Wednesday, November 5, 2014

ஸ்ரீ கிருஷ்ணரின் அவதார முடிவு...

ஸ்ரீ கிருஷ்ணரின் அவதார முடிவு...
ஸ்ரீ கிருஷ்ணர் யாதவ குலத்தில் தோன்றியபோதும், பகவான் தங்களுடன் வாழ்கின்றார் என்பதை யாதவர்கள் ஒருபோதும் உணரவில்லை.
ஒருமுறை சில ரிஷிகள் துவாரகைக்கு வந்தபோது, யாதவ குலத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் சாம்பா என்பவனை கர்ப்பஸ்திரியாக வேடமிடச் செய்து இவளுக்கு பெண் குழந்தை பிறக்குமா, ஆண் குழந்தை பிறக்குமா என்று ரிஷிகளிடம் கேட்டனர். கோபமுற்ற ரிஷிகள் ஒரு உலக்கையை அவள் பெற்றெடுப்பாள். அது உங்கள் குலத்தை அழிக்கும் என்று கூறினார். சாம்பா தன் உடையை அவிழ்த்தபோது ஒரு இரும்பு உலக்கை அவன் உடையில் இருந்தது. அந்த இளைஞர்கள் நடந்த சம்பவத்தை பலராமனிடமும், கிருஷ்ணரிடமும் தெரிவித்தனர். அவர்களின் பொறுப்பற்ற நடத்தையைக் குறித்து பலராமன் கோபமடைந்தார். ரிஷிகளின் வார்த்தையைக் கேட்டதினால் கவலையுற்ற பலராமன் அந்த இரும்பு உலக்கையை தூளாக அரைக்கும்படி செய்தார். ஒரு துண்டு மிகவும் கடினமாக இருந்தது, அதை தூளுடன் சமுத்திரத்தில் வீசினார்.
குருஷேத்திர யுத்தம் தன்னுடைய குடும்பம் முழுவதையும் அழித்து விட்டது. கிருஷ்ணர் யுத்தத்தை தடை செய்யவில்லை என்பதினால் காந்தாரி கோபமடைந்தாள். கட்டுப்படுத்தாத துவேஷமும், பொறாமையும் குரு குடும்பத்தை அழித்தது என்று கிருஷ்ணர் விளக்கிக் கூறினார். உன்னுடைய குலமும் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்வார்கள் என்று காந்தாரி கூறினாள். கிருஷ்ணர் அந்த சாபத்தை ஆசீர்வாதம்போல கரம் கூப்பி தலைகுனிந்து வாங்கிக் கொண்டார்.
யாதவர் குலம் அழியும்நேரம் சமீபித்தபோது, கடற்கரை யோரத்திலிருக்கும் பிரபாஸா என்ற இடத்திற்குச் செல்லும்படி கிருஷ்ணர் கூறினார். யாதவ இளைஞர்கள் குடித்து விட்டு சண்டைபோட்டனர். அவர்கள் கடற்கரையோரத்திலிருந்த ஏரக்கா என்ற புல்லை பிடுங்கி ஒருவரையொருவர் அடித்தனர். அந்த புல் இரும்பு கம்பிகளைப் போலிருந்ததால் எல்லாரும் இறந்தனர். கடலில் வீசப்பட்ட இரும்பு உலக்கையின் தூள் கடல் மணலில் புதைந்து கூரிய புல்லாக முளைத்தது. உலக்கையின் கடினமான பாகம் கரையோரம் கிடந்தது.
ஒரு வேடன் அதை எடுத்து கூர்மையான அம்பு செய்தான். கிருஷ்ணர் தன்னுடைய ரதசாரதி தருக்காவிடம் துவாரகையை எல்லாரும் விட்டு இடம் பெயர வேண்டும். ஏனென்றால் கடல் நீர்மட்டம் அதிகரிப்பதினால் துவாரகை மூழ்கிவிடும் என்று தகவல் கூறினார்.
