Wednesday, October 8, 2014

ஆயிரம் பிறை கண்ட வாழ்வு

ஆயிரம் பிறை கண்ட வாழ்வு


ஆயிரம் பிறை காணுகிற பெரியவருக்கு, ஆயிரம் பிறைகளைக் கணக்கிட்டால் 83 ஆண்டுகள் அவர் கடந்தாக வேண்டும். அவர் 80&வது ஆண்டினை நிறைவு செய்கின்ற பொழுதே அவரை ஆயிரம் பிறை கண்டவர் என்று வணங்குகிறோம்.

கணக்குப்படி அது 83 ஆண்டாக வருகிறது. ஆனால், நடைமுறையோ 80 என்று எடுத்துக் கொள்கிறோம். பௌர்ணமிகள் சில ஆண்டுகளில் கூடுதலாகவோ, குறைவாகவோ வரலாம். அந்தக் கணக்கின்படி, இந்த 80 ஆண்டுகளும் சற்றுக் கூடலாம்.
80 வயதைக் கடந்தாலே அது ஒரு பூரண வாழ்வு எனப் பெருமிதமாக நாம் அப்பெரியவரை எண்ணுகிறோம்.
80 வயது பூர்த்தி என்பது ஒரு மிகப் பெரிய சரித்திரம் என்று சொல்வதற்குக் காரணம், அந்த 80 வயதிற்குள் 20-வது வயதிலிருந்து 60 ஆண்டுக் காலத்திற்கான, சம்பந்தப்பட்டவர்களுடைய செயல்கள் பதிவாகியிருக்கும். அந்தப் பதிவுகள் அனைத்துமே அவர்பட்ட தோல்விகளாகவோ அல்லது வெற்றிகளாகவோ இருக்கும்.
30 ஆண்டுகளில் அவர் தோல்வி கண்டிருந்தால், மேலும் ஐந்து ஆண்டுகளோ, பத்தாண்டுகளோ செலவழித்து அந்தத் தோல்வியை வெற்றியாக்கி இருப்பார். அந்த ரகசியம் அவருக்குத்தான் தெரியும்.
அது அவருடைய 60 ஆண்டு வாழ்வியல் சரித்திரத்தை நினைவுகூர்ந்தால் அவர் சிந்தனையிலிருந்து அது உடனே வெளிப்படும். இப்படித்தான் 80 ஆண்டு பெரியவரின் வாழ்க்கை, 60 ஆண்டு – பேசும் சரித்திரமாக நம் முன்னால் உலவும்.
நாம் பெருமிதமாக நினைப்பது இந்தச் சரித்திரத்தையே தவிர, அவருடைய சரீரத்தை அல்ல.
பொதுவாக ஒருவருடைய வயது பிரசவத்திற்குப் பிறகுதான் கணக்கிடப்படுகிறது. ஆணோ, பெண்ணோ அது கருவிலிருக்கும்போதே கணக்கிடப்பட வேண்டும்.
அப்படியென்றால், பிறந்த குழந்தையினுடைய வயது அன்றைய ஒரு நாள் அல்ல. பத்து மாதம் ஒரு நாள் என்பதுதான் சரியானது. (300 + 1 நாள் = 301 நாட்கள்).
அந்த ஒரு & நாள் குழந்தையின் வயது 301 நாட்களாகும். பிறந்த குழந்தை ஆணாக இருந்தால், நான்கு படிகளை அது கடந்தாக வேண்டும். பிரம்மச்சரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்ற இந்த நான்கும் ஆணுக்கு மட்டுமே பேசப்பட்டுள்ளது.
60 ஆண்டை சம்ஸ்கிருதத்தில் சஷ்டியப்தபூர்த்தி என்கிறார்கள். 70 ஆண்டு நிறைவை பீமரத சாந்தி என்கிறார்கள். 80 ஆண்டு நிறைவை சதாபிஷேகம் என்கிறார்கள்.
சதாபிஷேகம் காணும் முதிய தம்பதிகள் அதிகமாக இல்லை. அப்படி இருப்பார்களேயானால், அது அவர்களின் பிள்ளைகள் செய்த பாக்கியமாகும். இதற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது.
தருமபுத்திரர் செய்த ராஜசூய யாகத்தைக் காண்பதற்காகச் சனகாதிகள் போயிருந்தார்களாம். அவர்கள் போனதற்கான காரணம், தருமபுத்திரரின் ராஜசூய யாகத்திற்கு வாசுதேவர் வருவார்.
அவ்வாறு வந்தால், அவரை வணங்கலாம் என்பதுதான் அவர்களின் ஆசையாகும். அவர்கள் எதிர்பார்த்தபடி வந்த வாசுதேவரோ, ஒரு காரியத்தைச் செய்தார். ராஜசூய யாகத்தில் கலந்து சிறப்பிக்க வந்திருந்த சில முதியவர்களை வாசுதேவர் பாத நமஸ்காரம் செய்தார்.
வாசுதேவரை வணங்குவதற்காகக் காத்திருந்த சனகாதிகளுக்கு இது ஆச்சரியமாக இருந்தது. அதனால் வாசுதேவரிடமே சென்று இது என்ன? நாங்களெல்லாம் உங்களை வணங்கக் காத்திருக்கிறோம். ஏன் உலகமே உங்களைத்தான் வணங்குகிறது. அத்தகைய நீங்களோ, வேறு யாரையோ நமஸ்கரிக்கிறீர்களே என்று பரமாத்மாவாகிய கண்ணபிரானிடமே கேட்டனர்.
