் வேதகாலத்தில் பல யாகங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. தான் ஓடிவரும் இடங்களிலெல்லாம் பல நிலைகளை ஏற்படுத்தித் தந்திருப்பதால் இந்த நதிக்கு சரஸ்வதி என்ற பெயர் ஏற்பட்டதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

படைப்புக் கடவுளான பிரம்மா ஐந்து முகங்கள் கொண்டிருந்தார். இதன் காரணமாக அவர், தான் தான் முதல் கடவுள் என்ற கர்வம் கொண்டிருந்தார். பிரம்மனின் இந்த ஆணவத்தைக் கண்ட சிவபெருமான் அவரது ஒரு தலையை தம் சுண்டுவிரலால் கிள்ளி எறிந்தார்.

இதனால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம் நெருப்புக் கோளமாக மாறியது. இதை ஏந்திச்சென்று கடலில் சேர்க்கும்படி தேவர்கள் சரஸ்வதியிடம் கேட்டனர். சிவபெருமான் பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுபட சரஸ்வதியில் நீராட முயன்றார்.

ஆனால் தனது கணவரான பிரம்மா தலையை கொய்தவரின் பிரம்மஹத்தி தோஷத்தை சுமக்க விரும்பாத சரஸ்வதி சிவபெருமானுக்கு பயந்து பூமிக்கு அடியில் சென்று மறைந்ததாகக் கூறப்படுகிறது. சரஸ்வதி நதி பூமிக்கு அடியில் சென்றதற்கு இது தான் காரணமாம்.

கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளின் சங்கமமான திரிவேணியில் பக்தர்கள் புனித நீராடுகின்றனர். இந்த இடத்தில் தான் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா (மகாமகம்) நடக்கிறது. கங்கையும், யமுனையும் கண்முன்னே சங்கமம் ஆவதைப் பார்க்க முடிகிறது.

ஆனால் சரஸ்வதி மட்டும் பூமிக்குள்ளேயே அமைதியாக ஓடிவந்து இந்த நதிகளுடன் கலந்து விடுவதால் சரஸ்வதி சங்கமம் ஆவதை மட்டும் நம்மால் காணமுடிவதில்லை. கங்கைக்கரையில் சிவ ஆலயங்களும், யமுனைக்கரையில் விஷ்ணு ஆலயங்களும் இருக்கின்றன. சரஸ்வதி நதி பற்றி புராணங்களில் மட்டுமே கூறப்படுவதால் பூமியில் பிரம்மாவின் ஆலயம் பற்றி எந்த தகவலும் இல்லை

No comments:

Post a Comment