கிருஷ்ணர் பூமியை விட்டுச் செல்லும் நேரம் நெருங்கி விட்டது என்பதை அறிந்த பலராமன் பராமாத்மாவின்மேல் தியானித்து தன் உயிர் துறந்தார். ஸ்ரீ கிருஷ்ணர் தம்முடைய திவ்ய உருவத்தில் ஒரு அசுவமரத்தின் கீழ் உட்கார்ந்தார்.
தூரத்திலிருந்து ஸ்ரீ கிருஷ்ணரின் பாதத்தை மானின் வாய் என்று எண்ணிய வேடன் அம்பு எய்தினான். அந்த அம்பு கடலில் வீசப்பட்ட உலக்கையின் கடினமான பாகத்தில் செய்யப்பட்டது. ஷரா என்ற வேடன் ஒரு தெய்வீக மனிதனை காயப்படுத்தி விட்டதை அறிந்து அதிர்ச்சியுற்றான். இந்த கொடிய தவறை செய்ததற்காக என்னை உடனடியாக கொல்லுங்கள் என்று ஷரா கூறினான். பயப்படாதே, ஷரா தெய்வீக திட்டத்தின்படிதான் நீ கிரியை செய்தாய், நான் உன்னை ஆசீர்வதிக்கிறேன் என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறியதால் ஷரா சொர்க்கத்திற்குச் சென்றான்.
ஸ்ரீ கிருஷ்ணர் இறக்கும் தருவாயிலிருக்கிறார் என்பதை அறிந்த உத்தவர் நிலைகுலைந்து போகிறான். ஸ்ரீ கிருஷ்ணரிடம் தன்னை வழி நடத்துமாறு கேட்கிறான். அப்போது அவன் உத்தவ கீதையை கேட்கிறான். ஸ்ரீ கிருஷ்ணர் இந்த உடலின் அழியும் தன்மையைப் பற்றி மறுபடியுமாக எடுத்துரைத்து இவ்வுடல் விலையேறப்பெற்றது, ஐம்புலன் கொண்ட இந்த சரீரத்திலிருந்துதான் ஒரு மனிதன் ஜீவன் முக்தியை அடைய முயற்சி செய்யலாம்.
பத்ரி வனத்திற்குச் சென்று நான் கூறிய சத்தியத்தை தியானம் செய். நான் பாகவதம் மூலமாக என்னை வழிபடுபவர்களுக்கு வழிகாட்டுவேன் என்றார். இவ்வாறு கூறி விட்டு ஸ்ரீ கிருஷ்ணர் தியானத்தில் அமர்ந்து வைகுண்டம் ஏகினார்.
(இராமனாக அவதரித்த திருமால் வாலியை மறைந்து நின்று கொன்றார். இச்செயல் அவருக்கும் ஓர் பாவக்கணக்கைக் கொடுத்திருக்கின்றது.
எனவேதான் அடுத்த பிறப்பில் கண்ணனாக அவதரித்த போது பாரதப் போர் முடிவுற்ற பின்னர், நாடாண்டு வருகையில்,யாதவ குலம் அனைத்தும் அழிந்து போக வந்த சாபத்தால்,அனைவரும் அழிந்து போக,கண்ணன் மட்டுமே தனித்தான்.
உலக நியதிக்குட்பட்டுத் தானும் அதே இரும்புத் துகளால்
அழிந்து போக எண்ணி படுத்திருக்கும் வேளையில்,
தொலைவில் அவனது பாதம் கண்ட வேடனொருவன்
(இவன் வாலியின் மறு பிறப்பு என்று சொல்கிறார்கள்)
மான் என்று எண்ணி அம்பை விட, அவ்வம்பு கண்ணபிரானின் பாதங்களைத் தைத்து, கண்ணன் வைகுண்டம் எய்தினான்

No comments:

Post a Comment