பகவான் சொன்ன பதிலோ, சனகாதிகளுக்கு மேலும் ஆச்சரியத்தை உண்டாக்கியது. அதற்கான சமஸ்கிருத சுலோகத்தைத் தமிழ்ப்படுத்தினால், நான் 6 முக்கியமானவர்களை வணங்குகிறேன். அவர்கள் வணங்கத் தக்கவர்கள். என்னால் வணங்கத்தக்கவர்கள் என்றால், அவர்கள் 6 பேரும் எப்பேர்ப்பட்டவர்கள் என்று எண்ணிப் பாருங்கள் என்றார்.
அவர்கள் யார் என்று கேட்க, பகவான் கூறினார் தினசரி அன்னம் பாலிப்பவன், வாலிப வயதிலேயே யாகம் செய்பவன், உலகத்தை ஒரு நாள், இரு நாள் அல்ல, மாதக்கணக்கில், வருடக்கணக்கில் மேற்கொள்பவன், கற்புக்கரசியாக வாழ்கிற பெண்கள், பிரமமத்தை அறிந்த ஞானிகள். இந்த ஐவர்களை மட்டுமல்ல, 6&வதாகவும் ஒருவர் இருக்கிறார். அவர்தான் ஆயிரம்பிறை கண்ட பெரியவர்.
கிருஷ்ண பகவானை உயிர்கள் அனைத்தும் நமஸ்கரிக்கின்றன. அவரோ சதாபிஷேகம் செய்யப்படும் சான்றோரை வணங்குகிறார் என்றால், ஆயிரம்பிறை காண்பவருக்கு எத்தனைப் பெரிய மதிப்பும், மரியாதையும் உள்ளது என்பதை நித்யசூரிகளான சனகாதிகளே புரிந்துகொள்ளும்படி கூறினார்.
இந்த ஆயிரம்பிறை சதாபிஷேகத்தை அதிருத்ர யாகம் செய்தும் கொண்டாடலாம் என்கிறது நமது புராணங்கள்.
அதிருத்ர யாகம் என்பது அண்மையில் கேரளாவில் செய்யப்பட்டது. நூற்றுக்கணக்கான வேதவிற்பன்னர்கள் வேத சுலோகங்களை இடைவிடாது ஓதி நிறைவு செய்கிற போது, அவை கார்மேகங்களையே ஒன்றுதிரட்டி வெள்ளம்போல் மழையைப் பெய்யச் செய்யும் சக்தியுடையது.
அண்மையில் இந்த யாகத்தை கேரளாவில் செய்தபோது, பத்திரிகையாளர்களும், தொலைக்காட்சிக்காரர்களும் நூற்றுக்கணக்கில் அங்கே குவிந்திருந்தனர்.
ருத்ரகாதசினீ என்று இன்னொரு யாகம். அதைச் செய்வதன்மூலம் சதாபிஷேகம் கண்டவர் தனது வாழ்க்கையில் தெரிந்தோ, தெரியாமலோ ஏதேனும் பாவம் செய்திருந்தால், இந்த யாகம் அதைப் போக்கும் சக்தியுடையதாம்.
இதைப் போன்றதுதான் மகாருத்ர யாகம். ருத்ரகாதசினீ யாகத்தை பதினோரு கலசங்கள் வைத்து ஜபம் செய்வதாகும். ஒவ்வொரு கலசத்திலும் ஒரு ருத்திரர் ஆவாகனம் செய்யப்படுவார். இதை 11 முறை செய்வதுதான் மகாருத்ர யாகமாகும். 121 முறை செய்வதுதான் அதிருத்ர யாகமாகும்.
இத்தனை யாகங்களையும் செய்தால், அதற்கு உரியவன் எந்தப் பாவம் செய்திருந்தாலும் அதிலிருந்து விடுதலை பெறுவான் என்பது ஐதீகம்.
அதுமட்டுமல்ல. அஞ்ஞானம் நீங்கி மெய்ஞ்ஞானம் சித்திக்கும். இதற்குச் சமமான ஜபம் வேதஸ்மிருதி எதிலும் இல்லை. இப்புண்ணியருக்கு அந்த யாகம் செய்த பிறகு வைக்கப்படும் நாமகரணம் சகஸ்ர சந்திர தர்சி என்பதாகும்.
சதாபிஷேகம் கண்டவரும், அவருடைய தர்மபத்தினியும் அந்த நிமிடம் முதல் பார்வதி – பரமேஸ்வர தம்பதியாக மாறிவிடுகிறார்கள்.
இவர்களை நமஸ்கரித்து நாம் ஆசி பெற்றால், அவர்கள் நம்மை வாழ்த்தும் வாக்கு அப்படியே பலிக்கும். நன்மை உண்டாகும்.
இந்த சாந்தியைச் செய்து ஆயிரம்பிறை கண்ட தெய்வத் திருவுருவங்களாகப் பேறு பெற்றவர்களை நாம் வணங்கினால் நீண்ட ஆயுள், தேக ஆரோக்கியம், ஆஸ்தி முதலியவற்றைப் பெற்று நூறு ஆண்டுகள் நாம் வாழும் பேறு பெறுவோம் என்பது ஆன்மிக நம்பிக்கையாகும்.

No comments:

Post a Comment